sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
Source book
0    1    2    3    4    5    6    7    8    9    10    11    12    13    14    15    16    17    18    19    20    21    22    23    24    25    26    27    28    29    30    31    32    33    34    35    36    37    38    39    40    41    42    43    44    45    46    47    48    49    50    51    52    53    54    55    56    57    58    59    60    61    62    63    64    65    66    67    68    69    70    71    72    73    74    75    76    77    78    79    80    81    82    83    84    85    86    87    88    89    90    91    92    93    94    95    96    97    98    99    100   
அபயாம்பிகை சதகம் - அபயாம்பிகை பட்டர் எனும் கிருஷ்ணசாமி ஐயர்
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி

வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

அபயாம்பிகை பட்டருக்கு ! போற்றி போற்றி


அபயாம்பிகை சதகம்‌ அன்பாய்‌ உரைக்க
உபயசரணம்‌ உதவும்‌ -சபை நடுவுள்‌
ஆடுகின்ற ஐயன்‌ முதல்‌ அன்பாக- -பெற்ற ஒரு
கோடுமுகத்தனை தானை குறித்து
0

பாதாம்‌ புயத்திற்‌ சிறுசதங்கைப்‌
பணியுஞ்‌ சிலம்புங்‌ கிண்கிணியும்‌
படர்பா டகமுந்‌ தண்டையுடன்‌
படியுங்‌ கொலுசுந்‌ தழைத்தருளும்‌
பீதாம்‌ பரமுந்‌ துவள்‌ இடையும்‌
பிரியா தரைஞாண்‌ மாலைகளும்‌
பெருகுந்‌ தரள நவமணியும்‌
புனையுங்‌ குயமும்‌ இருபுயமும்‌
போதா ரமுத வசனமொழி
புகலும்‌ வாயும்‌ கயல்விழியும்‌
புண்ட ரீகத்‌ திருநுதலும்‌
போன்‌ போற்‌ சடையும்‌ மதிமுகமும்‌
வாதாடிய பே ரின்பரச
வதனக்‌ கொடியே உனை அடுத்தேன்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
1

அஞ்சு முகத்தி நவமுகத்தி
ஆறு முகத்தி சதுர்முகத்தி
அலையில்‌ துயிலும்‌ மால்முகத்தி
அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
பாசாங்‌ குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
பாரத்‌ தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
கருணா கரத்தி தவகுணத்தி
கயிலா சனத்தி நவகுணத்தி
காந்தள்‌ மலர்போல்‌ சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
மதுரச் சிவத்தி மங்களத்தி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
2

உச்சிக்‌ கிளியே அருட்கிளியே
உணர்வுக்‌ உணர்வாய்‌ உயிர்க்குயிராய்‌
உதித்த கிளியே பரவெளியில்‌
ஒளிவான்‌ பழத்தை உன்னிவரும்‌
நற்சொற்‌ கிளியே கதம்பவன
நகரில்‌ வாழும்‌ பரைக்கிளியே
ஞானக்கிளியே மறைவனத்தில்‌
நடனக்‌ கிளியே சிவக்கிளியே
பச்சைக்‌ கிளியே அன்பர்மதி
படரும்‌ ஆவி ஓடையினில்
பரவுங்‌ கிளியே நிதிக்கிளியே
பவழக்‌ கிளியே பதிக்கிளியே
வச்ரக்‌ கிளியே நவபீட
வாசற்‌ கிளியே அருள்‌அமையும்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே .
3
Back to Top

பண்டு மறையின்‌ முடிவினுள்ளே
பழுத்த பழமே அருட்பழமே
பரிபா கத்துப்‌ பக்தர்நெஞ்சில்‌
படர்ந்த பழமே நவமுடிமேல்‌
என்றுங்‌ கனிந்த திருப்பழமே
இமையோர்‌ தேடித்‌ தேடியுமே
எட்டாப்‌ பழமே காசியினில்‌
எவர்தாம்‌ தனையே உணர்ந்தோர்கள்‌
கண்டு புசிக்கும்‌ பதிப்பழமே
கருணைப்‌ பழமே சிவப்பழமே
கயிலா யத்தில்‌ அரன்முடிமேல்‌
கனிந்த பழமே கதிப்பழமே
மன்றுள்‌ மணக்கும்‌ அடியவர்க்கும்‌
மாயோ கியர்க்கும்‌ உதவிநிற்கும்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
4

தேனே பாலே சருக்கரையே
தெவிட்டா அமுதே கற்கண்டே
சீனி யுடன்முப்‌ பழச்சாற்றில்‌
சிறந்த ரசமே செம்பொன்மலை
மானே மடலே மடக்கொடியே
வளர்ந்த வனமே திருவதன
மயிலே குயிலே அன்பரெல்லாம்‌
வாரிச்‌ சொரியும்‌ மணிநிதியே
ஊனே என்றன்‌ உயிரக்குயிரே
உள்ளும்‌ புறம்பும்‌. உறுமொழியே
ஒளிசேர்‌ கனகக்‌ கற்பகமே
உதித்த சுடரே திருப்பரமே
வானே‌ வானின்‌ வளிக்கனலே
வனமே பூவே வரைமகளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
5

பஞ்சா பரணி நவபூர்ணி
பரணா பரணி தவசரணி
பரமேஸ்வரியே ஈஸ்வரீயே
பஞ்சா க்ஷரத்தி பங்கயத்தி
எண்சாண்‌ உடம்பில்‌ தொண்ணூற்றா
யிசைந்த தத்துவா திகமுகமே
இறையோ னிடத்தில்‌ நடனமிடும்‌
இமையோர்க்‌ கரசே ஏகவெளிக்‌
கஞ்சா சனத்தின்‌ நிலையாளே
கருணா லயத்துள்‌ உறைபவளே
கன்னற்‌ சிலையும்‌ ஐங்கணையும்‌
கரத்தில்‌ சிறந்த பரைத்திருவே
அஞ்சா ணவங்கள்‌ அகன்றடியார்‌
மனத்துள்‌ உறையும்‌ அருட்கடலே‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
6

எங்கும்‌ நிறந்த அருள்மணியே
ஏக மணியே ஒளிர்மணியே
இறையோ னிடத்தில்‌ நடனமிடும்‌
இமைய மணியே நவமணியே
கங்குல்‌ பகலும்‌ கண்டவெளிக்‌
கலைநான்‌ குடைய திருமணியே
கண்ணின்‌ மணியே பொன்மணியே
கமலாசனத்தில்‌ வளர்மணியே
தங்கும்‌ அடியார்‌ இதயமதில்‌
தழைத்த மணியே தவமணியே
தரணிக்‌ கொளியாய்‌ இரவுபகல்‌
தானே வளர்ந்த தளிர்மணியே
மங்கும்‌ கருத்தை நிலைநிறுத்தி
வதன வெளியில்‌ படர்மணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
7
Back to Top

அழியச்‌ சனன அலைமுழுதும்‌
அலையும்‌ மனத்தை நிலைநிறுத்தி
ஆறாதார அடிநடுவுள்‌ அருணா
சலத்தின்‌ வேரினுள்ளே
சுழியைத்‌ திறந்து வாயுவதாற்‌
சூழ்ரே சகபூ ரகத்தாலுந்
தோன்றுங்‌ கும்ப காதியுடன்‌
சோதிபடரும்‌ ஞானவெளி
விழியுந்‌ திறக்கும்‌ மதிக்குழம்பு
மிகுந்து சுரக்கும்‌ நவக்கிரக
வெளியா மேலே வெளிபடர்ந்து
விம்மித்‌ தனையாய்ந்‌ திருக்க அருள்‌
வழியைப்‌ பொருத நாயடியேன்‌
மனத்தா மரையுள்‌ நீவருவாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
8

கண்ணா ரமுதே உனைஎனது
கண்தான் களிக்க மொழிகுழறக்‌
கதிக்க உயிரும்‌ உடல்புளகங்‌
காணும்‌ பருவம்‌ பெறுவேனோ
விண்ணா ரமுதே சிவபுரத்தில்‌
விளைந்த கனியே தேன்கடலே
வீசிப்‌ படர்ந்த கமலமதில்‌
வீற்றே யிருக்கும்‌, விழிச்சுடரே
பெண்ணா னதுவே ஆண்வடிவே
பேணும்‌ அலியே பிறங்கொலியே
பேதை நாயேன்‌ இதயமதிற்‌
பிரியா திருக்குந்‌ தவக்கொழுந்தே
மண்ணா டியவன்‌ இடப்பாகம்‌
வளரும்‌ கொடியே மடமயிலே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
9

தீரா மயக்கப்‌ பிணிநோயைத்‌
தீர்க்கும்‌ மருந்தே அருமருந்தே
தேவா திகளும்‌ அறியாத
கிருஷ்ணன்‌ ஆதி சகோதரியே
ஆரா திப்பார்‌ பூசிப்பார்‌
அமைந்துன்‌ நாம மதைநினைப்பார்‌
அடுத்தோர்‌ இன்ப சுகமனைத்தும
அடையும்‌ எனவே மறைவிளம்ப
நேராயிருந்து, களிப்பவளே
நித்யா னந்த சுகப்பொருளே
நெறியே குறியே‌ எனைஆளும்‌
நிமிலி அமலை சுகத்தாளே
வாராக்‌ கினியே துட்டரிடர்‌
மனத்தை அழிக்குஞ்‌ சினத்தாளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
10

மெய்யிற்‌ படர்ந்த அருட்கடலே
விளையும்‌ ஞான முளரியினில்‌
விரிவாய்ப்‌ பொருந்தும்‌ பரநிதியே
வினையை அகற்றும்‌ பதம் உடையாய்‌
உய்யுந்‌ தவத்தோர்‌ மேலோர்கள்‌
உறுதியுடனே மகிழ்‌ பதியே
ஓன்றாம்‌ யோக முடிவதனில்‌
ஒளியாய்‌ வெளியாய்‌ உதித்தவளே
செய்ய கமலத்‌ தயன்மனைவி
தினமும்‌ பணியுந்‌ திருவருளே
தேகா தேகக்‌ கோடியெலாஞ்‌
சிறந்து நிறைந்த சின்மயமே
வையத்‌ தடங்கா அருள்மலையே
வருண அருண ஒளிமணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
11
Back to Top

வன்னம்‌ ஒன்றாய்‌ இரண்டாகி
வளர்ந்தோ ரைந்தாய்‌ எட்டாகி
வானாய்‌ வானின்‌ வளிக்கனலாய்‌
வனமாய்ப்‌ பாராய்‌ வகைஐந்தாய்‌
பன்னும்‌ மறையோர்‌ நான்காகி
பரந்த சாத்ர முடன்‌ ஆறாய்‌
பதிணெண்‌ புராண ஆகமங்கள்‌
பரிந்தோ ரிருபத்‌ தெட்டாகி
உன்னி நெடுமால்‌ அயனாலும்‌
உலகை வகுக்க காப்பாற்ற
உடனே சங்கா ரித்திடவும்‌
உமையா ளொடுதன்‌ கேள்வனுமாய்‌
மன்னி நிதமும்‌ ஆட்டிவைத்த
மதலாய்‌ இமவா னுடைமகளாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
12

தந்தை தாயார்‌ சுற்றத்தார்‌
சகல வாழ்வும்‌ உனதருளே
தமியேன்‌ செய்யும்‌ வினை உனது
சடலம்‌ உனது உயிர்‌ உனது
சிந்தைக்‌ கிசைந்த அடிமை என்று
செகத்தில்‌ எவர்க்குந்‌ தெரியாதா
சிந்தா மணியே எனக்கு வருஞ்‌
செயலே உனது செயலலவோ
சொந்த அடிமை கிடந்தலையச்‌
சும்மா இருந்தால்‌ உனைவிடுமோ
சோதி வதன மணிவிளக்கே
துவாத சாந்தப் பெருவெளியே
மைந்தன்‌ எனவந்‌ தாண்டருள்வாய்‌
வனச வதனி நவசரணி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
13

பேயேன்‌ ஊமை விழிக்குருடு
பேணுஞ்‌ செவிடு கால்முடமாய்ப்‌
பிள்ளை எனவே ஈன்றவர்க்குப்‌
பிரிய விடவும்‌ மனமாமோ
நாயேன்‌ செய்யும்‌ வினைமுழுதும்‌
நலமாய்‌ பஞ்சுப்‌ பொறிஎனவே
நகர்த்திச்‌ சிவத்துள்‌ எனதுளத்தை
ஞானப்‌ பதியுள்‌ சேர்த்தருள்வாய்‌
ஆயே அமலை அருட்கடலே
அகிலா தார முடிவிளக்கே
அணங்கே இணங்கும்‌ அடியவர்கட்(கு)
அமுத ஞானம்‌ அருள் ‌அரசே
மாயே செகமோ கனமான
வடிவே முடிவே மலைமகளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
14

எண்ண அடங்கா தெனதுசென்மம்‌
ஏட்டில்‌ எழுதி முடியாது
இடிப்பார்‌ நீண்ட மரம்போலும்‌
எமனார்‌ பதியில்‌ அடைந்துடைந்து
பெண்ணின்‌ மயக்கம்‌ வினைமயக்கம்‌
பிறவி மயக்கம்‌ தொலையாது
பித்தர்‌ சாலப்‌ புலையருடன்‌
பேய்கொண் டடிமை அலைவேனோ
வண்ணக்‌ கலையே கதிமுதலே
வனசப்‌ பதியே அதிமதுர
வனமே கனமே யோகியர்கள்‌
மனமேய்‌ குடியே வாரிதியே
மண்ணிற்‌ ககன முடிநடுவுள்‌
வாதா டியபே ரொளிவிளக்கே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
15
Back to Top

பறந்த பறவை நாற்காலமாய்ப்‌
படரும்‌ விலங்கும்‌ ஊர்வனமும்‌
பாணி தனில்வாழ்‌ சீவர்களும்‌
பாரில்‌ நிலையாத்‌ தாபரமும்‌
பிறந்த மனிதர்‌ தேவரொடு
பிசகா தெடுத்த. செனனமதில்‌
பெற்ற தாயார்‌ எத்தனையோ
பிறவி மனையாள்‌ புதல்வர்களும்‌
நிறைந்த கோடா கோடிஇதில்‌
நிலையா னதுவும்‌ ஒன்றறியேன்‌
நீயே தாயென்‌ றநுதினமும்‌
நெறியே அருளிப்‌ பிறவியினி
மறந்து விடமும்‌ உனதுபய
வனச மலர்த்தாள்‌ ஈந்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
16

சடத்தை எடுத்து மயல்‌ நிகழ்த்தித்‌
திகைப்பில்‌ உயிரும்‌ அகப்படவும்‌
தேசா சார அதி மோகத்‌
திருக்கில்‌ மனமும்‌ உருக்கமுடன்‌
கடத்தை எனதென்‌ றபிமானக்‌
கருமா மயிலா ருடன்‌ஆசைக்‌
காத லதனில்‌ உயிர்‌ மறந்து
கலங்கி தியங்கி அலைவேனோ
நடத்தை அறியாப்‌ பரிபாக
னாக்கி உன்றன்‌ இருபதத்தை
நம்ப மனதில்‌ உறுதி யொன்றாய்
நாட்டி எனையோ ராளாக்கி
மடத்தை அரிய வலிந்தழைப்பாய்‌
மதிவாள்‌ நுதலே மலைமகளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
17

காவே இலங்கும்‌ பொன்னிந்திக்‌
கரையே இலங்கும்‌ மயிலை நகர்‌
கங்கை முதலாம்‌ புனித நதி
கருதிப்‌ பணியும்‌ மூதூரே
பாவே இலங்குங்‌ கவிவாணர்‌
பகரும்‌ மறைவே தாகமங்கள்‌
பயிலும்‌ வீதிக்‌ கமுகிள நீர்
பாயும்‌ வாழை குருந்தேறும்‌
ஆகவே இலங்கு வயல்‌ சூழும்‌
அதிலே நானா விருகூஷமுடன்‌
அமுத ரசமாய்க்‌ கனிபழுக்கும்‌
அருகிற்‌ பறவை யினஞ்‌ சூழும்‌
மாவே இலங்கும்‌ அநுதினமும்‌
மருவுங்‌ கயிலை நிகரான
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
18

என்ன மயக்கம்‌ இது புதுமை
இதை யாருடனே யான்‌ உரைப்பேன்‌
எடுக்க முடியா வினைச்‌ சுமையை
ஏழைத்‌ தலைமீ தெடுத்தேற்றி
மன்னிப்‌ பிறக்க இடமும்‌ இன்றி
வாகாய்‌ நடக்க வழியும்‌ இன்றி
மயக்கக்‌ கொடுவேல்‌ முனைக்கானில்‌
வனவே டர்கள்செந்‌ நாயுடனே
என்னை மறிக்கக்‌ கொடுமையுடன்‌
எழுந்தே உழுவைப்‌ பாய்ந்திடவும
இதிலே மயங்கி அலைந்திடவிட்(டு)
எங்கே ஒளித்தாய்‌ ஈஸ்வரியே
வன்ன மயிலே எனக்குரைத்த
வசன மதுபொய்‌ யான தென்னோ
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
19
Back to Top

பாகு சேரும்‌ மொழியணங்கே
பணத்தை அணியுஞ்‌ சதுர்தோளி
பாதி மதியுங்‌ கதிரணியும்‌
பரம ஞான வெளிச்‌ சுடரே
ஆகும்‌ பருவம்‌ அறிந்தென்றன்‌
ஆவி நாளும்‌ உபயபதம்‌
அடுத்துக்‌ கவிதை சரந்தொடுத்தே
அமைந்து பொழிய வரம்தருவாய்‌
ஏகு மயக்கத்‌ துட்டருடன்‌
இனிதா எனைச்‌ சேர்த்‌ தகற்றாதே
இமவான்‌ அளித்த திருமகளே
எங்கும்‌ நிறைந்த பெருவெளியே
வாகு பொருந்துங்‌ கிருஷ்ணனது
வரிசைத்‌ துணைவி சுகவதனி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
20

விதியின்‌ முறைமை எத்தனைநாள்‌
வினையிற்‌ படுவ தெத்தனைநாள்‌
விசுவாசிக்கக் கொடுமைபல
விளையும்‌ பகையும் எத்தனைநாள்‌
அதிக வினையும்‌ எத்தனை நாள்‌
அற்ப வாழ்வும்‌ எத்தனைநாள்‌
அதிலே குரோதித்‌ திருப்பதெல்லாம்‌
அழியும்‌ வகையும்‌ எந்நாளோ
பொதிகை மலையன்‌ அரிஅயனும்‌
புகழ்‌ சேர்‌ காமன்‌ திசைப்பாலன்‌
போற்றும்‌ உன்றன்‌ இரு சரணம்‌
பொருந்தி மகிழ்வ தென்நாளோ
மதியை தரித்த முகில்‌ வேணி
மயிலே குயிலே வான்மணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
21

சிந்தாமணியின்‌ பூசைசெய்தால்‌
செகத்தில்‌ எவர்க்கும்‌ குறைவருமோ
செல்வமுடனே‌ கல்விஅருள்‌
திரளாய்‌ விளையும்‌ என்பவெல்லாம்‌
முன்றானான போதிலையே
முதல்வி உன்றன்‌ அருளுலகில்‌
மூழ்கி கனமாய்‌ வினையிருளும்‌
முறிய படர்ந்து மறைந்தது போல்‌
இந்தா எனவே நீ கொடுத்த
இயல்பே யல்லால்‌ மானிடரோடு
ஏற்கை சேர்க்கை அவர்‌ உரைத்த(து)
ஏதாகினும்‌ உண்‌ டோஉரையாய்‌
மைந்தா எனவே அமுதளித்த
வகையை நீயும்‌ மறந்தாயோ
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
22

வெகுநாட்‌ பழைய அடிமையென
மிகவுங்‌ கனிந்தே அருள்‌அளித்து
வெளியைக்‌ காட்டிக்‌ களிப்புடனே
விம்மி விழிநீர்‌ சொரிந்தருளத்‌
தகுமெய்ஞ்‌ ஞானச்‌ சாரமெலாந்‌
தந்தோம்‌, தந்தோம்‌ என்றுரைத்த
தாய்தான்‌ மறந்தால்‌ உலகில்‌இனித்‌
தான்‌ஆர்‌ பகைஆர்‌ என்செய்கேன்‌
புகழ்நா ராணியே உன்னைவிடப்‌
பொருளும்‌ அருளும்‌ வேறுண்டோ
பொல்லா தவனே யானாலும்‌
பிள்ளை இவனென்‌ றருள்புரிவாய்‌
வகுத்த சேயைப்‌ பால்கொடுத்து
வளர்க்கா திருக்கும்‌ தாய்உண்டோ
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
23
Back to Top

சோத்ர வழியால்‌ வருவினையும்‌
தொக்கு வழியால்‌ வருவினையும்‌
தொடருஞ்‌ சட்சு வழியாலும்‌
சொல்நா வுடனே ஆக்ராணம்‌
பார்த்த வழியிற்‌ கரணமதைப்‌
பற்றி உயிரைக்‌ கலங்கடித்துப்‌
பண்ணும்‌ வினையும்‌ வெகு கோடி
பாழ்போ னதுவும்‌ வெகுகோடி
ஆற்றில்‌ கரைத்த புளிஎனவே
ஆயிற்‌ றொருவர்க்‌ குதவியின்றி
அடியேன்‌ முன்னாள்‌ ஒருவருக்கும்‌
ஆகா தவனோ அதை இனித்தான்‌
மாற்ற வகையும்‌ அறியாயோ
வகுத்த என்னையும்‌ மறந்தாயோ
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
24

நாளோ வினையோ வீணாளோ
நானா தொழிலுக்‌ கானதுவே
நலயஞ்சேர்‌ நிட்டைக்‌ குதவிவரும்‌
நாழி யொன்றா யினும்‌இலையோ
சூளைக்‌ குயவன்‌ விதிவசத்தால்‌
துக்க சுகமும்‌ தொடர்ந்துவரத்
துன்மார்‌க் கத்தால்‌ வந்ததென்றுஞ்‌
சொல்வார்‌ பாரில்‌ சூழ்மனிதர்‌
வேளைக்‌ கிசைந்த மொழிபேசி
வினையிற்‌ புகுந்த சுகம்‌ போதும்‌
வினையை ஒழித்தே அமலசுக
வெளியைப்‌ பொருத்தி வினைப்பிறவி
மாளும்‌ படிநீ அருள் புரிவாய்‌
வாலாம்‌ பிகையே வான்மணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
25

எந்தன்‌ நினைப்பும்‌ இனிக்கடந்தே
ஏக வெளியின்‌ நிலை தொடர்ந்தே
இரவும்‌ பகலும்‌ அற்ற இடம்‌
இனிதா கியபே ரொளிவிளக்கே
சந்திக்‌ கரையின்‌ முடிவேற்றித்‌
தனையுந்‌ தலைவன்‌ அடிசேர்த்துச்‌
சாட்சாத்‌ கார பூரணமாய்ச்‌
சர்வா னந்த மாயிருக்க
உன்தன்‌ இருதாள்‌ மலர்க்‌ கருணை
ஓளி சேர்‌ கனகக்‌ கிரிமுடிமேல்‌
உதித்தாய் எனது வினையறவும்‌
உமையே இமையோர்‌ கரசான
மந்திரக்‌ கலைச்சி நவகோணம்‌
வாழும்‌ யோக நாயகியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
26

காமக்‌ கிரிபீ டத்தழகி
கனக சபையில்‌ நடனமிடும்‌
காத்யாயனியே கவுமாரி
காமேஸ்‌ வரியே ஈஸ்வரீயே
பூமி தேவி நான்முகவன்‌
புனித மனைவி இந்த்ராணி
புகழ்நா ராணியும்‌ தினம்பணியும்‌
பூர்ண கலையே கதிமுதலே
சோமன் உதய மணிநுதலே
சுருதி ஞான முடிமுதலே
துவாத சாந்த நிலையாளே
சுகமே ஞான மணிவிளக்கே
வாம‌ நயனி அதிரூபி
வன சாகினியே மாமணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
27
Back to Top

மூலத்‌ துதிக்கும்‌ ஞாயிறுமாய்‌
முளரி யிதழ்வாய்ச்‌ சதுர்முகனாய்‌
மூல உந்தித்‌ திருமாலாய்‌
மூளுங்‌ கால காலனுமாய்‌
மேலுற்‌ றருளுஞ்‌ சதாசிவனும்‌
விரியும்‌ இதழொன்‌ றருள்பரையும்‌
வித்தா ரமுமாய்‌ உலகனைத்தும்‌
விரிவாய்‌ நின்ற விரிசுடரே
ஞாலத்‌ தமைந்த இருபதமும்‌
நடனச்‌ சிலம்பும்‌ கிண்கிணியும்‌
நணுகிப்‌ பெருகும்‌ இந்துநதி
ஞான நதியாம்‌ பரமநதி
மாலற்‌ றவர்க்கும்‌உதவிநிற்கும்‌
மதுர வசனி நவசரணி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
28

ஏன்றான்‌ மயக்கத்‌ திருவினையும்‌
மிடியும்‌ வகையும்‌ போதாதோ
ஏழை தனையே பகைப்பவர்கள்‌
இருமா நிலத்திற்‌ சலுகையுண்டாய்‌
நான்றான்‌ பெரியன்‌ என்றுரைத்த
நாவும்‌ வாயும்‌ அடைத்தெமனார்‌
நகரிற்‌ பயண மாகிவர
நடத்தாய்‌ கருணைச்‌ சுடர்விளக்கே
தான்றான்‌ செய்த வினைமுழுதும்‌
தனக்கே யன்றி மனக்கவலை
தன்னாற்‌ போமோ என்மனத்துத்‌
தளர்ந்து. புழுங்கும்‌ என்செய்கேன்‌
வான்றான்‌ பரவும்‌ திரிபுரையே
மெளனா தீத மலர்க்கொடியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
29

கள்ள மயக்கந்‌ தொடராமல்‌
கவலைப்‌ பிணிகள்‌ அடராமல்‌
கனவை நனவாய்‌ தொடர்ந்தடர்ந்து
கரைய விழியின்‌ புனலாறாய்த்‌
துள்ளி மனந்தான்‌ மிகச்‌ சலனந்‌
தொடுத்துத்‌ தொடுத்தே அலையாமல்‌
சுகமாய்‌ உன்றன்‌ இருபதத்தை
தொண்டன்‌ மனத்துட்கொண்டருள்வாய்‌
உள்ளபடியே மனத்தடத்தில்‌
ஒன்றாய்‌ வாழுங்‌ கனியமுதே
ஓங்கா ரத்துக்‌ குள்ளிருந்தே
உயர்ந்த கமலா சனத்தரசே
வள்ளல்‌ இடத்தி அருள்மயத்தி
வனச முகத்தி கனகசத்தி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
30

பெரியோர்‌ எவரைப்‌ பழித்தேனோ
பிரம தவத்தை அழித்தேனோ
பெற்ற தாயார்‌ பசித்திருக்கப்‌
பேணி வயிற்றை வளர்ந்தேனோ
அரிய தவத்தோர்க் கிடைஞ்சல்செய்தே
அற்ப ரிடத்தில்‌ சேர்ந்தேனோ
அறியா மையினால்‌ என்ன குற்றம்‌
ஆர்க்குச்‌ செய்தே னோஅறியேன்‌
கரிய வினைதான்‌ எனதறிவைக்‌
கலங்க வடித்து முடிச்சதையுங்‌
கரைக்க வுன்றன்‌ கருணையினால்‌
கடாக்ஷம்‌ பொருந்த அருள்புரிவாய்‌
வரிவில்‌ புருவ மடமானே
வதனாம்‌ புயவா லாம்பிகையே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
31
Back to Top

கனத்த மலையை எடுத்தணுவாய்க்‌
காலால்‌ ஊன்றி மீதுவைத்தால்‌
கால்தான்‌ தாங்க வசமாமோ
கருணா நிதியே இனிஉனது
சினத்தை மகன்மேற்‌ பொருத்திநின்றால்‌
சிறியேன்‌ பொறுத்து நிலைப்பேனோ
சிவையே உனது தயவுவரச்‌
செய்வாய்‌ இனிஅஞ்‌ சுகஇனமே
தொனித்த மறையின்‌ முடிவிளக்கே
சோதி வதனச்‌ சுடரொளியே
சுத்த வியோம மண்டலத்தில்‌
சுகமாய்‌ வளரும்‌ துரந்திரியே
மனத்துள்‌ அழுக்கை அகற்றிஉன்றன்‌
மலர்ப்பா தமதில்‌ சேர்த்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
32

கிளியே அருண வொளிச்சுடரே
கிருபா னனமா முழுமதியே
கெடியாம்‌ உன்றன்‌ இருபதங்கள்‌
கிடைக்கும்‌ வகையும்‌ பெறுவேனோ
ஒளியாய்‌ இருக்கும்‌ கனகசபை
ஒன்றே இரண்டே விபரிதமே
உரைக்குங்‌ கருணா நிதிமயிலே
உதித்த பரம னுடன்‌ஆடும்‌
அளியா ரமுதே பரம்பரையே
அணுவில்‌ அணுவாய்‌ அண்டபிண்டம்‌
அமர்ந்த சிவமே ஞானவெளிக்(கு)
அரசே வேதத்‌ துட்பொருளே
வளியே சுழியில்‌ நடமிடுகண்‌
மணியே எளியேற்‌ கினியருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
33

கவலைக்‌ கடலில்‌ வினையலையில்‌
கனத்த மனமாகிய மடுவில்‌
கைநீச்‌ சாக நீந்தஎன்றால்‌
கரைதான்‌ அடுத்துக்‌ கிட்டவிலை
சவல மலையில்‌ இடர்படவும்‌
தகையும்‌ வெகுளி மகரமது
தாவி வரவும்‌ கைபிடிக்கத்‌
தானா தரவும்‌ இல்லாமல்‌
குவளை விழியில்‌ புனல்பெருகக்‌
கோகோ என யான்‌ அழுதுநின்றால்‌
குறித்துன்‌ னருள்தோ ணியில்‌ஏற்றிக்‌
கொண்டேகரையில்‌ சேர்தருள்வாய்‌
மவுனச்‌ சிவனார்‌ இடப்பாகம்‌
வளரும்‌ கருணா நிதிமயிலே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
34

நல்லார்‌ நடக்கும்‌ வகைஅறியேன்‌
நான்‌ நான்‌ எனவே உலகமதில்‌
நாடு வீடு மாடுமக்கள்‌
நம்பு மனையாள்‌ வாழ்வதனில்‌
பொல்லா வறுமை பொருந்திவரப்‌
புல்லர்‌ தம்பால்‌ வருந்திநின்று
பொழுதை வீணாக்‌ கழித்தொழித்து‌
பொய்யாம்‌ உடலம்‌ வீழ்ந்துவிடில்‌
எல்லாம்‌ எனதென்‌ றிருந்தவெல்லாம்‌
எள்ள ளவும்பின்‌ தொடர்வதில்லை
இவற்றில்‌ நிறுத்தி மயக்குவதை
யானோ அறியேன்‌ விதிவசத்தால்‌
வல்லா ணவத்தால்‌ அழியாதென்‌
மனத்தில்‌ குடிகொண் டாண்டருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
35
Back to Top

அடியார்‌ செய்யும்‌ வினைதனக்கோர்‌
அருள்செய்‌ துவந்து காக்கிலையோ
யான்மாத்‌ திரந்தான்‌ உன்றனுக்கே
ஆகா தவனாய்ப்‌ போனேனோ
படிமேல்‌ முன்செய்‌ தவக்குறையோ
பத்தர்‌ தமக்கு தீம்புசெய்த
பாபந்‌ தானோ அறியாமற்‌
பலவாய்‌ என்றன்‌ உயிர்மறுகி
முடியாக்‌ கலக்கங்‌ கொள்ளவைத்து
மூழ்க அடித்தால்‌ என்செய்கேன்‌?
மோச மான இருவினையில்‌
முளைத்தே எழுந்த செனனமதை
மடியக்‌ கருணை இனியருள்வாய்‌
புவனை வாலை திரிபுரையே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
36

எங்கும்‌ சரியாய்‌ நீ இருந்தே
ஏற்றல்‌ குறைச்சல்‌ பேதகற்றி
என்னா ருயிரை இப்பிறப்பில்‌
எடுத்தாட்‌ டியதும்‌ அறியேனே
சங்கம்‌ ஆழி தரித்தவளே
சகல உயிர்க்கும்‌ உயிரக்குயிராய்‌
தானாய்‌ இருந்த தவப்பொருளே
தமியேன்‌ செய்த வினைமுழுதும்‌
மங்கும்‌ படியே நீ பார்த்து
மடங்காக்‌ ககனப்‌ பெருவெளியில்‌
மாறா தருணக்‌ கமலமதில்‌
வாழக்‌ கருணை நீஅருள்வாய்‌
வங்கங்‌ கொழிக்கும்‌ பொன்னிநதி
வளர்ந்த புனலா ரிசைந்துவரு
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
37

ஓல மிடவும்‌ அமலையுந்தான்‌
உறுதி மனதிற்‌ பொருந்தவில்லை
ஒருநா ழிகையா யினும்மிடியன்‌
உபய பதத்தை நினைத்ததில்லை
காலம்‌ அறிந்து நினதடியார்‌
கருது மொழியும்‌ கேட்டதில்லை
கனவா கியசம்‌ சாரமெனுங்
கடலி னிடை வீழந் தலைமோத
நீல இருளில்‌ விழிக்குருடாய்‌
நின்றே மயங்கிக்‌ கிடைப்பேனை
நீதான்‌ கிருபை பொருந்தியுன்றன்‌
நெறிதான்‌ அளித்து நிலைவைப்பாய்‌
வாலை வடிவே ககனமுடி
வான திருவே மலைமகளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
38

ஆண்ட வளும்நீ யாமாகில்‌
அழகு துரைச்சி நீயாகில்‌
அருணன்‌ நிறத்தி நீயாகில்‌
அமுத சிவத்தி நீயாகில்‌
பூண்ட இமயா சலத்தின்‌உயர்‌
பொன்னே நீதானாமாகில்‌
புகழ்ந்தே எனக்குன்‌ அருள்முலைப்பால்‌
புசிக்கக்‌ கொடுத்த தாயாகில்‌
நீண்ட புகழ்உன்‌ சமயமெனும்‌
நெறிதந்‌ ததுவும்‌ நிசமாகில்‌
நிலத்தில்‌ எனையே பகைத்தகற்ற
நேரிட்டிருப்பார்‌ பேருடலம்‌
மாண்டு விடவே அருள்புரிவாய்‌
வாரா கினியே அருள்மணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
39
Back to Top

அலையில்‌ துரும்பாய்‌ மனம்‌ அலைய
அனலில்‌ மெழுகாய்‌ மனம்‌ உருக
அளிந்த பழம்‌ போல்‌ உடல் தளர
அருவி விழிகள்‌ புனல்‌ சொரிய
கலையில்‌ அறிவும்‌ பிசகி நின்ற
கலக்க மதனை அகற்றிஒரு
கனஞ்‌ சேர்‌ உன்றன்‌ இணையடியைக்‌
காண வசங்‌ கொண்‌ டிருக்கவைப்பாய்‌
சிலையைப்‌ பிடித்த கரத்தழகி
சிவத்தி தவத்தி பவம்‌அகற்றி
செயமே தரித்த மனோகரத்தி
சிந்தா மணி ரத்தி னாபரணி
மலையில்‌ உதித்த நவபீட
வாசம்‌ உறைமா யேஸ்வரீயே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
40

உடலும்‌ பகைக்க அகம்‌ பகைக்க
ஒக்கப்‌ பிறந்தார்‌ மனையாட்டி
உடனே பகைக்க ஊர்பகைக்க
ஒழிந்த பெரியோர்களும்‌ பகைக்கக்
கடலும்‌ பகைக்க நிலம்‌ பகைக்கக்
கனல்கால்‌ ககன முடன்‌ பகைக்க
கருதி இருக்கும்‌ வேளைஇதைக்‌
கண்டா யோஎ௭ன்‌ மாதாவே
சடலந்‌ தனையே பகைப்பதல்லால்‌
சர்வ மூல முதல்விஉனைத்‌
தானே பகைக்க இக்கயவர்‌
தம்மா லாமோ தார்குழலே
அடலம்‌ பரையே உனைஅடுத்தேன்‌
வந்தென்‌ றனைநீ காத்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
41

உற்றார்‌ பெற்றார்‌ தமை வேண்டேன்‌
ஊழி வினையால்‌ வரும்பொருளும்‌
உடலும்‌ வேண்டேன்‌ செழித்திருக்கும்‌
ஊரும்‌ உலகு மதைவேண்டேன்‌
சற்றா யினும்‌இவ்‌ வுலகிலுள்ளே
தனுவா திகளும்‌ வரல்வேண்டேன்‌
தன்னை அறிய அறிவருளுந்‌
தாயே உன்றன்‌ இருபதங்கள்‌
பெற்றார்‌ அடிஎன்‌ சிரமதனில்‌
பிரியா திருக்கும் வகை வேண்டிப்‌
பிடித்தேன் எனது மனவுறுதி
பிசகா திருக்க வரம் அருள்வாய்
மற்றா ரையும்நான்‌ நம்பவில்லை
வரையின்‌ மகளே உனைஅடுத்தேன்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
42

ஒன்றோ டொன்று நெருங்கி இந்த
உடலை விலக்கி உயிர்நெகிழ
உற்றகால மதனில்‌ எனக்‌(கு)
உனது பதங்கள்‌ எதிராக
நின்றே எனக்குன்‌ அருள்‌அளிப்பாய்‌
நிதியே கருணைக்‌ கடல்மயிலே
நேரில்‌ அமைந்த தற்பரையே
நித்யா னந்த மானவளே
அன்றே அனைத்தும்‌ ஒன்றாக
அரனா ரிடத்தில்‌ இருப்பவளே
அடர்வில்‌ புருவ மணிநுதலே
அமுதே என்றன்‌ அகத்துயிரே
மன்றே பொருந்தும்‌ இருபாதம்
மறவா திருக்க வரம்‌அருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
43
Back to Top

ஐம்பத்‌ தோராம்‌ அக்ஷரத்தி
அகிலாண்‌ டத்தி அந்தரத்தி
அமல சுகத்தி அருள்மயத்தி
அருநட நிறத்தி அம்பரத்தி
எண்பத்‌ தோராம்‌ பதங்கடந்த
ஏக வெளிச்சி காரணத்தி
இமயா சலத்தில்‌ வந்தருளி
இருநா ழிகைநெற்‌ கொண்டுலகில்‌
உம்ப ரடியார்க்‌ கறம்‌ வளர்த்த
உமையே அருள்வா ரிதிமாதே
உனது பதத்தை அடியேனும்‌
உரைத்து மகிழ வரம்‌அருள்வாய்
மண்பூத்‌ தலருங்‌ கமலமதில்‌
வளருங்‌ கனமே கொடிஅனமே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
44

மண்ணால்‌ கரகந்‌ தனைப்பிடித்து
வாரி யெடுத்துத்‌ தலைமீது
வைத்தே ஆடும்‌ பூசாரி
மனம்போல்‌ எனது மனம்‌உவந்து
அண்ணா திருந்து குறிபார்த்தே
அசையா திருக்கில்‌ அசைந்துருகி
அமுத தாரை ஒழுகிவர
அதனுட்‌ பொழுதைச்‌ செலுத்த அருள்‌
ஒண்ணாங்‌ ககன முடிப்‌ பொருளே
உள்ளச்‌ சிவமே நவரசமே
ஒன்றா யூக மனத்துயிராய்‌
உயிருக்‌ குயிராய்‌ இருந்தவளே
வண்ணா லயமே ஞானவெளி
வனமே எனைவந்‌ தாண்டருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
45

அவகா லத்தில்‌ மனமும்‌எனக்‌(கு)
அடங்கா தெழுந்தே எழுந்துவிம்மி
அகத்தைப்‌ படைத்தே உனதுதிரு
வருளந்‌ தாதி தனைமறந்து
பவமா மயலா ருடன்சேர்ந்து
பண்ணும்‌ வினைநான்‌ என்சொல்கேன்‌
பார்க்கப்‌ போனால்‌ அதற்கொருவர்‌
பகையார்‌ உறவார்‌ உலகமதில்‌
சிவமா யிருந்த சமுத்திரத்தைத்‌
திரிபாய்‌ நினைக்கு மிதன்வலுமை
தேய்த்தே உனது திருவருளைத்‌
திறமாய்‌ பெறவே வரமளிப்பாய்‌
மவுனா தீத அலர்கொடியே
வனமூ லிகையே பூரணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
46

வினையின்‌ பயனே பயன்‌ அதனை
வெறுத்து தறிக்கப்‌ போகாதோ
வெய்யோன்‌ உதயத்‌ தெதிர்பனியும்‌
விம்மிச்‌ சுரந்து வளர்ந்திடுமோ
நினையும்‌ நினைப்பும்‌ அதற்காதி
நீயும்‌ உனது பதியோனும்‌
நிசமாய்‌ எனது வசமானால்‌
நில்லா தெந்த வெவ்வினையும்‌
தனையே அறிந்தால்‌ இன்பதுன்பத்‌
தடைதான்‌ வந்தால்‌ அதுநிகரோ
தகைவோர்‌ இவைகட்‌ கஞ்சுவாரோ
தாயே மிகுந்த சவுந்தரிஉன்‌
மனையே அறியக்‌ கருணைபுரி
மணிநா தந்தத்‌ தனிச்சுடரே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
47
Back to Top

கனிந்து கனிந்துன்‌ றனைப்பாடிக்‌
கசிந்தே இருகண்‌ புனல்பெருகக்‌
காது உபயம்‌ உனதருளாம்‌
கதையை கேட்க உனதடியார்‌
இனந்தான்‌ உறவாய்‌ மனம்‌ புதைய
எந்த நாளும்‌ அவர்‌இருந்த
இடத்தை இருதாள்‌ சுற்றிவர
இரவும்‌ பகலும்‌ நினதருளை
நினைத்த படியே சிந்தை செய்யும்‌
நெறியை உதவி எனைக்காப்பாய்‌
நித்யா னந்தப்‌ பழம்பொருளே
நிமிலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத்‌ தொழில்‌உனது
அடிக்கே இதமாய்‌ அருள்புரிவாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
48

குலந்தான்‌ நலந்தான்‌ குடியிலுள்ள
குணந்தான்‌ கனந்தான்‌ எமதெனவே
கொள்ளும்‌ கயவர்க்‌ கதுவசனங்‌
குலவும்‌ உந்தன்‌ இருபதத்தைச்
சிலந்தி யிழைபோல்‌ அறிவுருகச்‌
செகத்தில்‌ கண்டு பிடித்தவர்க்குச்‌
செகதூ ஷணிப்பும்‌ நகைப்பும்‌என்ன
செய்யும்‌ அவரை மலர்க்கொடியே
அலர்ந்த முளரி முகத்தாள்‌உன்‌
அடிமை யான நாயேனை
யார்தான்‌ நகைத்துப்‌ பழித்தும்‌என்ன
ஆதி கிருஷ்ணன்‌ றன்துணைவி
மலர்ந்த மனமார் அடியவர்பால்‌
வளரும்‌ ஒளிசேர்‌ நிலமாதே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
49

நீர்மேல்‌ குமிழி யாம்‌ உடலை
நிலையாம்‌ எனவே கயவரெல்லாம்‌
நின்று புவியில்‌ தனம்தேடி
நீள மயக்கால்‌ மிகவாடிப்‌
பார்மேல்‌ பெரியோர்‌ தமைப்பழித்துப்‌
பண்ணும்‌ வினைகள்‌ வெகுகோடி
பாவி யர்கள்பாற்‌ சேராதுன்‌
பதமே கதியாய்ப்‌ பதித்துவைப்பாய்‌
கார்மேல்‌ பொருது மதிக்கதிரே
கனகா பரணி மணிப்பிறையே
ககன முடியில்‌ வளர்தெழுந்த
கஞ்சா சனத்து நிலையாளே
வார்மேற்‌ பொருது மலர்குயத்தி
வானில்‌ வளரும்‌ முகில்வேணி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
50

ஏழை எனையே காக்கவகை
எடுத்த உன்றன்‌ இதயமெலாம்‌
இரங்கி இரங்கிச்‌ சலித்துமதி
எனையே குறிக்கப்‌ பொருந்திலையோ
சூழ உன்றன்‌ இருபதத்தைச்‌ சுகமாய்‌
மனதில்‌ பொருத்தி இன்னஞ்‌
சொந்த அடிமை யாக்கிலையோ
சும்மா இருப்ப தென்வகையோ
ஆழி யமுதை அடுத்தவருக்(கு)
அகத்திற்‌ பசியும்‌ உண்டாமோ
அமுதம்‌ வருஷம்‌ பொழிந்திடில்‌என்
அதிட்ட மதிலோர்‌ குடையாக
வாழப்‌ பிடித்தால்‌ உன்னைஎன்னால்‌
வசனித்‌ திடவாக்‌ கினைத்தருவாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
51
Back to Top

கொடுங்கை தன்னால்‌ எடுத்தசிறு
குழந்தை தனைத்தாய்‌ எறிவாளோ
கோபங்‌ கொண்டால்‌ யான்‌ நிகரோ
குலவுங்‌ கருணை நிலையாளே
அடங்கி உனது கோபமெலாம்‌
அகற்றி எனது பரிதாபம்‌
அறிந்துன்‌ னருளைப்‌ பாலித்தே
ஆள்வாய்‌ வேத விழுப்பொருளே
தொடங்கும்‌ பரமன்‌ இடப்பாகத்து
ஒளிர மணியே அணிப்பணியே
தொலையாச்‌ செனன அலைஅகலத்‌
தோற்றும்‌ உனது துணைப்பாதம்‌
அடங்கத்‌ தெரிய மனம்‌ அடங்க
வாரிக்‌ கருணை பொழிந்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
52

கான லதனை புனலாகக்‌
கருதி நினைக்கும்‌ மானதுபோல்‌
கவலை யுடனே குடும்பம்‌எனும்‌
கனவா கியபொய்‌ மாயைதனில்‌
ஈன ருடனே இருந்துசொல்லி
எல்லாம்‌ எமதென்‌ றொயிலாக
இறுமாப்‌ படைந்து மனம்வீணா
யிரிந்து கலங்கித்‌ திரியுமையோ
நான்நான்‌ எனவே மகிழ்ந்திருந்த
நடத்தை யகலச்‌ சிவபுரத்தில்‌
நாதன்‌ சுழல்கள்‌ உணர்வினுள்ளே
நடு வாழ்ந்‌ திருக்க அருள்புரிவாய்‌
வானா னந்தத்‌ தவக்கொடியே
வனச முகத்தி வாள்நுதலே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
53

நிலம்கால்‌ ககனம்‌ கடல்‌அனலும்‌
நீள இருந்த நெறிச்சுடரே
நிரவி உலகெங்‌ கினும்‌உயிராய்‌
நிறைந்தே இருந்த தவப்பொருளே
பலகா லமும்‌உன்‌ இருபதங்கள்‌
பாடிப்‌ பாடிக்‌ கசிந்துருகிப்‌
பரவும்‌ விழிகள்‌ புனல் ஆறாய்ப்‌
பெருகி. எனது மனம்‌உருகக்‌
கலையும்‌, நிலையும்‌, தெரிந்திருக்கக்
கனவாய்‌ உலகம்‌ மறந்திருக்கக்
கபிலைப்‌ பசுவுங்‌ கதறிமிகக்‌
கன்றைத் தேடி வருவதுபோல்‌
மலமா யாதி அகலஎன்பால்‌
வந்துன்‌ னருட்பால்‌ தந்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
54

எந்த நாளும்‌ உனதருட்பே
ரழகை அறிவில்‌ ஒருபிடியா
யிருத்தி மகிழ்ந்து கனககிரி
ஏறி முதல்வன்‌ ஈசனது
சிந்தை மிகுந்து புகழ்ந்துவரச்‌
செல்வ முடனே கல்விவரச்‌
செகசா லங்கள்‌ தமைக்கடந்து
சிற்சொரூப மனம்‌ புணர்ந்து
வந்துன்‌ னாத முடியருளும்‌
மெளனா னந்தச்‌ சுடர்விளக்கே
மாலா கியகிருஷ்‌ ணன்துணைவி
வனச மலரின்‌ நிலையாளே
மைந்தனிடம்வந்‌ தெனைக்காப்பாய்‌
மணியே யோக ஒளிமணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
55
Back to Top

கொஞ்சும்‌ கிளியே அருள்பழுத்த
கொம்பே கதம்ப வனத்தில்வளர்‌
குயிலே இமயா சலத்தில்வருங்‌
கொடிவான்‌ மதியே பேரொளியே
அஞ்சு தொழிலுக்‌ கதிகாரி
அதிமோ கனமே மாமாயை
அமுத வசனி நான்மறைக்கும்‌
அடங்கா தகண்ட பெருவெளியே
விஞ்சு புகழ்சேர்‌ திருமகளும்‌
வேதன்‌ மனையா ளொடுநிதமும்‌
மிகுந்து பணியும்‌ அரிஅயனும்‌
விபுதர்‌ முனிவர்‌ மறையோர்கள்‌
வஞ்சியேஉன்‌ பதங்காண
வகையும்‌ அறியார்‌ வளமயிலே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
56

ஏதோ கன்ம விவகாரம்‌
இதனால்‌ உயர்த்தி தாழ்த்திஎன
இறந்தும்‌ பிறந்தும்‌ நரகமதில்‌
இருந்து மனது சஞ்சலிக்கப்‌
பேதா பேதம்‌ மிகப்பேசி
பெருமை சிறுமை இதனாலே
பெற்ற சுகம்தான்‌ இனிப்போதும்‌
பிரியா துன்றன்‌ இருசரண
வேதாந்‌ தவருட்‌ கமலமதை
விருதாப்‌ பிடித்துக்‌ கருதிநிற்க
வெட்ட வெளியோன்‌ ஏகனுடன்‌
விளங்கக்‌ கருணை நிலைஅருவாய்‌
மாதா வேமெய்ஞ்‌ ஞானமுதே
மறையின்‌ முடியில்‌ வளர்பவளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
57

சோற்று துருத்தி வெகு புழுக்கள்‌
சுகமா யென்றன்‌ அகம் எனவே
சொல்லி வளருங்‌ கருங்காடு
சூளைக்‌ குயவன்‌ உத்தியினால்‌
பார்த்துப்‌ பிடித்த பழம்பாண்டம்‌
பகைத்தே ஏமன்‌ றானுடைக்கும்‌
பனங்காட்‌ டிலுறை நரிநாய்கள்‌
பருந்தும்‌ விருந்தாய்‌ அருந்திமகிழ்‌
ஊற்றை பிணத்தை எனதெனவே
உகந்து நின்ற சுகம்‌ போதும்‌
உனது பதங்கள்‌ என்மனத்துள்‌
உறவே கருணை மிகஅளிப்பாய்‌
மாற்றொன்‌ நில்லா அருட்கனக
வரையின்‌ முடிமேல்‌ வளர்பவளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
58

எடுத்த. சென்னம்‌ இறக்குமுன்னே
என்சிந்‌ தையுள்நீ வரவேண்டும்‌
இரவும்‌ பகலும்‌ உனதடியை
ஏத்தும்‌ வரம்‌ நீ தரல்வேண்டும்‌
அடுத்துக்‌ கலக்கும்‌. இருவினைகள்‌
அறவே சிவத்தில்‌ உறவேண்டும்‌
அனுட்டா னாதி தன்னை இழந்(து)
அமல சுகத்தை பெறவேண்டும்‌
தொடுத்த படியே எனைச்சார்ந்து
தூக்கி எடுத்து நடுவணையில்‌
சுகமா யிருப்ப வரம்‌அருள்வாய்
துவாத சாந்த நிலையாளே
மடுத்த கனத்தி நின்மயத்தி
மடலே கருணைக்‌ கடலாளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
59
Back to Top

உந்திக்‌ கமலத்‌ துறைபவளே
ஓங்கா ரத்தி சதுர்கோணத்(து)
ஒளிரும்‌ இதய நிலையாளே
உமையே கமலா சனமணியே
சிந்தித்‌ திடவே அறுகோணஞ்‌
செறிந்த மனையின்‌ நிலையாளே
செயமோ கினியே டாகினியே
சிந்தா மணியே யோகினியே
சந்தித் திடவே உன்னிருதாள்‌
தனையே அருள்வாய்‌ தற்பரையே
சகல மகவான்‌ திருக்கிருஷ்ண
சாமி துணைவி பார்வதியே
வந்தித்‌ திடவே தேவரெலாம்‌
மகிழத் தோற்றும் மலர்கொடியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
60

முகம்பார்த்‌ தொருவர்‌ பேசாமல்‌
முனிவோர்‌ முன்னே அரக்கர்போல்‌
முடியப்‌ பழித்த பழிப்பாலே
முனையும்‌ மழுங்கி என்றனுயிர்‌
அகந்தான்‌ உருகும்‌ இனிஅதைத்தான்‌
ஆரோ டுரைப்பன்‌ அருட்கடலே
அதிக வினையேன்‌ அற்பருக்கே
அனைத்தும்‌ வசிய மாகுமையோ
சகந்தான்‌ நகைத்தால்‌ ஞானிஎன்பர்‌
தமியேன்‌ பருவம்‌ பொருந்தாமல்‌
தாயே உனையான்‌ வேண்டும்‌ வரம்‌
தயைசெய்‌ திருத்தி எனதுளத்தில்‌
மகனாம்‌ எனவே அருள்புரிவாய்‌
வடிவே ஞான மறைமுடிவே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
61

அரசே என்றன்‌ அகத்துயிரே
அமுதே கருணை மதிநுதலே
அகண்டா காரப்‌ பெருவெளியே
அமல சுகமே அந்தரமே
உரைசேர்‌ மறையின்‌ முடிமுதலே
உணர்வே உணர்வின்‌ ஒளிச்சுடரே
ஓதா வறியா அதிசயமே
உமையே இமையோர்க்‌ கரசான
தரைசேர்‌ தண்டைச்‌ சிலம்பணியுந்‌
தாளி பணிகள்‌ அணிதோளி
தருணம்‌ இதுவே சிவபுரத்தி
சர்வா னந்த பரம்பரத்தி
வரிசை இமயா சலத்திலுறை
மயிலே எனக்குன்‌ அருள்புரிவாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
62

ஒன்றே ககன முடிமுதலே
ஒளியே வெளியே அகண்டிதமே
உலகா சாரங்‌ கடந்துநின்ற
உமையே அமல சுகப் பொருளே
என்றே உலகம்‌ அனைத்துயிர்க்கும்‌
இரவும்‌ பகலும்‌ எங்கெங்கும்‌
இருநா ழிகை நெற்‌ கொண்டுலகை
இசைய வளர்த்த மலர்க்கொடியே
தன்றே மூலா தாரமுதல்‌
தாவும்‌ புருவ நடுவரையில்‌
தழைத்த பரமே நிராமயமே
சாகா வேகாப்‌ பூரணமே
மன்றே நடனம்‌ இடும்சரண
மயிலே, குயிலே, சிவபதியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
63
Back to Top

ஆய்ந்த உன்றன்‌ அருள்நூலை
அடுத்தே இழையைத்‌ தொடுத்தெடுத்து
அதனைக்‌ கயிறா கவேமுறுக்கி
அலையும்‌ மனத்தை இறுக்கியுன்றன்‌
தோய்ந்த சிவக்கால்‌ தனைப்பூட்டித்‌
தொண்ணூற்‌ றாறு கருவிமயல்‌
தொடுத்த‌ சடத்தை இகழ்ந்துனது
துவாத சாந்த‌ வெளிதனிலே
பாய்ந்த படியே குடியாகப்‌
பலசொப்‌ பனமும்‌ கண்டுவிடப்‌
பதத்தை கடந்தே இதத்துடனே‌
பரம னார்ந்த சிவபுரத்தில்
வாய்ந்த வாஞ்சை யுடன் புகழும்
வானே வானோர்‌ தொழுந்தேனே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
64

அருளுக்‌ கறிவா யிருந்ததெய்வம்‌
அமர்ந்த திருநாட்‌ கொடியேறி
அலங்கா ரமுமாச்‌ சித்தமெனும்‌
அமைகே டகத்தில்‌ எழுந்தருளி
மருளும்‌ மனதைப்‌ பலிகொடுத்து
வரிசை யுடனே நடுவீதி
வரையிற்‌ பலவாம்‌ அதிசயங்கள்‌
வகைதான்‌ உரைக்க முடியாது
சுருளப்‌ பிரியா ரதம்‌ஏறிச்‌
சோதி வதன ஒளிதாண்டிச்‌
சுத்த வியோம நிலையதினில்
சுகமாய்‌ நிறத்திக்‌ கொடியிறக்கி
மருளற்‌ றிருக்க அருள்புரிவாய்‌
வாலாம்‌ பிகையே காரணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
65

ஊசி நுனியில்‌ மனதைஉன்னி
உயர்ந்த மனிதர்‌ மயிர்பதினா(று)
ஒன்றும்‌ நுழையா இடத்தில்தமர்‌
ஒடுங்கி அடங்கிக்‌ குறிபார்க்கில்‌
காசிப்‌ புனலும்‌ நிறைந்த கங்கைக்‌
கரையுங்‌ கடந்து திரைகடந்து
கனக மணியின்‌ ஒலிகடந்து
கருணைக்‌ கடலுந்‌ தான்கடந்து
பேசும்‌ பருவம்‌ உரைகடந்து
பெருமை சிறுமை தமைக்கடந்து
பேயி னுடனே பேயனுமாய்ப்‌
பிரமை கொண்டே அறிவழிந்து
வாசித்‌ தடமே கடந்துநின்ற
மெளனா னந்தம்‌ எனக்கருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
66

செல்லும்‌ மனமும்‌ அடங்கியபின்‌
சென்றே உமைப்‌ பருவமது
சேர வரவே அறிவழிந்து
செகத்தோர்‌ நகைத்துப்‌ பகைத்திடவும்‌
அல்லி முளரித் தடந்தாண்டி
அருண வுதய ரவிதாண்டி
அடங்கி யிருக்கச்‌ சிவபுரத்தில்‌
அடியேன்‌ குடியாய்‌ நிலைக்கஅருள்‌
நல்ல கமல முகத்தாளே
நந்தி விடையோன்‌ இடத்தாளே
நறுமா மலர்ச்செஞ்‌ சடையாளே
நதிகள்‌ பெருகும்‌ பதத்தாளே
வல்ல பரையே பரம்பரையே
மெளனா தீத மோகனமே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
67
Back to Top

அடர்ந்த ககன முடியினிலோர்‌
அமுத நதிதான்‌ பெருகிவர
அதனைப்‌ புசித்துப்‌ பசிதணித்து
அடியேன்‌ மனந்தான்‌ லயமாகத்‌
தொடர்ந்து சிவமே அநுக்ரகித்துத்‌
தொல்லை வினையைப்‌ பறக்கடித்துத்‌
தொலயாச்‌ செனன வழிதொலைத்துச்
சுகமா யிருக்க அருள்‌ புரிவாய்‌
படர்ந்த அருண மணிநுதலே
பரம சுகவா னந்தமதில்‌
பாவம்‌ அகன்ற மனத்துள்வளர்‌
பத்மா சனியே வான்மணியே
மடந்தைப்‌ பருவம்‌ உடையாளே
வளர்மின்‌ கொடிபோல்‌ இடையாளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
68

அணுவுக்‌ கணுவாய்‌ யிருக்கும்உனை
அறிய வசமோ அருட்கடலே
யார்தான்‌ அறிவார்‌ அரிபிரமன்‌
அவரால்‌ அறியா அதிசயத்தாய்‌
குணமற்‌ றகன்ற நிரஞ்சனமே
குறியற்‌ றிருந்த பரம்பரமே
கொள்ளைப்‌ பிறவி தனையகற்றுங்‌.
கொடியே ககன மின்கொாடியே
கணுவற்‌ றகண்ட அருட்கரும்பே
கண்ணின்‌ மணியே மணியின்னுள்ளே
கலங்கா திருந்த ஒளிச்சுடரே
கருணைக்‌ கடலே நவமணியே
மணமுற்‌ றொளிர்பூங்‌ கமலமிசை
வளருந்‌ திருவே மலைமகளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
69

நெஞ்சிற்‌ சபலம்‌ பொருந்தாது
நிலையை அறிவால்‌ உணர்ந்தொன்றாய்‌
நின்னை நினைக்கப்‌ பொன்னதனில்‌
நெறிமாற்‌ றுயரும்‌ வண்மைஎனப்‌
பஞ்சுப்‌ பொறிபோற்‌ பவம்‌அகலப்
பலவாம்‌ நினைவு களும்‌அகலப்‌
பரிந்தென்‌ பால்வந்‌ தருள்புரிவாய்‌
பரமா னந்த சுகப்பொருளே
அஞ்சும்‌ உடலா இருப்பவளே
ஆறுங்‌ கடந்த பரம்பரையே
அமுத வசன திருக்கிருஷ்ணன்‌
ஆதித்‌ துணைவி அந்தரியே
வஞ்சி நவமோ கனரூபி
வதனாம்‌ புயத்தி அருள்மயத்தி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
70

பச்சை முழுப்பொன்‌ னிறமுடனே
பளிங்கு பவள முடன்‌ நீலம்‌
பருத்த மேக முடன்‌ஆறாய்ப்‌
பரவி யிருக்கும்‌ பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில்‌
அருண உதய ரவிகோடி
அகண்டா கார ரூபமதாய்‌
அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல்‌ அணிச்சிலம்புஞ்‌
சிறுகிண்கிணித்தண்‌ டைகளொலிக்கச்‌
சிவனோ டிருக்குங்‌ கொலுமுகத்தைச்‌
சிறியேன்‌ காண அருள்புரிவாய்‌
வச்ச உனது பொருள்‌எனக்கு
வரத்தாற்‌ கருத்தில்‌ உரைத்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
71
Back to Top

அணங்கே நவபீ டாசனியே
அருளே உதய மதிச்‌ சுடரே
ஆகா யத்தில்‌ முளைத்தெழுந்தே
அலர்ந்த முளரி நிலையாளே
இணங்கும்‌ அடியார்‌ நினைத்தபடி
இசைந்த புவனத்‌ தவமணியே
ஏகா காரமாகஎனை
எடுத்துன்னருளைக்‌ கொடுத்தாள்வாய்‌
பிணங்கு மலமா யாதிதனிற்‌
பிரிய விடவும்‌ மாட்டாயே
பேரா யிரத்தி தவபுரத்தி
பேசா மோனக்‌ கொடிமடலே
மணங்கோண்டிருக்குங்‌ குழலாளே
வந்தென்‌ றனையாட்கொண்டருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
72

குடும்பம்‌ எனுமைக்‌ கடல்தனிலே
குலவும்‌ உடலா கியதோணி
குறித்தே பிரமன்‌ வகுத்தவகை
கொள்ள மேற்கால்‌ கீழ்காலாய்த்‌
தடம்புக்‌ கியதோர்‌ நாளையிலே
தடுத்து வழியோர் சுழலடிக்கத்‌
தாறு மாறா யொருமுடுக்கில்‌
தானே ஒதுங்கிக்‌ கிடக்குமையோ
திடம்புக்‌ கிடவே நேர்காற்றால்‌
சேர்ந்து வரவே கரைஒதுங்கச்‌
சற்றே தயவாய்ப்‌ பார்த்தருள்வாய்ச்‌
செஞ்சொற்‌ கிசைந்த திருமாதே
மடம்பார்‌ முடிவில்‌ நடனமிடும்‌
மதிசூடியபே ரொளி விளக்கே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
73

கல்லாக்‌ கயவர்‌ முகம்பார்த்துக்‌
காத்துக்‌ கிடந்து விழிப்புனலாய்க்‌
கரையக்‌ கரைய இதம்பேசிக்‌
கலங்கித்‌ திரியும்‌ கடையேனை
நல்லார்‌ பதத்துக்‌ கானஎழில்‌
நடத்தை அறிய எனதுமதி
நம்ப உறுதி அருள்புரிவாய்‌
ஞான னந்தச்‌ சுடர்விளக்கே
பொல்லா வறுமை தனைஅகற்றிப்‌
பொழுதை மறைத்துச்‌ சரமேகம்‌
பொழியும்‌ வகைபோற்‌ கவிமாரி
பொழிய மொழிநல்‌ வாக்களித்தே
வல்லா னாக்கி எனைஆள்வாய்‌
வாலாம்‌ பிகையே நாரணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
74

அரிபிர்ம்‌ மாதி தேவரோடும்‌
ஆழி கடைய விடம்பிறக்க
அதனாற்‌ பயந்தே அபயமிட
அபயங்‌ காத்தோன்‌ கரியுரித்தோன்‌
எரியப்‌ புரத்தை நகைத்தெரித்தோன்‌
இறையோன்‌ என்பர்‌ அறியாதார்‌
இறையோன்‌ உடலில்‌ நீபாதி
இருந்தே செய்த விவகாரம்‌
தெரியா துலகம்‌ அறியாதோ
சிவனார்‌ தமக்கோர் தொழில்‌ஏது
தேகம்‌ நீஉன்‌ தொழில்‌எனவே
செப்பு மறைகள்‌ அநுதினமும்‌
வரிவில்‌ தரித்த மலர்க்கொடியே
வந்தென்‌ றனையா தரித்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
75
Back to Top

இறைவி இருந்த அதிசயத்தை
எவரால்‌ அறிய வசமாகும்‌
ஈசன்‌ தனக்குள்‌ தானறிவார்‌
இருமா நிலத்தோர்‌ அறியாரே
நிறையுங்‌ கடலும்‌ நிலம்பவனம்‌
நெருப்பு ககனம்‌ அறியாதே
நின்னை அறிந்தார்‌ பிறப்பிறப்பு
நிலத்தில்‌ திரும்ப முளையாரே
அறையஞ் சிலம்பு மிகஒலிக்க
அமுத கிரணச்‌ செஞ்சரணி
அடியேன்‌ அறிவுக்‌ கோரறிவாய்‌
அமைந்தே இருந்த பரம்பரையே
மறையின்‌ முடியில்‌ நடனமிடும்‌
வனச மலர்ப்பூம்‌ பதத்தாளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
76

கருத்தோ செலுத்தச்‌ சல்லடைக்கண்‌
களைப்போற்‌ கலங்கி மயங்குமையோ
கனவில்‌ எவர்க்கும்‌ உபகாரங்‌
கருதி னாற்போல்‌ காணலுற்றேன்‌
பருத்த இருளில்‌ விழிக்குருடன்‌
பாதை அறிந்து நடப்பானோ
பதியே எனது மதிவினையால்‌
படும்பா டிவைநான்‌ ஏதுசொல்வேன்‌
ஒருத்தர்‌ உதவிகளுங்‌ காணேன்‌
உனையே அடைந்தேன்‌ ஒளிச்சுடரே
உதித்த கதிர்முன்‌ இருள்போலும்‌
ஓட்டி வினையை வாட்டிடுவாய்‌
வருத்தம்‌ அறிந்த தாயேஉன்‌
மலர்பா தத்தில்‌ வீழ்ந்தடுத்தேன்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
77

சத்த பரிச மொடு ரூபம்‌
தரித்த ரசமா கனக்கந்தம்‌
தாவும்‌ பொறிகள்‌ தாம்‌அறியுந்‌
தனையே அறியும்‌ கரணமது
உற்ற உயிர்தான்‌ இவைஅறியும்‌
உயிர்தான்‌ அறியும்‌ அதுசாக்ஷி
உகந்த சாக்ஷி தனை அறிய
ஒருவர்‌ தமையும்‌ நான்காணேன்‌
முற்ற அறிவை உடையோர்தாம்‌
முதலாஞ்‌ சாக்ஷி தனையறிந்து
மோகா வேசந்‌ தனைக்கடந்த
முனிவர் ஆனோர்‌ இருபதங்கள்‌
வைத்தென்‌ சிரசில்‌ தியானமுடன்‌,
மகிழ்ந்தே யிருக்கும்‌ வகைஅருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
78

தனதென்‌ றிருப்பர்‌ உலகமதில்‌
தந்தை யொடுதாய்‌ தனதாமோ
தனந்தான்‌ தனதோ அகம்தனதோ
தழுவும்‌ மனையாள்‌ தனதாமோ
எனதென்‌ றிருந்த பாழும்‌உடல்‌
இதுதான்‌ தனதோ மனம்தனதோ
எல்லாம்‌ உலக விருத்தியினால்‌
இதம்போற்‌ கரவில்‌ இசைந்திருப்ப
உனது பதத்தை யான்பிடித்தேன்‌
உணர்ந்தொத்திருக்க வகையெடுத்தேன்‌
உடலும்‌ மனமும்‌ வினைவசத்தால்‌
ஒடுங்கி தளர்ந்து துடிக்குமையோ
மனதின்‌ நீங்கி என துவச
மாகக்‌ கருணை யதுபுரிவாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
79
Back to Top

காண வேண்டும்‌ இருபதத்தைக்
களிக்க வேண்டும்‌ அநுதினமும்‌
கவலைக்‌ கடலா கியவினைகள்‌
கரைய வேண்டும்‌ எனைஅகன்று
தோண வேண்டும்‌ திருக்கிருஷ்ணன்‌
துணைவி உனது திருக்கருணை
தோற்ற வேண்டும்‌ நடுவணையில்‌
துவாத சாந்த வெளியில்மனம்‌
பூண வேண்டும்‌ அருளமுதம்‌
புசிக்க வேண்டும்‌ எனதுடலும்‌
புகழ வேண்டும்‌ அருட்கவிதை
பொழிய எனக்குன்‌ அருள்புரிவாய்‌
வான மதியே அபரஞ்சி
மனையில்‌ இருந்த சவந்தரியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
80

அத்து விதமே சிவபுரமே
அணுவில்‌ அணுவே அகண்டிதமே
அமுதச்‌ சிவமே அழகொழுகும்‌
அருண நுதலே நவநிதியே
முத்தர்‌ அறிவே கனகமுடி
மோனப்‌ பதியே அதிரசத்தின்‌
முக்ய ரசமே நவமுடியில்‌
முடிந்த பரமே திருப்பரையே
சுத்த வெளியே வெளிக்குநடு
சூழ்ந்த ஒளியே ஒளிக்குமுனந்
தோயுந்‌ திரையே திரைக்கும்‌ அப்பால்‌
தோன்றும்‌ வெளியே வளிக்கனலே
மத்த மதனப்‌ பிரபஞ்ச
வடிவே இமய மலைமகளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
81

மருத நிலத்தோன்‌ ஒருபாலில்‌,
வந்து வணங்கக்‌ கனல்மறலி
வருணன்‌, நிருதி குபேரனொடு
வாயு முடிவில்‌ ஈசானன்‌
பொருந்தி வணங்க அமரர்முடி
புனையும்‌ பதத்தி அருள்மயத்தி
பூமா தொடுவா ணியும்‌ வணங்கும்‌
பொன்னா பரணம்‌ அணிபுயத்தி
கருதும்‌ அடியார்‌ நினைவினுள்ளுங்
கலந்த வதனி கல்யாணி
காமக்‌ கிரிபீ டாசனியே
கன்னி உமையே காரணியே
வருநற்‌ பருவ மாக்கிஎனை
வளர்சே வடிக்கா ளாக்கிடுவாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
82

தக்க திரிகோ ணாசனத்தி
சகல புவன மானசத்தி
சர்வ பூதமான சத்தி
சகலா கமங்க ளானசத்தி
திக்கே உடையாய்‌ அமர்ந்தவளே
திரிகோ ணாதீ தப்பொருளே
செம்பொற்‌ கலசத் தனத்தழகி
திவ்ய சோதி மயமான
புக்கே அடியார்‌ சிந்தனையில்‌
புகழ்ந்து நடன மிடுஞ்சரணி
பூதம்‌ ஐந்தாய்‌ நாதாந்தப்‌
பொருளாய்‌ இருந்த மலர்கொடியே
மக்கும்‌ எனது மனச்சலனம்‌
மாற்றிக்‌ கருணை மிகுந்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
83
Back to Top

அனைத்தும்‌ அகண்ட முடிவிலொன்றாய்‌
அருளாய்‌ பழுத்த தவப்பொருளே
அகில போக தனுகரண
மான சுகமே அற்புதமே
செனித்த பிறவித்‌ துயரறுக்குஞ்
சீர்வாள்‌ பிடித்த கரத்தழகி
தினமும்‌ உனையே பணிந்தவர்கள்‌
சிந்தை நிலையா யிருப்பவளே
கனத்த மயிடா சுரன்‌ சிரத்தைக்
கலங்க உதைத்த பதத்தாளே
கருணைக்‌ கடலே பரநிதியே
கண்மூன்‌ றுடைய கற்பகமே
மனத்துள்‌, சலனம்‌ அறக்கருதி
மலர்ச்‌ சேவடியை அளித்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
84

துரங்கம்‌ பதினா றங்குலமே
சுகமாய்‌ நடன மிடுஞ்சரணி
தொலையா வெளியே வெளிமுதலே
சுயம்பி ரகாச நிலையாளே
இரங்கும்‌ அடியார்‌ சிந்தையுள்ளே
இனிதாய்‌ வளரும்‌ வாரிதியே
இலகும்‌ நினைவும்‌ உடையவளே
ஈன ரகம்விட்டிருப்பவளே
அரங்க முடிவில்‌ நடுவணையில்‌
அமுதலாய்ச்‌ சொரியும்‌ அருள்நதியே
அமல சுகத்தை அடியேனும்‌
அடையும்‌ அறிவு தரல் வேண்டும்‌
வரங்கள்‌ இனிவந்‌ தருள்புரிவாய்‌
வனசாசனத்துள்‌ இருப்பவளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
85

உம்பர்‌ முனிவர்‌ முதலோர்க்கும்‌
உணர்தற்‌ கரிதா யிருப்பவளே
ஓதா வேதம்‌ உணர்பவளே
உயிருக்‌ குயிரே ஒளிக்கொளியே
அம்பு படர்ந்த விழிப்‌ பொருளே
அரவ முடியில்‌ இருப்பவளே
அரனார்‌ தினமும்‌ நினைத்தருளும்‌
அடியா ருள்ளத்துள்‌ மணிவிளக்கே
கும்ப முனிக்கும்‌ வியாசருக்கும்‌
குலவு நவசித்‌ தாதிகட்கும்‌
குறித்த சனாகா தியர்கட்கும்
குறிப்பை அருளும்‌ நிலையாளே
வம்பில்‌ பழுத்த ரசக்கனியே
மதமோ கினியே யோகினியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
86

தொந்த வினையாய்‌ இருந்தகன்மம்‌
தொலைக்கு மருந்தாய்‌ இருந்தவளே
துக்க சுகமா யிருந்ததனைத்‌
துடைக்குங்‌ கதியாய்‌ இருப்பவளே
அந்த கனுமா யிருந்தும்‌அவர்க்(கு)
அதிகா லனுமா யிருப்பவளே
அரியும்‌ அயனா யிருந்தும்‌ அவரக்‌(கு)
அப்பா லாகி இருப்பவளே
முந்தி நடுவா யிருந்தும்‌அதன்‌
முதலாய்‌ முடிவா யிருப்பவளே
முத்தர் சிவமா யிருந்தும்‌அருள்‌
மோனப்‌ பதியா யிருப்பவளே
வந்தித்‌ திடநீ வந்தெனக்கோர்‌
வழியைக்‌ காட்டி ஆதரிப்பாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
87
Back to Top

பூதம்‌ ஐந்தும்‌ சதுர்க்கரணம்‌
புலனோ ரைந்தும்‌ பொறிகள்‌ பத்தும்‌
புகழும்‌ வித்யா தத்துவங்கள்‌
பொருந்தோ ரேழும்‌ சிவம்‌ ஐந்தும்‌
பேதா பேதம்‌ ஒரேழில்‌
பிடித்த தேகக்‌. கொடியினிற்‌
பிறந்தும்‌ பிறந்தே இறந்திறந்து
பேய்போல்‌ திரிந்தே பொய்பேசிக்‌
காத லுடைய மனத்தையுன்றன்‌
கருணை விழி கொண்டினி நோக்கிக்‌
கவலை தணிய வரம்‌ அருள்வாய்‌
கண்ணே எனது கண்மணியே
வாத மகன்ற பெருவெளியில்‌
வளரும்‌ நடனத்‌ தாண்டவத்தி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
88

ஆரா ரகமும்‌ நீயானாய்‌
ஆரா அமுதும்‌ நீயானாய்‌
ஆரா ருயிரும்‌ நீயானாய்‌
யாவர்‌ பொருளும்‌ நீயானாய்‌
பேரா யிரமும்‌ உடையாளே
பேதா பேதம்‌ பேசிஎன்ன
பெருமை சிறுமை நீயானாய்‌
பிரியா அருளும்‌ நீயானாய்‌
நாரா யணியே பூரணியே
நளினா சனத்துள்‌ நடிப்பவளே
நாட்டம்‌ அறியா தவருளத்தும்‌
நடனம்‌ புரிந்தே நிற்கிலையோ
வாரா கினியே தயைபுரிவாய்‌
வாலாம்‌ பிகையே பலவகையே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
89

தட்டா துனது மொழிகேட்டுத்‌
தமியேன்‌ பிழைக்கும்‌ வழிதேடித்‌
தயைசெய்‌ வதும்‌உன்‌ கடன்‌அலவோ
தாயே கருணைக்‌ கோர்முதலே
கட்டா யிருக்கும்‌ உலகாய்தர்‌
கலங்கிப்‌ பிரிய அருள்புரிவாய்‌
கமலா சனியே மாமணியே
கருணா நிதியே கற்பகமே
முட்டா திருந்த சலனமிவை
முழுதும்‌ துடைப்பாய்‌ முழுமுதலே
முனிவர்‌ புகழுந்‌ திருக்கிருஷ்ண
மூர்த்தி துணைவி மோகனமே
வட்டா காயத்‌ தொளிர்சுடரே
வாலாம்‌ பிகையே வந்தாள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
90

தத்‌ வா தீதச்‌ சுடர்விளக்கே
தமியேன்‌ உயிராயிருப்பவளே
சர்வ லோக தயாபரியே
சாக்ஷாத்‌ கார மானவளே
சித்த மோனத்‌ தடியார்தஞ்‌
சிந்தை யிடையில்‌ குடியான
சேஷாபரணி மலர்ச்‌ சரணி
திருவே அருவே திகழுருவே
வித்தா யடியிற்‌ கனகசபை
மேலாய்ச்‌ சுகமாய்‌ குண்டலியாய்‌
விளங்கா நிற்கும்‌ அருட்கனியே
மேலோர்‌ கீழோர்‌ தொழுபவளே
வற்றா துலவும்‌ அருட்கடலே
மகிழ்‌ந் தென்‌ றனைவந்‌ தாண்டுகொள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
91
Back to Top

அம்மா உனையே அடுத்தவர்கட்‌(கு)
அனைத்தும்‌ உலக வசியம்‌உண்டாம்‌
அஷ்டாங்‌ காதி யோகமுடன்‌
அடியும்‌ முடியும்‌ கவனம்‌உண்டாம்‌
தம்மாற்‌ சாபா நுக்ரகமும்‌
சகல மூர்த்தி கரமாகும்‌
சடமே வெகுநாள்‌ நரைதிரைகள்‌
தமையே அகற்றித்‌ தனியிருக்கும்‌
சும்மா அவர்கள்‌ விரல்‌ அசைந்தால்‌
தொடர்ந்தீ ரெழுபார்‌ சுழன்றுருளும்‌
துக்க சுகமும்‌ அணுகாது
சுகரூ பாதி அருளமையும்‌
அம்மா அதைத்தான்‌ ஏதுசொல்வேன்‌
வாக்கு மனதுக்‌ கடங்காதே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
92

பொன்னே நிறைந்த புதுமலரே
புகழ்சேர்‌ மறையின்‌ பொருள்‌ அணங்கே
பொற்றா மரைப்பூங்‌ கமலமதில்‌
புகழ்ந்தே யிருக்கும்‌ போதகமே
மின்னே பவழக்‌ கொடிவடிவே
மேகம்‌ அனைய கருங்குழலே
விளங்கு நவபீடாசனியே
வித்தாய்‌ மரமாய்‌ மறைமுடியில்‌
முன்னே பழுத்த கதிப்பழமே
முதிர்ந்த மொழியிற்‌ படர்ந்தகொடி
முதலே நுதலே குடியாக
முடிவா யிருந்த மோகனமே
அன்னே பொருந்த அருளளிக்கும்‌
வாலாம்‌ பிகையே வான்மணியே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
93

தூல சூக்ம காரணமே
தொலையாக்‌ கருணை வாரிதியே
துவாத சாந்த வெளிதனிலே
சுகமா யிருக்கும்‌ நிரந்தரமே
மேலாம்‌ தவத்துக்‌ கதிகாரி
விரிந்த கமல நடுப்பீடம்‌
வியாபித்‌ தொளியாய்‌ வெளியதன்மேல்‌
வெளியா யிருந்த மெய்ப்பொருளே
ஆல கால விடம்‌அருந்தும்‌
அரனார்‌ இடப்பாக கத்தில்வளர்‌
அமுதே தேக வொளிமயமே
அருணாம்‌ புயத்திரி யம்பிகையே
வாலாம்‌ பிகையே உனையடுத்தேன்‌
வந்தென்‌ றனைநீ காத்தருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
94

மூன்றே யெழுத்தா யிருப்பவளே
முனைமே லெழுத்தே பதினைந்தா
முதலா யிருபத்‌ தெட்டாக
முடிவா யிருந்த மோகனமே
நீண்ட சமயா சாரமுமாய்‌
நெறியந்‌ தரமாய்‌ முகமாகி
நிகழா தாரக்‌ குண்டலியாய்‌
நின்றே யிருந்த நேரிழையே
பூண்ட அடியர்‌ அகந்தோறும்‌
பொன்னம்‌ பலமாய்‌ நடனமிடும்‌
பொருளே அருளே எனையாளும்‌
பொன்னே கண்ணி னுண் மணியே
மாண்ட குருவாய்‌ வந்தவளே
மருவுஞ்‌ சுகத்தைத்‌ தந்தவளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
95
Back to Top

ஆறு சமயம்‌ கடந்துநின்ற
அருண நிதியே சுந்தரியே
ஆசா பாசம்‌ அகன்றவர்பால்‌
அருளா யிருந்த அருந்ததியே
தேறும்‌ பதினென்‌ புராணமுமாய்த்‌
திசைதீ ஷையுமாய்‌ நின்றவளே
திக்கே உடையாய்த்‌ தரித்தவளே
செகமே வடிவாய்‌ நின்றவளே
கூறும்‌ ஜம்பத்‌ தொன்றதிலுங்
கோடா கோடி மந்திரமும்‌
குறிக்கும்‌ அனந்த‌ வேதமுமாய்‌
குறிப்பாய்‌ இருந்த பரமாதே
மாறி எனது மலம்‌அறவே
வந்தே அடிமை கொண்டருள்வாய்‌
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
96

முக்கட்‌ பரமர்‌ இடப்பாக
முதலாய்‌ முளைத்துத்‌ தழைத்தவளே
முன்னம்‌ அவனை ஈன்றவளே
முடிவில்‌ அவனை ஆண்டவளே
செக்கர்‌ இளமா மதிவதனத்‌
தெளிவிற்‌ றெளிவே தேன்மொழியே
தேவி யாதி பரஞ்சோதி
ஸ்ரீ பீ டாதி யருளாதி
பக்கத்‌ துணையே பார்வதியே
பரமேஸ்‌ வரியே காரணியே
பஞ்சா க்ஷரியே உலகேழும்‌
படைத்த தாயே பைங்களியே
மக்கள்‌ தமைப்போல்‌ எனைக்காக்க
வகைநீ அருள்வாய்‌ வளமயிலே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
97

தில்லை யதனுள்‌ நடனமிடுந்‌
திருவே அருவே திகழ்‌உருவே
தெளிந்த பரமே சிற்பரமே
செகசூத்‌ திரமே நான்மறையே
அல்லைத்‌ தொலைக்கும்‌ அருமருந்தே
அமுதா னந்தக்‌ கடற்பெருக்கே
அறிவுக்‌ கறிவாய்‌ இருக்கும்‌உனை
அனைத்துந்‌ துதிக்கும்‌ அருள்பரையே
எல்லை கடந்த பரவெளியே
இசைபுட்‌ களமே அகண்டிதமே
இதத்துக்‌ கிதமா யிருப்பவளே
இரவு பகலாய்‌ ஒளிர்பவளே
வல்ல சோமன்‌ சூடியிடம்‌
வளரும்‌ வாழ்வே என்கோவே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
98

அணியுங்‌ கனக ஒளிமலையே
அமுத நதியே அருட்கடலே
அதிகா ராதி தேவதையே
அகண்ட முடிவில்‌ ஒளிர்சுடரே
பணியும்‌ அணியும்‌ புயத்தாளே
பராநா தாந்த மடத்தாளே
பழகும்‌ அடியார்‌ இதயத்துள்‌
பரவி யிருக்கும்‌ பனிமொழியே
துணியு மனதா கியயோகி
தொடரும்‌ படியே தொடர்பவளே
தூங்கா துறக்க மானவளே
தொலையாச்‌ சுகமும்‌ ஆனவளே
மணியங்‌ கிரணி விளையாடி
வளருங்‌ கொலுவீற் றிருப்பவளே
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
99
Back to Top

நான்வே றெனநீ வேறானாய்‌
நானா வேதப்‌ பொருளானாய்‌
நாயேன்‌ இனியா ருடன்பேசி
நண்ணுங்‌ குறையைப்‌ போக்குவது
தான்‌ வேதாந்த முடிவானால்‌
தனக்கோர்‌ செயலும்‌ உண்டாமோ
சர்வானந்த சக்கரத்தி
சட்கோணத்தி சதுர்க்கரத்தி
தேன்வே றுருசி உண்டாமோ
தீபத்‌ தோளிவே றுண்டாமோ
தேகம்‌ உயிரும்‌ உயிருக்குயிராய்ச்‌
சிவமே யொன்றாய்‌ ஆனாயே
வான்வே றுண்டோ திருக்கிருஷ்ணன்‌
வளருந்‌ துணைவி நீஉரையாய்‌
மயிலா புரியும்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.
100
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:55 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/abhayaambigai.php