sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, கொல்லி (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) Audio: https://www.youtube.com/watch?v=XwJanp64qjk |
3.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது சாதாரி (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) Audio: https://www.youtube.com/watch?v=WYOJC7-4s6g |
6.008
திருநாவுக்கரசர்
தேவாரம்
விற்று ஊண் ஒன்று இல்லாத திருத்தாண்டகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PHR3JLFtuIk |
7.026
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! நட்டராகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vU7izHQuO6s |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.036  
சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
பண் - கொல்லி (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம், உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும், மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே. | [1] |
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம், சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே, காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி, நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே! | [2] |
கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர் மூங்கில், வந்து அணைதரு முகலியின் கரையினில், ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ, வீங்கு வெந்துயர் கெடும்; வீடு எளிது ஆகுமே. | [3] |
கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும், அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை, விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே. | [4] |
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே, திரை தரு முகலியின் கரையினில், தேமலர் விரை தரு சடை முடிக் காளத்தி விண்ணவன் நிரைதரு கழல் இணை நித்தலும் நினைமினே! | [5] |
முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும், எத்து மா முகலியின் கரையினில், எழில் பெற, கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய அத்தன் தன் காளத்தி அணைவது கருமமே. | [8] |
மண்ணும், மா வேங்கையும், மருதுகள், பீழ்ந்து உந்தி நண்ணு மா முகலியின் கரையினில், நன்மை சேர் வண்ண மா மலரவன், மால் அவன், காண்கிலா அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே! | [9] |
வீங்கிய உடலினர், விரிதரு துவர் உடைப் பாங்கு இலார், சொலை விடும்! பரன் அடி பணியுமின்! ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர, வாங்கிடும், வினைகளை, வானவர்க்கு ஒருவனே. | [10] |
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்- சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல் இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.069  
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
பண் - சாதாரி (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில் ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால், கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே. | [1] |
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரி செய் சதுரர், மதி பொதி சடையர், சங்கரர், விரும்பும் மலைதன்னை வினவில் எதிர் எதிர வெதிர் பிணைய, எழு பொறிகள் சிதற, எழில் ஏனம் உழுத கதிர் மணியின் வளர் ஒளிகள், இருள் அகல நிலவு காளத்திமலையே. | [2] |
வல்லை வரு காளியை வகுத்து, வலி ஆகி மிகு தாருகனை நீ கொல்! என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம் ஆய், கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே. | [3] |
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி, சடைமேல் தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில் வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு காளத்திமலையே. | [4] |
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை மழை போல் அலறக் கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல் நிலவு முது வேய் கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலையே. | [5] |
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில் கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே. | [6] |
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில் ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால், கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே. | [7] |
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால், பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால், கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே. | [8] |
இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும் என இகலும் இருவர் தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில் புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்திமலையே. | [9] |
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு போர்வையவரும், நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி, கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்திமலையே. | [10] |
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை, மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்- நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின் பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.008  
விற்று ஊண் ஒன்று இல்லாத
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
திருப்பைஞ்ஞீலியில் சிலநாள் தங்கித் திருவண்ணாமைலக்குப் புறப்பட்டார். திருவண்ணாமைல, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார்.
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண், வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால் மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண், மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப் பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான் காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன் காண்;அவன் என் கண் உளானே. | [1] |
இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன் காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்; முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்; பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்; கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. | [2] |
நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன் காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான் காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண், சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான் காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம் காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன் காண்;அவன் என் கண் உளானே. | [3] |
செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்; திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்; உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும் சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்; சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன் காண்;அவன் என் கண் உளானே. | [4] |
மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்; வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்- இனத்து அகத்தான்;இமையவர்தம் சிரத்தின்மேலான்; ஏழ் அண்டத்து அப்பாலான்;இப் பால் செம்பொன் புனத்து அகத்தான்;நறுங்கொன்றைப் போதின் உள்ளான்; பொருப்பு இடையான்;நெருப்பு இடையான்;காற்றின் உள்ளான்; கனத்து அகத்தான்;கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன், என் கண் உளானே. | [5] |
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்; ஏகம்பம் மேயான் காண்;இமையோர் ஏத்தப் பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண்; புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்; நல்ல விடை மேற்கொண்டு, நாகம் பூண்டு, நளிர் சிரம் ஒன்று ஏந்தி, ஓர் நாண் ஆய் அற்ற கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. | [6] |
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்; எரி, பவள, வண்ணன் காண், ஏகம்பன் காண்; எண்திசையும் தான் ஆய குணத்தினான் காண்; திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடி காண்; தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்; கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. | [7] |
இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்; வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்; மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள் தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள் கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன், என் கண் உளானே. | [8] |
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான் காண்; திரு ஏகம்பத்தான் காண்;தேன் ஆர்ந்து உக்க ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்; நம்பன் காண்;ஞானத்து ஒளி ஆனான் காண்; வானப் பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண்;வண்டு ஆர் சோலைக் கானப்பேரூரான் காண்;கறைக் கண்டன் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. | [9] |
இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்; ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்; குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்; குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்; மறை உடைய வானோர் பெருமான் தான் காண்; மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்; கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. | [10] |
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ அன்னான் காண்;உகப்பார் காணப் பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண்; அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்; கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.026  
செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே! வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே! கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்! அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . | [1] |
இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே! கமை ஆர் கருணையினாய்! கரு மா முகில் போல் மிடற்றாய்! உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள் அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே. | [2] |
படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே! விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்! கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்! உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே. | [3] |
மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே! குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்; நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள் அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . | [4] |
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி, நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால், துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்! அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே. | [5] |
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்; செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே! மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என் ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . | [6] |
கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள் குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா! முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்! அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே . | [7] |
நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக் கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே! பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்! ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! . | [8] |
தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி, எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்! களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே . | [9] |
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே . | [10] |