sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீரின் ஆர் மணியும்(ம்) அகில்
இந்தளம்   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FGwyom8Wso4
5.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   தங்கு அலப்பிய தக்கன் பெரு
திருக்குறுந்தொகை   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BJKSky-aB2U

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.010   சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமங்கலக்குடி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு புராணவரதேசுவரர் திருவடிகள் போற்றி )
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

[1]
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று
ஏத்தவே,
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.

[2]
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்,
மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.

[3]
பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம்,
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே! என்று
முறையினால் வணங்கு(ம்)மவர் முன்நெறி காண்பரே.

[4]
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர்
மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.

[5]
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள
வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.

[6]
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே,
கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே

[7]
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட,
வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே!

[8]
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.

[9]
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[10]
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.073   தங்கு அலப்பிய தக்கன் பெரு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமங்கலக்குடி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு புராணவரதேசுவரர் திருவடிகள் போற்றி )
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே.

[1]
காவிரி(ய்)யின் வடகரைக் காண்தகு
மா விரி(ய்)யும் பொழில் மங்கலக்குடித்
தே அரி(ய்)யும் பிரமனும் தேட ஒணாத்
தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே!

[2]
மங்கலக்குடி ஈசனை மாகாளி,
வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண் உளோர்,
சங்கு சக்கரதாரி, சதுமுகன்,
அங்கு அகத்தியனும்(ம்), அர்ச்சித்தார் அன்றே.

[3]
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி,
நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு,
அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!

[4]
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி-
செல்வம் மல்கு சிவநியமத்தராய்,
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ,
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.

[5]
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.

[6]
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன், அண்டர்கள் நாயகன்,
வேதநாயகன், வேதியர் நாயகன
பூதநாயகன், புண்ணியமூர்த்தியே.

[7]
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி,
விண்ட தாதையைத் தாள் அற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

[8]
கூசுவார் அலர், குண்டர், குணம் இலர்,
நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள்,
மாசர்பால்- மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க-உய்ந்தேன் அன்றே!

[9]
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன்,
தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து,
அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!

[10]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php