அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த, விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ, படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.
| [ 1]
|
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர் கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம் மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி, பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
| [ 2]
|
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல் கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
| [ 3]
|
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம் நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால், பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
| [ 4]
|
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப, மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம் கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே, பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.
| [ 5]
|
Go to top |
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர, கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம் சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய, பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
| [ 6]
|
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர் வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின் பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
| [ 7]
|
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன் தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர, பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
| [ 8]
|
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால், தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப, பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
| [ 9]
|
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார், கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம் தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார் பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.
| [ 10]
|
Go to top |
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம் அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய், ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.
| [ 11]
|