சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்; கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்; கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார் வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.
| [ 1]
|
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி, ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க, கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம் ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.
| [ 2]
|
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல் ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.
| [ 3]
|
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார் கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார் பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.
| [ 4]
|
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல் தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த, அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.
| [ 5]
|
Go to top |
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி, கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர் வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.
| [ 6]
|
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும் முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்; கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.
| [ 7]
|
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார், மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.
| [ 8]
|
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார் அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.
| [ 9]
|
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர் செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.
| [ 10]
|
Go to top |
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன, கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை, படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.
| [ 11]
|