கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும் நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்- திருத்தம் உடையார் திருப் பறியலூரில், விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.
| [ 1]
|
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன், பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்- திருந்து மறையோர் திருப் பறியலூரில், விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.
| [ 2]
|
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன் விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்- தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில், மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.
| [ 3]
|
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச் செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்- சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில், விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.
| [ 4]
|
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி, புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில், விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.
| [ 5]
|
Go to top |
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக, செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்- தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில், வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.
| [ 6]
|
நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான், அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்- திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில், விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.
| [ 7]
|
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ் இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம் திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில், விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.
| [ 8]
|
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன், துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்- இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.
| [ 9]
|
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்; உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்; விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.
| [ 10]
|
Go to top |
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன், வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை, பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.
| [ 11]
|