துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை, பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி, அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன் பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?
| [ 1]
|
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில் மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி, அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம் பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.
| [ 2]
|
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர் தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான், ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன் சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.
| [ 3]
|
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும் ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண் எல்லாம் காணாத கண்களே
| [ 4]
|
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான், ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன் வேட நெறி நில்லா வேடமும் வேடமே?
| [ 5]
|
Go to top |
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால் காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான், யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத் தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.
| [ 6]
|
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான், ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே
| [ 7]
|
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன் நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால், ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே
| [ 8]
|
புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர் உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே? அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம் வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?
| [ 9]
|
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார, கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான் அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர் நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?
| [ 10]
|
Go to top |
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை, கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன் நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
| [ 11]
|