ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய், கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர் வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே.
| [ 1]
|
அம் தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து, அழகர் ஆம் எம்தம் அடிகட்கு இனிய தானம் அது, வேண்டில், எழில் ஆர் பதி அது ஆம் கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே.
| [ 2]
|
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி, மிகு நோக்கு அரியராய், மூளை படு வெண்தலையில் உண்டு, முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட, நிரந்து, கமழ் பூ, வாளை குதிகொள்ள, மடல் விரிய, மணம் நாறும் மயிலாடுதுறையே.
| [ 3]
|
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால், மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே.
| [ 4]
|
பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து, பலி தேர் பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவர மா விரி மதுக் கிழிய, மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே.
| [ 5]
|
Go to top |
கடம் திகழ் கருங்களிறு உரித்து, உமையும் அஞ்ச, மிக நோக்கு அரியராய், விடம் திகழும் மூ இலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர்வாய் மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே.
| [ 6]
|
அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து, அவர்கள் மேல் எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே.
| [ 7]
|
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள் நெரிய, விரலால் விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா, மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே.
| [ 8]
|
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால், அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம் ஆம் கெண்டை இரை கொண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து, கிளர்வாய் அறுதல் சேர் வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளையாடும் மயிலாடுதுறையே.
| [ 9]
|
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற, மிக்க திறலோன் இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை, நிரந்து கமழ்பூ வண்டு அவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே.
| [ 10]
|
Go to top |
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்- கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு காதன்மையினால், மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன், மயிலாடுதுறையைப் புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர், பொன்னுலகமே.
| [ 11]
|