வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி, பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம் தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.
| [ 1]
|
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம் மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம் சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட, செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே.
| [ 2]
|
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால் கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல் ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம் சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.
| [ 3]
|
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி, அருகு வரு கரியின் உரி-அதளர், பட அரவர், இடம் வினவில் முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித் திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே.
| [ 4]
|
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும் முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம் ஆம் இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க, செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே.
| [ 5]
|
Go to top |
புற்று அரவர்; நெற்றி ஒர் கண்; ஒற்றை விடை ஊர்வர்; அடையாளம் சுற்றம் இருள் பற்றிய பல்பூதம் இசை பாட, நசையாலே கற்ற மறை உற்று உணர்வர்; பற்றலர்கள் முற்றும் எயில் மாளச் செற்றவர்; இருப்பு இடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே.
| [ 6]
|
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை, தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்; கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம் வினவில் செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே.
| [ 7]
|
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில் சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச் சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே.
| [ 8]
|
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும் நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும் சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.
| [ 9]
|
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள், வேடம் அவை பாரேல்! ஏறு மடவாளொடு இனிது ஏறி, முன் இருந்த இடம் என்பர் தேறும் மன வாரம் உடையார் குடி செயும் திரு நலூரே.
| [ 10]
|
Go to top |
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல் பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்- உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய், விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு பெறுவாரே.
| [ 11]
|