ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல் தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள், பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ் வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 1]
|
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர் நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார் நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 2]
|
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல் கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம், இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 3]
|
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார் அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 4]
|
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும் களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல், கபாலியார்தாம், துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 5]
|
Go to top |
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும் நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு அரியார் மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 6]
|
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார் வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 7]
|
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந் நீள்வரையைக் கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை கீழ்ப்படுத்தார் பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 8]
|
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும், குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான், வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ் விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 9]
|
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும், நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார் கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
| [ 10]
|
Go to top |
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி, வேள்விக்குடியும், ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.
| [ 11]
|