காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய, பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்) உரி-தோல்மேல் பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
| [ 1]
|
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்; பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம், ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார் மதில் மூன்றும் ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.
| [ 2]
|
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும் மைமிடற்றன் ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம் தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில் மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே.
| [ 3]
|
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய், அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண், நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு நாரையூர் எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
| [ 4]
|
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு இமையோர்கள் தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர் திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
| [ 5]
|
Go to top |
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்- தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன், மலைமகளைச் சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை- யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
| [ 6]
|
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார் வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து, நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர் உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
| [ 7]
|
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர் தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில, ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில், சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
| [ 8]
|
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான், ஒளிர்புன்சடைமேல் ஓர் வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு யாழ்முரலத் தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா, அடைவோமே.
| [ 9]
|
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில் உள் மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே, தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர் தன்னில் பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
| [ 10]
|
Go to top |
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல், பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி, மண் மதியாது போய், வான் புகுவர், வானோர் எதிர்கொளவே.
| [ 11]
|