சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) - திருநேரிசை:காந்தாரம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.


[ 1]


கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.


[ 2]


கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.


[ 3]


கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.


[ 4]


கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.


[ 5]


Go to top
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.


[ 6]


மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.


[ 7]


பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.


[ 8]


அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.


[ 9]


அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
1.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
7.079   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மானும், மரை இனமும், மயில்
Tune - நட்டபாடை   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song