பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
| [ 1]
|
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய், நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்! மாடம் சூழ் மருகல் பெருமான் திரு வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.
| [ 2]
|
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை- அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக மனத்தினால் மருகல் பெருமான் திறம் நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.
| [ 3]
|
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி, பாதுகாத்துப் பலபல கற்பித்து, மாதுதான், மருகல் பெருமானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
| [ 4]
|
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்; மன்னு தென் மருகல் பெருமான் திறம் உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.
| [ 5]
|
Go to top |
சங்கு சோர, கலையும் சரியவே, மங்கைதான், மருகல் பெருமான் வரும் அங்கவீதி அருகு அணையா நிற்கும்; நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?
| [ 6]
|
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே மீட்சி ஒன்று அறியாது மிகுவதே? மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத் தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.
| [ 7]
|
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும், ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள், மாடம் நீள் மருகல் பெருமான் வரில் கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.
| [ 8]
|
கந்தவார் குழல் கட்டிலள், காரிகை அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக வந்திடாய், மருகல் பெருமான்! என்று சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!
| [ 9]
|
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று, சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும் ஆதியான், மருகல் பெருமான், திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
| [ 10]
|
Go to top |