சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=aBXPkk1gHx0
6.011
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்புன்கூரும் திருநீடூரும் - திருத்தாண்டகம் அருள்தரு சொக்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகநாதர், சோமநாதேசுவரர் திருவடிகள் போற்றி
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பேணாதார் அவர் தம்மைப் பேணாதானை,
துறவாதே கட்டு அறுத்த சோதியானை, தூ
நெறிக்கும் தூ நெறி ஆய் நின்றான் தன்னை;
திறம் ஆய எத்திசையும் தானே ஆகித் திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிறம் ஆம் ஒளியானை, நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.
[ 1]
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை,
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை,
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி
நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை,
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை,
திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நின்று ஆய நீடூர் நிலாவினானை, -நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.
[ 2]
இல்லானை, -எவ் இடத்தும், -உள்ளான் தன்னை;
இனிய நினையாதார்க்கு இன்னா தானை;
வல்லானை, வல் அடைந்தார்க்கு அருளும்
வண்ணம்; மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை;
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை;
நெல்லால் விளை கழனி நீடூரானை;-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.
[ 3]
கலைஞானம் கல்லாமே கற்பித்தானை, கடு நரகம்
சாராமே காப்பான் தன்னை,
பல ஆய வேடங்கள் தானே ஆகி,
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானை;
சிலையால் புரம் எரித்த தீஆடி(ய்)யை, திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிலை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.
[ 4]
நோக்காதே எவ் அளவும் நோக்கினானை, நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை,
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை, அணுகாதார் அவர் தம்மை அணுகாதானை,
தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான்
தன்னை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[ 5]
Go to top
பூண் அலாப் பூணானை, பூசாச் சாந்தம் உடையானை, முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை, ஒருவர் காணா உத்தமனை, ஒளி திகழும் மேனியானை,
சேண் உலாம் செழும் பவளக்குன்று ஒப்பானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீண் உலாம் மலர்க் கழனி நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[ 6]
உரை ஆர் பொருளுக்கு உலப்பு இலானை, ஒழியாமே எவ் உருவும் ஆனான் தன்னை,
புரை ஆய்க் கனம் ஆய் ஆழ்ந்து ஆழாதானை, புதியனவும் ஆய் மிகவும் பழையான் தன்னை
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிரை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[ 7]
கூர் அரவத்து அணையானும் குளிர்தண்பொய்கை மலரவனும் கூடிச் சென்று அறியமாட்டார்;
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார்? தேவர், அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகாச்
சீர் அரவக் கழலானை, நிழல் ஆர் சோலைத் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீர் அரவத் தண்கழனி நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[ 8]
கை எலாம் நெய் பாய, கழுத்தே கிட்ட, கால் நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்;
செய் எலாம் செழுங் கமலப் பழன வேலித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[ 9]
இகழும் ஆறு எங்ஙனே? ஏழைநெஞ்சே! இகழாது பரந்து ஒன்று ஆய் நின்றான் தன்னை,
நகழ மால்வரைக்கீழ் இட்டு, அரக்கர்கோனை
நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான் தன்னை,
திகழும் மா மதகரியின் உரி போர்த்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிகழுமா வல்லானை, நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புன்கூரும் திருநீடூரும்
6.011
திருநாவுக்கரசர்
தேவாரம்
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
Tune - திருத்தாண்டகம்
(திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400