முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்; கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்; கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்; அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 1]
|
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்; காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்; வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்; ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 2]
|
மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி நீலகண்டம் உடையார் போலும்; நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும்; வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்; ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 3]
|
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்; பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்; கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்; அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 4]
|
ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும் மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்; மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும், ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 5]
|
Go to top |
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்; மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்; தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்; ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 6]
|
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்; கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்; காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்; ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 7]
|
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்; உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்; எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு ஏறிச் செல்லும் இறைவர் போலும்; அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 8]
|
கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர் போது, தாது அணிந்த கண்ணி போலும்; நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்; படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்; அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 9]
|
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும் புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்; கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்; வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
| [ 10]
|
Go to top |