சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஆக்கூர் - திருத்தாண்டகம் அருள்தரு கட்கநேத்திராம்பிகை உடனுறை அருள்மிகு சுயம்புநாதவீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg  
முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 1]


ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 2]


மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி   நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு   ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 3]


வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 4]


ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 5]


Go to top
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 6]


மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 7]


கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு   ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 8]


கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்   போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 9]


திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆக்கூர்
2.042   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அக்கு இருந்த ஆரமும், ஆடு
Tune - சீகாமரம்   (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முடித் தாமரை அணிந்த மூர்த்தி
Tune - திருத்தாண்டகம்   (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song