அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே; கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே; சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே; பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 1]
|
வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே; கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து உடைய பூதப்படையார் தாமே; உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார் தாமே பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர் எம்பிரானார் தாமே.
| [ 2]
|
இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார் தாமே; அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி அங்கை மறித்தார் தாமே; குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல் மேல் உகப்பார் தாமே; பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 3]
|
மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே; நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக் கண் வைத்தார் தாமே; ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு ஆபரணம் அணிந்தார் தாமே; பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 4]
|
சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார் தாமே; ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில் ஆக வளைத்தார் தாமே; பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 5]
|
Go to top |
காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும் வெள்ளை விடையார் தாமே; கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம் நாண் ஆகப் பூண்டார் தாமே; நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே; பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 6]
|
ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு அப் புறம் ஆய் நின்றார் தாமே; ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே; பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 7]
|
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே; பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார் தாமே; ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை நடுங்காமல் காப்பார் தாமே; பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 8]
|
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே; நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே; பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே; பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே; ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார் தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே; பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 9]
|
விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே; விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே; புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி, நெய்த்தானம், மேயார் தாமே; அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே; அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே; படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
| [ 10]
|
Go to top |