திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் சோதி மிக்க உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய், அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்! ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 1]
|
மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன், திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின் ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்; மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே இடம் கொடுத்து, நாளும் நாளும் ஆற்றேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 2]
|
வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்! நின்தன் நாமம் உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே? கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு அரையா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 3]
|
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கிக் கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா! எங்கள் கோவே! நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் அலுத்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 4]
|
நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே ஏத்தி, வாழ்த்தி, துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே? உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட அறவா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 5]
|
Go to top |
கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி, கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி, கங்காளவேடராய் எங்கும் செல்வீர்; நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்? நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே ஆனாய்! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 6]
|
உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே! உமையவள் தம் பெருமானே! இமையோர் ஏறே! கழை இறுத்த, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா! கயிலாயமலையானே! உன்பால் அன்பர் பிழை பொறுத்தி! என்பதுவும், பெரியோய்! நின்தன் கடன் அன்றே? பேர் அருள் உன்பாலது அன்றே? அழை உறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 7]
|
உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி திரிவாய்! உன்பால் அன்பு கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும் கையவனே! ஐயா! மெய்யே மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்து, அழுந்தி, நாளும் நாளும் அலந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 8]
|
பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன் பலி கொள்வானே! கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர்; கருதீர் ஆகில், எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 9]
|
துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்; பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே; செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச் செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம் அறிந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
| [ 10]
|
Go to top |