கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு, ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்! பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்! ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 1]
|
சிலைத்து நோக்கும், வெள் ஏறு; செந்தழல் வாய பாம்பு அது மூசெனும்; பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா, பிரானிரே! மலைத்த சந்தொடு, வேங்கை, கோங்கமும், மன்னு கார் அகில், சண்பகம், அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!
| [ 2]
|
தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன ஆடை, சுடலையில் பேயொடு ஆடலைத் தவிரும்! நீர் ஒரு பித்தரோ? எம்பிரானிரே! பாயும் நீர்க் கிடங்கு ஆர் கமலமும், பைந் தண் மாதவி, புன்னையும், ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!
| [ 3]
|
செந்தமிழ்த் திறம் வல்லிரோ? செங்கண் அரவம் முன் கையில் ஆடவே வந்து நிற்குமிது என்கொலோ? பலி மாற்றமாட்டோம்; இடகிலோம்; பைந் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர்! அந்தி வானம் உம் மேனியோ சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 4]
|
நீறு நும் திருமேனி நித்திலம்; நீல் நெடுங் கண்ணினாளொடும் கூறராய் வந்து நிற்றிரால்; கொணர்ந்து இடகிலோம், பலி; நடமினோ! பாறு வெண்தலை கையில் ஏந்தி, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்; ஆறு தாங்கிய சடையரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 5]
|
Go to top |
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் இரவும் இம் மனை அறிதிரே? இங்கே நடந்து போகவும் வல்லிரே? பரவி நாள்தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர்! அரவம் ஆட்டவும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 6]
|
ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்; என்பு எலாம் அணிந்து என் செய்வீர்? காடு, நும் பதி; ஓடு, கையது; காதல் செய்பவர் பெறுவது என்? பாடல் வண்டு இசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்; ஆடல் பாடலும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 7]
|
மத்தம், மா மலர், கொன்றை, வன்னியும், கங்கையாளொடு திங்களும், மொய்த்த வெண்தலை, கொக்கு இற(ஃ)கொடு, வெள் எருக்கம், உம் சடைய தாம்; பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்; அத்தி ஈர் உரி போர்த்திரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 8]
|
தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, கொக்கரை, குட முழவினோடு இசை கூடிப் பாடி நின்று ஆடுவீர்; பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என நிற்றிரால்; அக்கும் ஆமையும் பூண்டிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 9]
|
கை ஒர் பாம்பு, அரை ஆர்த்த ஒர் பாம்பு, கழுத்து ஒர் பாம்பு, அவை பின்பு தாழ் மெய் எலாம் பொடிக் கொண்டு பூசுதிர்; வேதம் ஓதுதிர்; கீதமும் பையவே விடங்கு ஆக நின்று, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்; ஐயம் ஏற்குமிது என் கொலோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [ 10]
|
Go to top |
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல் மன்னு தொல் புகழ் நாவலூரன்-வன்தொண்டன்-வாய்மொழி பாடல் பத்து உன்னி இன் இசை பாடுவார், உமை கேள்வன் சேவடி சேர்வரே.
| [ 11]
|