sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil      Hindi/Sanskrit      Telugu      Malayalam      Bengali      Kannada      English   ITRANS       Gujarathi      Oriya      Singala      Tibetian      Thai   Japanese      Urdu      Cyrillic/Russian     
திரு அருணகிரிநாதரின் - வேல் விருத்தம்

1. மகரம் அளறு

மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி
    மதியும்இர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
    மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்
சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
    செநெல்களொடு தரளம் இடவே
செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
    திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி
    தருகவுளும் உறுவள் எயிறுந்
தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
    தருதுணைவன் அமரர்குயிலுங்
குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
    குயமொடமர் புரியுமுருகன்
குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
    குலையவிடு கொடியவேலே.


2. வெங்காள கண்டர்

வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
    வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
    வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
    சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
    தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
    கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
    கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
    த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
    செம்பொற் றிருக்கை வேலே.


3. வேதாள பூதமொடு

வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
    வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
    வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
    அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
    அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
    தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
    தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
    புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
    புங்கவன் செங்கை வேலே.


4. அண்டர் உலகும் சுழல

அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
    அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
    அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
    மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
    வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
    சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
    தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
    கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
    கணவன் அடல் கொண்ட வேலே.


5. ஆலமாய் அவுணரு

ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
    ஆதவனின் வெம்மைஒளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
    றமைந்தன்ப ருக்கு முற்றா
மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
    முடித்திந்தி ரர்க்கு மெட்டா
முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
    மூதண்ட மும்புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
    மின்பணைக ளுமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
    இலவங்க நறவமாருந்
தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
    தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
    சரவணக் குமரன் வேலே.


6. பந்தாடலிற்கழ

பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
    பாடலினொ டாடலின்எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
    பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
    சசிமங்கை அனையர்தாமுந்
தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
    தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
    மந்த்ரஉப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
    வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
    குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
    கோலத் திருக்கைவேலே.


7. அண்டங்கள் ஒருகோடி

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
    அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
    அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
    கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
    கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
    தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
    தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
    மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
    வாகைத் திருக்கை வேலே.


8. மாமுதல் தடிந்து

மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
    வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
    மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
    உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
    ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா
    சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
    துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண
    திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
    செம்பொற் றிருக்கை வேலே.


9. தேடுதற் கரிதான

தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
    செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து
    சேவடி பிடித்ததெனவும்
நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும்
    நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
    நிகழ்கின்ற துங்கநெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
    றடலெரிக் கொடிய உக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
    கரசினைத் தனியெடுத்தே
சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
    றாய்திமித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
    சண்முகன் தன்கை வேலே.


10. வலாரியல லாகுலமி

வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
    மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
    மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும்
    உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
    உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
    னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
    சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
    மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
    வேழம்இளை ஞன்கை வேலே.

திரு அருணகிரிநாதரின் - மயில் விருத்தம்

காப்பு - சந்தன பாளித

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
    சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்
கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங்
    கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்
கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத
    கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச்
    சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

1. சந்தான புஷ்பபரி

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
    சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
    சத்யப்ரி யாலிங்கனச்
சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
    யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
    சித்ரக் கலாபமயிலாம்
மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
    வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
    வராசலன் குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
    இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
    ரத்னக் கலாப மயிலே.

2. சக்ரப் ரசண்டகிரி

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
    பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
    தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
    சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
    திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
    பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
    பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
    கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
    கலாபத்தில் இலகு மயிலே.

3. ஆதார பாதளம்

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
    தண்டமுக டதுபெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
    கவுட்கிரி சரம்பெயரவே
வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
    மிக்கப் ரியப்படவிடா
விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
    விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
    மகீதரி கிராத குலிமா
மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
    வள்ளிமணி நூபுர மலர்ப்
பாதார விந்தசே கரனேய மலரும்உற்
    பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
    பசுந்தோகை வாகை மயிலே.

4. யுககோடி முடிவின்

யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
    உதித்ததென் றயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
    லோகமும் பொற்குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
    விசும்பிற் பறக்க விரிநீர்
வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
    வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
    கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
    நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
    முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
    மூரிக் கலாப மயிலே.

5. சோதியிம வேதண்ட

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
    நயதுல்ய சோம வதன
துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
    சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
    யாவுங் கொடுஞ்சி றகினால்
அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
    அணைக்குங் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
    நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
    நிர்வியா குலன்சங் குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
    மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
    வரமுதவு வாகை மயிலே.

6. சங்கார காலமென

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
    சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
    சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
    காரம் பிறந்திட நெடுங்
ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
    கற்றைக் கலாப மயிலாஞ்
சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
    சித்ரப் பயோ தரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
    திருத்தணிமகீரதன் இருங்
கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
    க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
    கிழிபட நடாவு மயிலே.

7. தீரப் பயோததி

தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
    செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
    தீக்கொப் புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
    பதைபதைத் தேநடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
    பச்சைப்ர வாள மயிலாம்
ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
    அமிர்தகல சக்கொங் கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
    மாநந்த வல்லி சிறுவன்
கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
    குருதரு திருத்தணி கைவேள்
கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
    குடிபுகுத நடவு மயிலே.

8. செக்கரள கேசசிக

செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
    சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
    தீவிஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
    சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
    சண்டப்பர சண்டமயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
    விருத்தன் திருத்த ணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
    வெளிப்பட வுணர்த்தி யருளித்
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
    சுவாமிவா கனமா னதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
    துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

9. சிகரதம னியமேரு

சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
    கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
    திங்கள்சங் கெனவும்ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
    நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
    நீலக் கலாப மயிலாம்
அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
    அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
    அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
    வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
    வையாளி யேறு மயிலே.

10. நிராசத விராசத

நிராசத விராசத வரோதய பராபர
    னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
    நிலாவிய உலாசஇ தயன்
குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
    குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
    குலாவிய கலாப மயிலாம்
புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
    புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
    லாகும் அயி லாயுதனெடுந்
தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
    சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
    ஷடாநநன் நடாவு மயிலே.

11. எந்நாளும் ஒருசுனையில்

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
    திலங்கிய திருத்த ணிகைவாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
    நம்பிரா னான மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
    பகர்ந்தஅதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
    படிப்பவர்கள் ஆதி மறைநூல்
மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
    வாணிதழு வப்பெ றுவரால்
மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
    வாரிச மடந்தை யுடன்வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
    அமுதா சனம்பெ றுவர்மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
    அழியா வரம்பெ றுவரே.

திரு அருணகிரிநாதரின் - சேவல் விருத்தம்
காப்பு - கொந்தார் குழல்

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
    கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
    குமரன் இதம்பெறுபொற்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
    செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
    சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டா கியகய
    மாமுக னைக்கோறி
வன்கோ டொன்றை ஒடித்துப் பாரதம்
    மாமே ருவிலெழுதிப்
பைந்தார் கொடுபல ராவணன் அன்பொடு
    பணிசிவ லிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
    பரமன் துணையாமே.

1. உலகிலநுதின

உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
    உரியபர கதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
    இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
    கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
    கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
    மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
    வரிசையின மகளவ ளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
    சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
    சேவற் றிருத்துவசமே.

2. எரியனையவியன்

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
    ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
    ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
    ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
    கரத்தடர்த் துக்கொத் துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
    சமணர்கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
    சரணஅழ கொடுபுரி யும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
    தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
    சேவற் றிருத்து வசமே.

3. கரிமுரட்டடிவலை

கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற்
    களையிறுக் கியு முறைத்துக்
கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக்
    காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக்
    குரலொலித் தடிய ரிடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி
    வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற்
    பனமுறைத் ததமி கவுமே
வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித்
    தவனிமெய்த் திட அருளதார்
சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச்
    சிவிகைபெற் றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற்
    சேவற் றிருத்து வசமே.

4. அச்சப்படக்குரல்

அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல
    றிக்கொட்ட மிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
    அறுகுழை களைக்கொத் தியே
பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்
    இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்
    பெறக்கொக் கரித்து வருமாம்
பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
    பொற்றைக் கறுத் தயில்விடும்
புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல்
    புகழ்ச்செட்டி சுப்ர மணியன்
செச்ைப் புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி
    தித்திக்கு முத்த மிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
    சேவற் றிருத்து வசமே.

5. தானா யிடும்பு

தானா யிடும்புசெயு மோகினி இடாகினி
    தரித்தவே தாளபூதம்
சருவசூ னியமுமங் கிரியினா லுதறித்
    தடிந்துசந் தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
    குலவுசிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
    கொட்டியெட் டிக்கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
    மாதேவ னற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
    வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய்
    தேவாதி கட்கரசுகட்
டேனான மைக்கடலின் மீனான வற்கினியன்
    சேவற் றிருத்து வசமே.

6. பங்கமா கியவிட

பங்கமா கியவிட புயங்கமா படமது
    பறித்துச் சிவத்தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி
    பச்சைக் கலாப மயிலைத்
துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு
    துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
    துண்டப் படக் கொத்துமாம்
மங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி
    வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
    மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னுநர
    சிங்கமாய் இரணியனுடல்
சிந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
    சேவற் றிருத் துவசமே.

7. வீறான காரிகதி

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
    வெங்கட் குறும்புகள் தரும்
விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
    வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
    பேசியுச் சாடனத்தாற்
பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்
    பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
    மகோதரம் பெருவியாதி
வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான
    வல்லபிணி களைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
    சித்தத் திருக்கு முருகன்
சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்
    சேவற் றிருத் துவசமே.

8. வந்து ஆர்ப்பரிக்கும்

வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
    வலியதூ துவர்ப்பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
    வாயினும் காலினாலும்
பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம்
    பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
    பார்த்தன் புறக்கூவுமாம்
முந்தா கமப்பலகை சங்காத மத்தர்தொழ
    முன்பேறு முத்தி முருகன்
முதுகா னகத்தெயினர் பண்டோ டயிற்கணை
    முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
    சித்தர்க் கிரங்கறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன்முடி குற்றி
    சேவற் றிருத் துவசமே.

9. உருவாய் எவர்

உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
    உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
    ஒளியாய் அருட்பொருளதாய்
வருமீச னைக்களப முகனா தரித்திசையை
    வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
    வைகுமயி லைப்புகழுமாம்
குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக்
    குன்றுதோ றாடல்பழனம்
குழவுபழ முதிர்சோலை ஆவினன் குடிபரங்
    குன்றிடம் திருவேரகம்
திரையாழி முத்தைத் தரங்கக்கை சிந்தித்
    தெறித்திடுஞ் செந்தி னகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
    சேவற் றிருத் துவசமே.

10. மகரசல நிதி

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
    மலைகள்கிடு கீடுகிடெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
    மதகரிகள் உயிர்சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்
    கர்ச்சித் திரைத்தலறியே
காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற
    கைக்கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
    துடியிடைய னகையசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
    இபவநிதை துணைவனென திதயநிலையோன்
திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
    செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
    சேவற் றிருத் துவசமே.

11. பூவிலியன் வாசவன்

பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்
    பூசனைசெய் வோர்மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு
    போகபதி னாலுலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
    தானதவ நூல்தழையவே
தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு
    கொட்டிக் குரற்பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு
    காடவிகள் பரவுநடனக்
காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்
    கனகமயில் வாகனனடற்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
    சிகாமணி சரோருகமுகச்
சீதள குமாரகிரு பாகர மனோகரன்
    சேவற் றிருத் துவசமே.

Back to Top


This page was last modified on Wed, 06 Dec 2023 07:38:52 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/vel_mayil_saeval_virutham.php