Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Gujarathi Oriya Singala Tibetian Thai Urdu Cyrillic/Russian
0 கணபதி காப்பு |
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. |
1 ஞானமும் நல்வித்தையும் பெற |
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. |
2 பிரிந்தவர் ஒன்று சேர |
துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. |
3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட |
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப் பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே. |
4 உயர் பதவிகளை அடைய |
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. |
5 மனக்கவலை தீர |
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. |
6 மந்திர சித்தி பெற |
சென்னியது உன்பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. |
7 மலையென வரும் துன்பம் பனியென நீங்க |
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. |
8 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட |
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன் கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. |
9 அனைத்தும் வசமாக |
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்துஎன் முன்நிற்கவே. |
10 மோட்ச சாதனம் பெற |
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுஉன்னை; என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! |
11 இல்வாழ்க்கையில் இன்பம் பெற |
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வானந்த மான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. |
12 நெஞ்சம் தியானத்தில் நிலைபெற |
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. |
13 வைராக்கிய நிலை எய்த |
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே! |
14 தலைமை பெற |
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்; சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே; பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே. |
15 பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற |
தண்ணளிக் கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே. |
16 முக்காலமும் உணரும் திறன் உண்டாக |
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்தொளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே. |
17 நல்ல வரன் அமைய |
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம் மதிசயமாக வன்றோ வாமபாகத்தை வவ்வியதே. |
18 மரண பயம் நீங்க |
வவ்விய பாகத்திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. |
19 பேரின்ப நிலையடைய |
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. |
20 வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக |
உறைகின்ற நின் திருக்கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ? அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ? மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. |
21 அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய |
மங்கலை! செங்கல செம்முலையாள்! மலையாள்! வருணச் சங்கலை செங்கைச்! சகல கலாமயில்! தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்! பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும்பெண் கொடியே. |
22 இனிப் பிறவா நெறி அடைய |
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப் பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே. |
23 எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க |
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது; அன்பர் கூட்டந் தன்னை விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே. |
24 நோய்கள் விலக |
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. |
25 நினைத்த காரியம் நிறைவேற |
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே. |
26 சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக |
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே. |
27 மனநோய் அகல |
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. |
28 இம்மை மறுமை இன்பங்கள் அடைய |
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. |
29 அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற |
சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. |
30 அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க |
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டது அல்லவென்கை நன்றே உனக்கு இனிநான் என்செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே; ஒன்றே! பலஉருவே! அருவே! என் உமையவளே! |
31 மறுமையில் இன்பம் உண்டாக |
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை; அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. |
32 அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க |
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லலற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே! |
33 இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க |
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. |
34 சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க |
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. |
35 திருமணம் நிறைவேற |
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. |
36 பழைய வினைகள் வலிமை பெற |
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும் மருளே! மருளில் வரும்தெருளே என் மனத்து வஞ்சத்து இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன் அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே! |
37 நவமணிகளைப் பெற |
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின் பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத் திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே! |
38 வேண்டியதை வேண்டியவாறு அடைய |
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. |
39 கருவிகளைக் கையாளும் வலிமை பெற |
ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு; மேல் இவற்றின் மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே! |
40 பூர்வ புண்ணியம் பலன்தர |
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே. |
41 நல்லடியார் நட்புப் பெற |
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப்பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால் நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. |
42 உலகினை வசப்படுத்த |
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே. |
43 தீமைகள் ஒழிய |
பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே. |
44 பேதபுத்தி நீங்க |
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால் இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் துவளேன், இனியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே. |
45 உலகோர் பழியிலிருந்து விடுபட |
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையே பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே. |
46 நல்நடத்தையோடு வாழ |
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன்றே; புதுநஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே! மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே! |
47 யோகநிலை அடைய |
வாழும்படியொன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர் வீழும்படியன்று, விள்ளும்படியன்று, வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. |
48 உடல் பற்று நீங்க |
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார் பின்னும் எய்துவரோ; குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. |
49 மரணத் துன்பம் இல்லாதிருக்க |
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்; நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. |
50 அம்பிகையை நேரில் காண |
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. |
51 மோகம் நீங்க |
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள் முரண்அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகிதன் அடியார் மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. |
52 இம்மையில் பெருஞ்செல்வம் அடைய |
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்புமுன்பு செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. |
53 பொய்யுணர்வு நீங்க |
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவமில்லையே. |
54 கடன் தொல்லைகள் தீர |
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. |
55 விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த |
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே. |
56 யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக |
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே. |
57 வறுமை ஒழிய |
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே. |
58 மனஅமைதி பெற |
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும், சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே. |
59 பிள்ளைகள் நல்லவர்களாக வளர |
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை; நீள் சிலையும் அஞ்சம்பும் இக்குஅலராக நின்றாய்; அறியார் எனினும் பஞ்சுஅஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. |
60 மெய்யுணர்வு பெற |
பாலினும் சொல்இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம் ஒரு நாலினும் சாலநன்றோ அடியேன் முடை நாய்த்தலையே? |
61 மாயையை வெல்ல |
நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்துவந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்? தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே. |
62 எத்தகைய அச்சமும் அகல |
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச் செங்கைக் கரும்பும், மலரும் எப்போதும் என் சிந்தையதே. |
63 அறிவு தெளிவோடு இருக்க |
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள் குன்றில்கொட்டும் தறி குறிக்கும்; சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே. |
64 பக்தி பெருக |
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்க அன்பு பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப் பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக் காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே. |
65 மகப்பேறு அடைய |
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம் முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே! |
66 கவிஞராக |
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே. |
67 பகைவர்கள் அழிய |
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம் கோத்திரம், கல்வி, குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே. |
68 நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக |
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும், ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே. |
69 சகல சௌபாக்கியங்களும் அடைய |
தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. |
70 கலைகளில் சித்தி பெற |
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடவியில் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. |
71 மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற |
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே! |
72 பிறவிப் பிணி தீர |
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின் நின்குறையே அன்றி யார்குறை காண்; இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்? தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே. |
73 குழந்தைப் பேறு உண்டாக |
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு; யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மையம்மை நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே. |
74 தொழிலில் மேன்மை அடைய |
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும் அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப் பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும் பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. |
75 விதியை வெல்ல |
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்; தாயரின்றி மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும் பொங்குவர் ஆழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. |
76 தனக்கு உரிமையானதைப் பெற |
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே. |
77 பகை அச்சம் நீங்க |
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகியென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே. |
78 சகல செல்வங்களையும் அடைய |
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக் கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. |
79 கட்டுகளில் இருந்து விடுபட |
விழிக்கே அருளுண்டு; அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே. |
80 நிலையான மனமகிழ்ச்சி நிலைத்திட |
கூட்டியவா! என்னைத் தன் னடியாரில் கொடியவினை ஓட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம் காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே. |
81 நன்னடத்தை உண்டாக |
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் எனதுஉனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே. |
82 மன ஒருமைப்பாடு அடைய |
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும் களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக், கரைபுரண்டு, வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே. |
83 ஏவலர் பலர் உண்டாக |
விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும் பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும் உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே. |
84 தர்ம சங்கடங்கள் நீங்க |
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிச்செஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத், தயங்கும் நுண்ணூல் இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. |
85 துன்பங்கள் நீங்க |
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும், வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே. |
86 ஆயுத பயம் நீங்க |
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்; பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே. |
87 செயற்கரிய செய்து புகழ் பெற |
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே. |
88 எப்போதும் அம்பிகை அருள் பெற |
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன்பத்தருக்குள் தரமன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர்தம் புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே! |
89 யோக சித்தி பெற |
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற உறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உற வற்றறிவு மறக்கும் பொழுதென் முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே. |
90 கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க |
வருந்தா வகைஎன்மனத் தாமரையினில் வந்துபுதுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. |
91 அரசாங்கச் செயலில் வெற்றி பெற |
மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன் புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே. |
92 மனநிலை பக்குவமடைய |
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்; முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே. |
93 உள்ளத்தில் ஒளி உண்டாக |
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. |
94 மனநிலை தூய்மையாக |
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம் அரும்பித், ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து, சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம் தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே. |
95 தூய மனநிலை பெற |
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக் குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே! |
96 எங்கும் தலைமையும் புகழும் பெற |
கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால் ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே. |
97 புகழும் அறமும் வளர |
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன் போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே. |
98 வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற |
தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்ததெங்கே? மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப் பூங்குயிலே. |
99 அருள் உணர்வு வளர |
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை; வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீதன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே. |
100 அம்பிகையை மனத்தில் காண |
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும், கரும்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும்; வெண்ணகையும், உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே. |
101 நூற்பயன் |
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக் காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே! |