Search Tamil/English word or
song/pathigam/paasuram numbers.

Resulting language

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
அகத்தியர் தேவாரத் திரட்டு (25 பதிகம் - 263 பாடல்கள்)
1 1.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2 4.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
 (திருவதிகை வீரட்டானம்)  

3 7.001 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால்
 (திருவெண்ணெய்நல்லூர்)  

4 2.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர்  (திருஆலவாய் (மதுரை))  
5 3.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு
 (சீர்காழி)  

6 3.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)  
7 4.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத்
 (பொது - நமசிவாயத் திருப்பதிகம்)  

8 7.048 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மற்றுப் பற்று எனக்கு இன்றி,  (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம்)  
9 2.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  (சீர்காழி)  
10 6.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,  (பொது -க்ஷேத்திரக்கோவை)  
11 7.047 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!  (திருவாரூர்)  
12 1.128 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓர் உரு ஆயினை; மான்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
13 2.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரிய மறையார், பிறையார், மலை  (திருக்கடவூர் மயானம்)  
14 4.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாளை உடைக் கமுகு ஓங்கி,  (கோயில் (சிதம்பரம்))  
15 6.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -வடி ஏறு திரிசூலம் தோன்றும்  (திருப்பூவணம்)  
16 7.053 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மரு ஆர் கொன்றை மதி  (திருக்கடவூர் மயானம்)  
17 1.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி உடை மார்பினர், போர்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
18 6.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)  (திருவதிகை வீரட்டானம்)  
19 7.055 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  (திருப்புன்கூர்)  
20 3.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து சேர் விரலாள், பவளத்துவர்  (திருப்பூந்தராய்)  
21 6.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -வே(ற்)ற்று ஆகி விண் ஆகி  (திருக்கயிலாயம்)  
22 7.081 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொன்று செய்த கொடுமையால் பல,  (திருக்கழுக்குன்றம்)  
23 2.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
24 4.101 திருநாவுக்கரசர் - தேவாரம் -குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  (திருவாரூர்)  
25 7.039 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தில்லை வாழ் அந்தணர் தம்  (திருவாரூர்)  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.001  
1 தோடு உடைய செவியன், விடை  
பண் - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[2]
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[3]
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[4]
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[5]
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[6]
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

[7]
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[8]
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[9]
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[10]
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.001  
2 கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
 
பண் - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[1]
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும்! என்னீர்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[2]
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை  கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[3]
முன்னம், அடியேன் அறியாமையினால்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப்,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ,
தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்?
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[4]
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[5]
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[6]
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[7]
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[8]
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர்
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[9]
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.001  
3 பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால்
 
பண் - இந்தளம்.   (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[1]
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[2]
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[3]
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ!
செடிஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[4]
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[5]
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[6]
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[7]
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[8]
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[9]
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.066  
4 மந்திரம் ஆவது நீறு; வானவர்  
பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[2]
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[3]
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[4]
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[5]
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[6]
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

[7]
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

[8]
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

[9]
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

[10]
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.022  
5 துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு
 
பண் - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

[1]
மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.

[2]
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

[3]
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

[4]
கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.

[5]
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.

[6]
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.

[7]
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.

[8]
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.

[9]
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.

[10]
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.049  
6 காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  
பண் - கௌசிகம்   (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )

காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

[1]
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

[2]
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.

[3]
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்;
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன், நாமம் நமச்சிவாயவே.

[4]
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

[5]
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

[6]
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்-
வரதன் நாமம் நமச்சிவாயவே.

[7]
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.

[8]
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

[9]
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே.

[10]
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.011  
7 சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத்
 
பண் - காந்தாரம்   (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )

சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

[1]
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!

[2]
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!

[3]
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
விடுக்கிற்பிரான்! என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கற் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!

[4]
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்;
திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!

[5]
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!

[6]
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!

[7]
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!

[8]
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!

[9]
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.048  
8 மற்றுப் பற்று எனக்கு இன்றி,  
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை)

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[1]
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[2]
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[3]
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி,
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[4]
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல்! என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[5]
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின் மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[6]
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டு இடை
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[7]
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை
கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[8]
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன், மாமணி என்று
பேர் எண் ஆயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[9]
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை,
பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை-
நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.039  
9 ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  
பண் - இந்தளம்   (சீர்காழி )

ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

[1]
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு
அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம்
பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும்,
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான்
பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே,
எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக்
கடல் நீந்தல் ஆம், காரணமே.

[2]
அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும்,
அழகன் உறை கா அனைத்தும், துறைகள்
எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும்,
குளம் மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும்,
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன்
மதிக்கும் இடம் ஆகிய பாழிமூன்றும்,
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்,
அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே!

[3]
அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப்
பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி,
திரு நனிபள்ளி, சீர் மகேந்திரத்துப்
பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான்
விரும்பும் இடைப்பள்ளி, வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி,
உணராய், மட நெஞ்சமே, உன்னி நின்றே!

[4]
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு,
அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர்,
சேறை, துலை புகலூர், அகலாது
இவை காதலித்தான் அவன் சேர் பதியே.

[5]
மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும்
மதி கூர் திருக்கூடலில் ஆலவாயும்,
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்,
இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும்,
கனம் அம் சின மால்விடையான் விரும்பும்
கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர்,
தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்!
தவம் ஆம்; மலம் ஆயினதான் அறுமே.

[6]
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம்,
முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி,
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும்
கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும்,
கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும்,
கொதுங்கோவலூர், திருக்குணவாயில்,


[7]
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்,
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்
புறம்பயம், பூவணம், பூழியூரும்,
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள்
நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!

[8]
நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல்,
நெடுவாயில், குறும்பலா, நீடு திரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம்,
நளிர்சோலை உஞ்சேனைமாகாளம், வாய்மூர்,
கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த
கடல்வண்ணனும் மாமலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும்
குடமூக்கு, என்று சொல்லிக் குலாவுமினே!

[9]
குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ்
குருந்தங்குடி, தேவன்குடி, மருவும்
அத்தங்குடி, தண் திரு வண்குடியும்
அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த
நித்தன், நிமலன், உமையோடும் கூட
நெடுங் காலம் உறைவு இடம் என்று சொல்லாப்
புத்தர், புறம்கூறிய புன் சமணர்,
நெடும் பொய்களை விட்டு, நினைந்து உய்ம்மினே!

[10]
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற
அமரர்பெருமான், பதி ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு
இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார்,
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 -ஆம் திருமுறை   பதிகம் 6.070  
10 தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,  
பண் - தக்கேசி   (பொது -க்ஷேத்திரக்கோவை )

தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

[1]
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும், ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை,   காம்பீலி, பிடவூர், பேணும்
கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும், கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும்,
கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும்,   கயிலாய நாதனையே காணல் ஆமே.

[2]
இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம், இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர்,
சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு,
கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு,
கடைமுடி, கானூர், கடம்பந்துறை, கயிலாய நாதனையே காணல் ஆமே.

[3]
எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான் சேரி,
அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை,
கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி,
கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

[4]
கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும், நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,
இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம்,
கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

[5]
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,   வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

[6]
வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை, ஆலங்காடும், அரதைப்பெரும்-
பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்
காழி, கடல் நாகைக்காரோணத்தும்,   கயிலாய நாதனையே காணல் ஆமே.

[7]
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,
மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை, வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,
வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா, வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூரும்,
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும்,   கயிலாய நாதனையே காணல் ஆமே.

[8]
திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு(வ்),
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்,   ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும்,
கண்டியூர் வீரட்டம், கருகாவூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

[9]
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,   ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,   கயிலாய நாதனையே காணல் ஆமே.

[10]
புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும் நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!
கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணல் ஆமே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.047  
11 காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!  
பண் - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )

காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!
கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!
மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!

[1]
கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்! குழகா! குற்றாலா!
மங்குல்-திரிவாய்! வானோர் தலைவா! வாய்மூர் மணவாளா!
சங்கக் குழை ஆர் செவியா! அழகா! அவியா அனல் ஏந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடீ! அடியார் கவலை களையாயே!

[2]
நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே!
மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே!
மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே!
இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!

[3]
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே!
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே!
பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே!
பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாசூர் அம்மானே!

[4]
மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே!
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே!
கருகல் குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே!
பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே!

[5]
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே!
நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே!
பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!

[6]
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்!
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே!
ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே!
ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.

[7]
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா!
பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்;
திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா!
அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!

[8]
புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா!
பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே!
வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ!
கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!

[9]
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி-
தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.128  
12 ஓர் உரு ஆயினை; மான்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.080  
13 வரிய மறையார், பிறையார், மலை  
பண் - காந்தாரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

[1]
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே

[2]
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

[3]
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
அடிகளே

[4]
வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது
இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள்
துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

[5]
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை
புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

[6]
பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

[7]
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை
போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

[8]
வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன்
ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

[9]
தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

[10]
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.080  
14 பாளை உடைக் கமுகு ஓங்கி,  
பண் - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?

[1]
பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்,
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[2]
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்,
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்,
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[3]
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

[4]
செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

[5]
ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

[6]
தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[7]
சுற்றும் அமரர், சுரபதி, நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்,
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன்,
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[8]
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[9]
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 -ஆம் திருமுறை   பதிகம் 6.018  
15 வடி ஏறு திரிசூலம் தோன்றும்  
பண் - திருத்தாண்டகம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)

வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;
வளர்  சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; 
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
  எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்  திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[1]
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்;
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்;
ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்;
செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[2]
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்
கவின்  மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; 
சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; 
ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்;
பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[3]
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; 
பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்;
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; 
நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்;
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; 
ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்;
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[4]
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், 
மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்;
இருங்கடல்  நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம்  ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும்.
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[5]
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட
பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன
திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன்
உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[6]
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் 
தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[7]
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[8]
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்;
மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[9]
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,
அன்று, தன்  முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும்
குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[10]
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ் உரு  ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை 
மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.053  
16 மரு ஆர் கொன்றை மதி  
பண் - பழம்பஞ்சுரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல
வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ;
திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும்,
பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[1]
விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்;
கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்;
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம்,
பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[2]
காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்;
தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்;
பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[3]
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த
இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்;
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்
பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[4]
கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண் ஆக,
மத்த யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்;
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[5]
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து,
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த்
திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்;
பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[6]
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்;
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்;
ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்;
பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[7]
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க்
கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து,
நாடா வண்ணம் செருச் செய்து, ஆவ நாழி நிலை அருள் செய்
பீடு ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[8]
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்;
ஆழி அளிப்பர், அரிதனக்கு; ஆன் அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்;
ஏழைத் தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு மான்மறிக் கையர்;
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

[9]
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து,
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள்
பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.040  
17 பொடி உடை மார்பினர், போர்  
பண் - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)

பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

[1]
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

[2]
பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

[3]
தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி,
வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.

[4]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு
புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி என்றே பல கூறி,
வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.

[5]
அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே! என்னா,
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.

[6]
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி,
மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.

[7]
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி,
வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.

[8]
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி,
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.

[9]
குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார், புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

[10]
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 -ஆம் திருமுறை   பதிகம் 6.006  
18 அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)  
பண் - குறிஞ்சி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி
திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[1]
கொடுவினையார் என்றும் குறுகா அடி;
குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி;
படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி;
பதைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி;
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி;
கடல் வையம் காப்பான் கருதும்(ம்) அடி;
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி
நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி.

[2]
வைது எழுவார் காமம், பொய், போகா அடி;
வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி;
கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி;
கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி;
நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள்
விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி;
தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;

[3]
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி;
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி;
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி;
சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி;
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி;
பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி;
திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[4]
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
 ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
 வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[5]
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி;
பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்)
அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி;
 உரு என்று உணரப்படாத(வ்)அடி;
திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[6]
உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி;
உரையால் உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி;
வானவர்கள்   தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி;
அகலம் அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி
கமழ் வீரட்டானக் காபாலி(ய்) அடி;

[7]
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி;
நடு ஆய்  உலகம் நாடு ஆய(வ்) அடி;
செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி;
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி;
மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி;
மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி;
செறி கெடில நாடர் பெருமான் அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[8]
அணியனவும் சேயனவும் அல்லா அடி;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி;
பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி;  
பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி;
மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி;
தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி
தகை சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;,

[9]
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
  அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.055  
19 அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  
பண் - தக்கேசி   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு    அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

[1]
வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்;
உய்யக் கொள்க, மற்று எங்களை! என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும்
பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .



[2]
ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து,
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு,
பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .

[3]
நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்-
பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .



[4]
கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

[5]
இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள்
மயக்கம் இல் புலி, வானரம், நாகம், வசுக்கள், வானவர், தானவர், எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார்; பெறும் ஆர் அருள் கண்டு,
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

[6]
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து,
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட,
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

[7]
மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

[8]
அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து,
எறியும் மா கடல் இலங்கையர் கோனைத் துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு,
குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு, கோல வாளொடு நாள் அது கொடுத்த
செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

[9]
கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை,
செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை,
உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.002  
20 பந்து சேர் விரலாள், பவளத்துவர்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.

[1]
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த நல்வெண் நகை,
தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள்,
தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர் பதி,
பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.

[2]
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.

[3]
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென் கொள் குரும்பை,
மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை,
வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண்பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

[4]
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.

[5]
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

[6]
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள்,புயல் கால் ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

[7]
காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன தோள், கதிர் மென்முலை,
தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து
ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணைச்சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

[8]
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.

[9]
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.

[10]
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன கண்ணியோடு
அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 -ஆம் திருமுறை   பதிகம் 6.055  
21 வே(ற்)ற்று ஆகி விண் ஆகி  
பண் - குறிஞ்சி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[1]
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[2]
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[3]
வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி!
வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[4]
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[5]
சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[6]
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[7]
இமையாது உயிராது இருந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[8]
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[9]
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[10]
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.081  
22 கொன்று செய்த கொடுமையால் பல,  
பண் - நட்டபாடை   (திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)

கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!

[1]
இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே!
பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்-
நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி
கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.

[2]
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!

[3]
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!

[4]
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்-
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!

[5]
மடம் உடைய அடியார் தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன்,
படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே, மடம் உடைய அடியார் தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன்,
படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே

[6]
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற
ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்-
தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.

[7]
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற
வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.

[8]
பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,
குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-
மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!

[9]
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.085  
23 வேய் உறு தோளி பங்கன்,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[2]
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[3]
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[4]
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[5]
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[6]
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[7]
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[8]
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

[9]
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநிரு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.

[10]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.101  
24 குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[1]
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[2]
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[3]
மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[4]
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[5]
வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ-
தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய-
பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[6]
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[7]
கரப்பர்கள், மெய்யை; தலை பறிக்கச் சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்-
பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[8]
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[9]
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?


[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.039  
25 தில்லை வாழ் அந்தணர் தம்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[1]
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்;
ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்;
கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்  அடியேன்;
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்,
எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும்  அடியேன்;
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[2]
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்;
முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
திருக்குறிப்புத் தொண்டர் தம்    அடியார்க்கும் அடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,
வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால்  எறிந்த,
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[3]
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு மிழலைக் குறும்பற்கும்,   பேயார்க்கும், அடியேன்;
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்;
ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு  அடியேன்;
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[4]
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்
மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்  அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;
நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,  அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[5]
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே
மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;
செங்காட்டங்குடி மேய  சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்;
கடல் காழி கணநாதன்  அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்;
ஆரூரன் ஆரூரில்   அம்மானுக்கு ஆளே .

[6]
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்;
பொழில் கருவூர்த் துஞ்சிய  புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்;
விரி திரை சூழ் கடல் நாகை  அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன்,
கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-  அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[7]
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த
கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற
நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்  அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
தொல் மயிலை வாயிலான்   அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .

[8]
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-
காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை
மன்னவன் ஆம்செருத்துணை தன்  அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்   துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[9]
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு ஆரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[10]
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
திருநீல கண்டத்துப்  பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
இசைஞானி, காதலன்-திரு   நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர்  ஆவாரே .

[11]

This page was last modified on Fri, 06 Jan 2023 06:54:03 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org