காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மா நகருளானே
|
[872.0] |
திருவங்கப்பெருமாளறையர்அருளிச்செய்தது மற்றொன்றும்வேண்டாமனமே! மதிளரங்கர் கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ் - உற்ற திருமாலைபாடும் சீர்த்தொண்டரடிப்பொடியெம் பெருமானை எப்பொழுதும்பேசு.
|
[872.1] |
பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச் சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும் அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே
|
[873.0] |
வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே
|
[874.0] |
மொய்த்த வல்வினையுள் நின்று மூன்று எழுத்து உடைய பேரால் கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே
|
[875.0] |
Back to Top |
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு உண்டு இராக் கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து தண் துழாய்-மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர்சோறு உகக்குமாறே
|
[876.0] |
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர் அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே புறஞ் சுவர்க் கோலஞ் செய்து புள் கௌவக் கிடக்கின்றீரே
|
[877.0] |
புலை-அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ? கேட்பரோ தாம்? தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
|
[878.0] |
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே
|
[879.0] |
மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள் உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே
|
[880.0] |
Back to Top |
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்கச் சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே
|
[881.0] |
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதில்-திருவரங்கம் என்னா கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே
|
[882.0] |
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே
|
[883.0] |
எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம் வெறிகொள் பூந்துளவ மாலை விண்ணவர்கோனை ஏத்த அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே
|
[884.0] |
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
|
[885.0] |
Back to Top |
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புட்கொடி உடைய கோமான் உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே
|
[886.0] |
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே
|
[887.0] |
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை-இறை உருகும் வண்ணம் சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
|
[888.0] |
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி-அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே?
|
[889.0] |
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக் கடல்-நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே?
|
[890.0] |
Back to Top |