Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.048   கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும், பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும், பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும், வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
[1]
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்; வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர் தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.
[2]
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி, எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும், பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன் விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.
[3]
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில், மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று, தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய, கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
[4]
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன் மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர், ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.
[5]
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்; ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில் பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.
[6]
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்; அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய, மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும் முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.
[7]
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில் கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க, விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.
[8]
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.
[9]
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும் பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்; வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!
[10]
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன் விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப் பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார், மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.046   முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
குழத்தைப் பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம்
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே, மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[1]
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம், கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர் அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
[2]
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக் குழகர்! என்று குழையா, அழையா, வரும், கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட, செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம் ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[5]
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட, ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்; காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.
[6]
வெந்த நீறு மெய் பூசிய வேதியன், சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்- கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.
[7]
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும் கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[9]
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல் தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்! கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம் ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[10]
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல் உடையான் தன நீள்கழல் குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.098   நன்று உடையானை, தீயது இலானை,
பண் - குறிஞ்சி (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை, சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்- குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.
துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி, சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி, கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம் பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!
[4]
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும் சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித் தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்! நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே?
[5]
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார், தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில் ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?
[6]
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும் சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார், பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார், தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!
[7]
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன் தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார் சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால், சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல் பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார் சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!
[10]
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்- ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார் வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.085   மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
பண் - திருக்குறுந்தொகை (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
தாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய், பேயனேனையும் ஆண்ட பெருந்தகை; தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனார் என, நம் வினை நாசமே.
[4]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.001   தோடு உடைய செவியன், விடை
பண் - நட்டபாடை (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார். முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
[1]
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
[2]
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
[3]
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
[4]
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
[5]
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
[6]
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
[7]
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
[8]
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
[9]
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
[10]
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.001   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
பண் - கொல்லி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
மருள்நீக்கியார், தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார். மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் ஆதரவாக இருந்தார். வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டதில், தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்றார். திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்து தொல்லைகள் நீங்கும்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[1]
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும்! என்னீர்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[2]
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[3]
முன்னம், அடியேன் அறியாமையினால்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப்,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ,
தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்?
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[4]
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[5]
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[6]
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[7]
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[8]
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர்
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[9]
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.001   பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம். (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்த போது சுந்தரருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த ஈசன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த ஓலையை சுந்தரர் கிழித்தெறிந்தார். முதியவர் வழக்கை திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்து சென்று வென்றார். அடிமை ஆன சுந்தரர் முதியவரின் வீட்டைக் காண்பிக்க சொல்ல, முதியவர் திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திற்கு கூட்டி சென்று மறைந்தார். முதியவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக எனப் பணித்தருளினார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார். குருவருள் பெறஓத வேண்டிய பதிகம்
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை, பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்; வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[2]
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை; பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[3]
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ! கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ! செடிஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[4]
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்! ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா! தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[5]
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ! எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்! மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[6]
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்; வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்; தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[7]
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்! தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர் ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[8]
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா! தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே; செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[9]
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி, சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .
[10]
Back to Top மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.101   சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
பண் - (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
[1]
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
[2]
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
[3]
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:
[4]
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர், பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
[5]
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி, கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய், செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்,
[6]
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள் ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
[7]
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
[8]
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்; நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே! மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
[9]
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
[10]
மறைந்திட மூடிய மாய இருளை, அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
[11]
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
[12]
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே! நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
[13]
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
[14]
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
[15]
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
[16]
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று
[17]
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே, கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
[18]
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
[19]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.009   தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி (பொது - திருஅங்கமாலை )
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ!
[3]
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை, வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!
[4]
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து, பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்!
[5]
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை, மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்!
[6]
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று, பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!
[7]
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து. பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?
[8]
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?
[9]
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது, குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?
[10]
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு, சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ?
[11]
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும் தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்!
[12]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.085   வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[1]
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[2]
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[3]
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[4]
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும்,
மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[5]
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[6]
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[7]
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
[8]
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.049   போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம் (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார். பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க ஓத வேண்டிய பதிகம்
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.
[1]
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப் பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன், ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.
[2]
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர் பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த, மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.
[3]
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி, பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர, நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
[4]
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம் ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி, நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
[5]
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள், எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.
[6]
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர, அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
[7]
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால் சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
[8]
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி, அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
[9]
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.
[10]
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.052   மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம் (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)
இடர் களையும் பதிகம் அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும் பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால், குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[1]
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[2]
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத, என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[3]
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்! அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[4]
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[5]
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[6]
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[7]
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை, அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்! என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும், நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[8]
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும், சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்! கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[9]
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும், தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்; துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[10]
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால் நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.116   அவ் வினைக்கு இவ் வினை
பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது. விஷ சுரம் , விஷக்கடி முதலியன ம்ற்றும் தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்கவும் ஓதவேண்டிய பதிகம்
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
[1]
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால், ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும், பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்; தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
[2]
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம், விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்! சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!
[3]
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே! கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!
[4]
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்; செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
[5]
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி, பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம், பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்; சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
[6]
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்; செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே! திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
[7]
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து, தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்! தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்; சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!
[8]
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும், பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்; பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்; தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
[9]
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான், இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண் திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.072   பந்து ஆர் விரல் மடவாள்
பண் - காந்தாரம் (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
வினை நீக்கம் - கேட்பவர் வினை நீங்க ஓத வேண்டிய பதிகம்
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி, அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல் வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட, செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.
[1]
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி, ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில் ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச் சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.
[2]
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த, மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில், குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.
[3]
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர், ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க, செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.
[4]
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி, தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.
[5]
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும் அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி, செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.
[6]
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு ஒன்று அரைமேல் சாத்தி, ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த, தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.
[7]
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி, முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம், அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில், செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.
[8]
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள் தோறும் கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் கழல்கள் நேடிப் பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச் செய் ஆர் எரி ஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.
[9]
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில் ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார, சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.
[10]
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர் நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல், வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.080   கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். நல்ல இசைக் குழு அமைய
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.
[1]
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும் சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை, மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே.
[2]
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக் கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள், பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச் செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.
[3]
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப் பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச் சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.
[4]
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற, செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
[5]
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம் பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.
[6]
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம் மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச் சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத் தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.
[7]
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து, சீராலே மல்கு சிற்றம்பலம் மேய நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.
[8]
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும் காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான், சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த, மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.
[9]
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே, சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.
[10]
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.066   மந்திரம் ஆவது நீறு; வானவர்
பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான். வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு; தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு; செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
[1]
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு; போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு; ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு; சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
[2]
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு; சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு; பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு; சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
[3]
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு; பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு; மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு; சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
[4]
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு; பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு; தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
[5]
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு; வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு; பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு; திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
[6]
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு; பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு; துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு; அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.
[7]
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு; பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு; தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு; அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
[8]
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு; மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு; ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு; ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன், தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.044   துணி வளர் திங்கள் துளங்கி
பண் - தக்கராகம் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான். இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து, பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
[1]
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்; தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன, அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
[2]
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்; நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து; மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
[3]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
[4]
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து, மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி, ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?
[5]
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி, ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
[6]
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை, கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன, அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?
[7]
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து, மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்; யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?
[8]
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால், ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?
[9]
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்; ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா; ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?
[10]
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன் தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.072   விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம், மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்- கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்; செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
[1]
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர் மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்- இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள் அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
[2]
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர் மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்- தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப் பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
[3]
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே, மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்- கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!
[4]
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய், மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்- வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும் நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே
[5]
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய் இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்- மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
[6]
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர் மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர் கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர் ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
[7]
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே, மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்; பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர் பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.
[8]
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண் பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்- சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்- ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
[9]
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்- நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய், ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.
[10]
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்- அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால், மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.047   மட்டு இட்ட புன்னை அம்கானல்
பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார். பலவகை உடற்பிணிகள் அகல ஓத வேண்டிய பதிகம்
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில், கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி, நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[6]
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக் கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான் பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[7]
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான், கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான், பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள் கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[8]
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான், பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
[9]
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும் இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில் கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!
[10]
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான் ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார், வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.074   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
பண் - காந்தாரம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார் நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. மின்னுமா மேகங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .
[1]
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி, மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி, ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.
[2]
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு, கூட்டு எய்தி, புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை .
[3]
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர,
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .
[4]
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி, இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .
[5]
புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும், நல் மலர் உந்தி, அகழும் மா அருங் கரை வளம் படப் பெருகி, ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி, திகழும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் இகழும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை .
ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள, காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி, தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .
[8]
புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப, இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு எற்றி, கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .
[9]
மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன், ஆரூரன்- கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல் தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே .
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.018   ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம் (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று திருநாவுக்கரசர் பெயரில் பல தர்மங்களை செய்து வந்தார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர். அப்பூதிஅடிகளைப் பற்றி கேள்வி பட்டு, அப்பூதியின் வீடு அடைந்தார். வந்தவர் திருநாவுக்கரசர் என்றவுடன், அப்பூதி வீடே மிகுந்த மகிழ்வுடன் அமுது தயார் செய்தார்கள். தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டி உயிர் துறந்தார். மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகளுக்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். மூத்த திருநாவுக் கரசை அழையும் என்று அப்பர் கூற, இப்போது அவன் இங்கு உதவான் என்று அப்பூதிகூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ஒன்றுகொலாம் என்ற திருப் பதிகம் பாடியருளினர். ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம்
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை; ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்; ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது; ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.
[1]
இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்; இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண், இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு, இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.
[2]
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன; மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை; மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்; மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.
[3]
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன; நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்; நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.
[4]
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்; அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன; அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை; அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.
[5]
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன; ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்; ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்; ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.
[6]
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன; ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்; ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.
[7]
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்; எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்; எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன; எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.
[8]
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன; ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை; ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை; ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.
[9]
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்; பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன; பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை; பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.095   மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே, மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி, ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
[1]
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்; குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்; எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்; மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!
[2]
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல, என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!
[3]
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்; இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா: அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால், வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!
[4]
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்? எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு? சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!
[5]
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப் புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே! தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது, மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!
[6]
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு? மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி, காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!
[7]
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,- இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்; பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்; வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!
[8]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்; காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்? நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
[9]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்? பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே; இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்; வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!
[10]
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி, ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன், பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்; வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.061   ஆலம் தான் உகந்து அமுது
பண் - தக்கேசி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் ஆலந்தானுகந்து என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார். கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகங்கள் - இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[1]
உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை, பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[2]
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை, அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை, எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[5]
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[6]
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை, நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை, எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[7]
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை, பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[8]
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை, நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனை, பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[9]
எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல் உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[10]
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, பெரிய எம்பெருமான் என்று எப்போதும் கற்றவர் பரவப்படுவானை, காணக் கண் அடியேன் பெற்றது என்று கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன் நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .
[11]
Back to Top மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.112   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) )
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம், பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை? ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!
[1]
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்; துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ! மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா, தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!
[2]
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ! தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம் தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ! தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!
[5]
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய், நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ! நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம் சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!
[6]
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!
[7]
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!
[8]
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ! பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர் விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!
[9]
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ! ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள், வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!
[10]
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து, கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ! கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!
[11]
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி; ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ! ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும், வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!
[12]
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும், கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!
[13]
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன், தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ! தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம், ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!
[14]
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே, இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ! தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!
[15]
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை, அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ! அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும், கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!
[16]
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ! நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா, எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!
[17]
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி, நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ! நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ் அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!
[18]
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்; எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ! எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும், தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!
[19]
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும் இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ! அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல், திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!
[20]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.092   கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண் - திருக்குறுந்தொகை (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார், மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்- தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!
[9]
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!
[10]
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.128   ஓர் உரு ஆயினை; மான்
பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி) )
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை; இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை; இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம், ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை; ஒரு தனு இருகால் வளைய வாங்கி, முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை; ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம், முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு, இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை; அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை; பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப் பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை; ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை; இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும், மறு இலா மறையோர் கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.
[1]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.022   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
பண் - காந்தாரபஞ்சமம் (சீர்காழி )
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார். ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம்
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.049   காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம் (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர் நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
[8]
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய், யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே.
[9]
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள் வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்- விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய் நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே.
[10]
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.011   சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
பண் - காந்தாரம் (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான். கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்க
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்; குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
[6]
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும், ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும், நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
[7]
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது; சொல் அக விளக்கு அது சோதி உள்ளது பல் அக விளக்கு அது பலரும் காண்பது; நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
[8]
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்- தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே; அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
[9]
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன் பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ, நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.048   மற்றுப் பற்று எனக்கு இன்றி,
பண் - பழம்பஞ்சுரம் (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை)
இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர், அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்குநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி மற்றுப்பற்றெனக்கின்றி யென்னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடிப் போற்றினார்.
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[1]
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள், கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[2]
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல் காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப் பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[3]
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி, கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை, நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[4]
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்; அஞ்சல்! என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்? பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[5]
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின் மேல் ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப் பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[6]
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன; நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டு இடை குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[7]
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்! வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[8]
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன், மாமணி என்று பேர் எண் ஆயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்; நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக் காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[9]
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை, பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை- நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.
[10]
Back to Top மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.138   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி, கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்; ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!
[1]
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன; கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!
[2]
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில், ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ!' என்று, ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன் பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே!
[3]
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர் உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு, எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என் சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!
[4]
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும், மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!
[5]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு, நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால் உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை, அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!
[6]
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா, தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான், அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது, என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!
[7]
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய், பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால் பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!
[8]
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக, தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி, பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு, அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!
[9]
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்? தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான் ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.135   நீறு சேர்வது ஒர் மேனியர்,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையில் கங்கை தரித்தவர்; படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே.
[7]
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை நெருக்கினார், விரல் ஒன்றினால்; பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை அருக்கன் தன்னை, அடிகளே.
[8]
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த் தோற்றமும் அறியாதவர்; பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை ஆற்றல் மிக்க அடிகளே.
[9]
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள், உரு இலா உரை கொள்ளேலும்! பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை மருவினான் தனை வாழ்த்துமே!
[10]
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல், சிதையாதன செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ், செல்வம் ஆம், இவை செப்பவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.129   சே உயரும் திண் கொடியான்
பண் - மேகராகக்குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.
[1]
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய
மலைச் செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான்,
அமரர் தொழ, அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக்,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப்
பாட்டு அயரும் கழுமலமே.
[2]
அலங்கல் மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணி
கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு,
ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய
மெய்யர் வாழ் கழுமலமே.
[3]
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச்
சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு
சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு
மகிழ்வு எய்தும் கழுமலமே.
[4]
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்கள்-
ஒடு, வன்னி, மத்தம், மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர்
செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளி
மலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு
சுதை மாடக் கழுமலமே.
[5]
தரும் சரதம் தந்தருள்! என்று அடி நினைந்து,
தழல் அணைந்து, தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர்
தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப,
அது குடித்துக் களித்து வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய,
அகம் பாயும் கழுமலமே.
[6]
புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய்,
நிலன் ஐந்து ஆய் கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு
வாய், நின்றான்; அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேரப்
புள் இரியும் கழுமலமே.
[7]
அடல் வந்த வானவரை அழித்து, உலகு
தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர், இது நடவு ஒணா
வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்
கரை குவிக்கும் கழுமலமே.
[8]
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு
கேழல் உரு ஆகிப் புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா
வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள்
கொண்டு அணிந்து, பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து
நின்று, ஏத்தும் கழுமலமே.
[9]
குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவம் ஆய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத
வகை நின்றான் உறையும் கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி,
இவை இசைய மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க,
மேல்படுக்கும் கழுமலமே.
[10]
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்,
தூமலராள் துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான்
அடி சேர முயல்கின்றாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.134   கருத்தன், கடவுள், கனல் ஏந்தி
பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் )
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன் விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்- தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில், மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.
[3]
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச் செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்- சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில், விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன், வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை, பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.130   புலன் ஐந்தும் பொறி கலங்கி,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி, அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில் வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி, சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.
[1]
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும் அடல் ஏறு ஒன்று அது ஏறி, அம் சொலீர், பலி! என்னும் அடிகள் கோயில் கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி, திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.
[2]
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை- பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில் கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு உலர்த்தி, கூதல் நீங்கி, செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.
[3]
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர், தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில் மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும் தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.
[4]
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத் தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித் தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.
[5]
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி, பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி, தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.
[6]
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில் குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.
[7]
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும், மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி, செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.
[8]
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும் மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.
[9]
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்! எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில் செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.
[10]
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல் இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள் தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.133   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
பண் - மேகராகக்குறிஞ்சி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த, கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள், அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.
[1]
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச் சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம் குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம், திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
[2]
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து, பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம், விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்- திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
[3]
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து, காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம், மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள், ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
[4]
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து, பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ, வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
[5]
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய எய்து, ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து, மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள், ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.
[6]
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து, நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து, ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர், சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
[7]
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான், அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம், கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள், மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.
[8]
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும் மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்! விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக் கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.
[9]
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை, காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள், பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார், சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.131   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர் முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.
[1]
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி, மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள், செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக, மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக, மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.
[4]
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின் முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.
[5]
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி, தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து, முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.
[6]
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட, நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே.
[7]
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும் பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று, மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.
[8]
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத் தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.
[9]
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்! ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.
[10]
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு, தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.132   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.
[1]
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து
ஆக, புத்தேளிர் கூடி,
மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட
கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும்
இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம்
வீற்றிருக்கும் மிழலை ஆமே.
[2]
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம்
புரம் மூன்றும், எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம்
முகம் காட்ட, குதித்து நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம்
வாய் காட்டும் மிழலை ஆமே.
[3]
உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.
[4]
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி,
காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம்
படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணு ஆய் நின்ற பரதத்துவனை,
உத்தமனை, இறைஞ்சீர்! என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலை ஆமே.
[5]
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
அந்தி திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலை ஆமே.
[6]
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு
மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும்
குணம் உடையோன், குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி,
மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்
பண் பாடும் மிழலை ஆமே.
[7]
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி,
கை மறித்து, கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள்
நெரித்த விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த
சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி
விமானம் சேர் மிழலை ஆமே.
[8]
செந்தளிர் மா மலரோனும் திருமாலும்,
ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த,
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி,
நெய் சமிதை கையில் கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர்
சேரும் ஊர் மிழலை ஆமே.
[9]
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர்
சாக்கியரும், என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு
அருள்புரியும் நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்து
ஓடும் இழியும் மிழலை ஆமே.
[10]
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.092   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
பண் - குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர். இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!
[9]
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே.
[10]
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.004   இடரினும், தளரினும், எனது உறு
பண் - காந்தாரபஞ்சமம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார். பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
இடரினும், தளரினும், எனது உறு நோய் தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்; கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[1]
வாழினும், சாவினும், வருந்தினும், போய் வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்; தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[2]
நனவினும், கனவினும், நம்பா! உன்னை, மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்! புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த, கனல் எரி-அனல் புல்கு கையவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[3]
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா; கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால் மும்மதில் எரி எழ முனிந்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[4]
கையது வீழினும், கழிவு உறினும், செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;- கொய் அணி நறுமலர் குலாய சென்னி மை அணி மிடறு உடை மறையவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[5]
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும், எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா; ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண்பொடி அணி சங்கரனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[6]
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[7]
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும், சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்; ஏர் உடை மணி முடி இராவணனை ஆர் இடர் பட வரை அடர்த்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[8]
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின் ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா; கண்ணனும், கடி கமழ் தாமரை மேல் அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[9]
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும், அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா; புத்தரும் சமணரும் புறன் உரைக்க, பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[10]
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல்படை எம் இறையை, நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார், வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம் நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.063   மெய்யை முற்றப் பொடிப் பூசி
பண் - தக்கேசி (பொது -திருமுதுகுன்றம் )
மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி, கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணும் மூன்றும் உடையாய் ஒரு நம்பி, செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால் எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[1]
திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால் சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம் அம் கண் நம்பி; அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி; குமரன் முதல்-தேவர்- தங்கள் நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் எங்கள் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[2]
வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம் அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம் புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[3]
ஊறு நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம், கூறு நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும் சீறு நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும் ஏறு நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[4]
குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை, குலைத்த நம்பி, சிலையா வரை கையில் பற்று நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி எனப் பாடுதல் அல்லால் மற்று நம்பி! உனக்கு என் செய வல்லேன்? மதியிலேன் படு வெந்துயர் எல்லாம் எற்று நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[5]
அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள் தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம் தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[6]
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்? முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[7]
சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி; வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார் அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற, இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[8]
காண்டு, நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத் தீண்டு நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி ஈண்டு நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.005   நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம் (திருஓணகாந்தன்தளி ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கி நெய்யும் பாலும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார். பொன் பெற
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.
[1]
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்; உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
[2]
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
[3]
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
[4]
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே!
[5]
வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்- தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
[6]
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்; உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
[7]
வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால், கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
[8]
வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம் ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
[9]
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.034   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம்
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை, வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[4]
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை, பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை; பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[5]
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே! குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை; புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[6]
நோயனை, தடந்தோளனே! என்று, நொய்ய மாந்தரை, விழுமிய தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்! என்று, சாற்றினும் கொடுப்பார் இலை; போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[7]
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும், வள்ளலே! எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே! கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை; பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[10]
செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன் சிறுவன், வன்தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர் அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.046   பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார். நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[1]
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி புக்கு அங்கு இருந்தீர்; பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்; சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர் நீரே; காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[2]
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி, பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப் பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்; பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்; வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால், வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர் காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[3]
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக, வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்; துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச் சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே? வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக் கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[4]
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து, வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்; தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே! கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்; பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக் கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!
[5]
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது, பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ? உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே; கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[6]
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து, தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து, திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்; நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறை வீழிமிழலை தனில் நித்தல் காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[7]
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்; வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு; ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்; அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம் அதனில்- தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்; தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்; காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .
[8]
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்; எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்; எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்! திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில், திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை, கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[9]
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்; மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்; கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்! கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை உண்டேல், பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[10]
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்? உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்! என்று அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.108   வேத வேள்வியை நிந்தனை செய்து
பண் - பழம்பஞ்சுரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார். வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே? பாதி மாது உடன் ஆய பரமனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[1]
வைதிகத்தின் வழி ஒழுகாத அக் கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே? மை திகழ்தரு மா மணிகண்டனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[2]
மறை வழக்கம் இலாத மா பாவிகள் பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை முறிய, வாதுசெயத் திரு உள்ளமே? மறி உலாம் கையில் மா மழுவாளனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[3]
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக் கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும் செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே? முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[4]
அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே? வெந்த நீறு அது அணியும் விகிர்தனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[5]
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே? காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[6]
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம் கழல், வாதுசெயத் திரு உள்ளமே? தழல் இலங்கு திரு உருச் சைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[7]
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[8]
நீல மேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திரு உள்ளமே? மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் கோலம் மேனி அது ஆகிய குன்றமே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[9]
அன்று முப்புரம் செற்ற அழக! நின் துன்று பொன்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெயத் திரு உள்ளமே? கன்று சாக்கியர் காணாத் தலைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[10]
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கியவாளரே.
[11]
Back to Top மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.114   திருஉந்தியார் - வளைந்தது வில்லு
பண் - அயிகிரி நந்தினி (திருஏகம்பம் (காஞ்சி) )
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.001   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல்.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே
[1]
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!
[2]
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!
[3]
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.
[4]
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான் நிலாவி இருப்பன், என் நாதனை; தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.
[5]
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் சிட்டர்பால் அணுகான், செறு காலனே.
[6]
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார், விருத்தனார், இளையார், விடம் உண்ட எம் அருத்தனார், அடியாரை அறிவரே.
[7]
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.
[8]
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.
[9]
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும், திரிந்தும், காண வல்லரோ- மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து- ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?
[10]
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், சதுரன், சிற்றம்பலவன், திருமலை அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.054   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது. கூன் நிமிற
அரிய காட்சியராய், தமது அங்கை சேர் எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும் கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும், பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?
[2]
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே, தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்; எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
[3]
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா; கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்
[4]
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி; மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்! சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
[5]
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக் கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில், நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?
[6]
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!
[7]
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம் ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய, பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!
[8]
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி, நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப் போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!
[9]
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும் பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி, கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
[10]
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும், தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப் பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில், பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.049   கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,
பண் - பழம்பஞ்சுரம் (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை)
சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடு வராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ் வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திரு முருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, எற்றுக்கு இங்கிருந் தீர் என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார். களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி, திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[1]
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[2]
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம் ஒன்று அறியார், உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு, நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[3]
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டனராய், சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[4]
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம வேதம் ஓதீ! மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்; முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டி நகர்வாய், இயங்கவும் மிடுக்கு உடையராய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[5]
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்; மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[6]
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்; மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[7]
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண் மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்; இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[8]
சாந்தம் ஆக வெண் நீறு பூசி, வெண்பல்-தலை கலனா, வேய்ந்த வெண் பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய், ஏந்து பூண் முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே.
[9]
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப் பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச் சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.025   பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது. கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[4]
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[5]
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[6]
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[7]
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[8]
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .
[9]
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.078   நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ஓத வேண்டிய பதிகம்
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம், ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில் வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.
[1]
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத் துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர் வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.
[2]
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல் வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர் சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல் வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.
[3]
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்- தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்- பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.
[4]
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்- கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம், மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.
[5]
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.
[6]
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக, மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.
[7]
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.
[8]
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய், தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம், மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.
[9]
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால், வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.
[10]
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்- பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.018   சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார். திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.
எரி ஆர் சடையும், அடியும், இருவர் தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே! மரியார் பிரியா மருகல் பெருமான்! அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
[9]
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும் நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்! நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
[10]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால், இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார், வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.016   அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
[1]
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான் மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.
[2]
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை, வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.
[3]
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம் உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
[4]
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை, மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
[5]
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண் இசைஆன பகர்வானை; வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.
[6]
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக் கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை, மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
[7]
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை, மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே
[8]
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!
[9]
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை, வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.
[10]
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி, பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.087   பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
பண் - திருக்குறுந்தொகை (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
இந்நாளில் குத்தாலம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம்) என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாட்களில் துருத்தி என்று அழைக்கப்பட்டது. துருத்தி தலத்திற்கு பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருமணஞ்சேரி. இந்த தலத்தில் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் நமக்கு கிடைத்துள்ளது.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.024   மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
பண் - கொல்லி (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
[1]
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்; காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
[2]
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி; கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!
[3]
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே! நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!
[4]
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே! விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும், கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
[5]
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல கற்ற நல் வேதியர் கழுமல வள நகர், சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும் பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே, கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!
[8]
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
[9]
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்! கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!
[10]
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.015   பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம் (பாவநாசத் திருப்பதிகம் )
பற்று அற்றார் சேர் பழம் பதியை, பாசூர் நிலாய பவளத்தை, சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்கு அரிய திரு உருவை, வெற்றியூரில் விரிசுடரை, விமலர்கோனை, திரை சூழ்ந்த ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை, கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை, பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.
[6]
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை, குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை, நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை, அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
[7]
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை, ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை, சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை, மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
[8]
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை, ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை, நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.
[9]
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை, வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை, பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை, வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.
[10]
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை, அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை, சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி, எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.039   ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
பண் - இந்தளம் (சீர்காழி )
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர் நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர், நாரையூர், நீடு கானப் பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும், பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!
[1]
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும் கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும், பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே, எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக் கடல் நீந்தல் ஆம், காரணமே.
[2]
அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும், அழகன் உறை கா அனைத்தும், துறைகள் எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும், குளம் மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும், மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழிமூன்றும், சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே!
[3]
அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி, சீர் மகேந்திரத்துப் பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் விரும்பும் இடைப்பள்ளி, வண் சக்கரம் மால் உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி, உணராய், மட நெஞ்சமே, உன்னி நின்றே!
[4]
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர், சேறை, துலை புகலூர், அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே.
[5]
மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும் மதி கூர் திருக்கூடலில் ஆலவாயும், இன வஞ்சொல் இலா இடைமாமருதும், இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும், கனம் அம் சின மால்விடையான் விரும்பும் கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர், தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்! தவம் ஆம்; மலம் ஆயினதான் அறுமே.
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம், போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென் புறம்பயம், பூவணம், பூழியூரும், காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!
[8]
நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல், நெடுவாயில், குறும்பலா, நீடு திரு நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலை உஞ்சேனைமாகாளம், வாய்மூர், கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்வண்ணனும் மாமலரோனும் காணாச் சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு, என்று சொல்லிக் குலாவுமினே!
[9]
குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி, தேவன்குடி, மருவும் அத்தங்குடி, தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த நித்தன், நிமலன், உமையோடும் கூட நெடுங் காலம் உறைவு இடம் என்று சொல்லாப் புத்தர், புறம்கூறிய புன் சமணர், நெடும் பொய்களை விட்டு, நினைந்து உய்ம்மினே!
[10]
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், பதி ஆன உன்னி, கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று, விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார், விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.070   தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி (பொது -க்ஷேத்திரக்கோவை )
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே! கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே! பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே! பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாசூர் அம்மானே!
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே! நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே! பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!
[6]
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்! வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே! ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே! ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.
[7]
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா! பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்; திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
[8]
புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா! பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே! வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ! கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!
[9]
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி, மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி- தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
[10]
Back to Top மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.145   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்) )
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால், ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்; போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.
[1]
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள் மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்; நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட, தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.
[2]
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்; யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக, கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு, போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை; உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்; அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே; புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
[5]
புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு, இகழ்மின் எல்லா அல்லலையும்; இனி, ஓர் இடையூறு அடையாமே, திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று, சிவன் தாள் வணங்கி, நாம் நிகழும் அடியார் முன் சென்று, நெஞ்சம் உருகி, நிற்போமே.
[6]
நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே, பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே; நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின்; பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே.
[7]
பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள், அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே, திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து, திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.
[8]
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்; போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம் ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்! போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.
[9]
புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர், மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்; தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.018   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர் சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்; கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்; இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்; எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[1]
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்; அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்; ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்; ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல் சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்; செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[2]
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்; அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்; பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[3]
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்; நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்; புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[4]
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்; இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்; கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும். புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[5]
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்; சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்; ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று, போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[6]
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்; சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்; மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்; துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்; பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[7]
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்; திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்; நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்; நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்; மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்; மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்; பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[8]
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்; அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்- மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத் திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்; செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[9]
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, தன் முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்; பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று, பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்; கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்; பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[10]
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ் உரு ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்; வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்; நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்; போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.094   இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை (நின்றத் திருத்தாண்டகம் )
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி, அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி, பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி, நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே!.
[1]
மண் ஆகி, விண் ஆகி, மலையும் ஆகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே ஆகி, கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி, கலை ஆகி, கலை ஞானம் தானே ஆகி, பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி, எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே!.
[2]
கல் ஆகி, களறு ஆகி, கானும் ஆகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் ஆகி, புல் ஆகி, புதல் ஆகி, பூடும் ஆகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி, சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி, நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் ஆகி, நெடுஞ்சுடர் ஆய் நிமிர்ந்து, அடிகள் நின்ற ஆறே!.
[3]
காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி, கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய், நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி ஆகி, ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.
[4]
தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் ஆகி, தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி, காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி, நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய், நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.
[5]
அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் ஆகி, அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகி, பங்கம் ஆய், பல சொல்லும் தானே ஆகி, பால் மதியோடு ஆதி ஆய், பான்மை ஆகி, கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை ஆகி, கழியும் ஆகி, எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.
[6]
மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி, கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி, போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி, ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற ஆறே!.
[7]
ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி, அழல் ஆகி, அவியும் ஆகி, நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி, பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி, புக்குளால் வாசம் ஆய் நின்றான் ஆகி, தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.
[8]
நீர் ஆகி, நீள் அகலம் தானே ஆகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி ஆகி, பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி, பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி, ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம் பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.
[9]
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி, பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே ஆகி, பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே ஆகி, ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.006   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
பண் - குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி; அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி; சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி; சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி; பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி; பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி; திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[1]
கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி; படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி; கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல் வையம் காப்பான் கருதும்(ம்) அடி; நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி.
[2]
வைது எழுவார் காமம், பொய், போகா அடி; வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி; கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி; கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி; நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி; தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;
[3]
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி; அழகு எழுதல் ஆகா அருள் சேவடி; சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி; சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி; பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி; பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி; திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[4]
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி; ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி; பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி; இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி; திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[5]
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி; சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி; பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி; உரு என்று உணரப்படாத(வ்)அடி; திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[6]
உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால் உணரப்படாத(வ்) அடி; வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி; அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம் அளக்கிற்பார் இல்லா அடி; கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி கமழ் வீரட்டானக் காபாலி(ய்) அடி;
[7]
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய் உலகம் நாடு ஆய(வ்) அடி; செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி; தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி; மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி; செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[8]
அணியனவும் சேயனவும் அல்லா அடி; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி; பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி; பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி; மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி; மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி; தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி தகை சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;,
[9]
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி; அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி; முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி; பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி; பவளத்தடவரையே போல்வான் அடி; வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம் காதல் விமலன்(ன்) அடி.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.005   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.
[1]
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[2]
முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.
[3]
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[4]
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.
[5]
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[6]
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.
[7]
வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[8]
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[9]
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.032   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[2]
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[5]
சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[6]
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[7]
இமையாது உயிராது இருந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[8]
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[9]
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[10]
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.056   பொறை உடைய பூமி, நீர்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி!
ஆறு ஏறு சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[2]
மாலை எழுந்த மதியே, போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய், போற்றி!
மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
காலை முளைத்த கதிரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[3]
உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!
ஒள் எரி வீசும் பிரானே, போற்றி!
படரும் சடைமேல் மதியாய், போற்றி!
பல்கணக் கூத்தப்பிரானே, போற்றி!
சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி!
தோன்றி என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[4]
மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய், போற்றி!
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி!
போகாது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி!
கை சேர் அனல் ஏந்தி ஆடீ, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[5]
ஆறு ஏறு சென்னி முடியாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுது ஆய் நின்றாய், போற்றி!
நீறு ஏறும் மேனி உடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கூறு ஏறும் அம் கை மழுவா, போற்றி!
கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய், போற்றி!
காறு ஏறு கண்டம்-மிடற்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[6]
அண்டம் ஏழ் அன்று கடந்தாய், போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய், போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய், போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே, போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[9]
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.057   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!
ஆல நிழல் கீழ் அமர்ந்தாய், போற்றி!
சதுரா, சதுரக் குழையாய், போற்றி!
சாம்பர் மெய் பூசும் தலைவா, போற்றி!
எதிரா உலகம் அமைப்பாய், போற்றி!
என்றும் மீளா அருள் செய்வாய், போற்றி!
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[2]
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[3]
ஆட்சி உலகை உடையாய், போற்றி!
அடியார்க்கு அமுது எலாம் ஈவாய், போற்றி!
சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி!
சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மாட்சி பெரிதும் உடையாய், போற்றி!
மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி!
காட்சி பெரிதும் அரியாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!
ஏறு அரிய ஏறும் குணத்தாய், போற்றி!
பண் மேலே பாவித்து இருந்தாய், போற்றி!
பண்ணொடி யாழ் வீணை பயின்றாய், போற்றி!
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய், போற்றி!
மேலார்கள் மேலார்கள் மேலாய், போற்றி!
கண் மேலும் கண் ஒன்று உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[7]
முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி!
முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி!
துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி!
சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி!
அடியார் அடிமை அறிவாய், போற்றி!
அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி!
கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[8]
போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி!
புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி!
ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி!
எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி!
நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி!
நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி!
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[9]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.039   தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவாரூர் )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். சிவனடியார்கள் ஆசி பெற
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[1]
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[2]
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்; செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த, அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[3]
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்; பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்; ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்; அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[4]
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்; நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்; அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[5]
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்; சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்; கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்; ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[6]
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்; மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்; கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்; ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[7]
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்; நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்; துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்; அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .
[8]
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்- காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்; மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்; புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்; அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்; தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்; என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன், அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.001   அரியானை, அந்தணர் தம் சிந்தை
பண் - பெரியதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை, அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும் தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக் கரியானை, நான்முகனை, கனலை, காற்றை, கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[1]
கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை, அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை, ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[2]
கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி, வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட, வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண, அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[3]
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை, அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா- மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை, மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[4]
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான் புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி, பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும் பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[5]
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை, கன வயிரக் குன்று அனைய காட்சியானை, அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை, அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை, சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[6]
வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை, சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் -துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப் பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[7]
கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு பூங் கச்சி ஏகம்பன் தன்னை, ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை, அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை, பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை, பரனை, எண் இல் பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[8]
முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான் ஆய முதல்வன் தன்னை, செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ் ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை, குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை, கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம் பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[9]
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும், கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம் சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத், திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ் உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத நாள் எல்லாம் பிறவா நாளே.
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.125   கல் ஊர்ப் பெரு மணம்
பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம் பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில? சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர் நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!
[1]
தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம் பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள், வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்- பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே!
[2]
அன்பு உறு சிந்தையராகி, அடியவர் நன்பு உறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று, இன்பு உறும் எந்தை இணை அடி ஏத்துவார் துன்பு உறுவார் அல்லர்; தொண்டு செய்தாரே.
[3]
வல்லியந்தோல் உடை ஆர்ப்பது; போர்ப்பது கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம் நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.
[4]
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்- நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம் வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே!
[5]
சிட்டப்பட்டார்க்கு எளியான், செங்கண் வேட்டுவப்- பட்டம் கட்டும் சென்னியான், பதி ஆவது நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே!
[6]
மேகத்த கண்டன், எண்தோளன், வெண் நீற்று உமை பாகத்தன், பாய் புலித்தோலொடு பந்தித்த நாகத்தன்-நல்லூர்ப்பெருமணத்தான்; நல்ல போகத்தன், யோகத்தையே புரிந்தானே.
[7]
தக்கு இருந்தீர்! அன்று தாளால் அரக்கனை உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு நக்கு இருந்தீர்; இன்று நல்லூர்ப்பெருமணம் புக்கு இருந்தீர்! எமைப் போக்கு அருளீரே!
[8]
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை- நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்- போலும், தம் கோயில் புரிசடையார்க்கே.
[9]
ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்! நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.099   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
பண் - திருத்தாண்டகம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். எல்லாவுலகமும் போற்ற எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ, எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்? கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன், கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்; ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்; புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[1]
அங்கமே பூண்டாய்! அனல் ஆடினாய்! ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்! பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்! பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்! சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச் சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன் திருப் புகலூர் மேவிய தேவதேவே!.
[2]
பை அரவக் கச்சையாய்! பால் வெண் நீற்றாய்! பளிக்குக் குழையினாய்! பண் ஆர் இன்சொல் மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்! மான்மறி கை ஏந்தினாய்! வஞ்சக் கள்வர்- ஐவரையும் என்மேல்-தரவு அறுத்தாய்; அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை; பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்- பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[3]
தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச் சிலை வளைத்து, செங் கணையால் செற்ற தேவே! மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்! மருந்து ஆய்ப் பிணி தீர்ப்பாய், வானோர்க்கு என்றும்! அருள் ஆகி, ஆதி ஆய், வேதம் ஆகி, அலர் மேலான் நீர் மேலான் ஆய்ந்தும் காணாப் பொருள் ஆவாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[4]
நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே! பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே! பண்டு அநங்கற் காய்ந்தானே! பாவநாசா! கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே! கருங்கைக் களிற்று உரிவை கதறப் போர்த்த போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[5]
விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி பொழில் சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்! திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே! திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயாய்! மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்! வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும் புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[6]
தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு, தேடி நின்று, நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி, நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற, கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்! கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின் பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[7]
நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு உடையாய்! மறை வல்லாய்! நீதியானே! மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல் உடையாய்! மகிழ்ந்து நின்றாய்! கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு, அடியேன் நான் இட்டு, கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[8]
துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்! துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி, தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடிமேல் வைத்து உகந்த தன்மையானே! அன்ன நடை மடவாள் பாகத்தானே! அக்கு ஆரம் பூண்டானே! ஆதியானே! பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[9]
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்; உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி, இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக் கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.100   தான் எனை முன் படைத்தான்;
பண் - பஞ்சமம் (திருக்கயிலாயம் )
பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார். சிவபிரானினருளாணை மேற்கொண்டு வெள்ளையானை யுடன் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயில்வாயிலை அடைந்தனர் தேவர்கள். இறைவனை வழிபட்டுக் கோயில் வாயிலை யடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலைமலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையைத் தெரிவித்தனர். தேவர் கள் சுந்தரரை வலம்வந்து அவரை வெள்ளையானை மேலேற்றினர். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. சுந்தரர், தானெனை முன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும் சுந்தரரும் தத்தம் ஊர்தி களினின்று கீழிறங்கிப் பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றார். சுந்தரர், உள்ளே சென்று அம்மையப்பராய பெருமான் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவர்க்குப் பணித்தார். அவரும் இறைவனருளிப்பாட்டைக் கூறிச் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளேவந்த சேரர்கோன் சிவபிரானை வீழ்ந்திறைஞ்சி நின்றார். பெருமான் சேரர்கோனை நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன் என வினவினார். அதுகேட்ட சேரவேந்தர் அடியேன் ஆரூரர் கழல்போற்றி அவரைச் சேவித்து வந்தேன். திரு வருள்வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய திருக்கயிலாய ஞான உலா என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். திருக்கயிலாய ஞான உலா எடுத்துரைத்து அரங்கேற் றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக எனத் திருவருள் பாலித்தார். சுந்தரர், வெள்ளையானையிலமர்ந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றபொழுது பாடிய தானெனைமுன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை, வருணனிடத்துக் கொடுத்தருள அவன் அத் திருப்பதிகத்தினைத் திருவஞ்சைக் களத்தில் கொண்டுவந்து சேர்ப் பித்தான்.
தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து, வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்) ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.
[1]
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ- ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன், வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?
[2]
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்; சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்தது- உம்தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.
[3]
வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு, ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம் சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[4]
மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்; விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல் என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.
[5]
அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே! துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[6]
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே, அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச, உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.
[7]
அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள், விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப, வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர் சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[8]
இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம் வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து, மந்திர மா முனிவர், இவன் ஆர்? என,-எம்பெருமான் நம்தமர் ஊரன் என்றான்நொடித்தான்மலை உத்தமனே.
[9]
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை, சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன, ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும், ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!
[10]
Back to Top மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.151   அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
பண் - முல்லைத் தீம்பாணி (கோயில் (சிதம்பரம்) )
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம், சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[1]
நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை, சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம், குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[2]
பொய் எல்லாம் மெய் என்று, புணர் முலையார் போகத்தே மையல் உறக் கடவேனை, மாளாமே, காத்தருளி, தையல் இடம் கொண்ட பிரான், தன் கழலே சேரும்வண்ணம், ஐயன், எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[3]
மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு விழக் கடவேனை, எண்ணம் இலா அன்பு அருளி, எனை ஆண்டிட்டு, என்னையும் தன் சுண்ண வெண் நீறு அணிவித்து, தூ நெறியே சேரும்வண்ணம், அண்ணல் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[4]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு, நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்; உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை வருக' என்று, அஞ்சேல்' என்று, அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[5]
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று, வினை பெருக்கி, கொந்து குழல் கோல் வளையார் குவி முலைமேல் விழுவேனை, பந்தம் அறுத்து, எனை ஆண்டு, பரிசு அற, என் துரிசும் அறுத்து, அந்தம் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[6]
தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை, பையவே கொடு போந்து, பாசம் எனும் தாழ் உருவி, உய்யும் நெறி காட்டுவித்திட்டு, ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[7]
சாதல், பிறப்பு, என்னும் தடம் சுழியில் தடுமாறி, காதலின் மிக்கு, அணி இழையார் கலவியிலே விழுவேனை, மாது ஒரு கூறு உடைய பிரான், தன் கழலே சேரும்வண்ணம், ஆதி, எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[8]
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை, மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான் நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[9]
This page was last modified on Fri, 06 Jan 2023 06:54:04 +0000
send corrections and suggestions to admin @ sivasiva.org