கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.001  
தோடு உடைய செவியன், விடை
பண் - நட்டபாடை (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற
Audio: https://www.youtube.com/watch?v=Yq-NOZQxd64
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
| [1] |
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
| [2] |
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
| [3] |
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
| [4] |
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
| [5] |
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
| [6] |
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
| [7] |
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
| [8] |
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
| [9] |
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
| [10] |
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்
பண் - தக்கராகம் (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
நல்ல தாளம், இசை கை வர
Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY Audio: https://www.sivasiva.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3
மடையில் வாளை பாய, மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா உளான் சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ் உடையும், கொண்ட உருவம் என்கொலோ?
| [1] |
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி கொண்டான், கோலக்காவு கோயிலாக் கண்டான், பாதம் கையால் கூப்பவே, உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.
| [2] |
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை, கோணல் பிறையன், குழகன், கோலக்கா மாணப் பாடி, மறை வல்லானையே பேண, பறையும், பிணிகள் ஆனவே.
| [3] |
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்! மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான், குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!
| [4] |
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா, எயிலார் சாய எரித்த எந்தை தன் குயில் ஆர் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்க, பறையும், பாவமே.
| [5] |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்! கடி கொள் கொன்றை கலந்த சென்னியான், கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!
| [6] |
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம், குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான் கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரம் இல்லையே.
| [7] |
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன் குறி ஆர் பண் செய் கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
| [8] |
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில் ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா, கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!
| [9] |
பெற்ற மாசு பிறக்கும் சமணரும், உற்ற துவர் தோய் உரு இலாளரும், குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவ, பறையும், பாவமே.
| [10] |
நலம் கொள் காழி ஞானசம்பந்தன், குலம் கொள் கோலக்கா உளானையே வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார், உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.044  
துணி வளர் திங்கள் துளங்கி
பண் - தக்கராகம் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து, பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
| [1] |
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்; தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன, அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
| [2] |
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்; நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து; மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
| [3] |
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
| [4] |
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து, மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி, ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?
| [5] |
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி, ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
| [6] |
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை, கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன, அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?
| [7] |
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து, மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்; யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?
| [8] |
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால், ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?
| [9] |
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்; ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா; ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?
| [10] |
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன் தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம் (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.
| [1] |
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப் பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன், ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.
| [2] |
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர் பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த, மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.
| [3] |
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி, பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர, நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
| [4] |
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம் ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி, நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
| [5] |
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள், எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.
| [6] |
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர, அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
| [7] |
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால் சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
| [8] |
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி, அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
| [9] |
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.
| [10] |
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம் (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.
Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும் பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால், குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [1] |
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [2] |
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத, என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [3] |
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்! அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [4] |
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [5] |
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [6] |
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [7] |
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை, அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்! என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும், நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [8] |
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும், சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்! கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [9] |
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும், தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்; துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
| [10] |
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால் நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,
பண் - பழந்தக்கராகம் (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, பூத்தேர்ந்தாயன என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
விவசாயம் செழிக்க, செடி கொடிகள், மலர்கள் வளர, மலர, நல்ல கனிகள் கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=eDjeCtZ_l10 Audio: https://www.sivasiva.org/audio/1.054 Poothernthaayina .mp3
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம குணங்களே.
| [1] |
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் புடையீரே! புள்ளிமான் உரி உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச் சடையீரே! உம தாளே.
| [2] |
உள்வேர் போல நொடிமையினார் திறம் கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்! ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க் கள்வீரே! உம காதலே!
| [3] |
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே! அடியார் வினை ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர் நாட்டீரே! அருள் நல்குமே!
| [4] |
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை உழை ஆள்வீர்! திரு ஓத்தூர் பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே!
| [5] |
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத் தக்கார் தம் மக்களீர் என்று உட்காதார் உளரோ? திரு ஓத்தூர் நக்கீரே! அருள் நல்குமே!
| [6] |
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை நாதா! என்று நலம் புகழ்ந்து ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர் ஆதீரே! அருள் நல்குமே!
| [7] |
என்தான் இம் மலை! என்ற அரக்கனை வென்றார் போலும், விரலினால்; ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல் வினை ஏகுமே.
| [8] |
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச் சென்றார் போலும், திசை எலாம் ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர் நின்றீரே! உமை நேடியே!
| [9] |
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர் தேரர், சொல் அவை தேறன் மின்! ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச் சீரவன், கழல் சேர்மினே!
| [10] |
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார்.
நல்ல இசைக் குழு அமைய
Audio: https://www.youtube.com/watch?v=rS7fTpfQ_1w Audio: https://www.sivasiva.org/audio/1.080 Katraangu Eriyombi.mp3
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.
| [1] |
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும் சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை, மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே.
| [2] |
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக் கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள், பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச் செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.
| [3] |
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப் பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச் சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.
| [4] |
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற, செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
| [5] |
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம் பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.
| [6] |
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம் மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச் சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத் தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.
| [7] |
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து, சீராலே மல்கு சிற்றம்பலம் மேய நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.
| [8] |
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும் காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான், சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த, மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.
| [9] |
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே, சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.
| [10] |
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
பண் - குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்
Audio: https://www.youtube.com/watch?v=jNtQljtdzhE Audio: https://www.sivasiva.org/audio/1.092 Vaasi Theerave.mp3
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.
| [1] |
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே!
| [2] |
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!
| [3] |
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்! கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!
| [4] |
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்! நாம மிழலையீர்! சேமம் நல்குமே!
| [5] |
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!
| [6] |
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!
| [7] |
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!
| [8] |
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!
| [9] |
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே.
| [10] |
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
பண் - குறிஞ்சி (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந் தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவால வாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து நீலமாமிடற்று எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ மதுரையை தரிசித்த பலன் கிடைக்கும்
Audio: https://www.youtube.com/watch?v=vCNP3lGfb-E
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.
| [1] |
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே சொலீர், காலன் வீடவே!
| [2] |
ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார் பால் அது ஆமினே!
| [3] |
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!
| [4] |
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் பாடியே, மனம் நாடி, வாழ்மினே!
| [5] |
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.
| [6] |
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.
| [7] |
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.
| [8] |
அருவன், ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.
| [9] |
ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த் தேர் அமண் செற்ற வீரன் என்பரே.
| [10] |
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன், முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.098  
நன்று உடையானை, தீயது இலானை,
பண் - குறிஞ்சி (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=bgfBxgqq_lY Audio: https://www.sivasiva.org/audio/1.098 Nantruudayanai.mp3
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை, சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்- குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.
| [1] |
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான், செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி, வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?
| [2] |
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல் செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி, சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும் எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.
| [3] |
துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி, சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி, கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம் பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!
| [4] |
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும் சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித் தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்! நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே?
| [5] |
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார், தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில் ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?
| [6] |
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும் சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார், பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார், தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!
| [7] |
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன் தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார் சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால், சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!
| [8] |
அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக் கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும் இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?
| [9] |
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல் பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார் சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!
| [10] |
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்- ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார் வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.116  
அவ் வினைக்கு இவ் வினை
பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
விஷ சுரம் , விஷக்கடி முதலியன ம்ற்றும் தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்கவும் ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
| [1] |
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால், ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும், பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்; தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
| [2] |
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம், விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்! சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!
| [3] |
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே! கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!
| [4] |
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்; செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
| [5] |
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி, பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம், பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்; சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
| [6] |
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்; செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே! திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
| [7] |
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து, தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்! தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்; சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!
| [8] |
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும், பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்; பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்; தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
| [9] |
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான், இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண் திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.
| [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
பண் - வியாழக்குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
திருஜால ஜதியில் அமைந்த இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ நல்ல இசை ஞானம் வளரும்
Audio: https://www.youtube.com/watch?v=k79jeHXwR6w
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப் பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும், சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும் சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம் சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம் கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே.
| [1] |
பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப் பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும், உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா, நேரே மால் ஆகும் வசி வல அவனது இடம் கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.
| [2] |
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின் சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு, அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப் பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும், பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின் போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம் கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.
| [3] |
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய, முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.
| [4] |
திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச் சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப் போலே, பூ,நீர், தீ, கால், மீ, , புணர்தரும் உயிர்கள் திறம் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத் தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம் கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக் காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.
| [5] |
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய், ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப் பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம் கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக் காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.
| [6] |
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா, முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய், சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம் கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.
| [7] |
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில் சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன், இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.
| [8] |
பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப் பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும் சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின் தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும், காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.
| [9] |
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா, தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்; இட்டத்தால், அத்தம்தான் இது அன்று; அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்; போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம் கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல் காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.
| [10] |
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக் கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத் தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை, தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள், எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா, வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.128  
ஓர் உரு ஆயினை; மான்
பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி) )
கல்வியில் சிறந்து விளங்க
Audio: https://www.youtube.com/watch?v=rfRTjyK3Eck Audio: https://www.sivasiva.org/audio/1.128 Oor Uru Aayinai.mp3
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை; இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை; இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம், ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை; ஒரு தனு இருகால் வளைய வாங்கி, முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை; ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம், முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு, இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை; அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை; பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப் பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை; ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை; இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும், மறு இலா மறையோர் கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
திருமணம் கைகூட ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
| [1] |
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான் மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.
| [2] |
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை, வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.
| [3] |
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம் உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
| [4] |
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை, மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
| [5] |
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண் இசைஆன பகர்வானை; வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.
| [6] |
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக் கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை, மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே. | [7] |
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை, மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே
| [8] |
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!
| [9] |
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை, வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.
| [10] |
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி, பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.
Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்; விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்; மடை ஆர் குவளை மலரும் மருகல் உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
| [1] |
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்; முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்; கொந்து ஆர் குவளை குலவும் மருகல் எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
| [2] |
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும், பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
| [3] |
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்! மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
| [4] |
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்! கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன் அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
| [5] |
பலரும் பரவப்படுவாய்! சடைமேல் மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்! புலரும்தனையும் துயிலாள், புடை போந்து அலரும் படுமோ, அடியாள் இவளே
| [6] |
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்; மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்! தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
| [7] |
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப, துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்; வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்! அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?
| [8] |
எரி ஆர் சடையும், அடியும், இருவர் தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே! மரியார் பிரியா மருகல் பெருமான்! அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
| [9] |
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும் நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்! நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
| [10] |
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால், இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார், வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
பண் - இந்தளம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.
| [1] |
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்; விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்; கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.
| [2] |
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப் போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும் காதவன் இருப்பது கருப்பறியலூரே.
| [3] |
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன், உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத் தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால் கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.
| [4] |
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும் கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.
| [5] |
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன் பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான் எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும் கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.
| [6] |
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர் சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத் தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறியலூரே.
| [7] |
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.
| [8] |
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து, நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.
| [9] |
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர், சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு, குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறியலூரே.
| [10] |
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன், கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப் பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று, வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
பண் - இந்தளம் (சீர்காழி )
திருக்ஷேத்திரக் கோவை
Audio: https://www.youtube.com/watch?v=5rJFwc-Bt_0
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர் நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர், நாரையூர், நீடு கானப் பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும், பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!
| [1] |
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும் கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும், பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே, எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக் கடல் நீந்தல் ஆம், காரணமே.
| [2] |
அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும், அழகன் உறை கா அனைத்தும், துறைகள் எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும், குளம் மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும், மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழிமூன்றும், சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே!
| [3] |
அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி, சீர் மகேந்திரத்துப் பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் விரும்பும் இடைப்பள்ளி, வண் சக்கரம் மால் உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி, உணராய், மட நெஞ்சமே, உன்னி நின்றே!
| [4] |
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர், சேறை, துலை புகலூர், அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே.
| [5] |
மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும் மதி கூர் திருக்கூடலில் ஆலவாயும், இன வஞ்சொல் இலா இடைமாமருதும், இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும், கனம் அம் சின மால்விடையான் விரும்பும் கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர், தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்! தவம் ஆம்; மலம் ஆயினதான் அறுமே.
| [6] |
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம், முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும், கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும், கொதுங்கோவலூர், திருக்குணவாயில்,
| [7] |
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம், போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென் புறம்பயம், பூவணம், பூழியூரும், காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!
| [8] |
நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல், நெடுவாயில், குறும்பலா, நீடு திரு நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலை உஞ்சேனைமாகாளம், வாய்மூர், கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்வண்ணனும் மாமலரோனும் காணாச் சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு, என்று சொல்லிக் குலாவுமினே!
| [9] |
குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி, தேவன்குடி, மருவும் அத்தங்குடி, தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த நித்தன், நிமலன், உமையோடும் கூட நெடுங் காலம் உறைவு இடம் என்று சொல்லாப் புத்தர், புறம்கூறிய புன் சமணர், நெடும் பொய்களை விட்டு, நினைந்து உய்ம்மினே!
| [10] |
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், பதி ஆன உன்னி, கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று, விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார், விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்
பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
பலவகை உடற்பிணிகள் அகல ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [1] |
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [2] |
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள் தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [3] |
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில், கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [4] |
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [5] |
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி, நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [6] |
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக் கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான் பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [7] |
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான், கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான், பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள் கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [8] |
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான், பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [9] |
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும் இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில் கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [10] |
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான் ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார், வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும், பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும், பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும், வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
| [1] |
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்; வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர் தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.
| [2] |
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி, எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும், பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன் விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.
| [3] |
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில், மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று, தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய, கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
| [4] |
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன் மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர், ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.
| [5] |
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்; ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில் பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.
| [6] |
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்; அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய, மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும் முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.
| [7] |
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில் கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க, விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.
| [8] |
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.
| [9] |
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும் பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்; வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!
| [10] |
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன் விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப் பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார், மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்
பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=n2Uf5Es4A10
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு; தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு; செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
| [1] |
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு; போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு; ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு; சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
| [2] |
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு; சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு; பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு; சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
| [3] |
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு; பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு; மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு; சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
| [4] |
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு; பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு; தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
| [5] |
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு; வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு; பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு; திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
| [6] |
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு; பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு; துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு; அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.
| [7] |
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு; பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு; தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு; அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
| [8] |
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு; மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு; ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு; ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
| [9] |
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட, கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு; எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு; அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
| [10] |
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன், தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.072  
பந்து ஆர் விரல் மடவாள்
பண் - காந்தாரம் (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
வினை நீக்கம் - கேட்பவர் வினை நீங்க ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=jv1Ayp2UmWQ
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி, அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல் வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட, செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.
| [1] |
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி, ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில் ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச் சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.
| [2] |
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த, மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில், குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.
| [3] |
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர், ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க, செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.
| [4] |
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி, தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.
| [5] |
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும் அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி, செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.
| [6] |
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு ஒன்று அரைமேல் சாத்தி, ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த, தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.
| [7] |
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி, முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம், அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில், செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.
| [8] |
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள் தோறும் கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் கழல்கள் நேடிப் பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச் செய் ஆர் எரி ஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.
| [9] |
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில் ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார, சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.
| [10] |
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர் நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல், வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.085  
வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [1] |
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [2] |
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [3] |
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [4] |
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும்,
மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [5] |
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [6] |
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [7] |
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [8] |
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
| [9] |
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநிரு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.
| [10] |
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.111  
தளிர் இள வளர் என
பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக
Audio: https://www.youtube.com/watch?v=I3ZgtC3Dewg
தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர் கழல் வீசி, கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக் கிறிமையார்; விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து, ஓர் சென்னியின் மேல் வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [1] |
வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு கோவண உடைமேல் ஓர் பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல கடைதொறும் பலி தேர்வார்; சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர் வண்ணர் தம் அடி பரவ, வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [2] |
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன் ஆவார்; சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [3] |
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி அரவினொடு, ஆறு மூழ்க விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்; புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர்; பொன்மிளிரும் வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [4] |
அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு அணி கொள, உடல் திமில, நஞ்சினை, அமரர்கள் அமுதம் என, நண்ணிய நறு நுதல் உமை நடுங்க வெஞ்சின மால்களியானையின் தோல் வெரு உறப் போர்த்து, அதன் நிறமும் அஃதே, வஞ்சனை வடிவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [5] |
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ, எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில் அவை இசைய வல்லார்; சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு பெய்து, வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [6] |
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர் கன மணி சேர் முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி பெய, முறுவல் செய்வார்; பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும், வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [7] |
கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்; வீணையர்; தாமும் அஃதே; எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில், பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய, வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [8] |
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு ஏறி, கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர் செய்து தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன் சடைமேல் திகழ்கின்ற வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [9] |
சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண வெண் நீற்றினர்; சுடர் மழுவர்; பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம்தார் பாம்பொடு ;நூல் அவை பசைந்து இலங்க, கோடல் நன் முகிழ்விரல் கூப்பி, நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய, வாடல் வெண்தலை பிடித்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
| [10] |
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர், அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம் அடி பரவி, நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி, உலகுக்கு ஓர் தவநெறியே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.004  
இடரினும், தளரினும், எனது உறு
பண் - காந்தாரபஞ்சமம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=HR13vYitroI
இடரினும், தளரினும், எனது உறு நோய் தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்; கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [1] |
வாழினும், சாவினும், வருந்தினும், போய் வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்; தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [2] |
நனவினும், கனவினும், நம்பா! உன்னை, மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்! புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த, கனல் எரி-அனல் புல்கு கையவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [3] |
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா; கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால் மும்மதில் எரி எழ முனிந்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [4] |
கையது வீழினும், கழிவு உறினும், செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;- கொய் அணி நறுமலர் குலாய சென்னி மை அணி மிடறு உடை மறையவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [5] |
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும், எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா; ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண்பொடி அணி சங்கரனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [6] |
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [7] |
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும், சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்; ஏர் உடை மணி முடி இராவணனை ஆர் இடர் பட வரை அடர்த்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [8] |
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின் ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா; கண்ணனும், கடி கமழ் தாமரை மேல் அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [9] |
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும், அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா; புத்தரும் சமணரும் புறன் உரைக்க, பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
| [10] |
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல்படை எம் இறையை, நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார், வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம் நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.006  
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய
பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
கொள்ளம்பூதூர் எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம் செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றிக் கொட்டமே கமழும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது.
வழிப் பயணம் தடை இல்லாமல் நிறைவு பெற
Audio: https://www.youtube.com/watch?v=Fu2dZdfFYQw
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய நம்பனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [1] |
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர் நாட்டு அகத்து உறை நம்பனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [2] |
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [3] |
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த் தவள நீறு அணி தலைவனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [4] |
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர் நின்ற புன்சடை நிமலனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [5] |
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர் ஆடல் பேணிய அடிகளை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [6] |
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர் ஏறு தாங்கிய இறைவனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [7] |
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் அரக்கனைச் செற்ற ஆதியை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [8] |
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர் இருவர் காண்பு அரியான் கழல் உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [9] |
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த் தேர் அமண் செற்ற செல்வனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
| [10] |
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர், நன்று காழியுள் ஞானசம்பந்தன் இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய், என்றும் வானவரோடு இருப்பாரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
பண் - காந்தாரபஞ்சமம் (சீர்காழி )
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.
ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=Pi5cJXxeoVQ
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
| [1] |
மந்திர நால்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.
| [2] |
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
| [3] |
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர் செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
| [4] |
கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்; தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
| [5] |
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும், அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.
| [6] |
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர் பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும் மாடு கொடுப்பன; மன்னு மா நடம் ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.
| [7] |
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின; பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
| [8] |
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச் சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும், பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.
| [9] |
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின; வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
| [10] |
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
பண் - கொல்லி (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=EFcH79qtezA Audio: https://www.youtube.com/watch?v=zpZCGZOpaeY Audio: https://www.sivasiva.org/audio/3.024 Mannanil Nalla Vannam.mp3
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
| [1] |
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்; காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
| [2] |
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி; கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!
| [3] |
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே! நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!
| [4] |
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே! விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும், கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
| [5] |
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல கற்ற நல் வேதியர் கழுமல வள நகர், சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும் பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!
| [6] |
குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே! நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும், கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!
| [7] |
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே, கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!
| [8] |
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
| [9] |
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்! கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!
| [10] |
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
குழத்தைப் பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=uSnIymbkLcs
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே, மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
| [1] |
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம், கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர் அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
| [2] |
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக் குழகர்! என்று குழையா, அழையா, வரும், கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
| [3] |
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து உடன், செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
| [4] |
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட, செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம் ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
| [5] |
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட, ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்; காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.
| [6] |
வெந்த நீறு மெய் பூசிய வேதியன், சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்- கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.
| [7] |
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும் கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
| [9] |
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல் தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்! கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம் ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
| [10] |
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல் உடையான் தன நீள்கழல் குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம் (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=RYMXxRvZB8I Audio: https://www.youtube.com/watch?v=5dzknic0_uA
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே.
| [1] |
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால், வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது; செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்; நம்பன் நாமம் நமச்சிவாயவே.
| [2] |
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே.
| [3] |
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்; நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன், நாமம் நமச்சிவாயவே.
| [4] |
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின், எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே.
| [5] |
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே.
| [6] |
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும், உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்- வரதன் நாமம் நமச்சிவாயவே.
| [7] |
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
| [8] |
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய், யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே.
| [9] |
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள் வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்- விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய் நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே.
| [10] |
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=FKdAEZH4Pms Audio: https://www.sivasiva.org/audio/3.051 Seyyanae ThiruAalavaay.mp3
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
| [1] |
சித்தனே! திரு ஆலவாய் மேவிய அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
| [2] |
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச் சொக்கனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!
| [3] |
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே! அஞ்சல்! என்று அருள் துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
| [4] |
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் அண்ணலே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எண் இலா அமணர் கொளுவும் சுடர் பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!
| [5] |
தஞ்சம்! என்று உன் சரண் புகுந்தேனையும், அஞ்சல்! என்று அருள், ஆலவாய் அண்ணலே! வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
| [6] |
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய் அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை; கங்குலார் அமண்கையர் இடும் கனல், பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!
| [7] |
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய் ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
| [8] |
தாவினான், அயன்தான் அறியா வகை மேவினாய்! திரு ஆலவாயாய், அருள் தூ இலா அமணர் கொளுவும் சுடர் பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
| [9] |
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை; குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
| [10] |
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால், வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும், செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற
Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்! வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக! ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!
| [1] |
அரிய காட்சியராய், தமது அங்கை சேர் எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும் கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும், பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?
| [2] |
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே, தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்; எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
| [3] |
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா; கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்
| [4] |
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி; மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்! சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
| [5] |
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக் கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில், நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?
| [6] |
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!
| [7] |
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம் ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய, பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!
| [8] |
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி, நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப் போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!
| [9] |
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும் பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி, கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
| [10] |
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும், தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப் பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில், பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!
| [11] |
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல், பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும், வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!
| [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.072  
விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம், மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்- கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்; செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
| [1] |
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர் மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்- இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள் அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
| [2] |
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர் மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்- தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப் பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
| [3] |
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே, மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்- கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!
| [4] |
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய், மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்- வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும் நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே
| [5] |
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய் இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்- மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
| [6] |
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர் மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர் கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர் ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
| [7] |
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே, மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்; பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர் பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.
| [8] |
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண் பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்- சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்- ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
| [9] |
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்- நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய், ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.
| [10] |
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்- அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால், மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.073  
பாடல் மறை, சூடல் மதி,
பண் - சாதாரி (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)
திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.
திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்க
Audio: https://www.youtube.com/watch?v=sKE5tlWTjIk
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார் வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.
| [1] |
நீரின் மலி புன்சடையர்; நீள் அரவு, கச்சை அது; நச்சு இலையது ஓர் கூரின் மலி சூலம் அது ஏந்தி; உடை கோவணமும், மானின் உரி-தோல்; காரின் மலி கொன்றை விரிதார் கடவுள்; காதல் செய்து மேய நகர்தான், பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம்; ஏத்த, வினை பற்று அழியுமே.
| [2] |
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு எலாம் மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்ப் பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம் ஆளுமவரே.
| [3] |
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான், பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான், மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே.
| [4] |
மருவ முழவு அதிர, மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க, வரை ஆர் பருவ மழை பண் கவர் செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்; வெருவ மதயானை உரி போர்த்து, உமையை அஞ்ச வரு வெள்விடையினான்; உருவம் எரி; கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா, வினைகளே
| [5] |
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர் பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல், தோற்றம் நிலை ஆம்- இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர், மிகவே.
| [6] |
பிறவி, பிணி, மூப்பினொடு நீங்கி, இமையோர் உலகு பேணல் உறுவார் துறவி எனும் உள்ளம் உடையார்கள், கொடி வீதி அழகு ஆய தொகு சீர் இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள், வினை ஏதும் இல ஆய், நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே.
| [7] |
நேசம் மிகு தோள் வலவன் ஆகி, இறைவன் மலையை நீக்கியிடலும், நீசன் விறல் வாட்டி, வரை உற்றது உணராத, நிரம்பா மதியினான், ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இல ஆய் நாசம் அற வேண்டுதலின், நண்ணல் எளிது ஆம், அமரர் விண்ணுலகமே.
| [8] |
தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின் ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம் பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.
| [9] |
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் கடுப்பொடி, உடல் கவசர், கத்து மொழி காதல் செய்திடாது, கமழ் சேர் மடைக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த, வினை பற்று அறுதலே.
| [10] |
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை, அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம், ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில் வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.
| [1] |
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத் துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர் வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.
| [2] |
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல் வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர் சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல் வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.
| [3] |
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்- தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்- பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.
| [4] |
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்- கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம், மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.
| [5] |
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.
| [6] |
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக, மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.
| [7] |
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.
| [8] |
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய், தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம், மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.
| [9] |
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால், வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.
| [10] |
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்- பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து
பண் - பழம்பஞ்சுரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=JEAsR66LDzw
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே? பாதி மாது உடன் ஆய பரமனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [1] |
வைதிகத்தின் வழி ஒழுகாத அக் கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே? மை திகழ்தரு மா மணிகண்டனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [2] |
மறை வழக்கம் இலாத மா பாவிகள் பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை முறிய, வாதுசெயத் திரு உள்ளமே? மறி உலாம் கையில் மா மழுவாளனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [3] |
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக் கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும் செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே? முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [4] |
அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே? வெந்த நீறு அது அணியும் விகிர்தனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [5] |
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே? காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [6] |
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம் கழல், வாதுசெயத் திரு உள்ளமே? தழல் இலங்கு திரு உருச் சைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [7] |
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [8] |
நீல மேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திரு உள்ளமே? மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் கோலம் மேனி அது ஆகிய குன்றமே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [9] |
அன்று முப்புரம் செற்ற அழக! நின் துன்று பொன்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெயத் திரு உள்ளமே? கன்று சாக்கியர் காணாத் தலைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
| [10] |
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கியவாளரே.
| [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.001  
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
பண் - கொல்லி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
மருள்நீக்கியார், தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார். மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் ஆதரவாக இருந்தார். வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டதில், தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்றார். திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்து தொல்லைகள் நீங்கும்
Audio: https://www.youtube.com/watch?v=MKE6sESuM58
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [1] |
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும்! என்னீர்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [2] |
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [3] |
முன்னம், அடியேன் அறியாமையினால்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப்,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ,
தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்?
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [4] |
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [5] |
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [6] |
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [7] |
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [8] |
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர்
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [9] |
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.002  
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
பண் - காந்தாரம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும், வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும், அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும், திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [1] |
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள, நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும், காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும், ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [2] |
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும், முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும், சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை
| [3] |
மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை, குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும், இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும், தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [4] |
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும், வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும், நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.
| [5] |
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும், பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும், அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும், நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [6] |
கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும், விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும், மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும், உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [7] |
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும், பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [8] |
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற, வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [9] |
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும், யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.009  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி (பொது - திருஅங்கமாலை )
உடல் உறுப்புகள் நலம் பெற ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து, தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!
| [1] |
கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை, எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ!
| [2] |
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ!
| [3] |
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை, வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!
| [4] |
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து, பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்!
| [5] |
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை, மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்!
| [6] |
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று, பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!
| [7] |
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து. பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?
| [8] |
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?
| [9] |
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது, குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?
| [10] |
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு, சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ?
| [11] |
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும் தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்!
| [12] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.011  
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
பண் - காந்தாரம் (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்க
Audio: https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ, கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், நல்-துணை ஆவது நமச்சிவாயவே!
| [1] |
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை; ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்; கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது; நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!
| [2] |
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்; பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!
| [3] |
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும், விடுக்கிற்பிரான்! என்று வினவுவோம் அல்லோம்; அடுக்கற் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!
| [4] |
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்; அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்; திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!
| [5] |
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்; குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
| [6] |
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும், ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும், நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
| [7] |
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது; சொல் அக விளக்கு அது சோதி உள்ளது பல் அக விளக்கு அது பலரும் காண்பது; நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
| [8] |
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்- தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே; அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
| [9] |
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன் பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ, நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.015  
பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம் (பாவநாசத் திருப்பதிகம் )
சேத்திரக்கோவை
Audio: https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4 Audio: https://www.sivasiva.org/audio/4.015 Patru Atrraar.mp3
பற்று அற்றார் சேர் பழம் பதியை, பாசூர் நிலாய பவளத்தை, சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்கு அரிய திரு உருவை, வெற்றியூரில் விரிசுடரை, விமலர்கோனை, திரை சூழ்ந்த ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.
| [1] |
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை, கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை, வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை, மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.
| [2] |
மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை, அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை, விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை, நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.
| [3] |
புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை, உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை, கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை, அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே.
| [4] |
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை, ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை, பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை, சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.
| [5] |
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை, கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை, பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.
| [6] |
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை, குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை, நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை, அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
| [7] |
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை, ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை, சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை, மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
| [8] |
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை, ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை, நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.
| [9] |
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை, வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை, பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை, வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.
| [10] |
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை, அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை, சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி, எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே.
| [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.018  
ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம் (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று திருநாவுக்கரசர் பெயரில் பல தர்மங்களை செய்து வந்தார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர். அப்பூதிஅடிகளைப் பற்றி கேள்வி பட்டு, அப்பூதியின் வீடு அடைந்தார். வந்தவர் திருநாவுக்கரசர் என்றவுடன், அப்பூதி வீடே மிகுந்த மகிழ்வுடன் அமுது தயார் செய்தார்கள். தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டி உயிர் துறந்தார். மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகளுக்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். மூத்த திருநாவுக் கரசை அழையும் என்று அப்பர் கூற, இப்போது அவன் இங்கு உதவான் என்று அப்பூதிகூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ஒன்றுகொலாம் என்ற திருப் பதிகம் பாடியருளினர்.
ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை; ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்; ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது; ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.
| [1] |
இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்; இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண், இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு, இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.
| [2] |
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன; மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை; மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்; மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.
| [3] |
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன; நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்; நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.
| [4] |
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்; அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன; அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை; அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.
| [5] |
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன; ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்; ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்; ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.
| [6] |
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன; ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்; ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.
| [7] |
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்; எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்; எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன; எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.
| [8] |
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன; ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை; ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை; ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.
| [9] |
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்; பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன; பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை; பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.082  
பார் கொண்டு மூடிக் கடல்
பண் - திருவிருத்தம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, இவர் எம்பெருமான் என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி அப்பரே என்று அழைக்க, நாவுக்கரசரும் அடியேன் என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் பார்கொண்டுமூடி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
நல்ல நண்பரகள் நட்பு கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=A32b1qIWuMw
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம் கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?
| [1] |
கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே!
| [2] |
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும் விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
| [3] |
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல் உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும் இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன் நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.
| [4] |
சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை! பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை, சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.
| [5] |
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய், அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம், சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர், அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
| [6] |
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர் சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம் தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே.
| [7] |
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து அடையும் உனை வந்து அடைந்தார், அமரர் அடி இணைக்கீழ்; நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள விடையன் தனிப் பதம் நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
| [8] |
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும் நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர் சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே- அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
| [9] |
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத் தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத் தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே- அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம் (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய், மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.
| [1] |
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும் சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு; உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.
| [2] |
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்; புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?
| [3] |
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர் மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.
| [4] |
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால், மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!
| [5] |
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்; உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால், திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்; தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!
| [6] |
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்! திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே! பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க் கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.
| [7] |
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!
| [8] |
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும் விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே! திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க் கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.
| [9] |
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர் இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.109  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
பண் - திருவிருத்தம் (திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். பொன்னார் திருவடிக்கு என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள
Audio: https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும் என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல் துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!
| [1] |
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய் காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார் தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின் பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!
| [2] |
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான் படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல் இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே!
| [3] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம்.
சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல்.
Audio: https://www.youtube.com/watch?v=X012Z-pSPW4
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே
| [1] |
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!
| [2] |
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!
| [3] |
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.
| [4] |
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான் நிலாவி இருப்பன், என் நாதனை; தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.
| [5] |
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் சிட்டர்பால் அணுகான், செறு காலனே.
| [6] |
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார், விருத்தனார், இளையார், விடம் உண்ட எம் அருத்தனார், அடியாரை அறிவரே.
| [7] |
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.
| [8] |
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.
| [9] |
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும், திரிந்தும், காண வல்லரோ- மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து- ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?
| [10] |
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், சதுரன், சிற்றம்பலவன், திருமலை அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!
| [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
பண் - திருக்குறுந்தொகை (திருநெல்வாயில் அரத்துறை )
இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தனது உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும், அப்பர் பிரானின் தோள்களில் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்த பின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள
Audio: https://www.youtube.com/watch?v=zCMa42N_hJg
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட உடல் உளானை, ஒப்பாரி இலாத எம் அடல் உளானை, அரத்துறை மேவிய சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [1] |
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை, விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.
| [2] |
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [3] |
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [4] |
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர் மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [5] |
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை, விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அதி ஒப்பானை, அரத்துறை மேவிய கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [6] |
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.
| [7] |
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர் மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அன் ஒப்பானை, அரத்துறை மேவிய தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.
| [8] |
காழியானை, கன விடை ஊரும் மெய் வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர் ஆழியான் பிரமற்கும் அரத்துறை ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.
| [9] |
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை, மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய அலை ஒப்பானை, அரத்துறை மேவிய நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
இந்த தலம் வீழிமிழலை தலத்திற்கு வடமேற்கில் உள்ள தலம். .பூந்தோட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கும்பகோணத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள தலம்.. தற்போது கருவேலி என்று அழைக்கப்படுகின்றது. தலத்து பெருமானை வழிபடும் அடியார்கள், மறுபடியும் கருப்பையினில் புகாத வண்ணம் இறைவன் காப்பதால் கருவிலி என்ற பெயர் வந்ததாகவும் நாளடைவில் கருவேலி என்று மருவியதாகவும் கூறுவார்கள். தலத்தின் பெயர் கருவிலி; திருக்கோயிலின் பெயர் கொட்டிட்டை; இரண்டையும் இணைத்து கருவிலிக் கொட்டிட்டை என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்று மட்டும், இந்த தலத்திற்கு உரிய தேவாரப் பதிகமாக நமக்கு கிடைத்துள்ளது.
சுகப்பிரசவம் இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=0TIw1JgVkQw
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப் பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர், கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக் கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!
| [1] |
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும் ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர், காலனார் வருதல் முன், கருவிலி, கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
| [2] |
பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர், மங்குமா நினையாதே, மலர்கொடு, கங்கை சேர் சடையான்தன் கருவிலி, கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
| [3] |
வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!- வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்- காடனார் உறைகின்ற கருவிலி, கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
| [4] |
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்! பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக் கையினான், உறைகின்ற கருவிலி, கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!
| [5] |
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர், தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி, காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி, கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!
| [6] |
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா ஆறு செயப் புரியாது, நீர், கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி, கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!
| [7] |
பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர- கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி, குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!
| [8] |
நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும் எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ- கம்பனார் உறைகின்ற கருவிலி, கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!
| [9] |
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன், கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி, கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.005  
எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
சிவார்ச்சனை
Audio: https://www.youtube.com/watch?v=heBfq8uMYc0
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.
| [1] |
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
| [2] |
முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.
| [3] |
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
| [4] |
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.
| [5] |
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
| [6] |
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.
| [7] |
வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
| [8] |
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
| [9] |
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.014  
நினைந்து உருகும் அடியாரை நைய
பண் - திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
திருவடி தீகை்ஷக்கு நல்லூருக்கு வருக என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். நினைப்பதனை முடிக் கின்றோம் என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். நினைந்துருகும் அடியாரை என்று தொடங்கி இறை அருளை வியந்து நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான் என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.
இறைவனது திருவடி கான, தீக்க்ஷை பெற
Audio: https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்; சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்; செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்- இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [1] |
பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்; மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்; மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்; வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்; நல்-நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [2] |
தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த, பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்; பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்; சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்; நாடு ஏறு திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [3] |
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்; கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்; சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்; நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [4] |
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை, தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்; கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்; கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்; திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்; திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [5] |
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்; உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்; மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்; செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்; நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [6] |
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்; நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்; ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்; நாறு மலர்த்திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [7] |
குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்; குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்; உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்; நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்; நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள் நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [8] |
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்; நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்; கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட, குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்; நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [9] |
பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக் கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர் ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்; அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்; ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்; உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர், நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [10] |
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால் உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; இறைவா! என்று புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்; புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்; நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
| [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.032  
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
சிவார்ச்சனை
Audio: https://www.youtube.com/watch?v=c0llPrAgTrM
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி! அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி! அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி! மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி! வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி! செற்றவர் தம் புரம் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [1] |
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி! மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி! கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி! கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி! அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி! ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி! செங்கனகத் தனிக் குன்றே, சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [2] |
மலையான் மடந்தை மணாளா, போற்றி! மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி! நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி! நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி! இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி! ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி! சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [3] |
பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி! பூதப்படை உடையாய், போற்றி போற்றி! மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய், போற்றி! மறி ஏந்து கையானே, போற்றி போற்றி! உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி! உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி! சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [4] |
நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி! நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி! வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி! வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி! துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி! தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி! செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [5] |
சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி! சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி! பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி! புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி! அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி! செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [6] |
வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி! வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி! கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி! குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி! நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி! நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி! செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [7] |
உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி! உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி! வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி! வானவர் கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி! வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி! மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி! தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய், போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [8] |
பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி! புத்தேளிர் போற்றும் பொருளே, போற்றி! தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி! திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி! சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி! சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி! சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [9] |
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி! பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி! கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி! காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி! அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி! அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும், சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.055  
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
பண் - குறிஞ்சி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
சிவார்ச்சனை
Audio: https://www.youtube.com/watch?v=7qLrT5FepJ0
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [1] |
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [2] |
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [3] |
வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி!
வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [4] |
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [5] |
சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [6] |
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [7] |
இமையாது உயிராது இருந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [8] |
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [9] |
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [10] |
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.056  
பொறை உடைய பூமி, நீர்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
சிவார்ச்சனை
Audio: https://www.youtube.com/watch?v=pKyyHEruu5Y
பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [1] |
முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி!
ஆறு ஏறு சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [2] |
மாலை எழுந்த மதியே, போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய், போற்றி!
மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
காலை முளைத்த கதிரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [3] |
உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!
ஒள் எரி வீசும் பிரானே, போற்றி!
படரும் சடைமேல் மதியாய், போற்றி!
பல்கணக் கூத்தப்பிரானே, போற்றி!
சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி!
தோன்றி என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [4] |
மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய், போற்றி!
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி!
போகாது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி!
கை சேர் அனல் ஏந்தி ஆடீ, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [5] |
ஆறு ஏறு சென்னி முடியாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுது ஆய் நின்றாய், போற்றி!
நீறு ஏறும் மேனி உடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கூறு ஏறும் அம் கை மழுவா, போற்றி!
கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய், போற்றி!
காறு ஏறு கண்டம்-மிடற்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [6] |
அண்டம் ஏழ் அன்று கடந்தாய், போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய், போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய், போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே, போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [7] |
பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி!
பேரா நோய் பேர விடுப்பாய், போற்றி!
உருகி நினைவார் தம் உள்ளாய், போற்றி!
ஊனம் தவிர்க்கும் பிரானே, போற்றி!
அருகி மிளிர்கின்ற பொன்னே, போற்றி!
ஆரும் இகழப்படாதாய், போற்றி!
கருகிப் பொழிந்து ஓடும் நீரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [8] |
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [9] |
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.057  
பாட்டு ஆன நல்ல தொடையாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
சிவார்ச்சனை
Audio: https://www.youtube.com/watch?v=KrQ2A0SoGVc
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [1] |
அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!
ஆல நிழல் கீழ் அமர்ந்தாய், போற்றி!
சதுரா, சதுரக் குழையாய், போற்றி!
சாம்பர் மெய் பூசும் தலைவா, போற்றி!
எதிரா உலகம் அமைப்பாய், போற்றி!
என்றும் மீளா அருள் செய்வாய், போற்றி!
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [2] |
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [3] |
ஆட்சி உலகை உடையாய், போற்றி!
அடியார்க்கு அமுது எலாம் ஈவாய், போற்றி!
சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி!
சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மாட்சி பெரிதும் உடையாய், போற்றி!
மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி!
காட்சி பெரிதும் அரியாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [4] |
மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி!
மூவாத மேனி உடையாய், போற்றி!
என்(னி)னியாய், எந்தை பிரானே, போற்றி!
ஏழ் இன் இசையே உகப்பாய், போற்றி!
மன்னிய மங்கை மணாளா, போற்றி!
மந்திரமும் தந்திரமும் ஆனாய், போற்றி!
கன்னி ஆர் கங்கைத் தலைவா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [5] |
உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி!
உணர்வு என்னும் ஊர்வது உடையாய், போற்றி!
எரி ஆய தெய்வச் சுடரே, போற்றி!
ஏசும் மா முண்டி உடையாய், போற்றி!
அரியாய், அமரர்கட்கு எல்லாம், போற்றி!
அறிவே அடக்கம் உடையாய், போற்றி!
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [6] |
எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!
ஏறு அரிய ஏறும் குணத்தாய், போற்றி!
பண் மேலே பாவித்து இருந்தாய், போற்றி!
பண்ணொடி யாழ் வீணை பயின்றாய், போற்றி!
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய், போற்றி!
மேலார்கள் மேலார்கள் மேலாய், போற்றி!
கண் மேலும் கண் ஒன்று உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [7] |
முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி!
முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி!
துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி!
சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி!
அடியார் அடிமை அறிவாய், போற்றி!
அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி!
கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [8] |
போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி!
புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி!
ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி!
எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி!
நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி!
நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி!
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
| [9] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.070  
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி (பொது -க்ஷேத்திரக்கோவை )
திருக்ஷேத்திரக் கோவை
Audio: https://www.youtube.com/watch?v=fvw53cffuNU
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும், முல்லைப் புறவம் முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [1] |
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும், ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும் கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும், கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும், கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [2] |
இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம், இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை, கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [3] |
எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான் சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை, கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [4] |
கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும், நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும், நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம், கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [5] |
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களத்தும், பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும், கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [6] |
வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, வியலூர், ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை, ஆலங்காடும், அரதைப்பெரும்- பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண் காழி, கடல் நாகைக்காரோணத்தும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [7] |
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும், மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை, வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா, வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூரும், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [8] |
திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு(வ்), அண்டர் தொழும் அதிகை வீரட்டானம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும், கண்டியூர் வீரட்டம், கருகாவூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [9] |
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம், உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [10] |
புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும் நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்! கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணல் ஆமே.
| [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.001  
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம். (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்த போது சுந்தரருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த ஈசன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த ஓலையை சுந்தரர் கிழித்தெறிந்தார். முதியவர் வழக்கை திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்து சென்று வென்றார். அடிமை ஆன சுந்தரர் முதியவரின் வீட்டைக் காண்பிக்க சொல்ல, முதியவர் திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திற்கு கூட்டி சென்று மறைந்தார். முதியவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக எனப் பணித்தருளினார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.
குருவருள் பெறஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=g5cyWyIOPY8
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [1] |
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை, பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்; வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [2] |
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை; பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [3] |
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ! கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ! செடிஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [4] |
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்! ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா! தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [5] |
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ! எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்! மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [6] |
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்; வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்; தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [7] |
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்! தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர் ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [8] |
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா! தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே; செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [9] |
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி, சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.005  
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம் (திருஓணகாந்தன்தளி ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கி நெய்யும் பாலும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார்.
பொன் பெற
Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.
| [1] |
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்; உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
| [2] |
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
| [3] |
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
| [4] |
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே!
| [5] |
வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்- தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
| [6] |
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்; உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
| [7] |
வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால், கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
| [8] |
வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம் ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
| [9] |
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.020  
நீள நினைந்து அடியேன் உமை
பண் - நட்டராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
| [1] |
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
| [2] |
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .
| [3] |
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
| [4] |
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
| [5] |
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .
| [6] |
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
| [7] |
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
| [8] |
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
| [9] |
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.
| [1] |
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச் செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்; எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! .
| [2] |
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே! முத்தா! முக்கணனே! முதுகுன்றம் அமர்ந்தவனே! மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே, அத்தா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
| [3] |
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
| [4] |
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
| [5] |
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
| [6] |
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
| [7] |
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
| [8] |
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .
| [9] |
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.034  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [1] |
மிடுக்கு இலாதானை, வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்; என்று, கொடுக்கிலாதானை, பாரியே! என்று, கூறினும் கொடுப்பார் இலை; பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [2] |
காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை, பேணியே விருந்து ஓம்புமே! என்று பேசினும் கொடுப்பார் இலை; பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [3] |
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை, வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [4] |
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை, பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை; பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [5] |
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே! குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை; புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [6] |
நோயனை, தடந்தோளனே! என்று, நொய்ய மாந்தரை, விழுமிய தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்! என்று, சாற்றினும் கொடுப்பார் இலை; போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [7] |
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும், வள்ளலே! எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [8] |
கற்றிலாதானை, கற்று நல்லனே!, காமதேவனை ஒக்குமே , முற்றிலாதானை, முற்றனே!, என்று மொழியினும் கொடுப்பார் இலை; பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [9] |
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே! கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை; பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [10] |
செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன் சிறுவன், வன்தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர் அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.039  
தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவாரூர் )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
சிவனடியார்கள் ஆசி பெற
Audio: https://www.youtube.com/watch?v=F-qNMxHIme8 Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [1] |
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [2] |
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்; செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த, அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [3] |
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்; பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்; ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்; அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [4] |
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்; நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்; அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [5] |
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்; சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்; கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்; ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [6] |
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்; மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்; கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்; ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [7] |
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்; நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்; துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்; அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .
| [8] |
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்- காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்; மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்; புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்; அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [9] |
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்; சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்; முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்; அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [10] |
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்; தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்; என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன், அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .
| [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.046  
பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [1] |
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி புக்கு அங்கு இருந்தீர்; பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்; சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர் நீரே; காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [2] |
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி, பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப் பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்; பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்; வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால், வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர் காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [3] |
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக, வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்; துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச் சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே? வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக் கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [4] |
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து, வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்; தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே! கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்; பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக் கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!
| [5] |
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது, பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ? உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே; கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [6] |
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து, தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து, திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்; நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறை வீழிமிழலை தனில் நித்தல் காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [7] |
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்; வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு; ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்; அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம் அதனில்- தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்; தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்; காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .
| [8] |
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்; எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்; எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்! திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில், திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை, கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [9] |
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்; மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்; கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்! கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை உண்டேல், பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [10] |
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்? உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்! என்று அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .
| [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.047  
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் )
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ அனைத்து ஆலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும்
Audio: https://www.youtube.com/watch?v=3lVBB7jvhtw
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
| [1] |
கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்! குழகா! குற்றாலா! மங்குல்-திரிவாய்! வானோர் தலைவா! வாய்மூர் மணவாளா! சங்கக் குழை ஆர் செவியா! அழகா! அவியா அனல் ஏந்திக் கங்குல் புறங்காட்டு ஆடீ! அடியார் கவலை களையாயே!
| [2] |
நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே! மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே! மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே! இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!
| [3] |
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே! கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே! பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே! பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாசூர் அம்மானே!
| [4] |
மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே! அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே! கருகல் குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே! பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே!
| [5] |
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே! நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே! பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!
| [6] |
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்! வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே! ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே! ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.
| [7] |
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா! பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்; திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
| [8] |
புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா! பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே! வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ! கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!
| [9] |
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி, மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி- தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.049  
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,
பண் - பழம்பஞ்சுரம் (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை)
சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடு வராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ் வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திரு முருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, எற்றுக்கு இங்கிருந் தீர் என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார்.
களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=NwyJyYjDJkg
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி, திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [1] |
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [2] |
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம் ஒன்று அறியார், உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு, நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [3] |
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டனராய், சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [4] |
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம வேதம் ஓதீ! மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்; முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டி நகர்வாய், இயங்கவும் மிடுக்கு உடையராய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [5] |
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்; மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [6] |
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்; மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [7] |
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண் மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்; இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [8] |
சாந்தம் ஆக வெண் நீறு பூசி, வெண்பல்-தலை கலனா, வேய்ந்த வெண் பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய், ஏந்து பூண் முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே.
| [9] |
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப் பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச் சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.055  
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
பண் - தக்கேசி (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாட மழை பெய்தது. கூறியபடி மன்னனும் பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு அளித்தான். ஆனால், பெய்த மழை பெய்ததுதான். நில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. இடைவெளிவிட்டுக்கூட நிற்கவில்லை. பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த மேலும் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்துக்கு அளித்தால், பதிகம் பாடி மழையை நிறுத்தலாம் என்று மன்னனிடம் கூற….மன்னனும் ஒப்புக் கொள்ள… பதிகம் பாடி மழை நிற்க, அடுத்து பன்னிரண்டு வேலி நிலத்தை மன்னனிடமிருந்து பெறப்பட்டு இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார் சுந்தரர். இந்த வரலாற்றை சுந்தரர் அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே
மழை வேண்டல் பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=iosMgigd7YU
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக, வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன், எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
| [1] |
வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்; உய்யக் கொள்க, மற்று எங்களை! என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
| [2] |
ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து, கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு, பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .
| [3] |
நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும், கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள் குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்- பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .
| [4] |
கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி, நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
| [5] |
இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள் மயக்கம் இல் புலி, வானரம், நாகம், வசுக்கள், வானவர், தானவர், எல்லாம் அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார்; பெறும் ஆர் அருள் கண்டு, திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
| [6] |
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து, பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட, ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
| [7] |
மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல் காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக, மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
| [8] |
அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து, எறியும் மா கடல் இலங்கையர் கோனைத் துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு, குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு, கோல வாளொடு நாள் அது கொடுத்த செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
| [9] |
கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை, செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை, உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.061  
ஆலம் தான் உகந்து அமுது
பண் - தக்கேசி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் ஆலந்தானுகந்து என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார்.
கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகங்கள் - இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு
Audio: https://www.youtube.com/watch?v=w8tRfonamJU
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [1] |
உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை, பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [2] |
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [3] |
குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று உதைத்த கொடுந்தொழிலானை, வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை, வாள் அரா மதி சேர் சடையானை, கெண்டை அம் தடங்கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [4] |
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை, அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை, எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [5] |
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [6] |
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை, நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை, எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [7] |
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை, பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [8] |
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை, நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனை, பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [9] |
எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல் உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [10] |
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, பெரிய எம்பெருமான் என்று எப்போதும் கற்றவர் பரவப்படுவானை, காணக் கண் அடியேன் பெற்றது என்று கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன் நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .
| [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.087  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
பண் - சீகாமரம் (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், மாட மாளிகை எனறு திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுதார்.
நிறைய பண வரவு பொன் கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=L0HnSKSQwqk
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.
| [1] |
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர், நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று, ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.
| [2] |
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர், திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில் அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.
| [3] |
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள் பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர், தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.
| [4] |
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர, பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர், மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே.
| [5] |
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப் பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர், மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்; ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே.
| [6] |
மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர், துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று, அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே.
| [7] |
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல், பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர், வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ- அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.
| [8] |
குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர, பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர், இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
| [9] |
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில், பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர், வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன் செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.090  
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருமுதுகுன்றத்தில் வழங்கிய பொன்னை, திருவாரூரில் தரும் படி வேண்டிக் கொண்டார். அப்பொழுது இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. மாற்றறிதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார். தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கிக் கோயிலினுட் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தவராய் மடித்தாடும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
ஒரு ஊரில் அல்லது நாட்டில் உல்ல செல்வம் அடுத்த நாட்டில் கிடைக்க, செல்வத்தை ஒர் இடத்தி இருந்து பத்திரமாக அடுத்த இடத்திற்கு கொண்டு போக
Audio: https://www.youtube.com/watch?v=oW7MPaskWVM
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும் தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்; கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும் பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [1] |
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே, பிரியாது உள்கி, சீர் ஆர்ந்த அன்பராய், சென்று, முன் அடி வீழும் திருவினாரை, ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான், பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [2] |
நரியார் தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து, நாளும் உள்கி, பிரியாத அன்பராய், சென்று, முன் அடி வீழும் சிந்தையாரை, தரியாது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான், பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [3] |
கருமை ஆர் தருமனார் தமர் நம்மைக் கட்டிய கட்டு அறுப்பிப்பானை; அருமை ஆம் தன் உலகம் தருவானை; மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும், பெருமை ஆர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [4] |
கருமானின் உரி ஆடை, செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை,- உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் தருவானை, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான், பெருமானார்,-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [5] |
உய்த்து ஆடித் திரியாதே, உள்ளமே! ஒழிகண்டாய், ஊன் கண் ஓட்டம்! எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண்; நெஞ்சமே! நம்மை நாளும்- பைத்து ஆடும் அரவினன், படர்சடையன், பரஞ்சோதி,-பாவம் தீர்க்கும் பித்தாடி, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [6] |
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்- பட்டானை, பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக விட்டானை, மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்- தொட்டானை, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [7] |
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே, கருதுமா கருத கிற்றார்க்கு, எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண்; உள்ளமே! நம்மை நாளும்- செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது-தடுத்து ஆட்கொள்வான், பெற்றேறி,(ப்) புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [8] |
நாடு உடைய நாதன் பால் நன்று என்றும் செய், மனமே! நம்மை நாளும், தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்; மோடு உடைய சமணர்க்கும், முடை உடைய சாக்கியர்க்கும், மூடம் வைத்த, பீடு உடைய-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [9] |
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன்; பைங்கண் ஏற்றன்; ஊர் ஊரன்; தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்; ஆரூரன் தம்பிரான்; ஆரூரன்; மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!
| [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.095  
மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்
Audio: https://www.youtube.com/watch?v=57PlwAi1hCc
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே, மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி, ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
| [1] |
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்; குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்; எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்; மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!
| [2] |
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல, என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!
| [3] |
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்; இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா: அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால், வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!
| [4] |
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்? எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு? சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!
| [5] |
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப் புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே! தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது, மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!
| [6] |
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு? மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி, காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!
| [7] |
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,- இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்; பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்; வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!
| [8] |
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்; காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்? நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
| [9] |
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்? பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே; இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்; வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!
| [10] |
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி, ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன், பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்; வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!
| [11] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) )
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்
Audio: http://www.sivasiva.org/thiruvaasagam/12 Thiruchalal Thiruvasagam.mp3
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம், பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை? ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!
| [1] |
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்; துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ! மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா, தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!
| [2] |
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ! தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!
| [3] |
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை, வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ! நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால், சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!
| [4] |
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம் தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ! தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!
| [5] |
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய், நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ! நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம் சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!
| [6] |
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!
| [7] |
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!
| [8] |
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ! பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர் விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!
| [9] |
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ! ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள், வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!
| [10] |
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து, கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ! கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!
| [11] |
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி; ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ! ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும், வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!
| [12] |
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும், கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!
| [13] |
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன், தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ! தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம், ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!
| [14] |
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே, இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ! தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!
| [15] |
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை, அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ! அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும், கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!
| [16] |
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ! நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா, எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!
| [17] |
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி, நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ! நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ் அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!
| [18] |
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்; எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ! எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும், தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!
| [19] |
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும் இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ! அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல், திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!
| [20] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
This page was last modified on Fri, 06 Jan 2023 06:54:04 +0000 |
|