சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திரு அருணகிரிநாதரின் - சேவல் விருத்தம்

காப்பு - கொந்தார் குழல்

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம் பெறுபொன்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டாகிய
கய மாமுகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்
மாமேருவில் எழுதிப்
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு
பணி சிவலிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.

சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே

1. உலகிலநுதின

உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பரகதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள் மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடின முற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து
சிறகைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதை
குறவரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொடு அடியுதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே.

2. எரியனையவியன்

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்க்
கரத்தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடுகிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலி எனெனச் சிறிய
சரணஅழகொடு புரியும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவல் திருத்துவசமே.

3. கரிமுரட்டடிவலை

கரிமுரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை யிறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப் பொழுதில் நட்புடன் வரக்
குரலொலித்து அடியர் இடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற்கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுறைத் ததமிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவருமெய்ப் பொடிதரித்
தவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத் தவதரித்த அவமுதத் தினமணிச்
சிவிகை பெற்றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரை செய்விற் பனனிகற்
சேவல் திருத்துவசமே.

4. அச்சப்படக்குரல்

அச்சப் படக்குரல் முழக்கிப் பகட்டியல்
அறிக்கொட்டமிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுக்கடி
அறுக் குழைகளைக் கொத் தியே
பிச்சுச் சினத்து தறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச் சித்திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத்தயில்விடும்
புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவல் திருத்துவசமே.

5. தானா யிடும்பு

தானா யிடும்பு செயு மோகினி இடாகினி
தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினா லுதறித்
தடிந்து சந்தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவு சிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டி யெட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவன் நற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகள்
ஏனான மைக்கடலின் மீனானவற்கு இனியன்
சேவல் திருத்துவசமே.

6. பங்கமா கியவிட

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்துச் சிவத் தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாயன் புற்றுவன் புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னும்
நரசிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவல் திருத்துவசமே.

7. வீறான காரிகதி

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்கள் ஏகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
பேசி யுச்சாடனத்தாற்
பிடர் பிடித் துக் கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தஞ் சிலேற் பனங்குட்ட முதலான
வல்ல பிணிகளைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கும் முருகன்
சிலைகள் உருவிடஅயிலை விடுகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

8. வந்து ஆர்ப்பரிக்கும்

வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்து அன்புறக் கூவுமாம்
முந்தாகமப் பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகானகத்து எயினர் பண்டோடு அயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க்கு இரங்கு அறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன் முடிகுற்றி
சேவல் திருத்துவசமே.

9. உருவாய் எவர்

உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட் பொருளதாய்
வரு மீசனைக் களப முகன் ஆதரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குரு மாமணித்திரள் கொழிக்கும் புனற்கடம்
குன்று தோறாடல் பழனம்
குழவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங்
குன்றிடம் திருவேரகம்
திரை ஆழிமுத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித் திடுஞ் செந்தினகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவல் திருத்துவசமே.

10. மகரசல நிதி

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடுகிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு படபட படென
மதகரிகள் உயிர்சிதறவே
ககன முதல் அண்டங்கள் கண்ட துண்டப் படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து
சிறகைக் கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகை யசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவ நிதை துணைவன் எனது இதய நிலையோன்
திகுட திகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

11. பூவிலியன் வாசவன்

பூவிலியன் வாசவன் முராரி முநிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற
அநு போக பதினாலு உலகமும்
தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தான தவநூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரல் பயிலுமாம்
காவுகனி வாழை புளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடனக்
காரண மெய்ஞ்ஞான பரி சீரண வராசனக்
கனகமயில் வாகனன் அடல்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவல் திருத்துவசமே.
Back to Top
This page was last modified on Thu, 22 Feb 2024 12:04:34 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

saeval virutham