![]() |
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
திருமூலர் திருமந்திரம்
1 10.000 - திருமூலர் விநாயகர் வணக்கம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
[ 1]
2 10.100 - திருமூலர் பாயிரம்
கடவுள் வாழ்த்து
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
[ 1]
3 10.100 - திருமூலர் பாயிரம்
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
[ 24]
4 10.100 - திருமூலர் பாயிரம்
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.
[ 29]
5 10.100 - திருமூலர் பாயிரம்
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
[ 33]
6 10.100 - திருமூலர் பாயிரம்
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
[ 7]
7 10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
[ 1]
8 10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
[ 32]
9 10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
[ 4]
10 10.102 - திருமூலர் முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
[ 4]
11 10.104 - திருமூலர் முதல் தந்திரம் - 4. உபதேசம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
[ 27]
12 10.104 - திருமூலர் முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
[ 3]
13 10.106 - திருமூலர் முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
[ 6]
14 10.107 - திருமூலர் முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.
[ 5]
15 10.108 - திருமூலர் முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.
[ 4]
16 10.119 - திருமூலர் முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
[ 2]
17 10.121 - திருமூலர் முதல் தந்திரம் - 21. அன்புடைமை
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
[ 1]
18 10.301 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 2,
[ 4]
19 10.304 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே. 5,
[ 6]
20 10.305 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
[ 3]
21 10.306 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.
[ 7]
22 10.402 - திருமூலர் நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.
[ 10]
23 10.402 - திருமூலர் நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.
[ 3]
24 10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.
[ 10]
25 10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.
[ 2]
26 10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.
[ 29]
27 10.406 - திருமூலர் நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.
[ 29]
28 10.413 - திருமூலர் நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.
[ 2]
29 10.505 - திருமூலர் ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
[ 3]
30 10.601 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.
[ 9]
31 10.602 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே. 3,
[ 15]
32 10.610 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.
[ 1]
33 10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
[ 1]
34 10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
[ 6]
35 10.713 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.
[ 1]
36 10.732 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.
[ 3]
37 10.738 - திருமூலர் ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
[ 3]
38 10.816 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.
[ 1]
39 10.820 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
[ 3]
40 10.821 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
[ 2]
41 10.903 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
[ 2]
42 10.905 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.
[ 2]
43 10.907 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அ தற்றால்
அவமதி தீரும அறும்பிறப் பன்றே. 8,
[ 3]
44 10.908 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
[ 2]
45 10.909 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.
[ 2]
46 10.924 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.
[ 18]
47 10.928 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
[ 6]
48 10.929 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.
[ 20]
49 10.929 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.
[ 21]
This page was last modified on Sun, 15 Jan 2023 06:22:55 +0000