sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண் நிலாவிய மொழி உமை காந்தாரம் (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=fYnixUyPNIE |
3.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு பயில் வீடு, முடை சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3vQ-3kBn0Xc |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.082  
பண் நிலாவிய மொழி உமை
பண் - காந்தாரம் (திருத்தலம் திருத்தேவூர் ; (திருத்தலம் அருள்தரு தேன்மொழியம்மை உடனுறை அருள்மிகு தேவகுருநாதர் திருவடிகள் போற்றி )
பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான், விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர் அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. | [1] |
ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு ஏறு சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த் தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர் ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. | [2] |
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. | [3] |
முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும் முறை முறை திரியும் பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன் அடியார்கள் சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் அத்தன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. | [4] |
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து அன்பால் கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித் தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர் ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. | [5] |
பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான், திங்கள் சூடிய தீ நிறக் கடவுள், தென் தேவூர் அங்கணன் தனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. | [6] |
வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத் தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. | [7] |
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன் நெரிந்து வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான் தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. | [8] |
முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர் காணா எந்தை, திண் திறல் இருங்களிறு உரித்த எம்பெருமான், செந்து இனத்து இசை அறுபதம் முரல் திருத் தேவூர் அந்தி வண்ணனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. | [9] |
பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர் ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. | [10] |
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன், நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன், எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.074  
காடு பயில் வீடு, முடை
பண் - சாதாரி (திருத்தலம் திருத்தேவூர் ; (திருத்தலம் அருள்தரு தேன்மொழியம்மை உடனுறை அருள்மிகு தேவகுருநாதர் திருவடிகள் போற்றி )
காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல், தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்- நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர் சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே. | [1] |
கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி, கொக்கு இறகொடும், வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன் ஊர் வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே. | [2] |
பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை ஆளும் இறைவன், எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த இடம் ஆம் விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி, விரை ஆர் செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே. | [3] |
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர் ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்- வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும் தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே. | [4] |
கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல் ஆடல் புரிவோன்; ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர் தலைவன்; ஊர் வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி, வார் தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே. | [5] |
ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள் தான், சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்; ஊர் வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச் சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர் அதுவே. | [6] |
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று நகைசெய் என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப நகர்தான்- முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக் குருளைகள் சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர் அதுவே. | [7] |
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரிய, பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம் போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம், சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே. | [8] |
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி வண்ணம் மலர்மேல் நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம் கொள் பதிதான்- வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை, இன்மொழியினார் திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே. | [9] |
பொச்சம் அமர் பிச்சை பயில் அச் சமணும், எச்சம் அறு போதியரும், ஆம் மொச்சை பயில் இச்சை கடி பிச்சன், மிகு நச்சு அரவன், மொச்ச நகர்தான்- மைச் சில் முகில் வைச்ச பொழில்... | [10] |
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர் அதன்மேல், பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய் சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை இலரே. | [11] |