sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   1 th/nd Thirumurai (பழந்தக்கராகம்   Location: சீர்காழி God: தோணியப்பர் Goddess: திருநிலைநாயகியம்மை) சீர்காழி ; அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு தோணியப்பர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=2yPMSDXb4nE  
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!


[ 1]


எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!


[ 2]


பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்
கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!


[ 3]


காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!


[ 4]


பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!
தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!


[ 5]


Go to top
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!


[ 6]


முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!


[ 7]


பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!


[ 8]


நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!


[ 9]


சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்
முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்
பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!


[ 10]


Go to top
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: சீர்காழி
1.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண் தரங்கப் புனல் கமல
Tune - பழந்தக்கராகம்   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
3.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சங்கு அமரும் முன்கை மட
Tune - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
3.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,
Tune - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php