உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ,
|
[ 1]
|
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப் பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும் மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.
|
[ 2]
|
அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின் நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும் எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.
|
[ 3]
|
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி இலகு தண்தளி ராக எழுந்ததோர் உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
|
[ 4]
|
மேலே செல் |
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர் கான வீணையின் ஓசையும் காரெதிர் தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர் வான துந்துபி யார்ப்பும் மருங்கெலாம்.
|
[ 5]
|
பனிவி சும்பி லமரர் பணிந்துசூழ் அனித கோடி அணிமுடி மாலையும் புனித கற்பகப் பொன்னரி மாலையும் முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.
|
[ 6]
|
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ கோடி கோடி குறட்சிறு பூதங்கள் பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
|
[ 7]
|
நாய கன்கழல் சேவிக்க நான்முகன் மேய காலம் அலாமையின் மீண்டவன் தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன் றாய அன்னமும் காணா தயர்க்குமால்.
|
[ 8]
|
மேலே செல் |
காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன் காலம்பார்த் திருந்ததும் அறியான் சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு மீதெழு பண்டைச் செழுஞ்சுடர் இன்று வெண்சுட ரானதென் றதன் கீழ் ஆதிஏ னமதாய் இடக்கலுற் றானென் றதனைவந் தணைதருங் கலுழன்.
|
[ 9]
|
அரம்பைய ராடல் முழவுடன் மருங்கின் அருவிகள் எதிரெதிர் முழங்க வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ மதுமல ரிருகையும் ஏந்தி நிரந்தரம் மிடைந்த விமானசோ பான நீடுயர் வழியினால் ஏறிப் புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு.
|
[ 10]
|
வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும் காதலால் மிடைந்த முதற்பெருந் தடையாம் கதிர்மணிக் கோபுரத் துள்ளான் பூதவே தாளப் பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவில்நின் றாடும் நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தியெம் பெருமான்.
|
[ 11]
|
நெற்றியிற் கண்ணர் நாற்பெருந் தோளர் நீறணி மேனியர் அனேகர் பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன்னருள் பெறுவார் மற்றவர்க் கெல்லாந் தலைமையாம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினாற் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான்.
|
[ 12]
|
மேலே செல் |
கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும் அளப்பரும் பெருமையி னாலும் மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும் வென்றிவெண் குடைஅந பாயன் செய்யகோல் அபயன் திருமனத் தோங்குந் திருக்கயி லாயநீள் சிலம்பு.
|
[ 13]
|
அன்ன தன்திருத் தாழ்வரை யின்னிடத்து இன்ன தன்மையன் என்றறி யாச்சிவன் தன்னை யேயுணர்ந் தார்வம் தழைக்கின்றான் உன்ன ருஞ்சீர் உபமன் னியமுனி.
|
[ 14]
|
யாத வன்துவ ரைக்கிறை யாகிய மாத வன்முடி மேலடி வைத்தவன் பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு ஆதி யந்தம் இலாமை யடைந்தவன்.
|
[ 15]
|
அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் பத்த ராய முனிவர்பல் லாயிரர் சுத்த யோகிகள் சூழ இருந்துழி.
|
[ 16]
|
மேலே செல் |
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத் துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம் இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
|
[ 17]
|
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள் சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன் எந்தை யார்அரு ளால்அணை வான்என.
|
[ 18]
|
கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.
|
[ 19]
|
சம்பு வின்அடித் தாமரைப் போதலால் எம்பி ரான்இறைஞ் சாயிஃ தென்னெனத் தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன் நம்பி யாரூரன் நாம்தொழுந் தன்மையான்.
|
[ 20]
|
மேலே செல் |
என்று கூற இறைஞ்சி இயம்புவார் வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம் நன்று கேட்க விரும்பு நசையினோம் இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.
|
[ 21]
|
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும் அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
|
[ 22]
|
அன்ன வன்பெயர் ஆலால சுந்தரன் முன்னம் ஆங்கொரு நாள்முதல் வன்தனக்கு இன்ன வாமெனு நாள்மலர் கொய்திடத் துன்னி னான்நந் தனவனச் சூழலில்.
|
[ 23]
|
அங்கு முன்னெமை ஆளுடை நாயகி கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத் திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார் பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
|
[ 24]
|
மேலே செல் |
அந்த மில்சீர் அனிந்திதை ஆய்குழல் கந்த மாலைக் கமலினி என்பவர் கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி வந்து வானவர் ஈசர் அருளென.
|
[ 25]
|
மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத் தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப் போது வாரவர் மேல்மனம் போக்கிடக் காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார்.
|
[ 26]
|
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர் என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர் அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின்.
|
[ 27]
|
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன் காதல் இன்பம் கலந்தணை வாயென.
|
[ 28]
|
மேலே செல் |
கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான் செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன் மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐய னேதடுத் தாண்டருள் செய்என.
|
[ 29]
|
அங்க ணாளன் அதற்கருள் செய்தபின் நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.
|
[ 30]
|
அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர் பந்த மானுடப் பாற்படு தென்றிசை இந்த வான்றிசை எட்டினும் மேற்பட வந்த புண்ணியம் யாதென மாதவன்.
|
[ 31]
|
பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம் அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.
|
[ 32]
|
மேலே செல் |
அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை மெய்த்த வக்கொடி காண விருப்புடன் நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.
|
[ 33]
|
பூதம் யாவையின் உள்ளலர் போதென வேத மூலம் வெளிப்படு மேதினிக் காதல் மங்கை இதய கமலமாம் மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.
|
[ 34]
|
எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள் தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக் கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று உம்பர் போற்றும் பதியும் உடையது.
|
[ 35]
|
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து பொங்கு நீடருள் எய்திய பொற்பது கங்கை வேணி மலரக் கனல்மலர் செங்கை யாளர்ஐ யாறுந் திகழ்வது.
|
[ 36]
|
மேலே செல் |
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஈசர் தோணி புரத்துடன் எங்கணும் பூச னைக்குப் பொருந்தும் இடம்பல பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.
|
[ 37]
|
என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை அன்று சொன்ன படியால் அடியவர் துன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.
|
[ 38]
|
மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம் புற்றி டத்தெம் புராணர் அருளினால் சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப் பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்.
|
[ 39]
|
அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
|
[ 40]
|
மேலே செல் |
உலகம் உய்யவும் சைவம்நின் றோங்கவும் அலகில் சீர்நம்பி ஆருரர் பாடிய நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.
|
[ 41]
|
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுட் கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில் சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்.
|
[ 42]
|
ஆதிமா தவமுனி அகத்தி யன்தரு பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி மாதர்மண் மடந்தைபொன் மார்பில் தாழ்ந்ததோர் ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
|
[ 43]
|
சையமால் வரைபயில் தலைமை சான்றது செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும் உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது.
|
[ 44]
|
மேலே செல் |
மாலின்உந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ் சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால் கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற் போலும்நான் முகனையும் பொன்னி மாநதி.
|
[ 45]
|
திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியில் பொங்குவெண் டலைநுரை பொருது போதலால் எங்கள்நா யகன்முடி மிசைநின் றேயிழி கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
|
[ 46]
|
வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால் எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
|
[ 47]
|
வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.
|
[ 48]
|
மேலே செல் |
வாச நீர்குடை மங்கையர் கொங்கையில் பூசு குங்கும மும்புனை சாந்தமும் வீசு தெண்டிரை மீதிழித் தோடுநீர் தேசு டைத்தெனி னும்தெளி வில்லதே.
|
[ 49]
|
மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு பூவி ரித்த புதுமதுப் பொங்கிட வாவி யிற்பொலி நாடு வளந்தரக் காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.
|
[ 50]
|
ஒண்து றைத்தலை மாமத கூடுபோய் மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர் கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய் அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
|
[ 51]
|
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும் ஓதை யார்செய் உழுநர் ஒழுக்கமும் காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே.
|
[ 52]
|
மேலே செல் |
உழுத சால்மிக வூறித் தெளிந்தசே றிழுது செய்யினுள் இந்திரத் தெய்வதந் தொழுது நாறு நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.
|
[ 53]
|
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக் கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள் தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார் வண்டலையும் குழலசைய மடநடையின் வரம்பணைவார்.
|
[ 54]
|
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறைவண்டை அங்கைமலர் களைக்கொடுகைத் தயல்வண்டும் வரவழைப்பார் திங்கணுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப் பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.
|
[ 55]
|
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச் சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம் அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன வரும்பல்லா யிரங்கடைசி மடந்தையர்கள் வயலெல்லாம்.
|
[ 56]
|
மேலே செல் |
கயல்பாய்பைந் தடநந்தூன் கழிந்தபெருங் கருங்குழிசி வியல்வாய்வெள் வளைத்தரள மலர்வேரி உலைப்பெய்தங் கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும் வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.
|
[ 57]
|
காடெல்லாங் கழைக்கரும்பு காவெல்லாங் குழைக்கரும்பு மாடெல்லாங் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாங் கடலன்ன நாடெல்லாம் நீர்நாடு தனையொவ்வா நலமெல்லாம்.
|
[ 58]
|
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும் வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
|
[ 59]
|
அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில் துன்னும் மேதி படியத் துதைந்தெழும் கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன மன்னு வான்மிசை வானவில் போலுமால்.
|
[ 60]
|
மேலே செல் |
காவி னிற்பயி லுங்களி வண்டினம் வாவி யிற்படிந் துண்ணும் மலர்மது மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல் தாவி அப்பொழி லிற்கனி சாடுமால்.
|
[ 61]
|
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்த வாகிச் சூல்முதிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கன்பர் ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்க ளெல்லாம்.
|
[ 62]
|
பத்தியின் பால ராகிப் பரமனுக் காளா மன்பர் தத்தமிற் கூடி னார்கள் தலையினால் வணங்கு மாபோல் மொய்த்தநீள் பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம்.
|
[ 63]
|
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார் சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார் விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.
|
[ 64]
|
மேலே செல் |
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் காலிரும் பகடு போக்குங் கரும்பெரும் பாண்டில் ஈட்டம் ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல் மேல்வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்க தன்றே.
|
[ 65]
|
வைதெரிந் தகற்றி யாற்றி மழைப்பெயல் மானத் தூற்றிச் செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக் கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற் குன்றால் மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.
|
[ 66]
|
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண் டறங்கள் பேணிப் பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்.
|
[ 67]
|
கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர் சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப் பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின் வரும்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவு மெங்கும். ,
|
[ 68]
|
மேலே செல் |
சூதபா டலங்கள் எங்குஞ் சூழ்வழை ஞாழல் எங்குஞ் சாதிமா லதிகள் எங்குந் தண்டளிர் நறவம் எங்கும் மாதவி சரளம் எங்கும் வகுளசண் பகங்கள் எங்கும் போதவிழ் கைதை எங்கும் பூகபுன் னாகம் எங்கும்.
|
[ 69]
|
மங்கல வினைகள் எங்கும் மணஞ்செய்கம் பலைகள் எங்கும் பங்கய வதனம் எங்கும பண்களின் மழலை எங்கும் பொங்கொளிக் கலன்கள் எங்கும் புதுமலர்ப் பந்தர் எங்குஞ் செங்கயல் பழனம் எங்குந் திருமகள் உறையுள் எங்கும்.
|
[ 70]
|
மேகமுங் களிறு மெங்கும் வேதமுங் கிடையு மெங்கும் யாகமுஞ் சடங்கு மெங்கும் இன்பமும் மகிழ்வு மெங்கும் யோகமுந் தவமு மெங்கும் ஊசலு மறுகு மெங்கும் போகமும் பொலிவு மெங்கும் புண்ணிய முனிவ ரெங்கும்.
|
[ 71]
|
பண்டரு விபஞ்சி எங்கும் பாதசெம் பஞ்சி எங்கும் வண்டறை குழல்கள் எங்கும் வளரிசைக் குழல்கள் எங்கும் தொண்டர்த மிருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை யெங்கும் தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவு மெங்கும்.
|
[ 72]
|
மேலே செல் |
மாடுபோ தகங்கள் எங்கும் வண்டுபோ தகங்கள் எங்கும் பாடுமம் மனைகள் எங்கும் பயிலுமம் மனைகள் எங்கும் நீடுகே தனங்கள் எங்கும் நிதிநிகே தனங்கள் எங்குந் தோடுசூழ் மாலை எங்குந் துணைவர்சூழ் மாலை எங்கும்.
|
[ 73]
|
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும் ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்.
|
[ 74]
|
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநா டென்றும் பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிது காக்குங் கொற்றவன் அநபா யன்பொற் குடைநிழற் குளிர்வ தென்றால் மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப லாமோ.
|
[ 75]
|
சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது மன்னு மாமல ராள்வழி பட்டது வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச் சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.
|
[ 76]
|
மேலே செல் |
வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் மணிமுழ வோசையும் கீத வோசையு மாய்க்கிளர் வுற்றவே.
|
[ 77]
|
பல்லி யங்கள் பரந்த ஒலியுடன் செல்வ வீதிச் செழுமணித் தேரொலி மல்லல் யானை ஒலியுடன் மாவொலி எல்லை இன்றி யெழுந்துள எங்கணும்.
|
[ 78]
|
மாட மாளிகை சூளிகை மண்டபம் கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள் நீடு சாளர நீடரங் கெங்கணும் ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன.
|
[ 79]
|
அங்கு ரைக்கென் னளவப் பதியிலார் தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின் பங்கி னாள்திருச் சேடி பரவையாம் மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை.
|
[ 80]
|
மேலே செல் |
படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய் நடந்த செந்தா மரையடி நாறுமால்.
|
[ 81]
|
செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங் குங்கு மத்தின் குழம்பை அவர்குழல் பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துடன் அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.
|
[ 82]
|
உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந் தெள்ளும் ஓசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
|
[ 83]
|
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள் வளத்தொ டும்பல வாறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
|
[ 84]
|
மேலே செல் |
ஆர ணங்களே அல்ல மறுகிடை வார ணங்களும் மாறி முழங்குமால் சீர ணங்கிய தேவர்க ளேயலால் தோர ணங்களில் தாமமுஞ் சூழுமால்.
|
[ 85]
|
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார் சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொல்நகர்.
|
[ 86]
|
நிலம கட்கழ கார்திரு நீள்நுதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.
|
[ 87]
|
அன்ன தொல்நக ருக்கர சாயினான் துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான் மன்னு சீர்அந பாயன் வழிமுதல் மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.
|
[ 88]
|
மேலே செல் |
மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங் கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலான் விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள் எண்ணி லாதன மாண இயற்றினான்.
|
[ 89]
|
கொற்ற வாழி குவலயஞ் சூழ்ந்திடச் சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப் பெற்ற நீதியுந் தன்பெயர் ஆக்கினான்.
|
[ 90]
|
பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான் துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.
|
[ 91]
|
அறம்பொரு ளின்ப மான அறநெறி வழாமற் புல்லி மறங்கடிந் தரசர் போற்ற வையகங் காக்கும் நாளில் சிறந்தநல் தவத்தால் தேவி திருமணி வயிற்றில் மைந்தன் பிறந்தனன் உலகம் போற்றப் பேரரிக் குருளை அன்னான்.
|
[ 92]
|
மேலே செல் |
தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ் சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதிக் கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப் பவமுயன் றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.
|
[ 93]
|
அளவில்தொல் கலைகள் முற்றி அரும்பெறல் தந்தை மிக்க உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி இளவர சென்னுந் தன்மை எய்துதற் கணிய னாகி வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்.
|
[ 94]
|
திங்கள்வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்று மங்குல்தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக் கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமங் குலவு தோளான் பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
|
[ 95]
|
பரசுவந் தியர்முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர் விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை ஒருபால் மிக்க முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி அரசிளங் குமரன் போதும் அணிமணி மாட வீதி.
|
[ 96]
|
மேலே செல் |
தனிப்பெருந் தருமம் தானோர் தயாவின்றித் தானை மன்னன் பனிப்பில்சிந் தையினில் உண்மைப் பான்மைசோ தித்தால் என்ன மனித்தர் தன் வரவு காணா வண்ணமோர் வண்ணம் நல்ஆன் புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகி னூடே.
|
[ 97]
|
அம்புனிற் றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச் செம்பொனின் தேர்க்கால் மீது விசையினாற் செல்லப் பட்டங் கும்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந் தோடி வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந்நடுக் குற்று வீழும்.
|
[ 98]
|
மற்றது கண்டு மைந்தன் வந்ததிங் கபாயம் என்று சொற்றடு மாறி நெஞ்சில் துயருழந் தறிவ ழிந்து பெற்றமுங் கன்றும் இன்றென் உணர்வெனும் பெருமை மாளச் செற்றஎன் செய்கேன் என்று தேரினின் றிழிந்து வீழ்ந்தான்
|
[ 99]
|
அலறுபேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும் நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி நிற்கும் மலர்தலை உலகங் காக்கும் மனுவெனும் எங்கோ மானுக்கு உலகில்இப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவ னென்பான்.
|
[ 100]
|
மேலே செல் |
வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவ தறமே யாகில் எந்தைஈ தறியா முன்னம் இயற்றுவ னென்று மைந்தன் சிந்தைவெந் துயரந் தீர்ப்பான் திருமறை யவர்முன் சென்றான்.
|
[ 101]
|
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தஆத் தரியா தாகி முன்நெருப் புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின்பொற் கோயில் வாயில் பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்த தன்றே.
|
[ 102]
|
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக் கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் கடைமுன் கேளாத் தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
|
[ 103]
|
ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து பூங்கொடி வாயில் நண்ணக் காவல ரெதிரே போற்றி ஈங்கிதோர் பசுவந் தெய்தி இறைவநின் கொற்ற வாயில் தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கிய தென்று சொன்னார்.
|
[ 104]
|
மேலே செல் |
மன்னவ னதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி என்னிதற் குற்ற தென்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித் தொன்னெறி யமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.
|
[ 105]
|
வளவநின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மே லேறி அளவில்தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவிற் போங்கால் இளையஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந் திறந்த தாகத் தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்.
|
[ 106]
|
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயர மெய்தி வெவ்விடந் தலைக்கொண் டாற்போல் வேதனை யகத்து மிக்கிங்கு இவ்வினை விளைந்த வாறென் றிடருறு மிரங்கு மேங்குஞ் செவ்விதென் செங்கோ லென்னுந் தெருமருந் தெளியுந் தேறான்.
|
[ 107]
|
மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தில் நீடும் என்னெறி நன்றா லென்னும் என்செய்தால் தீரு மென்னுந் தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும் அந்நிலை யரச னுற்ற துயரமோர் அளவிற் றன்றால்.
|
[ 108]
|
மேலே செல் |
மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடிவணங்கிச் சிந்தைதளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றால் கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதைசெய் தார்க்குமறை அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறமென்றார்.
|
[ 109]
|
வழக்கென்று நீர்மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்தலறுங் கோவுறுநோய் மருந்தாமோ இழக்கின்றேன் மைந்தனைஎன் றெல்லீருஞ் சொல்லியஇச் சழக்கின்று நானியைந்தால் தருமந்தான் சலியாதோ.
|
[ 110]
|
மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ.
|
[ 111]
|
என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயஇசைந்தே அன்னியனோர் உயிர்கொன்றால் அவனைக்கொல் வேனானால் தொன்மனுநூற் றொடைமனுவால் துடைப்புண்ட தெனும்வார்த்தை மன்னுலகில் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்.
|
[ 112]
|
மேலே செல் |
என்றரசன் இகழ்ந்துரைப்ப எதிர்நின்ற மதியமைச்சர் நின்றநெறி உலகின்கண் இதுபோல்முன் நிகழ்ந்ததால் பொன்றுவித்தன் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல் தொன்றுதொடு நெறியன்றோ தொல்நிலங்கா வலஎன்றார்.
|
[ 113]
|
அவ்வண்ணந் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம்நோக்கி மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த மனுவென்னும் விறல்வேந்தன் இவ்வண்ணம் பழுதுரைத்தீர் என்றெரியி னிடைத்தோய்ந்த செவ்வண்ணக் கமலம்போல் முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்.
|
[ 114]
|
அவ்வுரையில் வருநெறிகள் அவைநிற்க அறநெறியின் செவ்வியவுண் மைத்திறநீர் சிந்தைசெயா துரைக்கின்றீர் எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாமிடரால் வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்.
|
[ 115]
|
போற்றிசைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த் தோற்றமுடை உயிர்கொன்றான் ஆதலினால் துணிபொருள்தான் ஆற்றவுமற் றவற்கொல்லும் அதுவேயா மெனநினைமின்.
|
[ 116]
|
மேலே செல் |
எனமொழிந்து மற்றிதனுக் கினியிதுவே செயல்இவ்ஆன் மனமழியுந் துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது தனதுறுபே ரிடர்யானுந் தாங்குவதே கருமமென அனகன்அரும் பொருள்துணிந்தான் அமைச்சருமஞ் சினரகன்றார்.
|
[ 117]
|
மன்னவன்தன் மைந்தனையங் கழைத்தொருமந் திரிதன்னை முன்னிவனை அவ்வீதி முரண்தேர்க்கா லூர்கவென அன்னவனும் அதுசெய்யா தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத் தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு மறுகணைந்தான்.,
|
[ 118]
|
தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங் கப்பெருமான்.
|
[ 119]
|
சடைமருங்கில் இளம்பிறையுந் தனிவிழிக்குந் திருநுதலும் இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம் புடைநெருங்கும் பெருமையும்முன் கண்டரசன் போற்றிசைப்ப விடைமருவும் பெருமானும் விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.
|
[ 120]
|
மேலே செல் |
அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடனெழலும் இன்னபரி சானானென் றறிந்திலன்வேந் தனும்யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ.
|
[ 121]
|
அடிபணிந்த திருமகனை ஆகமுற எடுத்தணைத்து நெடிதுமகிழ்ந் தருந்துயரம் நீங்கினான் நிலவேந்தன் மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று மகிழ்ந்துண்டு படிநனைய வரும்பசுவும் பருவரல்நீங் கியதன்றே.
|
[ 122]
|
பொன்தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான் வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச் சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்கு என்றும்எளி வரும்பெருமை ஏழுலகும் எடுத்தேத்தும்.
|
[ 123]
|
இனையவகை அறநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல் புனையுமுரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ அனையதனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில்.
|
[ 124]
|
மேலே செல் |
பூத நாயகர் புற்றிடங் கொண்டவர் ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற் சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ் மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது.
|
[ 125]
|
பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை மாவாழ் அகலத்து மால்முத லானவர் ஓவா தெவரும் நிறைந்துறைந் துள்ளது தேவா சிரிய னெனுந்திருக் காவணம்.
|
[ 126]
|
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்றொளி யால்நிறை தூய்மையால் புரந்த வஞ்செழுத் தோசை பொலிதலால் பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.
|
[ 127]
|
அகில காரணர் தாள்பணி வார்கள்தாம் அகில லோகமும் ஆளற் குரியரென்று அகில லோகத்து ளார்க ளடைதலின் அகில லோகமும் போல்வ ததனிடை.
|
[ 128]
|
மேலே செல் |
அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால் மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிந்தையார் கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார் இத்தி றத்தவ ரன்றியும் எண்ணிலார்.
|
[ 129]
|
மாசி லாத மணிதிகழ் மேனிமேல் பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள் தேசி னால்எத் திசையும் விளக்கினார் பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார்.
|
[ 130]
|
பூத மைந்தும் நிலையிற் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஓது காத லுறைப்பி னெறிநின்றார் கோதி லாத குணப்பெருங் குன்றனார்.
|
[ 131]
|
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார் ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
|
[ 132]
|
மேலே செல் |
ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீர மென்னால் விளம்புந் தகையதோ.
|
[ 133]
|
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர் தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள் நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்.
|
[ 134]
|
இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான் அந்த மில்புகழ் ஆலால சுந்தரன் சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ் வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.
|
[ 135]
|
கங்கையும் மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல் வைத்த அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு மங்கையர் வதன சீத மதியிரு மருங்கு மோடிச் செங்கயல் குழைகள் நாடுந் திருமுனைப் பாடி நாடு.
|
[ 136]
|
மேலே செல் |
பெருகிய நலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில் அருமறைச் சைவ மோங்க அருளினால் அவத ரித்த மருவிய தவத்தான் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத் திருமறை யவர்கள் நீடுந் திருநாவ லூரா மன்றே.
|
[ 137]
|
மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடைய னாருக்கு ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால் தீதகன் றுலகம் உய்யத் திருவவ தாரஞ் செய்தார்.
|
[ 138]
|
தம்பிரா னருளி னாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பியா ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க ஐம்படைச் சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டி சாத்திச் செம்பொன்நாண் அரையில் மின்னத் தெருவில்தேர் உருட்டு நாளில்.
|
[ 139]
|
நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு பரவருங் காதல் கூர பயந்தவர் தம்பாற் சென்று விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
|
[ 140]
|
மேலே செல் |
பெருமைசா லரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள் வருமுறை மரபின் வைகி வளர்ந்துமங் கலஞ்செய் கோலத் தருமறை முந்நூல் சாத்தி யளவில்தொல் கலைகள் ஆய்ந்து திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.
|
[ 141]
|
தந்தையார் சடைய னார்தம் தனித்திரு மகற்குச் சைவ அந்தணர் குலத்துள் தங்கள் அரும்பெரும் மரபுக் கேற்ப வந்ததொல் சிறப்பில் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் செந்திரு வனைய கன்னி மணத்திறஞ் செப்பி விட்டார்.
|
[ 142]
|
குலமுத லறிவின் மிக்கார் கோத்திர முறையுந் தேர்ந்தார் நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை யேற்று மலர்தரு முகத்த னாகி மணம்புரி செயலின் வாய்மை பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்.
|
[ 143]
|
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் பெற்றவர் தம்பால் சென்று சொன்னபின் பெருகு சிந்தை உற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை உவந்து சாற்றிக் கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்துநாள் ஓலை விட்டார்.
|
[ 144]
|
மேலே செல் |
மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை ஏந்தி அங்கயற் கண்ணி னாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினா ரெதிரே வந்து பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.
|
[ 145]
|
மகிழ்ச்சியால் மணமீக் கூறி மங்கல வினைக ளெல்லாம் புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப் போற்றிய தொழில ராகி இகழ்ச்சியொன் றானும் இன்றி ஏந்துபூ மாலைப் பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள்முளை சாத்தி னார்கள்.
|
[ 146]
|
மணவினைக் கமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத் துணர்மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளி னானைப் புணர்மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியி னாலே பணைமுர சியம்ப வாழ்த்திப் பைம்பொன்நாண் காப்புச் சேர்த்தார்.
|
[ 147]
|
மாமறை விதிவ ழாமல் மணத்துறைக் கடன்க ளாற்றித் தூமறை மூதூர்க் கங்குல் மங்கலந் துவன்றி ஆர்ப்பத் தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலங் காணக் காமுறு மனத்தான் போலக் கதிரவ னுதயஞ் செய்தான்.
|
[ 148]
|
மேலே செல் |
காலைசெய் வினைகள் முற்றிக் கணிதநூற் புலவர் சொன்ன வேலைவந் தணையு முன்னர் விதிமணக் கோலங் கொள்வான் நூலசைந் திலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் மாலையுந் தாரும் பொங்க மஞ்சனச் சாலை புக்கான்.
|
[ 149]
|
வாசநெய் யூட்டி மிக்க மலர்விரை யடுத்த தூநீர்ப் பாசனத் தமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொன் திண்கால் ஆசனத் தணிநீ ராட்டி அரிசனஞ் சாத்தி யன்பால் ஈசனுக் கினியான் மேனி எழில்பெற விளக்கி னார்கள்.
|
[ 150]
|
அகில்விரைத் தூப மேய்ந்த அணிகொள்பட் டாடை சாத்தி முகில்நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்த துகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித்தன் தூய செங்கை உகிர்நுதி முறையில் போக்கி ஒளிர்நறுஞ் சிகழி ஆர்த்தான்.
|
[ 151]
|
தூநறும் பசுங்கர்ப் பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில் ஆனதண் பனிநீர் கூட்டி யமைத்தசந் தனச்சே றாட்டி மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப் பான்மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்.
|
[ 152]
|
மேலே செல் |
தூமலர்ப் பிணையல் மாலை துணரிணர்க் கண்ணி கோதை தாமமென் றினைய வேறு தகுதியால் அமையச் சாத்தி மாமணி யணிந்த தூய வளரொளி இருள்கால் சீக்கும் நாமநீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலங் கொண்டான்.
|
[ 153]
|
மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன் தன்னடி மனத்துள் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப் பொன்னணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.
|
[ 154]
|
இயம்பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர் நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க் கின்பஞ் செய்தே உயர்ந்தவா கனயா னங்கள் மிசைக்கொண்டார் உழைய ரானார்.
|
[ 155]
|
மங்கல கீத நாத மறையவர் குழாங்க ளோடு தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த மைந்தருந் துவன்றிச் சூதும் பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந் தணியின் மிக்க குங்கும முலையி னாரும் பரந்தெழு கொள்கைத் தாகி.
|
[ 156]
|
மேலே செல் |
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்தவெள் வளைக ளாலும் இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிக ளாலும் நெருங்கிய பீலிச் சோலை நீலநீர்த் தரங்கத் தாலுங் கருங்கடல் கிளர்ந்த தென்னக் காட்சியிற் பொலிந்த தன்றே.
|
[ 157]
|
நெருங்குதூ ரியங்கள் ஏங்க நிரைத்தசா மரைகள் ஓங்கப் பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்குபூங் கொடிக ளாட அருங்கடி மணம்வந் தெய்த அன்றுதொட்டு என்றும் அன்பில் வருங்குல மறையோர் புத்தூர் மணம்வந்த புத்தூ ராமால்.
|
[ 158]
|
நிறைகுடந் தூபம் தீபம் நெருங்குபா லிகைக ளேந்தி நறைமல ரறுகு சுண்ணம் நறும்பொரி பலவும் வீசி உறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணமெதிர் கொள்ள வந்தார்.
|
[ 159]
|
கண்களெண் ணிலாத வேண்டுங் காளையைக் காண என்பார் பெண்களி லுயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் மண்களி கூர வந்த மணங்கண்டு வாழ்ந்தோம் என்பார் பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடு வார்கள்.
|
[ 160]
|
மேலே செல் |
ஆண்டகை யருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் தாண்டிய பரியும் நம்பால் தகுதியில் நடந்த தென்பார் பூண்டயங் கிவனே காணும் புண்ணிய மூர்த்தி யென்பார் ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார்.
|
[ 161]
|
வருமணக் கோலத் தெங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத் திருமணப் பந்தர் முன்பு சென்றுவெண் சங்க மெங்கும் பெருமழைக் குலத்தி னார்ப்பப் பரிமிசை இழிந்து பேணும் ஒருமணத் திறத்தி னங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.
|
[ 162]
|
ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான் மேலுற வெழுந்துமிகு கீழுற அகழ்ந்து மாலும்அய னுக்குமரி யாரொருவர் வந்தார்.
|
[ 163]
|
கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ் புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்தத் தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.
|
[ 164]
|
மேலே செல் |
காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச் சோதிமணி மார்பினசை நூலினொடு தோளின் மீதுபுனை யுத்தரிய வெண்டுகில் நுடங்க ஆதப மறைக்குடை அணிக்கரம் விளங்க.
|
[ 165]
|
பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக் கொண்டதொர் சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத் தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடைகொள்ள.
|
[ 166]
|
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ இத்தகைய வேடமென ஐயமுற வெய்தி.
|
[ 167]
|
வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும் பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான் முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.
|
[ 168]
|
மேலே செல் |
என்றுரைசெ யந்தணனை எண்ணில்மறை யோரும் மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும் நன்றுமது நல்வரவு நங்கள்தவ மென்றே நின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.
|
[ 169]
|
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி என்னிடையும் நின்னிடையும் நின்றஇசை வால்யான் முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே நின்னுடைய வேள்வியினை நீமுயல்தி என்றான்.
|
[ 170]
|
நெற்றிவிழி யான்மொழிய நின்றநிக ரில்லான் உற்றதொர் வழக்கெனிடை நீயுடைய துண்டேல் மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன் முற்றவிது சொல்லுகென வெல்லைமுடி வில்லான்.
|
[ 171]
|
ஆவதிது கேண்மின்மறை யோர்என்அடி யான்இந் நாவல்நக ரூரனிது நான்மொழிவ தென்றான் தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கோர் யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்.
|
[ 172]
|
மேலே செல் |
என்றான் இறையோன் அதுகேட்டவ ரெம்ம ருங்கும் நின்றார் இருந்தார் இவனென்னினைந் தான்கொ லென்று சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரான் நன்றால் மறையோன் மொழியென் றெதிர்நோக்கி நக்கான்.
|
[ 173]
|
நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் மிக்கான் மிசையுத்தரி யத்துகில் தாங்கி மேற்சென்று அக்கா லமுன்தந்தை தன்தந்தையா ளோலை யீதால் இக்கா ரியத்தை நீயின்று சிரித்ததென் ஏடவென்ன.
|
[ 174]
|
மாசிலா மரபில் வந்த வள்ளல்வே தியனை நோக்கி நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியாற் சிரிப்பு நீங்கி ஆசிலந் தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல் பேசஇன் றுன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்.
|
[ 175]
|
பித்தனு மாகப் பின்னும் பேயனு மாக நீயின்று எத்தனை தீங்கு சொன்னாய் யாதுமற் றவற்றால் நாணேன் அத்தனைக் கென்னை யொன்றும் அறிந்திலை யாகில் நின்று வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டு மென்றார்.
|
[ 176]
|
மேலே செல் |
கண்டதோர் வடிவா லுள்ளங் காதல்செய் துருகா நிற்குங் கொண்டதோர் பித்த வார்த்தை கோபமு முடனே யாக்கும் உண்டொராள் ஓலை யென்னும் அதனுண்மை யறிவே னென்று தொண்டனா ரோலை காட்டு கென்றனர் துணைவ னாரை.
|
[ 177]
|
ஓலைகாட் டென்று நம்பி யுரைக்கநீ யோலை காணற் பாலையோ அவைமுன் காட்டப் பணிசெயற் பாலை யென்ற வேலையில் நாவ லூரர் வெகுண்டுமேல் விரைந்து சென்று மாலயன் தொடரா தானை வலிந்துபின் தொடர லுற்றார்.
|
[ 178]
|
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்த ணாளன் காவணத் திடையே யோடக் கடிதுபின் தொடர்ந்து நம்பி பூவணத் தவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்.
|
[ 179]
|
மறைகளா யினமுன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற இறைவனைத் தொடர்ந்து பற்றி யெழுதுமா ளோலை வாங்கி அறைகழ லண்ணல் ஆளாய் அந்தணர் செய்த லென்ன முறையெனக் கீறி யிட்டார் முறையிட்டான் முடிவி லாதான்.
|
[ 180]
|
மேலே செல் |
அருமறை முறையிட் டின்னும் அறிவதற் கரியான் பற்றி ஒருமுறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்கு கின்ற திருமறை முனிவ ரேநீர் எங்குளீர் செப்பு மென்றார்.
|
[ 181]
|
என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தா றின்றி வன்றிறல் செய்தென் கையில் ஆவணம் வலிய வாங்கி நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினா னடிமை யென்றான்.
|
[ 182]
|
குழைமறை காதி னானைக் கோதிலா ரூரர் நோக்கிப் பழையமன் றாடி போலு மிவனென்று பண்பின் மிக்க விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய்நல் லூரா யேலுன் பிழைநெறி வழக்கை யாங்கே பேசநீ போதா யென்றார்.
|
[ 183]
|
வேதிய னதனைக் கேட்டு வெண்ணெய்நல் லூரி லேநீ போதினும் நன்று மற்றப் புனிதநான் மறையோர் முன்னர் ஆதியின் மூல வோலை காட்டிநீ யடிமை யாதல் சாதிப்ப னென்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான்.
|
[ 184]
|
மேலே செல் |
செல்லுநான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையு மாபோல் வள்ளலுங் கடிது சென்றான் எல்லையில் சுற்றத் தாரு மிதுவென்னா மென்று செல்ல நல்லவந் தணர்கள் வாழும் வெண்ணெய்நல் லூரை நண்ணி.
|
[ 185]
|
வேதபா ரகரின் மிக்கார் விளங்குபே ரவைமுன் சென்று நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூ ரன்றான் காதலென் அடியான் என்னக் காட்டிய வோலை கீறி மூதறி வீர்முன் போந்தா னிதுமற்றென் முறைப்பா டென்றான்.
|
[ 186]
|
இசைவினா லெழுது மோலை காட்டினா னாகி லின்று விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி யாமோ தசையெலா மொடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் அசைவில்ஆ ரூரர் எண்ணம் என்னென்றார் அவையின் மிக்கார்.
|
[ 187]
|
அனைத்துநூல் உணர்ந்தீர் ஆதி சைவனென் றறிவீர் என்னைத் தனக்குவே றடிமை யென்றிவ் வந்தணன் சாதித் தானேல் மனத்தினா லுணர்தற் கெட்டா மாயையென் சொல்லு கேன்யான் எனக்கிது தெளிய வொண்ணா தென்றனன் எண்ணம் மிக்கான்.
|
[ 188]
|
மேலே செல் |
அவ்வுரை யவையின் முன்பு நம்பியா ரூரர் சொல்லச் செவ்விய மறையோர் நின்ற திருமறை முனியை நோக்கி இவ்வுல கின்கண் நீயின் றிவரையுன் னடிமை யென்ற வெவ்வுரை யெம்முன் பேற்ற வேண்டுமென் றுரைத்து மீண்டும்.
|
[ 189]
|
ஆட்சியில் ஆவ ணத்தில் அன்றிமற் றயலார் தங்கள் காட்சியில் மூன்றி லொன்று காட்டுவா யென்ன முன்னே மூட்சியிற் கிழித்த வோலை படியோலை மூல வோலை மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்.
|
[ 190]
|
வல்லையேற் காட்டிங் கென்ன மறையவன் வலிசெய் யாமற் சொல்லநீர் வல்லீ ராகில் காட்டுவே னென்று சொல்லச் செல்வநான் மறையோர் நாங்கள் தீங்குற வொட்டோ மென்றார் அல்லல்தீர்த் தாள நின்றார் ஆவணங் கொண்டு சென்றார்.
|
[ 191]
|
இருள்மறை மிடற்றோன் கையி லோலைகண் டவையோ ரேவ அருள்பெறு கரணத் தானும் ஆவணந் தொழுது வாங்கிச் சுருள்பெறு மடியை நீக்கி விரித்ததன் தொன்மை நோக்கித் தெருள்பெறு சபையோர் கேட்ப வாசகஞ் செப்பு கின்றான்.
|
[ 192]
|
மேலே செல் |
அருமறை நாவல் ஆதி சைவனா ரூரன் செய்கை பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானும் என்பால் வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை இருமையா லெழுதி நேர்ந்தேன் இதற்கிவை யென்னெ ழுத்து.
|
[ 193]
|
வாசகங் கேட்ட பின்னர் மற்றுமே லெழுத்திட் டார்கள் ஆசிலா வெழுத்தை நோக்கி யவையொக்கு மென்ற பின்னர் மாசிலா மறையோர் ஐயா மற்றுங்கள் பேர னார்தந் தேசுடை எழுத்தே யாகில் தெளியப்பார்த் தறிமின் என்றார்.
|
[ 194]
|
அந்தணர் கூற வின்னு மாளோலை யிவனே காண்பான் தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில் இந்தவா வணத்தி னோடு மெழுத்துநீ ரொப்பு நோக்கி வந்தது மொழிமின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்.
|
[ 195]
|
திரண்டமா மறையோர் தாமுந் திருநாவ லூரர் கோமுன் மருண்டது தெளிய மற்ற மறையவ னெழுத்தால் ஓலை அரண்டரு காப்பில் வேறொன் றழைத்துடன் ஒப்பு நோக்கி இரண்டுமொத் திருந்த தென்னே யினிச்செயல் இல்லை யென்றார்.
|
[ 196]
|
மேலே செல் |
நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர் தோற்றீர் பான்மையி னேவல் செய்தல் கடனென்று பண்பின் மிக்க மேன்மையோர் விளம்ப நம்பி விதிமுறை யிதுவே யாகில் யானிதற் கிசையே னென்ன இசையுமோ வென்று நின்றார்.
|
[ 197]
|
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமைசேர் பதியே யாகப் பேசிய துமக்கிவ் வூரில் வருமுறை மனையு நீடு வாழ்க்கையுங் காட்டு கென்றார்.
|
[ 198]
|
பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவ ரென்னை ஒருவரும் அறியீ ராகில் போதுமென் றுரைத்துச் சூழ்ந்த பெருமறை யவர்கு ழாமும் நம்பியும் பின்பு செல்லத் திருவருட் டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.
|
[ 199]
|
எம்பிரான் கோயில் நண்ண இலங்குநூன் மார்பர் எங்கள் நம்பர்தங் கோயில் புக்க தென்காலோ வென்று நம்பி தம்பெரு விருப்பி னோடு தனித்தொடர்ந் தழைப்ப மாதோ டும்பரின் விடைமேல் தோன்றி அவர்தமக் குணர்த்த லுற்றார்.
|
[ 200]
|
மேலே செல் |
முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் பின்புநம் ஏவ லாலே பிறந்தனை மண்ணின் மீது துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து நன்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம் என்றார்.
|
[ 201]
|
என்றெழு மோசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட கன்றுபோல் கதறி நம்பி கரசர ணாதி யங்கந் துன்றிய புளக மாகத் தொழுதகை தலைமே லாக மன்றுளீர் செயலோ வந்து வலியஆட் கொண்ட தென்றார்.
|
[ 202]
|
எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும் விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்து விம்ம மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப அண்ணலை ஓலை காட்டி யாண்டவ ரருளிச் செய்வார்.
|
[ 203]
|
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.
|
[ 204]
|
மேலே செல் |
தேடிய அயனு மாலுந் தெளிவுறா தைந்தெ ழுத்தும் பாடிய பொருளா யுள்ளான் பாடுவாய் நம்மை யென்ன நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள் ஆடிய செய்ய தாளை யஞ்சலி கூப்பி நின்று.
|
[ 205]
|
வேதிய னாகி யென்னை வழக்கினால் வெல்ல வந்த ஊதிய மறியா தேனுக் குணர்வுதந் துய்யக் கொண்ட கோதிலா அமுதே இன்றுன் குணப்பெருங் கடலை நாயேன் யாதினை யறிந்தென் சொல்லிப் பாடுகேன் எனமொழிந்தார்.
|
[ 206]
|
அன்பனை யருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் முன்பெனைப் பித்த னென்றே மொழிந்தனை யாத லாலே என்பெயர் பித்த னென்றே பாடுவா யென்றார் நின்ற வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாட லுற்றார்.
|
[ 207]
|
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான் மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான் பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம் இத்தாரணி முதலாமுல கெல்லாமுய வெடுத்தார்.
|
[ 208]
|
மேலே செல் |
முறையால்வரு மருதத்துடன் மொழியிந்தள முதலிற் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால் நிறைபாணியி லிசைகோள்புணர் நீடும்புகல் வகையால் இறையான்மகி ழிசைபாடின னெல்லாநிக ரில்லான்.
|
[ 209]
|
சொல்லார்தமி ழிசைபாடிய தொண்டன்தனை இன்னும் பல்லாறுல கினில்நம்புகழ் பாடென்றுறு பரிவின் நல்லார்வெண்ணெய் நல்லூரருட் டுறைமேவிய நம்பன் எல்லாவுல குய்யப்புரம் எய்தானருள் செய்தான்.
|
[ 210]
|
அயலோர்தவ முயல்வார்பிற ரன்றேமணம் அழியும் செயலால்நிகழ் புத்தூர்வரு சிவவேதியன் மகளும் உயர்நாவலர் தனிநாதனை யொழியாதுணர் வழியிற் பெயராதுயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்.
|
[ 211]
|
நாவலர்கோன் ஆரூரன் தனைவெண்ணெய் நல்லூரின் மேவுமருட் டுறையமர்ந்த வேதியராட் கொண்டதற்பின் பூவலருந் தடம்பொய்கைத் திருநாவ லூர்புகுந்து தேவர்பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்.
|
[ 212]
|
மேலே செல் |
சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால் அவநெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் தவநெறிதந் தருளென்று தம்பிரான் முன்னின்று பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.
|
[ 213]
|
புலனொன்றும் படிதவத்திற் புரிந்தநெறி கொடுத்தருள அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்தருளும் நிலவுந்தண் புனலுமொளிர் நீள்சடையோன் திருப்பாத மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன்றொண்டர்.
|
[ 214]
|
திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான் அமர்ந்தருளும் பொருத்தமா மிடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர் நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான் மனங்கொண்டார்.
|
[ 215]
|
மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும் அலைதருதண் புனற்பெண்ணை யாறுகடந் தேறியபின் இலகுபசும் புரவிநெடுந் தேர்இரவி மேல்கடலிற் செலவணையும் பொழுதணையத் திருவதிகைப் புறத்தணைந்தார்.
|
[ 216]
|
மேலே செல் |
உடையவர சுலகேத்து முழவாரப் படையாளி விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித் தடையுமதற் கஞ்சுவனென் றந்நகரிற் புகுதாதே மடைவளர்தண் புறம்பணையிற் சித்தவட மடம்புகுந்தார்.
|
[ 217]
|
வரிவளர்பூஞ் சோலைசூழ் மடத்தின்கண் வன்றொண்டர் விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்திறைதாள் புரிவுடைய மனத்தினராய்ப் புடையெங்கு மிடைகின்ற பரிசனமுந் துயில்கொள்ளப் பள்ளியமர்ந் தருளினார்.
|
[ 218]
|
அதுகண்டு வீரட்டத் தமர்ந்தருளும் அங்கணரும் முதுவடிவின் மறையவராய் முன்னொருவ ரறியாமே பொதுமடத்தி னுட்புகுந்து பூந்தாரான் திருமுடிமேற் பதுமமலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார் போல்பயின்றார்.
|
[ 219]
|
அந்நிலைஆ ரூரனுணர்ந் தருமறையோ யுன்னடியென் சென்னியில்வைத் தனையென்னத் திசையறியா வகைசெய்தது என்னுடைய மூப்புக்காண் என்றருள அதற்கிசைந்து தன்முடியப் பால்வைத்தே துயிலமர்ந்தான் தமிழ்நாதன்.
|
[ 220]
|
மேலே செல் |
அங்குமவன் திருமுடிமேல் மீண்டுமவர் தாள்நீட்டச் செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவ லூராளி இங்கென்னைப் பலகாலும் மிதித்தனைநீ யாரென்னக் கங்கைசடைக் கரந்தபிரா னறிந்திலையோ எனக்கரந்தான்.
|
[ 221]
|
செம்மாந்திங் கியானறியா தென்செய்தே னெனத்தெளிந்து தம்மானை யறியாத சாதியா ருளரே யென்று அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த கைம்மாவி னுரியானைக் கழல்பணிந்து பாடினார்.
|
[ 222]
|
பொன்றிரளும் மணித்திரளும் பொருகரிவெண் கோடுகளும் மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும் வன்றிரைக ளாற்கொணர்ந்து திருவதிகை வழிபடலால் தென்திசையில் கங்கையெனுந் திருக்கெடிலம் திளைத்தாடி.
|
[ 223]
|
அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப் பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன் மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.
|
[ 224]
|
மேலே செல் |
பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு வரந்தருவான் தினைநகரை வணங்கினர்வண் டமிழ்பாடி நரம்புடையாழ் ஒலிமுழவின் நாதவொலி வேதவொலி அரம்பையர்தங் கீதவொலி அறாத்தில்லை மருங்கணைந்தார்.
|
[ 225]
|
தேம லங்கலணி மாமணி மார்பில் செம்ம லங்கயல்கள் செங்கம லத்தண் பூம லங்கவெதிர் பாய்வன மாடே புள்ள லம்புதிரை வெள்வளை வாவித் தாம லங்குகள் தடம்பணை சூழுந் தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை மாம லங்களற வீடருள் தில்லை மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.
|
[ 226]
|
நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ் நாளி கேரமில வங்க நரந்தம் பூக ஞாழல்குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி மேக சாலமலி சோலைக ளாகி மீது கோகில மிடைந்து மிழற்றப் போக பூமியினு மிக்கு விளங்கும் பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்.
|
[ 227]
|
வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம் மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங் கன்னி காரங்குர வங்கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிள மோங்கித் துன்னு சாதிமரு மாலதி மௌவல் துதைந்த நந்திகர வீர மிடைந்த பன்ம லர்ப்புனித நந்தனவ னங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
|
[ 228]
|
மேலே செல் |
இடம ருங்குதனி நாயகி காண ஏழ்பெ ரும்புவன முய்ய வெடுத்து நடந வின்றருள் சிலம்பொலி போற்றும் நான்ம றைப்பதியை நாளும் வணங்கக் கடல்வ லங்கொள்வது போற்புடை சூழுங் காட்சி மேவிமிகு சேட்செல வோங்குந் தடம ருங்குவளர் மஞ்சிவர் இஞ்சித் தண்கி டங்கையெதிர் கண்டும கிழ்ந்தார்.
|
[ 229]
|
மன்று ளாடுமது வின்னசை யாலே மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச் சென்று சென்றுமுரல் கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார். ,
|
[ 230]
|
அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியார் அவர்க ளோநம்பி யாரூரர் தாமோ முன்பி றைஞ்சினர் யாவரென் றறியா முறைமை யாலெதிர் வணங்கி மகிழ்ந்து பின்பு கும்பிடும் விருப்பி னிறைந்து பெருகு நாவனக ரார்பெரு மானும் பொன்பி றங்குமணி மாளிகை நீடும் பொருவி றந்ததிரு வீதி புகுந்தார்.
|
[ 231]
|
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆட ரம்பையர் அரங்கு முழங்கும் மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளின் வண்டு முழங்கும் பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும் திங்கள் தங்குசடை கங்கை முழங்கும் தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
|
[ 232]
|
மேலே செல் |
போக நீடுநிதி மன்னவன் மன்னும் புரங்க ளொப்பன வரம்பில வோங்கி மாக முன்பருகு கின்றன போலும் மாளி கைக்குல மிடைந்த பதாகை யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கும் ஓம தூமமுயர் வானி லடுப்ப மேக பந்திகளின் மீதிடை எங்கும் மின்னு டங்குவன வென்ன விளங்கும்.
|
[ 233]
|
ஆடு தோகைபுடை நாசிகள் தோறும் அரணி தந்தசுட ராகுதி தோறும் மாடு தாமமணி வாயில்கள் தோறும் மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ் சேடு கொண்டவொளி தேர்நிரை தோறுஞ் செந்நெ லன்னமலை சாலைகள் தோறும் நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.
|
[ 234]
|
எண்ணில் பேருல கனைத்தினு முள்ள எல்லை யில்லழகு சொல்லிய வெல்லாம் மண்ணில் இப்பதியில் வந்தன வென்ன மங்க லம்பொலி வளத்தன வாகிப் புண்ணி யப்புனித வன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும் அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.
|
[ 235]
|
மால யன்சத மகன்பெருந் தேவர் மற்று முள்ளவர்கள் முற்றும் நெருங்கிச் சீல மாமுனிவர் சென்றுபின் துன்னித் திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக் காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக் காத லன்பர்கண நாதர் புகும்பொற் கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக் குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.
|
[ 236]
|
மேலே செல் |
பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின் பிறங்குபே ரம்பல மேரு வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த திருவள ரொளிசூழ் திருச்சிற்றம் பலமுன் திருவணுக் கன்திரு வாயில்.
|
[ 237]
|
வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப மன்றுளே மாலயன் தேட ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை அஞ்சலி மலர்த்திமுன் குவித்த கைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்தவன் புந்தச் செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான் திருக்களிற் றுப்படி மருங்கு.
|
[ 238]
|
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த வெல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
|
[ 239]
|
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு வாலிதாம் இன்பமாம் என்று கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக் கைம்மல ருச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
|
[ 240]
|
மேலே செல் |
தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப்பெருந் தாண்டவம் புரிய எடுத்தசே வடியா ரருளினால் தரளம் எறிபுனல் மறிதிரைப் பொன்னி மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில் வருகநம் பாலென வானில் அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதம் கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.
|
[ 241]
|
ஆடுகின் றவர்பே ரருளினால் நிகழ்ந்த அப்பணி சென்னிமேற் கொண்டு சூடுதங் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந்தொறும் புறவிடை கொண்டு மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை வலங்கொண்டு வணங்கினர் போந்து நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோல் நிலையெழு கோபுரங் கடந்து.
|
[ 242]
|
நின்றுகோ புரத்தை நிலமுறப் பணிந்து நெடுந்திரு வீதியை வணங்கி மன்றலார் செல்வ மறுகினூ டேகி மன்னிய திருப்பதி யதனில் தென்றிரு வாயில் கடந்துமுன் போந்து சேட்படுந் திருவெல்லை யிறைஞ்சிக் கொன்றைவார் சடையா னருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.
|
[ 243]
|
புறந்தருவார் போற்றிசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர் அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர்தாம் பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென முற்றுலகிற் சிறந்தபுகழ்க் கழுமலமாந் திருப்பதியைச் சென்றணைந்தார்.
|
[ 244]
|
மேலே செல் |
பிள்ளையார் திருவவதா ரஞ்செய்த பெரும்புகலி உள்ளுநான் மிதியேனென் றூரெல்லைப் புறம்வணங்கி வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கையிடங் கொள்ளுமால் விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள.
|
[ 245]
|
மண்டியபே ரன்பினால் வன்றொண்டர் நின்றிறைஞ்சித் தெண்டிரைவே லையின்மிதந்த திருத்தோணி புரத்தாரைக் கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று பண்டருமின் னிசைபயின்ற திருப்பதிகம் பாடினார்.
|
[ 246]
|
இருக்கோல மிடும்பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள வெருக்கோளுற் றதுநீங்க ஆரூர்மேற் செலவிரும்பிப் பெருக்கோதஞ் சூழ்புறவப் பெரும்பதியை வணங்கிப்போய்த் திருக்கோலக் காவணங்கிச் செந்தமிழ்மா லைகள்பாடி.
|
[ 247]
|
தேனார்க்கு மலர்ச்சோலைத் திருப்புன்கூர் நம்பர்பால் ஆனாப்பே ரன்புமிக அடிபணிந்து தமிழ்பாடி மானார்க்குங் கரதலத்தார் மகிழ்ந்தஇடம் பலவணங்கிக் கானார்க்கு மலர்த்தடஞ்சூழ் காவிரியின் கரையணைந்தார்.
|
[ 248]
|
மேலே செல் |
வம்புலா மலரலைய மணிகொழித்து வந்திழியும் பைம்பொன்வார் கரைப்பொன்னிப் பயில்தீர்த்தம் படிந்தாடித் தம்பிரான் மயிலாடு துறைவணங்கித் தாவில்சீர் அம்பர்மா காளத்தின் அமர்ந்தபிரான் அடிபணிந்தார்.
|
[ 249]
|
மின்னார்செஞ் சடையண்ணல் விரும்புதிருப் புகலூரை முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன்தன் அருள்நினைந்து பொன்னாரும் உத்தரியம் பு ரிமுந்நூ லணிமார்பர் தென்னாவ லூராளி திருவாரூர் சென்றணைந்தார்.
|
[ 250]
|
தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வார்க்கு ஆராத காதலின்நம் ஆரூரன் நாமழைக்க வாராநின் றானவனை மகிழ்ந்தெதிர்கொள் வீரென்று நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்தார் அருள்செய்தார்.
|
[ 251]
|
தம்பிரா னருள்செய்யத் திருத்தொண்ட ரதுசாற்றி எம்பிரா னார்அருள்தான் இருந்தபரி சிதுவானால் நம்பிரா னாராவார் அவரன்றே யெனுநலத்தால் உம்பர்நா டிழிந்ததென எதிர்கொள்ள வுடனெழுந்தார்.
|
[ 252]
|
மேலே செல் |
மாளிகைகள் மண்டபங்கள் மருங்குபெருங் கொடிநெருங்கத் தாளின்நெடும் தோரணமுந் தழைக்கமுகுங் குழைத்தொடையும் நீளிலைய கதலிகளும் நிறைந்தபசும் பொற்றசும்பும் ஒளிநெடு மணிவிளக்கு முயர்வாயில் தொறும்நிரைத்தார்.
|
[ 253]
|
சோதிமணி வேதிகைகள் தூநறுஞ்சாந் தணிநீவிக் கோதில்பொரி பொற்சுண்ணங் குளிர்தரள மணிபரப்பித் தாதவிழ்பூந் தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து வீதிகள்நுண் துகள்அடங்க விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்.
|
[ 254]
|
மங்கல கீதம்பாட மழைநிகர்தூ ரியமுழங்கச் செங்கயற்கண் முற்றிழையார் தெற்றிதொறும் நடம்பயில நங்கள்பிரான் திருவாரூர் நகர்வாழ்வார் நம்பியைமுன் பொங்கெயில்நீள் திருவாயில் புறமுறவந் தெதிர்கொண்டார்.
|
[ 255]
|
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து சிந்தை களிப்புற வீதி யூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி எந்தை யிருப்பதும் ஆரூ ரவர் எம்மையு மாள்வரோ கேளீர் என்னும் சந்த விசைப்பதி கங்கள் பாடித் தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.
|
[ 256]
|
மேலே செல் |
வானுற நீள்திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்துறுப் பால் வணங்கித் தேனுறை கற்பக வாச மாலைத் தேவா சிரியன் தொழுதி றைஞ்சி ஊனு முயிரும் உருக்கு மன்பால் உச்சி குவித்த செங்கைக ளோடும் தூநறுங் கொன்றை யான்மூலட் டானம் சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.
|
[ 257]
|
புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயின் மேய பிரானை யார்க்கும் பற்றிட மாய பரம்பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
|
[ 258]
|
அன்பு பெருக உருகியுள்ளம் அலையஅட் டாங்கபஞ் சாங்க மாக முன்பு முறைமையி னால்வணங்கி முடிவிலாக் காதல் முதிர வோங்கி நன்புல னாகிய ஐந்தும்ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற இன்பவெள் ளத்திடை மூழ்கிநின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட.
|
[ 259]
|
வாழிய மாமறைப் புற்றிடங்கொள் மன்னவ னாரரு ளாலோர் வாக்குத் தோழமை யாக வுனக்குநம்மைத் த ந்தனம் நாமுன்பு தொண்டு கொண்ட வேள்வியி லன்றுநீ கொண்டகோலம் என்றும் புனைந்துநின் வேட்கை தீர வாழிமண் மேல்விளை யாடுவாயென் றாரூரர் கேட்க எழுந்த தன்றே.
|
[ 260]
|
மேலே செல் |
கேட்க விரும்பிவன் றொண்டரென்றும் கேடிலா தானை யிறைஞ்சி நின்றே ஆட்கொள வந்த மறையவனே ஆரூ ரமர்ந்த அருமணி யே வாட்கயல் கொண்டகண் மங்கைபங்கா மற்றுன் பெரிய கருணை யன்றே நாட்கம லப்பதந் தந்ததின்று நாயினே னைப்பொரு ளாக என்றார்.
|
[ 261]
|
என்று பலமுறை யால்வணங்கி எய்திய உள்ளக் களிப்பி னோடும் வென்றி யடல்விடை போல்நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்துவாழ்ந்து திருமா ளிகைவலஞ் செய்து போந்தார் அன்று முதலடி யார்களெல்லாம் தம்பிரான் தோழ ரென்றே யறைந்தார்.
|
[ 262]
|
மைவளர் கண்ட ரருளினாலே வண்டமிழ் நாவலர் தம்பெ ருமான் சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையுந் தாரு மாகி மெய்வளர் கோலமெல் லாம்பொலிய மிக்க விழுத்தவ வேந்த ரென்னத் தெய்வ மணிப்புற்று ளாரைப் பாடித் திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.
|
[ 263]
|
இதற்குமுன் எல்லை யில்லாத் திருநகர் இதனுள் வந்து முதற்பெருங் கயிலை யாதி முதல்வர்தம் பங்கி னாட்குப் பொதுக்கடிந் துரிமை செய்யும் பூங்குழற் சேடி மாரிற் கதிர்த்தபூ ணேந்து கொங்கைக் கமலினி அவத ரித்தாள்.
|
[ 264]
|
மேலே செல் |
கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம் பதியிலார் குலத்தில் தோன்றிப் பரவையா ரென்னு நாமம் விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோ ரான்ற மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாத்தி.
|
[ 265]
|
பரவினர் காப்புப் போற்றிப் பயில்பெருஞ் சுற்றந் திங்கள் விரவிய பருவந் தோறும் விழாவணி யெடுப்ப மிக்கோர் வரமலர் மங்கை யிங்கு வந்தன ளென்று சிந்தை தரவரு மகிழ்ச்சி பொங்கத் தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.
|
[ 266]
|
மானிளம் பிணையோ தெய்வ வளரிள முகையோ வாசத் தேனிளம் பதமோ வேலைத் திரையிளம் பவள வல்லிக் கானிளங் கொடியோ திங்கட் கதிரிளங் கொழுந்தோ காமன் தானிளம் பருவங் கற்குந் தனியிளந் தனுவோ வென்ன.
|
[ 267]
|
நாடுமின் பொற்பு வாய்ப்பு நாளுநாள் வளர்ந்து பொங்க ஆடுமென் கழங்கும் பந்தும் அம்மனை ஊச லின்ன பாடுமின் னிசையுந் தங்கள் பனிமலை வல்லி பாதங் கூடுமன் புருகப் பாடுங் கொள்கையோர் குறிப்புத் தோன்ற.
|
[ 268]
|
மேலே செல் |
பிள்ளைமைப் பருவ மீதாம் பேதைமைப் பருவ நீங்கி அள்ளுதற் கமைந்த பொற்பால் அநங்கன்மெய்த் தனங்க ளீட்டங் கொள்ளமிக் குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப உள்ளமெய்த் தன்மை முன்னை உண்மையுந் தோன்ற வுய்ப்பார்.
|
[ 269]
|
பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத் தேங்கமழ் குழலின் வாசந் திசையெலாஞ் சென்று சூழ ஓங்குபூங் கோயி லுள்ளார் ஒருவரை யன்பி னோடும் பூங்கழல் வணங்க வென்றும் போதுவார் ஒருநாட் போந்தார்.
|
[ 270]
|
அணிசிலம் படிகள் பார்வென் றடிப்படுத் தனமென் றார்ப்ப மணிகிளர் காஞ்சி யல்குல் வரியர வுலகை வென்ற துணிவுகொண் டார்ப்ப மஞ்சு சுரிகுழற் கழிய விண்ணும் பணியுமென் றினவண் டார்ப்பப் பரவையார் போதும் போதில்.
|
[ 271]
|
புற்றிடம் விரும்பி னாரைப் போற்றினர் தொழுது செல்வார் சுற்றிய பரிச னங்கள் சூழஆ ளுடைய நம்பி நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந் திலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்.
|
[ 272]
|
மேலே செல் |
கற்பகத்தின் பூம்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.
|
[ 273]
|
ஓவியநான் முகனெழுத வொண்ணாமை யுள்ளத்தால் மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ மூவுலகின் பயனாகி முன்னின்ற தெனநினைந்து நாவலர்கா வலர்நின்றார் நடுநின்றார் படைமதனார்.
|
[ 274]
|
தண்டரள மணித்தோடும் தகைத்தோடும் கடைபிறழும் கெண்டைநெடுங் கண்வியப்பக் கிளரொளிப்பூ ணுரவோனை அண்டர்பிரான் திருவருளால் அயலறியா மனம்விரும்பப் பண்டைவிதி கடைகூட்டப் பரவையா ருங்கண்டார்.
|
[ 275]
|
கண்கொள்ளாக் கவின்பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப விண்கொள்ளாப் பேரொளியா னெதிர்நோக்கு மெல்லியலுக்கு எண்கொள்ளாக் காதலின்முன் பெய்தாத தொருவேட்கை மண்கொள்ளா நாண்மடம்அச் சம்பயிர்ப்பை வலிந்தெழலும்.
|
[ 276]
|
மேலே செல் |
முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால் தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ என்னேயென் மனந்திரித்த இவன்யாரோ வெனநினைந்தார்.
|
[ 277]
|
அண்ணலவன் தன்மருங்கே அளவிறந்த காதலினால் உண்ணிறையுங் குணநான்கும் ஒருபுடைசாய்ந் தனவெனினும் வண்ணமலர்க் கருங்கூந்தல் மடக்கொடியை வலிதாக்கிக் கண்ணுதலைத் தொழுமன்பே கைக்கொண்டு செலவுய்ப்ப.
|
[ 278]
|
பாங்கோடிச் சிலைவளைத்துப் படையனங்கன் விடுபாணம் தாங்கோலி யெம்மருங்கும் தடைசெய்ய மடவரலும் தேங்கோதை மலர்க்குழல்மேல் சிறைவண்டு கலந்தார்ப்பப் பூங்கோயி லமர்ந்தபிரான் பொற்கோயில் போய்ப்புகுந்தாள்.
|
[ 279]
|
வன்றொண்ட ரதுகண்டுஎன் மனங்கொண்ட மயிலியலின் இன்றொண்டைச் செங்கனிவாய் இளங்கொடிதான் யாரென்ன அன்றங்கு முன்நின்றார் அவர்நங்கை பரவையார் சென்றும்பர் தரத்தார்க்குஞ் சேர்வரியார் எனச்செப்ப.
|
[ 280]
|
மேலே செல் |
பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை யணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை யெழுபரவை.
|
[ 281]
|
என்றினைய பலவுநினைந் தெம்பெருமான் அருள்வகையான் முன்றொடர்ந்து வருங்காதல் முறைமையினால் தொடக்குண்டு நன்றெனையாட் கொண்டவர்பால் நண்ணுவனென் றுள்மகிழ்ந்து சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான் கோயில்புக.
|
[ 282]
|
பரவையார் வலங்கொண்டு பணிந்தேத்தி முன்னரே புரவலனார் கோயிலினின் றொருமருங்கு புறப்பட்டார் விரவுபெருங் காதலினால் மெல்லியலார் தமைவேண்டி அரவின்ஆ ரம்புனைந்தார் அடிபணிந்தார் ஆரூரர்.
|
[ 283]
|
அவ்வாறு பணிந்தேத்தி யணியாரூர் மணிப்புற்றின் மைவாழுந் திருமிடற்று வானவர்பால் நின்றும்போந்து எவ்வாறு சென்றாள்என் இன்னுயிராம் அன்னமெனச் செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவா ராயினார்.
|
[ 284]
|
மேலே செல் |
பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும் ஆசை மேலுமொ ராசை யளிப்பதோர் தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய ஈச னாரரு ளெந்நெறிச் சென்றதே.
|
[ 285]
|
உம்பர் நாயகர் தங்கழல் அல்லது நம்பு மாறறி யேனை நடுக்குற வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.
|
[ 286]
|
பந்தம் வீடு தரும்பர மன்கழல் சிந்தை யார்வுற உன்னுமென் சிந்தையை வந்து மால்செய்து மானென வேவிழித்து எந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே.
|
[ 287]
|
என்று சாலவு மாற்றல ரென்னுயிர் நின்ற தெங்கென நித்திலப் பூண்முலை மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான் சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்.
|
[ 288]
|
மேலே செல் |
காவி நேர்வருங் கண்ணியை நண்ணுவான் யாவ ரோடு முரையியம் பாதிருந்து ஆவி நல்குவர் ஆரூரை யாண்டவர் பூவின் மங்கையைத் தந்தெனும் போழ்தினில்.
|
[ 289]
|
நாட்டு நல்லிசை நாவலூ ரன்சிந்தை வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக் காட்டு வன்கட லைக்கடைந் தென்பபோற் பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக.
|
[ 290]
|
எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம் வைகு சேக்கைகண் மேற்செல வந்தது பையுள் மாலை தமியோர் பனிப்புற.
|
[ 291]
|
பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன் அஞ்செ ழுத்து முணரா அறிவிலோர் நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்.
|
[ 292]
|
மேலே செல் |
மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால் இறும ருங்குலார்க் கியார்பிழைப் பாரென்று நறும லர்க்கங்குல் நங்கைமுன் கொண்டபுன் முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா.
|
[ 293]
|
அரந்தை செய்வார்க் கழுங்கித்தம் ஆருயிர் வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல் பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக் கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.
|
[ 294]
|
தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய் ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண் நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா.
|
[ 295]
|
வாவி புள்ளொலி மாறிய மாலையில் நாவ லூரரும் நங்கை பரவையாம் பாவை தந்த படர்பெருங் காதலும் ஆவி சூழ்ந்த தனிமையு மாயினார் .
|
[ 296]
|
மேலே செல் |
தந்தி ருக்கண் எரிதழ லிற்பட்டு வெந்த காமன் வெளியே உருச்செய்து வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே எந்தை யார்அருள் இவ்வண்ண மோவென்பார்.
|
[ 297]
|
ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர் தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர் நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச் சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.
|
[ 298]
|
அடுத்து மேன்மேல் அலைத்தெழு மாழியே தடுத்து முன்னெனை யாண்டவர் தாமுணக் கடுத்த நஞ்சுண் தரங்கக் கரங்களால் எடுத்து நீட்டுநீ யென்னைஇன் றென்செயாய்.
|
[ 299]
|
பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச் சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில் புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட மறம்ப யின்றதெங் கோதமிழ் மாருதம்.
|
[ 300]
|
மேலே செல் |
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு காதல னாகிய வள்ளல்பால் தன்ன ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம் அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.
|
[ 301]
|
கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக் கணவனைமுன் பெறுவாள் போல இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெருங் காதலோடும் தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன் றொண்டர்பால் தனித்துச் சென்ற மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.
|
[ 302]
|
சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல் சிறிதளவே யொலிப்ப முன்னர் வேறொருவ ருடன் பேசாள் மெல்லவடி யொதுங்கிமா ளிகையின் மேலால் ஏறிமர கதத்தூணத் திலங்குமணி வேதிகையில் நலங்கொள் பொற்கால் மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா முன்றின்மருங் கிருந்தாள் வந்து.
|
[ 303]
|
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம் மறுகெதிர்வந் தவரா ரென்ன இவ்வுலகி லந்தணரா யிருவர்தே டொருவர்தா மெதிர்நின் றாண்ட சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி யென்றாள்.
|
[ 304]
|
மேலே செல் |
என்றவுரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ வென்னா முன்னம் வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்கவுயி ரொன்றுந் தாங்கி மின்றயங்கு நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து மெல்லணைமேல் வீழ்ந்த போது.
|
[ 305]
|
ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர் நறுந்திவலை யருகு வீசி ஈரவிளந் தளிர்க்குளிரி படுத்துமட வார்செய்த விவையு மெல்லாம் பேரழலில் நெய்சொரிந்தால் ஒத்தனமற் றதன்மீது சமிதை யென்ன மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி மலர்வாளி சொரிந்தான் வந்து. ,
|
[ 306]
|
கந்தங் கமழ்மென் குழலீர் இதுவென் கலைவாண் மதியங் கனல்வா னெனையிச் சந்தின் தழலைப் பனிநீ ரளவித் தடவுங் கொடியீர் தவிரீர் தவிரீர் வந்திங் குலவுந் நிலவும் விரையார் மலயா னிலமும் எரியாய் வருமால் அந்தண் புனலும் அரவும் விரவுஞ் சடையா னருள்பெற் றுடையார் அருளார்.
|
[ 307]
|
புலரும் படியன் றிரவென் னளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெருவாழ் வுரையீர் பலரும் புரியுந் துயர்தா னிதுவோ படைமன் மதனார் புடைநின் றகலார் அலரும் நிலவு மலரு முடியார் அருள்பெற் றுடையா ரவரோ வறியார். ,
|
[ 308]
|
மேலே செல் |
என்றின் னனவே பலவும் புகலும் இருளா ரளகச் சுருளோ தியையும் வன்றொண் டரையும் படிமேல் வரமுன்பு அருள்வா னருளும் வகையார் நினைவார் சென்றும் பர்களும் பணியுஞ் செல்வத் திருவா ரூர்வாழ் பெருமா னடிகள் அன்றங் கவர்மன் றலைநீர் செயுமென்று அடியா ரறியும் படியா லருளி. ,
|
[ 309]
|
காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் லிருளுங் கங்குற் கழிபோம் யாமத் திருளும் புலரக் கதிரோன் எழுகா லையில்வந் தடியார் கூடிச் சேமத் துணையா மவர்பே ரருளைத் தொழுதே திருநா வலர்கோன் மகிழத் தாமக் குழலாள் பரவை வதுவை தகுநீர் மையினால் நிகழச் செய்தார்.
|
[ 310]
|
தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால் மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனு மெல்லியல்தன் பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்.
|
[ 311]
|
தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர் சென்னியிலுஞ் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம் பன்னுதமிழ்த் தொடைமாலை பலசாத்திப் பரவையெனும் மின்னிடையா ளுடன்கூடி விளையாடிச் செல்கின்றார்.
|
[ 312]
|
மேலே செல் |
மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைப் போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் தெற்றிச் சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள் நாதர்பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.
|
[ 313]
|
அந்தரத் தமரர் போற்றும் அணிகிள ராடை சாத்திச் சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச் சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்மணிக் கலன்கள் சாத்தி இந்திரத் திருவின் மேலாம் எழில்பெற விளங்கித் தோன்ற.
|
[ 314]
|
கையினிற் புனைபொற் கோலும் காதினில் இலங்கு தோடும் மெய்யினில் துவளு நூலும் நெற்றியின் விளங்கு நீறும் ஐயனுக் கழகி தாமென் றாயிழை மகளிர் போற்றச் சைவமெய்த் திருவின் கோலந் தழைப்பவீ தியினைச் சார்ந்தார்.
|
[ 315]
|
நாவலூர் வந்த சைவ நற்றவக் களிறே யென்றும் மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க் கன்ப வென்றுந் தாவில்சீர்ப் பெருமை யாரூர் மறையவர் தலைவ வென்றும் மேவினர் இரண்டுபாலும் வேறுவே றாயம் போற்ற.
|
[ 316]
|
மேலே செல் |
கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப் பக்கமுன் போது வார்கள் பயில்மொழி பயிற்றிச் செல்ல மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப் பையோர் சூழ மைக்கருங் கண்ணி னார்கள் மறுகநீண் மறுகில் வந்தார்.
|
[ 317]
|
பொலங்கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத இலங்கொளி வலயப் பொற்றோள் இடையிடை மிடைந்து தொங்கல் நலங்கிளர் நீழற் சூழ நான்மறை முனிவ ரோடும் அலங்கலம் தோளி னான்வந் தணைந்தனன் அண்ணல் கோயில்.
|
[ 318]
|
கண்ணுதல் கோயில் தேவா சிரியனாங் காவ ணத்துள் விண்ணவ ரொழிய மண்மேன் மிக்கசீ ரடியார் கூடி எண்ணிலார் இருந்த போதில் இவர்க்கியா னடியான்ஆகப் பண்ணுநா ளெந்நா ளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்.
|
[ 319]
|
அடியவர்க் கடிய னாவேன் என்னும்ஆ தரவு கூரக் கொடிநெடுங் கொற்ற வாயில் பணிந்துகை குவித்துப் புக்கார் கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தா ரவர்க்கெதிர் காணக் காட்டும் படியெதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.
|
[ 320]
|
மேலே செல் |
மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந் தன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை நன்பெ ரும்பர மானந்த நன்மது என்த ரத்து மளித்தெதிர் நின்றன.,
|
[ 321]
|
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன வேதி யாதவர் தம்மைவே திப்பன சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய ஆதி மாலயன் காணா வளவின.
|
[ 322]
|
வேத வாரண மேற்கொண் டிருந்தன பேதை யேன்செய் பிழைபொறுத் தாண்டன ஏத மானவை தீர்க்க இசைந்தன பூத நாதநின் புண்டரீ கப்பதம்.
|
[ 323]
|
இன்னவா றேத்து நம்பிக் கேறுசே வகனார் தாமும் அந்நிலை யவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி மன்னுசீ ரடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கிப் பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.
|
[ 324]
|
மேலே செல் |
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமே லொன்று மில்லார் அருமையாம் நிலையி னின்றார் அன்பினா லின்ப மார்வார் இருமையுங் கடந்து நின்றார் இவரைநீ யடைவா யென்று.
|
[ 325]
|
நாதனா ரருளிச் செய்ய நம்பியா ரூரர் நானிங்கு ஏதந்தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற நீதியா லவர்கள் தம்மைப் பணிந்துநீ நிறைசொன் மாலை கோதிலா வாய்மை யாலே பாடென வண்ணல் கூற.
|
[ 326]
|
தன்னையா ளுடைய நாதன் தானருள் செய்யக் கேட்டுச் சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி நாடர் இன்னவா றின்ன பண்பென் றேத்துகேன் அதற்கி யானார் பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செய் யென்ன.
|
[ 327]
|
தொல்லைமால் வரைபயந்த தூயாள்தன் திருப்பாகர் அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால் தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேனென்று எல்லையில்வண் புகழாரை யெடுத்திசைப்பா மொழியென்றார்.
|
[ 328]
|
மேலே செல் |
மன்னுசீர் வயலாரூர் மன்னவரை வன்றொண்டர் சென்னியுற அடிவணங்கித் திருவருள்மேல் கொள்பொழுதின் முன்னமால் அயனறியா முதல்வர்தா மெழுந்தருள அந்நிலைகண் டடியவர்பாற் சார்வதனுக் கணைகின்றார்.
|
[ 329]
|
தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா வீரத்தா ரெல்லார்க்குந் தனித்தனிவே றடியேன் என்று ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப்பதிக மருள்செய்தார்.
|
[ 330]
|
தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத் தமிழ்மாலைச் செம்பொருளால் திருத்தொண்டத் தொகையான திருப்பதிகம் உம்பர்பிரான் தானருளும் உணர்வுபெற உலகேத்த எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ ரெதிர்பணிந்தார்.
|
[ 331]
|
உம்பர்நா யகர்அடியார் பேருவகை தாமெய்த நம்பியா ரூரர்திருக் கூட்டத்தின் நடுவணைந்தார் தம்பிரான் தோழரவர் தாமொழிந்த தமிழ்முறையே எம்பிரான் தமர்கள்திருத் தொண்டேத்தல் உறுகின்றேன். ]"
|
[ 332]
|
மேலே செல் |
This page was last modified on Sat, 25 Nov 2023 01:00:07 -0600
|
|
send corrections and suggestions to admin @ sivasiva.org |
|