விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம், மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்- கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்; செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
| [ 1]
|
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர் மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்- இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள் அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
| [ 2]
|
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர் மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்- தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப் பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
| [ 3]
|
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே, மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்- கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!
| [ 4]
|
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய், மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்- வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும் நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே
| [ 5]
|
Go to top |
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய் இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்- மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
| [ 6]
|
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர் மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர் கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர் ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
| [ 7]
|
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே, மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்; பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர் பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.
| [ 8]
|
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண் பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்- சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்- ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
| [ 9]
|
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்- நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய், ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.
| [ 10]
|
Go to top |
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்- அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால், மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
| [ 11]
|