நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும் முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய, சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள், கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.
| [ 1]
|
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப, ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச் சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள், கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.
| [ 2]
|
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான், கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர் சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும் கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே.
| [ 3]
|
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு, அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்; செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள், கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே.
| [ 4]
|
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி, நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த, சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள், காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.
| [ 5]
|
Go to top |
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான், தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான், திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக் கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே.
| [ 6]
|
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச் செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள் கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.
| [ 7]
|
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான், சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும் காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே.
| [ 8]
|
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான், தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான், கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே.
| [ 9]
|
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும் படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்; பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக் கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே.
| [ 10]
|
Go to top |
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின் நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன், சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும் மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.
| [ 11]
|