பணிந்தெண் திசையும் பரமனை நாடித் துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.
| [ 1]
|
பரிசறி வானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவெளி கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.
| [ 2]
|
குரவன் அருளிற் குறிவழி மூலன் பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.
| [ 3]
|
காயாதி பூதங் கலைகால மாயையில் ஆயா தகல அறிவொன் றனாதியே ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலு மாமே.
| [ 4]
|
இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம் மருவிய கன்மமாம் மாபந்த யோகந் தருமிவை காய உழைப்பாகும் தானே அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.
| [ 5]
|
Go to top |
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின் உதய மதுநா லொழியஓ ரெட்டுப் பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில் திதமான ஈராறு சித்திக ளாமே.
| [ 6]
|
நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால் நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம் பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின் நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே.
| [ 7]
|
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம் தாழா நடைபல யோசனை சார்ந்திடும் சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதிற் றான்பர காயமே.
| [ 8]
|
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ் வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
| [ 9]
|
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும் மானாக் கனமும் பரகாயத் தேகலும் தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.
| [ 10]
|
Go to top |
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர் வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக் கோங்கி வரமுத்தி முந்திய வாறே.
| [ 11]
|
முந்திய முந்நூற் றறுபது காலமும் வந்தது நாழிகை வான்முத லாயிடச் சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம் உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.
| [ 12]
|
சித்தந் திரிந்து சிவமய மாகியே முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர் சித்தம் பரத்தின் திருநடத் தோரே.
| [ 13]
|
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
| [ 14]
|
இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின் இருக்கு முடலி லிருந்தில தாகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
| [ 15]
|
Go to top |
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம் வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.
| [ 16]
|
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன் கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற் கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.
| [ 17]
|
நாடியின் ஓசை நயனம் இருதயம் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.
| [ 18]
|
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக் கொன்பது வாசல் உலைநல மாமே.
| [ 19]
|
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல வாங்கி இரவி மதிவழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.
| [ 20]
|
Go to top |
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.
| [ 21]
|
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர் நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.
| [ 22]
|
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப் பொட்டிட்டு நின்றது பூரண மானதே.
| [ 23]
|
பூரண சத்தி எழுமூன் றறையாக ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண மாகிக் கலந்து விரிந்ததே.
| [ 24]
|
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது பார்முதற் பூதம் இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே.
| [ 25]
|
Go to top |
இடையொடு பிங்கலை என்னும் இரண்டும் அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும் தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
| [ 26]
|
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின் மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.
| [ 27]
|
நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன் தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடில் ஒருகை மணிவிளக் கானதே.
அணுமாதி சித்திக ளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
| [ 28]
|
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற் கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும் மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.
| [ 29]
|
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திக ளானவை எல்லாம் புலப்படும் சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை சத்தி அருள்தரத் தானுள வாகுமே.
| [ 30]
|
Go to top |
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.
| [ 31]
|
மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே.
| [ 32]
|
முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனும் தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
| [ 33]
|
ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன் கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச் சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.
| [ 34]
|
மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின் சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும் பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
| [ 35]
|
Go to top |
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின் மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.
| [ 36]
|
ஆகின்ற காலொளி யாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது மில்லையாம் மேனின்ற காலம் வெளியுற நின்றன தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
| [ 37]
|
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும் தன்வழி யாகத் தழைத்திடும் வையகம் தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம் தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.
| [ 38]
|
நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை யெல்லாங் கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.
| [ 39]
|
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின் பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம் மேகின்ற காலம் வெளியுற நின்றது போகின்ற காலங்கள் போவது மில்லையே.
| [ 40]
|
Go to top |
போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.
| [ 41]
|
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில் பறிந்தது பூதப் படையவை யெல்லாம் குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில் விரிந்த பரகாயம் மேவலு மாமே.
| [ 42]
|
ஆன விளக்கொளி யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னேயு டையவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே.
| [ 43]
|
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாம் கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற் பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே.
| [ 44]
|
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன் ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவ னாமே. | [ 45]
|
Go to top |
தானே படைத்திட வல்லவ னாயிடும் தானே அளித்திட வல்லவ னாயிடும் தானேசங் காரத் தலைவனு மாயிடும் தானே சிவனெனுந் தன்மைய னாமே.
| [ 46]
|
தன்மைய தாகத் தழைத்த கலையினுள் பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.
| [ 47]
|
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம் கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.
| [ 48]
|
தன்மைய தாகத் தழைத்த பகலவன் மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் புன்மைய தாகிப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே.
| [ 49]
|
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன் அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப் பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங் கற்கொடி யாகிய காமுக னாமே.
| [ 50]
|
Go to top |
காமரு தத்துவ மானது கண்டபின் பூமரு கந்தம் புவனம தாயிடும் மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம் நாமரு வும்ஒளி நாயக மானதே.
| [ 51]
|
நாயக மாகிய நல்லொளி கண்டபின் தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் போயக மான புவனங்கள் கண்டுபின் பேயக மாகிய பேரொளி காணுமே.
| [ 52]
|
பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும் பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன் தாரொளி யாகத் தரணி முழுதுமாம் ஓரொளி யாகிய காலொளி காணுமே.
| [ 53]
|
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் காலது வக்கொடி நாயகி தன்னுடன் காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும் காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே.
| [ 54]
|
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள் ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள ஆறது வாயிர மாகும் அருவழி ஆறது வாக வளர்ப்ப திரண்டே.
| [ 55]
|
Go to top |
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.
| [ 56]
|
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது அஞ்சது வன்றி இரண்டது வாயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.
| [ 57]
|
ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.
| [ 58]
|
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில் முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே.
| [ 59]
|
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.
| [ 60]
|
Go to top |
இருநிதி யாகிய எந்தை யிடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுந்தே.
| [ 61]
|
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடமது சொல்லில் எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய் எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.
| [ 62]
|
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
| [ 63]
|
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற் சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச் சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத் துந்திச் சமாதி யுடையொளி யோகியே.
| [ 64]
|
அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல் வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல் சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல் நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.
| [ 65]
|
Go to top |
மரணஞ் சரைவிடல் வண்பர காயம் இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல் அரனன் திருவுரு வாதல்மூ வேழாங் கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.
| [ 66]
|
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே.
| [ 67]
|
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே.
| [ 68]
|
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே.
| [ 69]
|
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள் விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் பதியது காட்டும் பரமன்நின் றானே.
| [ 70]
|
Go to top |
கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர் மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு நட்டறி வார்க்கு நமனில்லை தானே. 12,
| [ 71]
|