உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
|
[ 1]
|
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் யாமிலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.
|
[ 2]
|
பான்மொழி பாகன் பராபரன் றானாகும் மான சதாசிவன் றன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.
|
[ 3]
|
நினைவதும் வாய்மை மொழிவது மல்லால் கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும் கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.
|
[ 4]
|
மேலே செல் |
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தர்ச்சித் தார்களே.
|
[ 5]
|
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
|
[ 6]
|
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப் பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.
|
[ 7]
|
மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும் சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.
|
[ 8]
|
மேலே செல் |
ஆரா தனையும் அமரர் குழாங்களும் நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமே ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.
|
[ 9]
|
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத் தான்அந்த மில்லாத் தலைவன் அருளது தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர் பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.
|
[ 10]
|
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப் பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.
|
[ 11]
|
வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.
|
[ 12]
|
மேலே செல் |
கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள் பழிப்படு வார்பலரும் பழி வீழ வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.
|
[ 13]
|
பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்கரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.
|
[ 14]
|
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின் றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன் மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.
|
[ 15]
|
தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும் பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
|
[ 16]
|
மேலே செல் |
உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
|
[ 17]
|
வென்று விரைந்து விரைபணி என்றனர் நின்று பொருந்த நிறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடிற் கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.
|
[ 18]
|
சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால் மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
|
[ 19]
|
ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம் மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.
|
[ 20]
|
மேலே செல் |
ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து) ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே. 12,
|
[ 21]
|
This page was last modified on Sat, 25 Nov 2023 01:00:07 -0600
|
|
send corrections and suggestions to admin @ sivasiva.org |
|