sivasiva.org

Search Tamil/English word or
song/pathigam/paasuram numbers.

Resulting language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
திருமூலர்  
திருமந்திரம்  

10 -ஆம் திருமுறை   பதிகம் 10.711  
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பண் -  

This page was last modified on Sat, 25 Nov 2023 01:00:07 -0600
 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

[ 1]

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

[ 2]

பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.

[ 3]

நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

[ 4]
மேலே செல்

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தர்ச்சித் தார்களே.

[ 5]

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே

[ 6]

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

[ 7]

மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

[ 8]
மேலே செல்

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.

[ 9]

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.

[ 10]

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

[ 11]

வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

[ 12]
மேலே செல்

கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

[ 13]

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

[ 14]

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.

[ 15]

தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

[ 16]
மேலே செல்

உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

[ 17]

வென்று விரைந்து விரைபணி என்றனர்
நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.

[ 18]

சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.

[ 19]

ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.

[ 20]
மேலே செல்

ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே. 12,

[ 21]
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org