மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே, துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு, பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.
| [ 1]
|
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால், ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர் நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும், பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.
| [ 2]
|
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி, கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால், பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே. | [ 3]
|
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற, கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.
| [ 4]
|
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை, மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்; அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்- பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.
| [ 5]
|
Go to top |
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும் வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர் தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும் புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
| [ 6]
|
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான், சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர் அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி, புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
| [ 7]
|
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும் பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான் வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
| [ 8]
|
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட, ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும் கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள், புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
| [ 9]
|
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல; பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா! என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.
| [ 10]
|
Go to top |
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன், பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல், செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள், அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.
| [ 11]
|