மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்; இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப் பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!
| [ 1]
|
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி, பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி, தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு, செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!
| [ 2]
|
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால், எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?
| [ 3]
|
காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக, வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக, நேயமே நெய்யும் பாலா, நிறைய நீர் அமைய ஆட்டி, பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே.
| [ 4]
|
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி அஞ்சல்! என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே! நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்; நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?
| [ 5]
|
Go to top |
நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்; ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க, நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே!
| [ 6]
|
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே, உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும், கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?
| [ 7]
|
ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய், ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,- தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!
| [ 8]
|
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம் மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்! சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக் குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!
| [ 9]
|
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா; அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்; படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை; கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!
| [ 10]
|
Go to top |