சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்; அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்; பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்; மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 1]
|
தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன் காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்; கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்; கெடுப்பார் மற்று இல்லாதான் காண்; வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன் கயிலை மேவினான் காண்; வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 2]
|
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண்; தாழ் சடை எம்பெருமான் காண்; தக்கார்க்கு உள்ள பொன் உருவச் சோதி; புனல் ஆடினான் காண்; புராணன் காண்; பூதங்கள் ஆயினான் காண்; மின் உருவ நுண் இடையாள் பாகத்தான் காண்; வேழத்தின் உரி வெருவப் போர்த்தான் தான் காண்; மன் உரு ஆய் மாமறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 3]
|
ஆறு ஏறு செஞ்சடை எம் ஆரூரன் காண்; அன்பன் காண்; அணி பழனம் மேயான் தான் காண்; நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண்; நிருபன் காண்; நிகர் ஒன்றும் இல்லாதான் காண்; கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண்; கொக்கரையான் காண்; குழு நல் பூதத்தான் காண்; மாறு ஆய மதில்மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 4]
|
சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன் காண்; திரி புரங்கள் மூன்றும் பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப்படையாளீ காண்; அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்; மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 5]
|
Go to top |
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன் காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்; கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண், கையில் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண், பாணி ஆக நின்று; மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 6]
|
மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர் தம் பெருமான் காண்; மேவில் எங்கும் முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்; எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன் காண்; இமையோர்கள் ஏத்த நின்று, மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 7]
|
பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்; பிறப்பு ஒன்று இல்லாதான் காண்; முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று உகந்த முதல்வன் தான் காண்; இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்; மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 8]
|
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண்; வீரன் காண்; வீரட்டம் மேவினான் காண்; பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப் படையினான் காண்; கட்டக் கடுவினைகள் காத்து ஆள்வான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்; வட்ட மதிப்பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 9]
|
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள் நெரிய ஊன்றினான் காண்; மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்; பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப் படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்; மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
| [ 10]
|
Go to top |