ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே; நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே; கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே; சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 1]
|
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப்படுவார் தாமே; சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே; பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 2]
|
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; பூ உற்ற நாற்றம் ஆய் நின்றார் தாமே; புனிதப் பொருள் ஆகி நின்றார் தாமே; பா உற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 3]
|
நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே; மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 4]
|
அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே; சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே; பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 5]
|
Go to top |
தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே; தூ நீறு அணியும் சுவண்டர் தாமே; தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே; பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 6]
|
மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே; மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே; ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும், அம்பலமும், கோயிலாக் கொண்டார் தாமே; பை ஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 7]
|
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே; கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே; காலங்கள், ஊழி, கடந்தார் தாமே; பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 8]
|
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே; கயிலை மலையை உடையார் தாமே; ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே; ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே; பாரார் புகழப்படுவார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 9]
|
மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே; வண் கயிலை மா மலையை வந்தியாத, நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே; பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
| [ 10]
|
Go to top |