கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல் குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ? கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்! அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?
| [ 1]
|
முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ? பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ? குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா! என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே!
| [ 2]
|
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் பத்தர் பலர் பாட இருந்த பரமா! கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!
| [ 3]
|
காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச, கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற, வேடித் தொண்டர் சாலவும் தீயர்; சழக்கர்; கோடிக் குழகா! இடம் கோயில் கொண்டாயே?
| [ 4]
|
மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும் மெய் ஆகத்து இருந்தனள்; வேறு இடம் இல்லை; கை ஆர் வளைக் காடு காளோடும் உடன் ஆய்க் கொய் ஆர் பொழில் கோடியே கோயில் கொண்டாயே?
| [ 5]
|
Go to top |
அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து, மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால் குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே!
| [ 6]
|
பறையும் குழலும்(ம்) ஒலிபாடல் இயம்ப, அறையும் கழல் ஆர்க்க, நின்று ஆடும் அமுதே! குறையாப் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இறைவா! தனியே இருந்தாய்; எம்பிரானே!
| [ 7]
|
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ? அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ? முற்றா மதி சூடிய கோடிக் குழகா! எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!
| [ 8]
|
நெடியானொடு நான்முகனும்(ம்) அறிவு ஒண்ணாப் படியான்! பலி கொள்ளும் இடம் குடி இல்லை; கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்; அடிகேள்! அன்பு அது ஆய் இடம் கோயில் கொண்டாயே!
| [ 9]
|
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே.
| [ 10]
|
Go to top |