தந்தன தனத்த தந்தன தனத்த தந்தன தனத்த ...... தனதான |
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார் குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட கொந்தள கம்வைத்த ...... மடவார்பால் வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கிந ரகத்தில் ...... மெலியாமல் வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய்புத்தி ...... தருவாயே பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி பண்டுள தவத்தி ...... லருள்சேயே பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த சங்கரர் தமக்கு ...... மிறையோனே சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற சஞ்சல மறுத்த ...... பெருமாளே. |
Easy Version: கும்பமு(ம்) நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல் வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய் புத்தி தருவாயே பம்பு நதி பங்கு உற்ற ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|
|
கும்பமு(ம்) நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி
ஒத்த மொழி மானார் ... குடத்தை ஒத்த மார்பகங்களை
வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளியைப் போன்ற பேச்சுக்களை
உடையவர்களும் ஆகிய மான் போன்ற விலைமாதர்கள்,
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம்
வைத்த மடவார்பால் ... குங்குமம் ஆகிய அலங்காரத்துடன், நல்ல
புனுகை விட்டு (வாரப்பட்ட), பூங்கொத்துக்களை உள்ள கூந்தலை
உடைய விலைமாதர்களிடத்தில்,
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில்
மெலியாமல் ... வீண் செயல்களைச் செய்து, நட்புச் செயல்களைக்
காட்டி, அழிந்து, நரகத்தில் மெலியாதவாறு,
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய் புத்தி
தருவாயே ... வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த உன்
திருவடியை வணங்குகின்ற புத்தியைக் கொடுத்து அருளுக.
பம்பு நதி பங்கு உற்ற ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில்
அருள் சேயே ... செறிந்துள்ள கங்கை நதியும், (சிவனார்) பாகத்தில்
பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதி தேவியும் (தத்தமது)
பழைமையானத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே,
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள்
உறைவோனே ... பசுமையான மேகங்கள் படியும் சோலைகள்
மிக்குள்ள திருப்பந்தணை நல்லூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும்
இறையோனே ... நாவல் மரத்தடியில் (திருவானைக்காவில்) வந்து
தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவனே,
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த
பெருமாளே. ... சங்கை ஏந்திய திருமாலும், தேவர்களும் (சூரனிடம்)
கொண்ட பயத்தினால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி ஒழித்த பெருமாளே.