தனன தத்தன தானன தானன தனன தத்தன தானன தானன தனன தத்தன தானன தானன ...... தனதான |
முலைம றைக்கவும் வாசலி லேதலை மறைய நிற்கவும் ஆசையு ளோரென முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு நகம ழுத்தவும் லீலையி லேயுற முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர் உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே கடிய சத்திய மாமென வேசொலி யவர்கொ டப்பண மாறிட வீறொடு கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ மலையை மத்தென வாசுகி யேகடை கயிறெ னத்திரு மாலொரு பாதியு மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி வலய முட்டவொ ரோசைய தாயொலி திமிதி மித்திமெ னாவெழ வேயலை மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள வயலை யற்புத னேவினை யானவை தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே. |
Easy Version: முலை மறைக்கவும் வாசலிலே தலை மறைய நிற்கவும் ஆசை உ(ள்)ளோர் என முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும் முகம் ஓடே முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவு(ம்) நகம் அழுத்தவும் லீலையிலே உற முறை மசக்கவும் வாசம் உலா மலர் அணை மீதே கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர் உடல் சளப்பட நாள் வழி நாள் வழி கறை அழிக்கவும் நான் எனவே அ(ண்)ணி விலை ஈதே கடிய சத்தியமாம் எனவே சொ(ல்)லி அவர் கொடு அப்பணம் மாறிட வீறொடு கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ மலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால் ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே துலை வருத் திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா துவள் கடிச் சிலை வேள் பகைவா திரு மறு ஒர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|
|
முலை மறைக்கவும் வாசலிலே தலை மறைய நிற்கவும் ஆசை
உ(ள்)ளோர் என முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும் ...
மார்பகத்தை மறைக்கவும், ஒரு வாசற் படியருகில் தலை மறையும்படி
நிற்கவும், ஆசை கொண்டுள்ளவர்கள் போல, அரும்பு போன்ற பற்களைக்
காட்டிப் (புன்னகை என்னும்) ஒரு சிறிய தூதை அனுப்பவும்,
முகம் ஓடே முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவு(ம்) நகம்
அழுத்தவும் லீலையிலே உற முறை மசக்கவும் ... முகத்துடன்
முகத்தை வைத்து அழுத்தவும், ஆசை மொழிகளைப் பேசவும், நகங்
கொண்டு அழுத்தவும், காம லீலைகளில் பொருந்துமாறு (மாமா,
அத்தான் என்ற) உறவு முறைகளைக் கூறி மயக்கவும்,
வாசம் உலா மலர் அணை மீதே கலை நெகிழ்க்கவும் வாலிபர்
ஆனவர் உடல் சளப்பட நாள் வழி நாள் வழி கறை
அழிக்கவும் ... நறு மணம் உலாவும் மலர்ப் படுக்கையின் மேல் ஆடையை
நெகிழ்ச்சியுறச் செய்தும், இளைஞர்களின் உடல் துன்பப்படவும், நாட்பட
நாட்பட இரத்தத்தைச் கெடச் செய்யவும்,
நான் எனவே அ(ண்)ணி விலை ஈதே கடிய சத்தியமாம்
எனவே சொ(ல்)லி அவர் கொடு அப்பணம் மாறிட வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ ... நான் உள்ளேன்
என்பது போல் சார்ந்து நெருங்கி, (எனக்குக் கொடுக்க வேண்டிய)
பொருள் இதுவே, (நான் கூறுவது) கண்டிப்பான உண்மை மொழியாகும்
என்றெல்லாம் சொல்லி, அவர்கள் கொடுத்து வரும் அந்தப் பணம் வருதல்
இல்லாமல் மாறியவுடன், வெறுப்பும், கோபமும் கலந்த
மனப்பான்மையோடு, சிடு சிடு என்று சினந்து பேசுவாரோடு ஈடுபட்டு
ஒழுகியது முடிவு அடையாதோ?
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால்
ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட ... (மந்தர)
மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற
கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய
மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு,
அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம்
எனா எழவே ... அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும்
ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும்,
அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே துலை
வருத் திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே ... கடல்
கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த
அமுதுடனே அதற்கு ஒப்பாக வந்த அழகிய மயில் போன்ற லக்ஷ்மியின்
வாழ்க்கைக்கு இடமாக (செல்வச் சிறப்போடு) விளங்கும் வயலூரில்
உறையும் அற்புத மூர்த்தியே,
வினையானவை தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி
மணவாளா ... வினைகளின் தொடர்பை அறுத்து எறியும் அழகு,
மேன்மை இவை கொண்ட, முக்தியைத் தரவல்ல, தேவயானையின்
மணவாளனே,
துவள் கடிச் சிலை வேள் பகைவா திரு மறு ஒர் எட்டுடன்
ஆயிரம் மேல் ஒரு துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர்
பெருமாளே. ... வளைந்துள்ள, புதுமை வாய்ந்த (கரும்பு) வில்லைக்
கொண்ட காம வேளாகிய மன்மதனுக்கு எதிராய் வந்து (அவன் தரும்
சிற்றின்பத்துக்கு எதிரான பேரின்பத்தைத் தரும்) செவ்வேளே, அழகிய
மச்ச ரேகை ஆயிரத்து எட்டுக்கும் மேலாகக் கொண்டு, குற்றமெல்லாம்
அறுத்து எறியும் ஒப்பற்ற வேலைக் கொண்ட அழகனே, தேவர்கள்
பெருமாளே.