Back to Top
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
விளக்கு ஏற்றும் போது - திருநாவுக்கரசர் தேவாரம் 4.011
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே
பொது விண்ணப்பம்
எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல பரம்பாருளே ! எவ்வுருவில், எப்பெயரில், நீ இருந்தாலும் எங்கள் பணிவான விண்ணப்பத்தை உமது திருவடியில் சமர்ப்பிக்கின்றோம்.
நாங்கள் வசிக்க இடமும். தேவையான உணவும், மற்றும் அனைத்து வசதிகளும் அருளிய பரம்பொருளே ! உமது ஈடு இணை இல்லாத கருணைக்கு எங்களது நன்றி கடனாக திருமுறை வழிபாட்டை வணக்கத்துடன் சமர்ப்பிக்கின்றோம்.
இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள இயலாத அடியார்கள் சார்பாகவும் நாங்கள் உமது திருவடியைத் தொழுகின்றோம்.
இம் மண்ணுலகில். மானிடப்பிறவி பெற்றுள்ளவர்கள் , அவரவர் செய்த வினையின் பயனாய் பலவிதமான அல்லல்களில் உழல்கிறார்கள்.
இந்த வினை பயன்கள் நீங்க உமது பொன்னார் திருப்பாதங்களில் இந்த வழிபாட்டை சமர்ப்பிக்கின்றோம்.
இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அடியார்கள் எல்லோரும் நீண்ட ஆயுளும், சகல செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ அருள் புரிவீராக !
அடியார் விண்ணப்பம்
இந்த வழிபாடு நடத்தும் சிவ புண்ணியச் செல்வர்கள் ________ மற்றும் , அவர்களுடைய குடும்பத்தார். உறவினர், நண்பர்கள், மற்றும்
இந்த திருமுறை பாரயணத்தில் கலந்து கொள்ளும் அனைத்து அடியார்களும்
நோயற்ற வாழ்வும்,
சகல செல்வங்களும்,
தேக ஆரோக்கியமும்,
நீண்ட ஆயுளும்,
குருலிங்க சங்கம பக்தியும்,
சிவஞானமும் பெற்று வாழ அருள்புரிவீராக.
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை,
தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை,
சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என்
தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
[1]
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
[2]
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
[3]
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:
[4]
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர், பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
[5]
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி, கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய், செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்,
[6]
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள் ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
[7]
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
[8]
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்; நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே! மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
[9]
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
[10]
மறைந்திட மூடிய மாய இருளை, அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
[11]
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
[12]
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே! நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
[13]
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
[14]
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
[15]
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
[16]
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று
[17]
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே, கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
[18]
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி, எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி, மண்ணும், விண்ணும், வானோர் உலகும், துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
[1]
என்னுடை இருளை ஏறத் துரந்தும், அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும், மன்னும் மா மலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;
[2]
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி, நல்லாளோடு நயப்புறவு எய்தியும்; பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும், எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்; கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
[3]
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்; கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்; மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்; மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;
[4]
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய், அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்; வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும், நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி, ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,
[5]
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி, குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை, சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்; வேலம்புத்தூர் விட்டேறு அருளி, கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;
[6]
தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர் வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்; மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்; அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
[7]
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்; ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று, ஈண்டு கனகம் இசையப் பெறாஅது, ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப,
[8]
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்; அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி, இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்; மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து, குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;
[9]
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக, பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்; உத்தரகோசமங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்; பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
[10]
தூ வண மேனி காட்டிய தொன்மையும்; வாதவூரினில் வந்து, இனிது அருளி, பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்; திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி, கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;
[11]
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி, பாவம் நாசம் ஆக்கிய பரிசும்; தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து, நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்; விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,
[12]
குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்; பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு அட்ட மா சித்தி அருளிய அதுவும்; வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு, காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;
[13]
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்; ஓரியூரில் உகந்து, இனிது அருளி, பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்; பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;
[14]
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்; தேன் அமர் சோலைத் திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும்; இடைமருது அதனில் ஈண்ட இருந்து,
[15]
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்; ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து, பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்; திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து, மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;
[16]
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி, பாவகம் பல பல காட்டிய பரிசும்; கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்; ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்; ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;
[17]
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்; திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்; கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்; கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்; புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;
[18]
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்; அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து, சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு, இந்திர ஞாலம் போல வந்தருளி, எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,
[19]
தானே ஆகிய தயாபரன், எம் இறை, சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி, அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்; மந்திர மா மலை மகேந்திர வெற்பன்,
[20]
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல், எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின் ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு, நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்; ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்
[21]
ஆனந்தம்மே, ஆறா அருளியும்; மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்; அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன் கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;
[22]
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும், தூய மேனி, சுடர்விடு சோதி காதலன் ஆகி, கழுநீர் மாலை ஏல் உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்; அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
[23]
பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்; மீண்டு வாரா வழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம் பதி ஆகவும், பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,
[24]
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய தேவ தேவன் திருப் பெயர் ஆகவும், இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள் மலை ஆகவும், எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,
[25]
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி; நாயினேனை நலம் மலி தில்லையுள், கோலம் ஆர்தரு பொதுவினில், வருக' என, ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி; அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்
[26]
ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்; எய்த வந்திலாதார் எரியில் பாயவும், மால் அது ஆகி, மயக்கம் எய்தியும், பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும், கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,
[27]
நாத! நாத!' என்று அழுது அரற்றி, பாதம் எய்தினர் பாதம் எய்தவும்; பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்; எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்
[28]
பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில் கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு, அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை, இறைவன், ஈண்டிய அடியவரோடும், பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன் ஒலிதரு கைலை உயர் கிழவோனே. (145) திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன; இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,
[1]
சிறிய ஆகப் பெரியோன். தெரியின் வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும், தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும், சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து
[2]
எறியது வளியின் x கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும் x படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை கரப்போன்; கரப்பவை கருதாக்
[3]
கருத்துடைக் கடவுள்; திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும் அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு
[4]
மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல் தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர் வானில் கலப்பு வைத்தோன்; மேதகு காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட
[5]
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று, எனைப் பல கோடி, எனைப் பல பிறவும், அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று முன்னோன் காண்க! முழுதோன் காண்க! தன் நேர் இல்லோன் தானே காண்க! ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
[6]
கானப் புலி உரி அரையோன் காண்க! நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும், ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்! இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!
[7]
அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க! பரமன் காண்க! பழையோன் காண்க! பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க! அற்புதன் காண்க! அநேகன் காண்க! சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!
[8]
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க! பத்தி வலையில் படுவோன் காண்க! ஒருவன் என்னும் ஒருவன் காண்க! விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க! அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!
[9]
இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க! அரியதில் அரிய அரியோன் காண்க! மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க! நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க! மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!
தேவரும் அறியாச் சிவனே காண்க! பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க! கண்ணால் யானும் கண்டேன் காண்க! அருள் நனி சுரக்கும் அமுதே காண்க! கருணையின் பெருமை கண்டேன் காண்க!
[12]
புவனியில் சேவடி தீண்டினன் காண்க! சிவன் என யானும் தேறினன் காண்க! அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க! குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளும், தானும், உடனே காண்க!
[13]
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே கரு மா முகிலின் தோன்றி, திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி, திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய, ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,
[14]
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப, நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர, எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து, முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி, பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,
[15]
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள, செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக் கேதக் குட்டம் கையற ஓங்கி, இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை, நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்
[16]
தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும், அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன; ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின் பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து, சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,
[17]
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச் சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ் வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்
[18]
மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின் மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி, அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு, தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க! கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க! பேர் அமைத் தோளி காதலன், வாழ்க! ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க! காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!
[21]
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி! பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி! நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய், நிற்பன நிறீஇச் x
[22]
சொல் பதம் கடந்த தொல்லோன்; உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்; கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்; விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்; பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்
[23]
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை; இன்று எனக்கு எளிவந்து, அருளி, அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்; இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி! அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!
[24]
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி! ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய, போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்: மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம், மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,
[25]
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்; முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்; ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்; மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;
[26]
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு, அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்; முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி, ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து, வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,
[27]
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய், துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்; ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்; பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,
[28]
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்; ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில் தாள் தளை இடுமின்! சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்! பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;
[29]
தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி, அறை கூவி, ஆட்கொண்டருளி, மறையோர் கோலம் காட்டி அருளலும்; உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,
[30]
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி, தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி, பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து, நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும், கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்
[31]
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு கோல் தேன் கொண்டு செய்தனன்; ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் வீழ்வித்தாங்கு, அன்று, அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்
[32]
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்: சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ? தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு
[33]
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்; விழுங்கியும் ஒல்லகில்லேன்: செழும், தண் பால் கடல் திரை புரைவித்து, உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப, வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,
[34]
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள், எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது
[35]
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில் கருணை வான்தேன் கலக்க
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப் போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று) அடி முடி அரியும் ஆதர வதனிற்
[1]
கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து) ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து) ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள், வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,
[2]
யானை முதலா எறும்பு ஈறு ஆய, ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்; மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து, ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்; ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
[3]
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்; மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்; ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்; அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்; ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
[4]
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்; எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்; ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்; தக்க தச மதி தாயொடு தான் படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;
[5]
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்; காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்: கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
[6]
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து, கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து, எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து, ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
[7]
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்; கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்; செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்; நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
[8]
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்; தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி, முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;
[9]
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி, நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்; சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும் விரதமே பரம் ஆக, வேதியரும்,
[10]
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்; சமய வாதிகள் தம் தம் மதங்களே அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,
[11]
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் கலா பேதத்த கடு விடம் எய்தி, அதில் பெரு மாயை எனைப் பல சூழவும், தப்பாமே, தாம் பிடித்தது சலியா, தழல் அது கண்ட மெழுகு அது போல,
[12]
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து, ஆடியும், அலறியும், பாடியும், பரவியும், கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும் படியே ஆகி, நல் இடை அறா அன்பின், பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
[13]
கசிவது பெருகி, கடல் என மறுகி, அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப, நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
[14]
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும் கதியது பரம அதிசயம் ஆக, கற்றா மனம் எனக் கதறியும், பதறியும், மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது, அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
[15]
குருபரன் ஆகி, அருளிய பெருமையை, சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை, பிறிவினை அறியா நிழல் அது போல, முன் பின் ஆகி, முனியாது, அத் திசை என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
[16]
அன்பு எனும் ஆறு கரை அது புரள, நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி, உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப, கர மலர் மொட்டித்து, இருதயம் மலர, கண் களி கூர, நுண் துளி அரும்ப,
கூடல் இலங்கு குருமணி, போற்றி! தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி! இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி! மூவா நான்மறை முதல்வா, போற்றி! சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!
[19]
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி! கல் நார் உரித்த கனியே, போற்றி! காவாய், கனகக் குன்றே, போற்றி! ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி! படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!
வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி! ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி! மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை ஆழாமே அருள் அரசே, போற்றி! தோழா, போற்றி! துணைவா, போற்றி!
[24]
வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி! முத்தா போற்றி! முதல்வா, போற்றி! அத்தா, போற்றி! அரனே, போற்றி! உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி! விரி கடல் உலகின் விளைவே, போற்றி!
[25]
அருமையில் எளிய அழகே, போற்றி! கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி! மன்னிய திருஅருள் மலையே, போற்றி! என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல் சென்னியில் வைத்த சேவக, போற்றி!
[26]
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி! அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி! அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி! முழுவதும் இறந்த முதல்வா, போற்றி! மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி! சீர் ஆர் திருவையாறா, போற்றி! அண்ணாமலை எம் அண்ணா, போற்றி! கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!
[30]
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி! பாகம் பெண் உரு ஆனாய், போற்றி! பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!
[31]
குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி! பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி! கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!
[32]
அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி! இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு, அத்திக்கு, அருளிய அரசே, போற்றி! தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி தோளா முத்தச் சுடரே, போற்றி! ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி! ஆரா அமுதே, அருளே, போற்றி! பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!
[40]
தாளி அறுகின் தாராய், போற்றி! நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி! சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி! சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி! மந்திர மா மலை மேயாய், போற்றி!
[41]
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி! புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி! அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி! கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி! இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!
மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என் கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம் பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும் கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.
[1]
கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா! உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!
[2]
உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி, மத்த மனத்தொடு, மால் இவன்' என்ன, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும் தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?
[3]
சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி, ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே, மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல் தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!
[4]
தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்; அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே!
[5]
பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி, இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.
[6]
முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள், செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய், உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே.
[7]
உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும், இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின், உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக் கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!
[8]
பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான், சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்; அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.
[9]
புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே! தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே! நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்; ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என் ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!
[11]
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்? வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்; தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம் மானே! உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே.
[12]
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன் இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற; பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல், வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?
[13]
ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன்; பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்; புத்தேளிர் கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன், சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே.
[14]
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி, ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய், கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!
[15]
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால் தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழவேண்டி; சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன், பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.
[16]
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்; குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்; விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன் அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?
[17]
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம் பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ் விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்; தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!
[18]
வேனில் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே! ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய் வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே.
[19]
வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்; வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.
வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!விண்ணோர் பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய், பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக, பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு, உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா! வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்; கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.
[21]
வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான் வினைக்கேடன்' என்பாய் போல, இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ! அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்; முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு? முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!
[22]
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும், நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய் அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர் பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே! எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே?
[23]
பேசில், தாம் ஈசனே, எந்தாய், எந்தை பெருமானே!' என்று என்றே பேசிப் பேசி; பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி; போற்றி எம்பெருமானே!' என்று; பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை, மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ! என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?
[24]
வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று; அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம் எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன் வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி, மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை, திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்; எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?
[25]
சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன் கண் இணை நின் திருப்பாதப் போதுக்குஆக்கி, வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன் மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர வந்து, எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெரும் கடலே!மலையே! உன்னைத் தந்தனை செம் தாமரைக் காடு அனைய மேனித் தனிச் சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே.
[26]
தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி, கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு, இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி, அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை, முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல் கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
[27]
கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்; கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே!
[28]
விச்சை தான் இது ஒப்பது உண்டோ? கேட்கின் மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி, அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்புகூர; அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம், ஆகி, ஆர் அழல் ஆய், அந்தம் ஆய், அப்பால் நின்ற செச்சை மா மலர் புரையும் மேனி, எங்கள் சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே!
[29]
தேவர் கோ அறியாத தேவ தேவன்; செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி; மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை; யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்; யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்; மேவினோம் அவன் அடியார் அடியாரோடு; மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.
ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை; என்பு உருகிப் பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாத மலர் சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இலை; துணை இலி பிண நெஞ்சே! தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.
[31]
அறிவு இலாத எனை, புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மெய்ந் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை, பந்தனை அறுப்பானை, பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும், மாறு ஆடுதி; பிண நெஞ்சே! கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.
[32]
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே! தேறுகின்றிலம் இனி உனை; சிக்கெனச் சிவன் அவன் திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம் கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு இது; கேட்கவும் கில்லேனே.
[33]
கிற்ற வா, மனமே! கெடுவாய்; உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம் முற்று இலா இளம் தளிர் பிரிந்து இருந்து நீ உண்டன எல்லாம் முன் அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே.
[34]
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்த்தும் இலை நெஞ்சே பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே.
[35]
புகுவது ஆவதும்; போதரவு இல்லதும்; பொன் நகர் புகப் போதற்கு உகுவது ஆவதும்; எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும்; நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி, மிகுவது ஆவதும்; இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே?
[36]
வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே, முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்; இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே.
[37]
ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத தேனை, ஆன் நெயை, கரும்பின் இன் தேறலை, சிவனை, என் சிவலோகக் கோனை, மான் அன நோக்கி தன் கூறனை, குறுகிலேன்; நெடும் காலம், ஊனை, யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.
[38]
ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து, நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி, தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்; தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே?
[39]
வேனில் வேள் கணை கிழித்திட, மதி சுடும்; அது தனை நினையாதே, மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி, தேன் நிலாவிய திருஅருள் புரிந்த, என் சிவன் நகர் புகப் போகேன்; ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே.
இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக் கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே; வருக' என்று பணித்தனை; வான் உளோர்க்கு ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே.
[41]
உண்டு ஓர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம் பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை; தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்; கண்டும் கண்டிலேன்: என்ன கண் மாயமே!
[42]
மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே, ஞாலமே, விசும்பே, இவை வந்து போம் காலமே! உனை என்று கொல் காண்பதே?
[43]
காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என, பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப் பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.
[44]
போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று, ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்; ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும் கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே.
[45]
கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்; நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும், எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே?
[46]
எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும் தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்; முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும் சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே.
[47]
செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு, புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள் எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்: கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!
[48]
கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு இட்ட அன்பரொடு, யாவரும் காணவே, பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே.
[49]
அறிவனே! அமுதே! அடி நாயினேன் அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டதும்? அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்? அறிவனோ, அல்லனோ? அருள், ஈசனே!
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே: தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.
[51]
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப் பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும், பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!
[52]
போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி, வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!
[53]
உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான், பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்; மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான், அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?
[54]
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக் கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட, ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!
[55]
உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல் உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின் கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன், முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.
[56]
முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப் பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய் துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர் பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.
[57]
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன், நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத் தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.
[58]
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ? என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்! பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?
[59]
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன். நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும் தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!
போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி! போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இரு சுடர், கடவுளானே!
[63]
கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி! விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி! உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி! சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!
[64]
சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப் பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண், மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி! இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.
[65]
இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி! போற்றி! பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி! பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி! ஒழித்திடு இவ் வாழ்வு; போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே!
[66]
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி! கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி! செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி! உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!
[67]
ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர் குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி! வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி! தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.
புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு, பூண நோக்கினாய்; புணர்ப்பது அன்று இது என்ற போது, நின்னொடு என்னொடு, என் இது ஆம்? புணர்ப்பது ஆக, அன்று இது ஆக, அன்பு நின் கழல்கணே புணர்ப்பது ஆக, அம் கணாள, புங்கம் ஆன போகமே!
[71]
போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்; ஏக! நின் கழல் இணை அலாது இலேன், என் எம்பிரான்; ஆகம் விண்டு, கம்பம் வந்து, குஞ்சி அஞ்சலிக்கணே ஆக, என் கை; கண்கள் தாரை ஆறு அது ஆக; ஐயனே!
[72]
ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன்; பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன்; என் எம்பிரான், மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்கணே மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.
[73]
வேண்டும், நின் கழல்கண் அன்பு; பொய்மை தீர்த்து, மெய்ம்மையே ஆண்டுகொண்டு, நாயினேனை, ஆவ' என்று அருளு, நீ; பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி! போற்றி!' என்றும், என்றும் மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன! நின் வணங்கவே.
[74]
வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்; வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு, இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே?
[75]
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால் தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே; அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா; எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?
[76]
எய்தல் ஆவது என்று, நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு உய்தல் ஆவது, உன்கண் அன்றி, மற்று ஓர் உண்மை இன்மையின், பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு இஃது அலாது, நின்கண் ஒன்றும்வண்ணம் இல்லை; ஈசனே!
[77]
ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும், பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன். என் எம்பிரான்! நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா! ஒர் நின் அலால், தேசனே! ஓர் தேவர் உண்மை சிந்தியாது, சிந்தையே.
[78]
சிந்தை, செய்கை, கேள்வி, வாக்கு, சீர் இல் ஐம் புலன்களால், முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன், வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்; எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று, இருப்பனே.
[79]
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள் கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும், நெருப்பும் உண்டு; யானும் உண்டிருந்தது உண்டு; அது; ஆயினும், விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே!
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய்; இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்; அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம் பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.
[81]
பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று, ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாதால்; ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே.
[82]
அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ? அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்; செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா! கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.
[83]
காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும் பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி! ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்; ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே?
[84]
மான் நேர் நோக்கி, உமையாள் பங்கா, மறை ஈறு அறியா மறையோனே, தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும் கோனே, சிறிது என் கொடுமை பறைந்தேன்; சிவ மா நகர் குறுகப் போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே.
[85]
புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான். அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்; சிறவே செய்து வழுவாது, சிவனே! நின் தாள் சேர்ந்தாரே.
[86]
தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு; போரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்; ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே.
[87]
அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே, பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?
[88]
பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால், திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி, தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!
[89]
யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்; ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே? தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும் மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை, வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்; ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும், கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
[91]
மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்; மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்; பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு, நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே?
[92]
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; போத' என்று எனைப் புரிந்து நோக்கவும், வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே, அரத்த மேனியாய், அருள்செய் அன்பரும், நீயும், அங்கு எழுந்தருளி, இங்கு எனை இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான், வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே?
[93]
இல்லை நின் கழற்கு அன்பு அது, என்கணே; ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே! கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு, என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்; எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏது கொண்டு, நான் ஏது செய்யினும், வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி, மீட்கவும், மறு இல் வானனே?
[94]
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ, ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா, ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி, நான் உனைப் பருக வைத்தவா, ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே!
[95]
விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய்; விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும், வைச்சு வாங்குவாய்; வஞ்சகப் பெரும் புலையனேனை, உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர் நச்சு மா மரம் ஆயினும், கொலார்; நானும் அங்ஙனே, உடைய நாதனே!
[96]
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும் கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின் அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே!
[97]
அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன் ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப் பருக நின்றது ஓர் துப்பனே, சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய, வையகத்து, எங்கள் மன்னனே?
[98]
மன்ன, எம்பிரான், வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும் முன்ன, எம்பிரான், வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன, எம்பிரான், வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால் பன்ன, எம்பிரான், வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே.
[99]
பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு, ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன் கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம் வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே! திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய் விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின் உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே, கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?
[2]
கார் உறு கண்ணியர் ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய் வேர் உறுவேனை விடுதி கண்டாய்?விளங்கும் திருவா ரூர் உறைவாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே.
[3]
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே, தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.
[4]
செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால் உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே, வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.
[5]
மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே; வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே, பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?
[6]
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.
[7]
தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின் சீர் அருள் என்கொல் என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!
[8]
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!
[9]
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே, வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.
[10]
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.
[11]
நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்டு விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ, அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே, கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.
[12]
கடலினுள் நாய் நக்கி ஆங்கு, உன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை விடுதி கண்டாய்? விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, மடலின் மட்டே, மணியே, அமுதே, என் மது வெள்ளமே.
[13]
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.
[14]
களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே, எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!
[15]
என்னை அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்; மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து, ஒளி மிளிரும் வெண்மையனே, விட்டிடுதி கண்டாய்? மெய் அடியவர்கட்கு அண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம் பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே.
[22]
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்; மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே, உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.
எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க, உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.
[25]
பெரு நீர் அற, சிறு மீன் துவண்டு ஆங்கு, நினைப் பிரிந்த வெரு நீர்மையேனை விடுதி கண்டாய்? வியன் கங்கை பொங்கி வரும் நீர் மடுவுள், மலைச் சிறு தோணி வடிவின், வெள்ளைக் குரு நீர் மதி பொதியும் சடை, வானக் கொழு மணியே!
[26]
கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து, அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக் கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.
[27]
புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம் கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே! துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.
[28]
குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம் விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே, மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.
[29]
மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கி, வித்து உறுவேனை விடுதி கண்டாய்? வெண் தலை மிலைச்சி, கொத்து உறு போது மிலைந்து, குடர் நெடு மாலை சுற்றி, தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே.
[30]
சச்சையனே, மிக்க தண் புனல், விண், கால், நிலம், நெருப்பு, ஆம் விச்சையனே, விட்டிடுதி கண்டாய்? வெளியாய், கரியாய், பச்சையனே, செய்ய மேனியனே, ஒண் பட அரவக் கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே.
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து, மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள் பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக் கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.
[33]
குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில் விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து, எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!
[34]
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின் அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம் பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.
அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல்' என்னின் அல்லால், விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண், திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா, வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.
[37]
அடர் புலனால், நின் பிரிந்து அஞ்சி, அம் சொல் நல்லார் அவர் தம் விடர் விடலேனை விடுதி கண்டாய்? விரிந்தே எரியும் சுடர் அனையாய், சுடுகாட்டு அரசே, தொழும்பர்க்கு அமுதே, தொடர்வு அரியாய், தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.
[38]
தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே, தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.
[39]
வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு, மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக் கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும் மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியா விதி அடியேனை விடுதி கண்டாய்? வெள் தலை முழையில் பதி உடை வாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சி, மதி நெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே.
[42]
மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே, விட்டிடுதி கண்டாய்? மிக்க வேத மெய்ந் நூல் சொன்னவனே, சொல் கழிந்தவனே, கழியாத் தொழும்பர் முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன் வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித் தேடிற்றிலேன்; சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.
[45]
உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின் ஒப்பாய், விழைதருவேனை விடுதி கண்டாய்? விடின், வேலை நஞ்சு உண் மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய் மதியன் பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே.
[46]
பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு எய்தி, விழ, பழித்து, விழித்திருந்தேனை விடுதி கண்டாய்? வெண் மணிப் பணிலம் கொழித்து, மந்தாரம் மந்தாகினி நுந்தும், பந்தப் பெருமை தழிச் சிறை நீரில், பிறைக் கலம் சேர்தரு தாரவனே.
[47]
தாரகை போலும் தலைத் தலை மாலை, தழல் அரப் பூண் வீர, என் தன்னை விடுதி கண்டாய்? விடின், என்னை மிக்கார் ஆர் அடியான்' என்னின், உத்தரகோசமங்கைக்கு அரசின் சீர் அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே.
[48]
சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பை; தொழும்பையும் ஈசற்கு' என்று விரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய்? விடின், வெம் கரியின் உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு எரிப் பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்சன்' என்று ஏசுவனே.
[49]
ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்? செம் பவள வெற்பின் தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு இரங்கி, காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே. திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண் மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்? மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து, போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன் ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே! ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!
[1]
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம் பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!' நேரிழையீர்! சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும் தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?' ஏல் ஓர் எம்பாவாய்!
[2]
முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என் அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'. பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்! புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?' எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?' சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?' இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!
[3]
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?' வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?' எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும் கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே' விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை, கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம் உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து எண்ணி, குறையில், துயில்' ஏல் ஓர் எம்பாவாய்!
[4]
மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, நாம் போல் அறிவோம், என்று உள்ள பொக்கங்களே பேசும் பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய். ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான் கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடி, சிவனே! சிவனே! என்று ஓலம் இடினும், உணராய், உணராய் காண்! ஏலக்குழலி பரிசு' ஏல் ஓர் எம்பாவாய்!
[5]
மானே! நீ நென்னலை, நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும், நாணாமே போன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ? வானே, நிலனே, பிறவே, அறிவு அரியான் தானே வந்து, எம்மைத் தலையளித்து, ஆட்கொண்டருளும் வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு, உன் வாய் திறவாய்! ஊனே உருகாய், உனக்கே உறும்; எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[6]
அன்னே, இவையும் சிலவோ? பல அமரர் உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான், சின்னங்கள் கேட்ப, சிவன் என்றே வாய் திறப்பாய்; தென்னா என்னா முன்னம், தீ சேர் மெழுகு ஒப்பாய்; என்னானை, என் அரையன், இன் அமுது, என்று எல்லோமும் சொன்னோம் கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ? வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால், என்னே துயிலின் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!
[7]
கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்; ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்; கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை, கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ? வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை, ஏழை பங்காளனையே பாடு!' ஏல் ஓர் எம்பாவாய்!
[8]
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்; இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல், என்ன குறையும் இலோம்' ஏல் ஓர் எம்பாவாய்!
[9]
பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்; போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே! பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்; வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும், ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்; கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்! ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்? ஏது அவனைப் பாடும் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!
[10]
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி, ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல்போல் செய்யா! வெள் நீறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல் மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா! ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம்; எய்யாமல் காப்பாய் எமை' ஏல் ஓர் எம்பாவாய்!
[11]
ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும், காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி, வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள் ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப, பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம் ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[12]
பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால், அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால், தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால், எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம் சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப; கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க; பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[13]
காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட, கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட, சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி, சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி, ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி, பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன் பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[14]
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே, நம் பெருமான் சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களி கூர, நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப, பார் ஒரு கால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்; பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள், வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி, ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[15]
முன்னி, கடலை, சுருக்கி எழுந்து, உடையாள் என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம் என்னச் சிலை குலவி, நம்தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு முன்னி, அவள், நமக்கு முன் சுரக்கும் இன் அருளே என்னப் பொழியாய் மழை' ஏல் ஓர் எம்பாவாய்!
[16]
செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால், எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதா, கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி, இங்கு, நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி, செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை, அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர் அமுதை, நங்கள் பெருமானை, பாடி, நலம் திகழ, பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[17]
அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல், கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப, தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல, பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர் விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி, கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி, பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
[18]
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம், என்று அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால், எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம், கேள்! எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க; எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க; கங்குல், பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க. இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல், எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு?' ஏல் ஓர் எம்பாவாய்!
[19]
போற்றி! அருளுக, நின் ஆதி ஆம் பாத மலர். போற்றி! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள். போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம். போற்றி! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள். போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள். போற்றி! மால், நான்முகனும், காணாத புண்டரிகம். போற்றி! யாம் உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள். போற்றி! யாம் மார்கழி நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்! திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி, எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு, தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான், அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும் அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
[1]
பாரார், விசும்பு உள்ளார், பாதாளத்தார், புறத்தார், ஆராலும் காண்டற்கு அரியான்; எமக்கு எளிய பேராளன்; தென்னன்; பெருந்துறையான்; பிச்சு ஏற்றி, வாரா வழி அருளி, வந்து, என் உளம் புகுந்த ஆரா அமுது ஆய், அலை கடல்வாய் மீன் விசிறும் பேர் ஆசை வாரியனை பாடுதும் காண்; அம்மானாய்!
[2]
இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும், அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி, எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்; சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான், பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
[3]
வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும், கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு, ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த, வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
[4]
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை, வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி, கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை, தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!
[5]
கேட்டாயோ தோழி! கிறி செய்த ஆறு ஒருவன் தீட்டு ஆர் மதில் புடை சூழ், தென்னன் பெருந்துறையான், காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி, தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி, நாட்டார் நகை செய்ய, நாம் மேலை வீடு எய்த, ஆள் தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண்; அம்மானாய்!
[6]
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை, சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின் மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை, நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை, தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும் ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!
[7]
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான், விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன், கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை, மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை, தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை, பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில் கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!
[10]
செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான், தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான், அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும் அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!
[11]
மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும், எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால் இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!
[12]
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச் செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக் கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!
[13]
ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர் ஆய்த் தேவர் ஆய் ஏனைப் பிற ஆய், பிறந்து, இறந்து எய்த்தேனை ஊனையும் நின்று உருக்கி, என் வினையை ஓட்டு உகந்து, தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய கோன் அவன் போல் வந்து, என்னை, தன் தொழும்பில் கொண்டருளும் வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
[14]
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து, அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து, சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த, செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!
[15]
ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து, தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய், வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும், தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர் ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும் கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை, வெளி வந்த மால், அயனும், காண்பு அரிய வித்தகனை, தெளி வந்த தேறலை, சீர் ஆர் பெருந்துறையில் எளிவந்து, இருந்து, இரங்கி, எண் அரிய இன் அருளால் ஒளி வந்து, என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ, அளி வந்த அந்தணனை பாடுதும் காண்; அம்மானாய்!
[18]
முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும் பின்னானை; பிஞ்ஞகனை; பேணு பெருந்துறையின் மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனை; தென் ஆனைக்காவானை; தென் பாண்டி நாட்டானை; என்னானை, என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை அன்னானை; அம்மானை பாடுதும் காண்: அம்மானாய்!
[19]
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான், கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி, தன் அடியார் குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோதாட்டி, சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே பற்றி, இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான், பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்! திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
முத்து நல் தாமம், பூ மாலை, தூக்கி, முளைக்குடம், தூபம், நல் தீபம்,வைம்மின்! சத்தியும், சோமியும், பார் மகளும், நா மகளோடு பல்லாண்டு இசைமின்! சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின்! அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[1]
பூ இயல் வார் சடை எம்பிராற்கு, பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும், மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்; கூவுமின், தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம் கோன், எம் கூத்தன், தேவியும் தானும் வந்து, எம்மை ஆள, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!
[2]
சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய பொன் சிந்தி, நிதி பரப்பி, இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் எழில் சுடர் வைத்து, கொடி எடுமின்; அந்தரர் கோன், அயன் தன் பெருமான், ஆழியான் நாதன், நல் வேலன் தாதை, எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு, ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[3]
காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்; காம்பு அணிமின்கள், கறை உரலை; நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக' என்று வாழ்த்தி, தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம் பொன் கோயில் பாடி, பாச வினையைப் பறித்து நின்று, பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[4]
அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர், நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில் பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்; செறிவு உடை மும் மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம் பொன் கோயில் பாடி, முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[5]
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர், உலகம் எலாம் உரல் போதாது என்றே; கலக்க அடியவர் வந்து நின்றார், காண உலகங்கள் போதாது என்றே; நலக்க, அடியோமை ஆண்டுகொண்டு நாள் மலர்ப் பாதங்கள் சூடத் தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி, மகிழ்ந்து, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[6]
சூடகம், தோள் வளை, ஆர்ப்ப ஆர்ப்ப, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப, நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்கினன், எங்கள் பரா பரனுக்கு, ஆடக மா மலை அன்ன கோவுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[7]
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க, தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, சோத்தம், பிரான்!' என்று சொல்லிச் சொல்லி, நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[8]
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி, மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான், செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி, ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[9]
முத்து அணி கொங்கைகள் ஆட ஆட, மொய் குழல் வண்டு இனம் ஆட ஆட, சித்தம் சிவனொடும் ஆட ஆட, செம் கயல் கண் பனி ஆட ஆட, பித்து எம்பிரானொடும் ஆட ஆட, பிறவி பிறரொடும் ஆட ஆட, அத்தன் கருணையொடு ஆட ஆட, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[10]
மாடு, நகை வாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம் பவளம் துடிப்ப, பாடுமின், நம் தம்மை ஆண்ட ஆறும், பணி கொண்ட வண்ணமும்; பாடிப் பாடித் தேடுமின், எம்பெருமானை; தேடி, சித்தம் களிப்ப, திகைத்து, தேறி, ஆடுமின்; அம்பலத்து ஆடினானுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[11]
மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை, ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள், பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[12]
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்! என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன தாள்கள் பாடி, பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
[13]
சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட, செம் கனி வாய் இதழும் துடிப்ப, சேயிழையீர்! சிவலோகம் பாடி, கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடை முடியான் கழற்கே, பொங்கிய காதலின் கொங்கை பொங்க, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
[14]
ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத் தேனை, பழச் சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனை, பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத் தழும்பு ஏற வாழ்த்தி, பானல் தடம் கண் மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[15]
ஆவகை, நாமும் வந்து, அன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி, விண்மேல் தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம் மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச் சே வலன் ஏந்திய வெல் கொடியான், சிவபெருமான், புரம் செற்ற கொற்றச் சேவகன், நாமங்கள் பாடிப் பாடி, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!
[16]
தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல் வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும் ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று, போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
[17]
அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி, கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி, இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!
[18]
வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி, சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி, சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி, கட்டிய மாசுணக் கச்சை பாடி, கங்கணம் பாடி, கவித்த கைம்மேல் இட்டுநின்று ஆடும் அரவம் பாடி, ஈசற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும், மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச் சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[1]
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[2]
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே, நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும், அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[3]
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின், என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி, வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[4]
அத் தேவர் தேவர்; அவர் தேவர்;' என்று, இங்ஙன், பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே, பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[5]
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும் பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[6]
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை, கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்; சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[7]
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு, நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்! குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[8]
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[9]
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து, நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம், தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத் தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[10]
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே, கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட, அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[11]
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை, பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை, சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[12]
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்; தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்; ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
[13]
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி, அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[14]
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம் தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்? வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான் தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[15]
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும், கள்ளப்படாத களிவந்த வான் கருணை வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட் கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[16]
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[17]
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்; பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும், சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக் கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
[18]
கள்வன், கடியன், கலதி, இவன்' என்னாதே, வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே; உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
[19]
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க, நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை, உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்; ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!
[1]
திரு ஆர் | பெருந்துறை | மேய பிரான் | என் பிறவிக் கரு வேர் | அறுத்தபின், | யாவரையும் | கண்டது இல்லை; அரு ஆய்,| உருவமும் | ஆய பிரான், | அவன் மருவும் திருவாரூர் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!
[2]
அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர்கட்கும், தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம், வந்து, நம்மை உருக்கும், பணி கொள்ளும், என்பது கேட்டு, உலகம் எல்லாம் சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[3]
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே பவ மாயம் காத்து, என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம் ஆய செம் சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து, சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[4]
அருமந்த தேவர், அயன், திருமாற்கு, அரிய சிவம் உருவந்து, பூதலத்தோர் உகப்பு எய்த, கொண்டருளி, கரு வெந்து வீழக் கடைக்கணித்து, என் உளம் புகுந்த திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[5]
அரை ஆடு நாகம் அசைத்த பிரான், அவனியின்மேல், வரை ஆடு மங்கை தன் பங்கொடும், வந்து, ஆண்ட திறம் உரை ஆட, உள் ஒளி ஆட, ஒள் மா மலர்க் கண்களில் நீர் திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[6]
ஆ! ஆ! அரி, அயன், இந்திரன், வானோர்க்கு, அரிய சிவன், வா, வா' என்று, என்னையும் பூதலத்தே வலிந்து ஆண்டுகொண்டான்; பூ ஆர் அடிச் சுவடு என் தலைமேல் பொறித்தலுமே, தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[7]
கறங்கு ஓலை போல்வதுஓர் காயப் பிறப்போடுஇறப்பு என்னும், அறம், பாவம், என்று இரண்டு அச்சம் தவிர்த்து, என்னை ஆண்டுகொண்டான்; மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய, அத் திறம் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
[8]
கல் நார் உரித்து என்ன, என்னையும் தன் கருணையினால் பொன் ஆர் கழல் பணித்து, ஆண்ட பிரான் புகழ் பாடி, மின் நேர் நுடங்கு இடை, செம் துவர் வாய், வெள் நகையீர்! தென்னா, தென்னா' என்று தெள்ளேணம் கொட்டாமோ!
[9]
கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன் புன வேய் அன வளைத் தோளியொடும் புகுந்தருளி, நனவே எனைப் பிடித்து, ஆட்கொண்டவா நயந்து, நெஞ்சம், சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!
[10]
கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே, அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல் மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[11]
முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட, அத்திக்கு அருளி, அடியேனை ஆண்டுகொண்டு, பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி, தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[12]
பார் பாடும், பாதாளர் பாடும், விண்ணோர் தம் பாடும், ஆர் பாடும், சாரா வகை அருளி, ஆண்டுகொண்ட நேர் பாடல் பாடி, நினைப்பு அரிய தனிப் பெரியோன் சீர் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
[13]
மாலே, பிரமனே, மற்று ஒழிந்த தேவர்களே, நூலே, நுழைவுஅரியான் நுண்ணியன் ஆய், வந்து, அடியேன் பாலே புகுந்து, பரிந்து உருக்கும் பாவகத்தால், சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!
[14]
உருகிப் பெருகி, உளம் குளிர முகந்துகொண்டு, பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை மருவி, திகழ் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம் திருவைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
[15]
புத்தன், புரந்தர ஆதியர், அயன், மால், போற்றி செயும் பித்தன்; பெருந்துறை மேய பிரான்; பிறப்பு அறுத்த அத்தன்; அணி தில்லை அம்பலவன்; அருள் கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ!
[16]
உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரம், ஆம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும் கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்தருளும் செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
[17]
வான் கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல், நீர், மண், கெடினும், தான் கெட்டல் இன்றி, சலிப்பு அறியாத் தன்மையனுக்கு, ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய், நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
[18]
விண்ணோர் முழு முதல்; பாதாளத்தார் வித்து; மண்ணோர் மருந்து; அயன், மால், உடைய வைப்பு; அடியோம் கண் ஆர, வந்துநின்றான்; கருணைக் கழல் பாடி, தென்னா, தென்னா' என்று தெள்ளேணம் கொட்டாமோ!
[19]
குலம் பாடி, கொக்கு இறகும் பாடி, கோல் வளையாள் நலம் பாடி, நஞ்சு உண்டவா பாடி, நாள்தோறும் அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பு ஆடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! . திருச் சாழல்
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம், பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை? ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!
[1]
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்; துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ! மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா, தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!
[2]
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ! தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம் தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ! தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!
[5]
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய், நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ! நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம் சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!
[6]
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!
[7]
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!
[8]
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ! பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர் விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!
[9]
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ! ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள், வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!
[10]
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து, கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ! கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!
[11]
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி; ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ! ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும், வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!
[12]
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும், கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!
[13]
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன், தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ! தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம், ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!
[14]
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே, இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ! தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!
[15]
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை, அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ! அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும், கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!
[16]
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ! நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா, எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!
[17]
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி, நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ! நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ் அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!
[18]
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்; எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ! எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும், தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!
[19]
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும் இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ! அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல், திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ!
[1]
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்; அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!
[2]
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து, தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான், மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின் வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!
[3]
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே, எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல், விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால் புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!
[4]
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!
[5]
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி, சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி, உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ!
[6]
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து; இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான், அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
[7]
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி, முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக் கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!
[8]
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர் என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய், கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள் பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!
[9]
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான், சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான், கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி, போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!
[10]
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய், கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!
[11]
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும் கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன் ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய, போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!
[12]
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி, நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும், நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப் பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
[13]
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான், தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா, நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!
[14]
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன், செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும், பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய, பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
[15]
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு, மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி, தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
[16]
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும், பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே? என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
[17]
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ, தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய் பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!
[18]
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய், முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல், புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே, தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!
[1]
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்; கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி, துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!
[2]
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
[3]
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால் நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி, நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன், சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!
[4]
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன், புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்; உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
[5]
புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம், தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க, சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!
[6]
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை, சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும் சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ, பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்!
[7]
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்! வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம், ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்!
[8]
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்து, கண் நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின், எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும், மண்மிசை மால் பலர், மாண்டனர்; காண் தோள் நோக்கம்!
[9]
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய, தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே, சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு, எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!
[10]
காமன் உடல்; உயிர், காலன்; பல், காய் கதிரோன்; நா மகள் நாசி; சிரம், பிரமன்; கரம், எரியை; சோமன் கலை; தலை தக்கனையும், எச்சனையும்; தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ!
[11]
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால் பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க, அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து, பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
[12]
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம், பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே; ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித் தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!
[13]
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும், கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே, இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட, துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ! . திருப்பொன் ஊசல்
சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக; ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து; நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி, போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[1]
மூன்று, அங்கு, இலங்கு நயனத்தன், மூவாத வான் தங்கு தேவர்களும், காணா மலர் அடிகள், தேன் தங்கி, தித்தித்து, அமுது ஊறி, தான் தெளிந்து, அங்கு, ஊன் தங்கிநின்று, உருக்கும் உத்தரகோசமங்கைக் கோன் தங்கு இடைமருது பாடி, குல மஞ்ஞை போன்று, அங்கு, அன நடையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[2]
முன், ஈறும், ஆதியும் இல்லான்; முனிவர் குழாம், பல் நூறு கோடி இமையோர்கள், தாம் நிற்ப, தன் நீறு எனக்கு அருளி, தன் கருணை வெள்ளத்து மன் ஊற, மன்னும் மணி உத்தரகோசமங்கை மின் ஏறும் மாட வியல் மாளிகை பாடி, பொன் ஏறு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[3]
நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத்தவர் நாதன்; மஞ்சு தோய் மாட, மணி உத்தரகோசமங்கை அம் சொலாள் தன்னோடும் கூடி, அடியவர்கள் நெஞ்சுளே நின்று, அமுதம் ஊறி, கருணை செய்து, துஞ்சல், பிறப்பு அறுப்பான்; தூய புகழ் பாடி, புஞ்சம் ஆர் வெள் வளையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[4]
ஆணோ, அலியோ, அரிவையோ, என்று இருவர் காணாக் கடவுள்; கருணையினால், தேவர் குழாம் நாணாமே உய்ய, ஆட்கொண்டருளி, நஞ்சு தனை ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கைக் கோண் ஆர் பிறைச் சென்னிக் கூத்தன்; குணம் பரவி, பூண் ஆர் வன முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[5]
மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத் தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித் தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்; காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால், போது ஆடு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[6]
உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை மன்னிப் பொலிந்து இருந்த, மா மறையோன் தன் புகழே பன்னிப் பணிந்து இறைஞ்ச, பாவங்கள் பற்று அறுப்பான்; அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில் போல் என் அத்தன்; என்னையும் ஆட்கொண்டான்; எழில் பாடி, பொன் ஒத்த பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
[7]
கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச் சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து, ஞாலம் மிக, பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்; சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை, மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடி, பூலித்து, அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ.
[8]
தெங்கு உலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை தங்கு, உலவு சோதித் தனி உருவம் வந்தருளி, எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொள்வான்: பங்கு உலவு கோதையும், தானும், பணி கொண்ட கொங்கு உலவு கொன்றைச் சடையான் குணம் பரவி, பொங்கு உலவு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர் வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும். வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம் வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.
[4]
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர், பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும். பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.
[5]
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும். மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்; என்ன அதிசயம்! அன்னே! என்னும்.
[6]
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.
[7]
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர், ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும். ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில், தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
[8]
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர், ஐயம் புகுவரால்; அன்னே! என்னும். ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம் நையும்; இது என்னே! அன்னே! என்னும்.
[9]
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும், துன்றிய சென்னியர்; அன்னே! என்னும். துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே, இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.
கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்; சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்!
[1]
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய், ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு, பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை; சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!
[2]
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில், சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை, ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!
[3]
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ, வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்; ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்; மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!
[4]
சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல, அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்; முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!
[5]
இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி; அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்; நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை; கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!
[6]
உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத் தோழியும் ஆவன், பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன், மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய தென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய்!
[7]
வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்! மாலொடு நான்முகன் தேடி, ஓவி, அவர் உன்னிநிற்ப, ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி, மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்; தாவி வரும் பரிப் பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய்!
[8]
கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே! சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்; பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!
[9]
கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ; அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி, எம் தமர் ஆம் இவன்' என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும், செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன், செம் பெருமான்,' வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல், எம் பெருமான், தேவர் பிரான்,' என்று.
[1]
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும் நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும், தென் பாண்டி நாடே, தெளி.
[2]
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும் மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? கோதாட்டிப் பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும் உத்தரகோசமங்கை ஊர்.
[3]
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர் ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்! வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும் ஆனந்தம் காண், உடையான் ஆறு.
[4]
கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன் மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி அருளும் மலை என்பது காண், ஆய்ந்து.
[5]
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே! ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும் தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பண் ஏத்து இசைப்ப, வான் புரவி ஊரும், மகிழ்ந்து.
[6]
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன், மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும் கழுக்கடை காண், கைக்கொள் படை.
[7]
இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள் பெருந்துறைக் கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால், பிறவிப் பகை கலங்க, பேரின்பத்து ஓங்கும், பரு மிக்க நாதப் பறை.
[8]
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான், தாளி அறுகு ஆம், உவந்த தார்.
[9]
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன் கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும் கோது இலா ஏறு ஆம், கொடி.
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[1]
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!
[2]
கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு. தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[3]
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[4]
பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை. சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து, ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[5]
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா! செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[6]
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும், மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[7]
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்? பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே! செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
[8]
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
[9]
புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம் அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும், அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி; அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம் முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே!
[1]
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று, பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே! என்?' என்று, அருள் இவர நின்று, போந்திடு' என்னாவிடில், அடியார், உன் நின்று, இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!
[2]
உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன், சகம் தான் அறிய முறையிட்டால், தக்க ஆறு அன்று' என்னாரோ? மகம் தான் செய்து வழி வந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன் முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம்பலத்து எம் முழு முதலே!
[3]
முழு முதலே! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என் தனக்கும், வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான், குழுமிக் கெழு முதலே! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ?' என்று அழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே!
[4]
அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே!' என்று உன் அருள் நோக்கி, இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே, வேசற்றேன்; கரை சேர் அடியார் களி சிறப்ப, காட்சி கொடுத்து, உன் அடியேன்பால், பிரை சேர் பாலின் நெய் போல, பேசாது இருந்தால், ஏசாரோ?
[5]
ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம் பேசா நிற்பர்; யான் தானும் பேணா நிற்பேன், நின் அருளே; தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க, ஈசா! பொன்னம்பலத்து ஆடும் எந்தாய்! இனித்தான் இரங்காயே!
[6]
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' என்று என்று, ஏமாந்திருப்பேனை, அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ? நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும் மருங்கே சார்ந்து, வர, எங்கள் வாழ்வே, வா' என்று அருளாயே!
[7]
அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல்' என்பார் ஆர், இங்கு? பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா! மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா' என்று, உன் தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?
[8]
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தை விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து, உன் திருநாமம் தரிப்பார்; பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார்; அவர் முன்னே நரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ? நம்பி! இனித்தான் நல்காயே!
[9]
நல்காது ஒழியான் நமக்கு' என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர் மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி, பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம்' என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்: தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!
[1]
அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை, ஆனந்தமாய்க் கசிந்து உருக, என் பரம் அல்லா, இன் அருள் தந்தாய்; யான், இதற்கு இலன் ஒர் கைம்மாறு: முன்பும் ஆய், பின்பும், முழுதும், ஆய், பரந்த முத்தனே! முடிவு இலா முதலே! தென் பெருந்துறையாய்! சிவபெருமானே! சீர் உடைச் சிவபுரத்து அரசே!
[2]
அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கை புரை புரை கனியப் புகுந்துநின்று, உருக்கி, பொய் இருள் கடிந்த மெய்ச் சுடரே! திரை பொரா மன்னும், அமுதத் தெண் கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே! உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே! யான், உன்னை உரைக்கும் ஆறு,உணர்த்தே.
[3]
உணர்ந்த மா முனிவர், உம்பரோடு, ஒழிந்தார் உணர்வுக்கும், தெரிவு அரும் பொருளே! இணங்கு இலி! எல்லா உயிர்கட்கும் உயிரே! எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே! திணிந்தது ஓர் இருளில், தெளிந்த தூ ஒளியே! திருப்பெருந்துறை உறை சிவனே! குணங்கள் தாம் இல்லா இன்பமே! உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே?
[4]
குறைவு இலா நிறைவே! கோது இலா அமுதே! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே! மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய், வந்து என் மனத்திடை மன்னிய மன்னே! சிறை பெறா நீர் போல், சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே! இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்; இனி, உன்னை என் இரக்கேனே?
[5]
இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே! இமையோர் சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்! திருப்பெருந்துறை உறை சிவனே! நிரந்த ஆகாயம், நீர், நிலம், தீ, கால், ஆய், அவை அல்லை ஆய், ஆங்கே, கரந்தது ஓர் உருவே! களித்தனன், உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு, இன்றே.
[6]
இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை; சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே! ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?
[7]
பார், பதம், அண்டம், அனைத்தும், ஆய், முளைத்துப் படர்ந்தது ஓர் படர் ஒளிப்பரப்பே! நீர் உறு தீயே! நினைவதேல், அரிய நின்மலா! நின் அருள் வெள்ளச் சீர் உறு, சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஆர் உறவு எனக்கு, இங்கு? யார் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி!
[8]
சோதியாய்த் தோன்றும் உருவமே! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரிய ஆதியே! நடுவே! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே! தீது இலா நன்மைத் திருவருள் குன்றே! திருப்பெருந்துறை உறை சிவனே! யாது நீ போவது ஓர் வகை? எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே.
[9]
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்? சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே! எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!
பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும், கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன். ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச் செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[1]
புற்றும் ஆய், மரம் ஆய்; புனல், காலே, உண்டி, ஆய்; அண்ட வாணரும், பிறரும், மற்று யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்து, பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச் செற்றிலேன்; இன்னும் திரிதருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[2]
புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள் புரிந்தனை; புரிதலும்,களித்துத் தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா! எண் இல் வானவர்க்கு எல்லாம் நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்த சிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[3]
அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம் என்பர் ஆய், நினைவார் எனைப் பலர்; நிற்க இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய்? வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக் கண்; என் செவி இரும்பினும் வலிது; தென் பராய்த்துறையாய்! சிவலோகா! திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[4]
ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து, அன்பால், ஐயனே' என்று, உன் அருள் வழி இருப்பேன்; நாட்டுத் தேவரும் நாடு அரும் பொருளே! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக் காட்டி, தேவ, நின் கழல் இணை காட்டி, காய மாயத்தைக் கழித்து, அருள்செய்யாய்; சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே! திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[5]
அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்; பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா! இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன்? இது செய்க' என்றுஅருளாய்; சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[6]
மாயனே! மறி கடல் விடம் உண்ட வானவா! மணி கண்டத்து எம் அமுதே! நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; நமச்சிவாய' என்று, உன் அடி பணியாப் பேயன் ஆகிலும், பெரு நெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ! சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ? திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[7]
போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன், புரந்தர ஆதிகள், நிற்க, மற்றுஎன்னைக் கோது மாட்டி, நின் குரை கழல் காட்டி, குறிக்கொள்க' என்று, நின் தொண்டரில்கூட்டாய்; யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ? சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[8]
ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்; காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்! மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்; சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!
[9]
அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில், திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா! களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே!
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.
[1]
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[2]
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[3]
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய, அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[4]
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு, இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான், அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[5]
மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து, தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள், வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்? ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[6]
மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு, புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி, என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும் அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[7]
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்; பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம். ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[8]
பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ், மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
[9]
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு, விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்; தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்; அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
கருளக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ! இருளைத் துரந்திட்டு, இங்கே வா' என்று, அங்கே, கூவும் அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[1]
மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ! எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ! அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[2]
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக் கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே! தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி, ஆ! ஆ!' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[3]
மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு ஊறல், வீறு இலி, நடைக் கூடம் தொடர்ந்து எனை நலைய, துயர் உறுகின்றேன்; சோத்தம்! எம் பெருமானே! உடைந்து, நைந்து, உருகி, உள் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம் அடைந்து நின்றிடுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[4]
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை, புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ! எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ! அளியேன்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[5]
எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே! முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண, அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[6]
பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி! வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே! பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான்' என ஏத்த, ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[7]
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு, எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!', பெருமான்!' என்று, ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப, ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[8]
செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு, கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர, படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம், அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[9]
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு, நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்; பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால், அஞ்சேல்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே, செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[1]
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்; ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை என் அடியான்' என்று, பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[2]
முன்னை என்னுடை வல் வினை போயிட, முக்கண் அது உடை எந்தை, தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்கு, பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி தனில் இள மதி அது வைத்த அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[3]
பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்: ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே, செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை, அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[4]
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்; குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.
[5]
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு; நல் வினை நயவாதே, மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை, அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[6]
பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை; இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி, அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[7]
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து; நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து; தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[8]
உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல், பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே, பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே, அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
[9]
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப் பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!
சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன், தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை, புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[1]
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி, ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு, போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[2]
நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன் வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவி, பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[3]
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும், சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை, நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை, புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[4]
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும், அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும் நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ!' என்ற நீர்மை எல்லாம் புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[5]
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய, பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று, சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய், புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[6]
நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை, காலை, நிலனை, விசும்பை, தனை ஒப்பாரை இல்லாத் தனியை, நோக்கி; தழைத்து; தழுத்த கண்டம் கனைய; கண்ணீர் அருவி பாய; கையும் கூப்பி, கடி மலரால் புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[7]
நெக்கு நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும், நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்து நவிற்றி; செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து; புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[8]
தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் தனை ஆண்ட பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும் ஏது ஆம் மணியே!' என்று என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப் போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
[9]
காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய்; மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட பார்ப்பானே; எம் பரமா!' என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப் பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்; சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால், வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே.
[1]
வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்; உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும் செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே.
[2]
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி; வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[3]
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்; தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[4]
பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து, மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[5]
பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செஞ்செவே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[6]
பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[7]
பந்து அணை விரலாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! அந்தம் இல் அமுதே! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே! அடியேனை வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[8]
பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே! மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
[9]
பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செழு மதி அணிந்தாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! தொழுவனோ பிறரை? துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்; மழ விடையானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
[1]
நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே! விண் உளார் பிரானே! ஒருத்தனே! உன்னை, ஓலம் இட்டு அலறி, உலகு எலாம் தேடியும், காணேன்; திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
[2]
எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா! ஏல வார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே! தக்க நல் காமன் தனது உடல் தழல் எழ விழித்த செம் கண் நாயகனே! திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அம் கணா! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
துடி கொள் நேர் இடையாள், சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு, பொடி கொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே! செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர் அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
[5]
துப்பனே, தூயாய்! தூய வெள் நீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே! உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே! செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில், செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அப்பனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு, இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்! உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின், கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
[1]
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே! சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்; சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம் கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
[2]
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி, மலம் கெடுத்த பெருந்துறை விலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன்; இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியே கலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
[3]
பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும், நாண் ஒணாதது ஒர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான் பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும், காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
[4]
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே! சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி! ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும் காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
[5]
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே! ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய்? சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் என, காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
[6]
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே! மயக்கம் ஆயது ஓர் மும் மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும், துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூ மலர்க் கழல் தந்து, எனைக் கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய், அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச் சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!
[1]
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு, தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை, எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!
[2]
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி, கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு; பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து; கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே!
[5]
பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும், உறவினொடும், ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலை செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி, மறையவரும், வானவரும், வணங்கிட நான் கண்டேனே!
[6]
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி, பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே, சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!
[7]
அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி, விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானை களவு இலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே!
[8]
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை, ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி; வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!
[9]
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொறி ஆகி, பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை, கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!
கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்; புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்; உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான், அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே!
[1]
அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே, முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்; கடியேனுடைய கடு வினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க, உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே!
[2]
அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த, இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே! மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார் வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!
[3]
வேண்டும், வேண்டும், மெய் அடியார் உள்ளே, விரும்பி, எனை அருளால் ஆண்டாய்; அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே! தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! தொண்டனேற்கும் உண்டாம்கொல் வேண்டாது ஒன்றும் வேண்டாது, மிக்க அன்பே மேவுதலே?
[4]
மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே, காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் தன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து, ஆவி, யாக்கை, யான், எனது, என்று யாதும் இன்றி, அறுதலே?
[5]
அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்; புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்; உடையானே! பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியா, பிரிவு இல்லா, மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே!
[6]
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண, இடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி நாயேன்? உடையாய்! நீயே அருளுதி என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்தொழிந்தேன்; சுடர் ஆர் அருளால், இருள் நீங்க, சோதீ! இனித்தான் துணியாயே!
[7]
துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்து, திணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்; அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத் தணியாது, ஒல்லை வந்தருளி, தளிர் பொன் பாதம் தாராயே!
[8]
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்' என்று, உன் தமர் எல்லாம் ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ? சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா! பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே!
[9]
மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம் நெகா நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! இனித்தான் வாழ்ந்தாயே? ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தை, கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு, என்றோ கூடுவதே?
[10]
கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்; வாடி வாடி, வழி அற்றே, வற்றல் மரம் போல் நிற்பேனோ? ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகி, பெருகி, நெக்கு, ஆடி ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!
குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன் உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்; பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே?
[1]
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்; கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, ஆ! ஆ!' என்று அருளி, செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா! உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?
[2]
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை, இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே! குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால், என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே!
[3]
மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ் ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்; ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து, கோனே! கூவிக்கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே?
[4]
கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ! தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ! வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின், தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?
[5]
வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்; வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?
[6]
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும், குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ? இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே! நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?
[7]
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்; மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி, ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்? காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே!
[8]
கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர; எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால் மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும் அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!
[9]
அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே! திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்; புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே, குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே!
பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என் மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா! செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்! எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே?
[1]
நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு, ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்; தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்; வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன், எனக்கே.
[2]
எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்; மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி; சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!
[3]
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில் எனை, தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கி, பினை, தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான், மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே!
[4]
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி, நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடி வம்மின்; தெற்று ஆர் சடைமுடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர் கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே!
[5]
கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என் உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவண்ணம், நிறைந்தான்: சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும், படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே!
[6]
வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும், விண்ணும்; வேண்டேன் பிறப்பு, இறப்பு; சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறை தாள் பூண்டேன்; புறம் போகேன்; இனி, புறம்போகல் ஒட்டேனே!
[7]
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே! சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும், நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?
[8]
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்; அச்சோ! எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அமுதே! செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான், நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின்றானே!
[9]
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே, ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்; தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்! நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி, மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
[1]
வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்; இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம் திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்ன அருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
[2]
வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்; என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி, தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே.
[1]
சதிரை மறந்து, அறி மால் கொள்வர் சார்ந்தவர்; சாற்றிச் சொன்னோம்; கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்து, குதிரையின் மேல் வந்து கூடிடுமேல், குடி கேடு கண்டீர்! மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே.
[2]
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்; பார் இன்ப வெள்ளம் கொள, பரி மேற்கொண்ட பாண்டியனார், ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு, தொண்டரை உள்ளம் கொண்டார்; பேர் இன்ப வெள்ளத்துள், பெய் கழலே சென்று பேணுமினே.
[3]
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும்; அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி, எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே.
[4]
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான்: வந்து, முந்துமினே.
[5]
ஈண்டிய மாய இருள் கெட, எப் பொருளும் விளங்க, தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்; வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்; பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.
[6]
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும், போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு, ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்: சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.
[7]
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி, கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி, பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே, முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே.
[8]
விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்க, பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார், புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார் மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.
[9]
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால் வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால் ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே; தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.
உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே! செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[1]
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே! முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து, கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[2]
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு, செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[3]
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே! பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே! தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி, பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே! திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே! இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[6]
பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி, பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே! தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[7]
அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே! பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும் எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[8]
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
[9]
புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என் என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே! துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ! இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி, கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்; ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!
[1]
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன; கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!
[2]
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில், ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ!' என்று, ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன் பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே!
[3]
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர் உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு, எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என் சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!
[4]
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும், மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!
[5]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு, நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால் உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை, அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!
[6]
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா, தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான், அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது, என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!
[7]
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய், பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால் பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!
[8]
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக, தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி, பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு, அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!
[9]
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்? தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான் ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்து, துன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து, முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்த அன்பின் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[3]
குறியும், நெறியும், குணமும், இலாக் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவு அரிய பெற்றியனை; செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ பதத்தை; அறியும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[4]
பேரும், குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி தனைத் தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம் சேரும் வகையால், சிவன் கருணைத் தேன் பருகி, ஆரும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[5]
கொம்பில் அரும்பு ஆய், குவி மலர் ஆய், காய் ஆகி, வம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே; நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம், நான் அணுகும் அம் பொன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[6]
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய, மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப, கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம்' எனக் களித்து, இங்கு அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[7]
இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தே, நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால், கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் அரட்டை அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[8]
பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்கு, கீழ்ச் செய் தவத்தால் கிளியீடு நேர்பட்டு, தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால் ஆட்செய் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
[9]
கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள் கூறனுக்கு, செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு, இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும், அம்மை குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு, தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே, பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி, மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!
[1]
ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே, சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி, போந்து, யான் துயர் புகாவணம் அருள்செய்து, பொன் கழல் இணை காட்டி, வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பனே!
[2]
நடித்து, மண்ணிடை; பொய்யினைப் பல செய்து; நான், எனது, எனும் மாயம் கடித்த வாயிலே நின்று; முன் வினை மிகக் கழறியே திரிவேனை, பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனை அடித்து அடித்து, அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே!
[3]
பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது; பொய்களே புகன்று போய்; கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு; கலங்கியே கிடப்பேனை; திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட, திருவொடும் அகலாதே, அரும் துணைவன் ஆய், ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
[4]
மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும் கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை, வீடு தந்து, என் தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி, ஆடுவித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே!
[5]
வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் தம்மோடும் பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனை, குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத்தொடும் கூடி, அணைந்து வந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
[6]
இப் பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி, தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான், தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால், ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி, அப்பன், என்னை, வந்து, ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
[7]
ஊசல் ஆடும் இவ் உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை, ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கி, பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!
[8]
பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, நான், புழுத்து அலை நாய்போல, இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை, விச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டி, அச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
[9]
செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும் கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை, இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி, அறிவு தந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன், மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான், யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான், தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!
[1]
அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான், சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன், மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன் வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
[2]
நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன், தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன், மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான் பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, பொலியுமே!
[3]
பத்தர் சூழ, பரா பரன் பாரில் வந்து, பார்ப்பான் என, சித்தர் சூழ, சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான், எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங்கொண்டு, எம் பணி கொள்வான் வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
[4]
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்; வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்; காயத்துள் அமுது ஊற ஊற, நீ கண்டுகொள்' என்று காட்டிய சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
[5]
சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீ வினை கெடுத்து, உய்யல் ஆம் பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சேர்த்தலும், முத்தி தந்து, இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் மத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
[6]
பிறவி என்னும் இக் கடலை நீந்த, தன் பேர் அருள் தந்தருளினான்; அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல் உறவு செய்து, எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம் திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
[7]
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும் எழில்கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன்' என்று என்று, தொழுத கையினர் ஆகி; தூ மலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு, வழு இலா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
[8]
வம்பனாய்த் திரிவேனை வா' என்று வல் வினைப் பகை மாய்த்திடும் உம்பரான், உலகு ஊடு அறுத்து, அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான், அன்பர் ஆனவர்க்கு அருளி, மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
[9]
முத்தனை, முதல் சோதியை, முக் கண் அப்பனை, முதல் வித்தினை, சித்தனை, சிவலோகனை, திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ; சித்தம் ஆர்தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே.!
மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி, கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும், போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து, ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே.
[1]
மால், அயன், வானவர் கோனும், வந்து வணங்க, அவர்க்கு அருள்செய்த ஈசன், ஞாலம் அதனிடை வந்திழிந்து, நல் நெறி காட்டி, நலம் திகழும் கோல மணி அணி மாடம் ணீடு குலாவும் இடவை மட நல்லாட்கு, சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே.
[2]
அணி முடி ஆதி அமரர் கோமான், ஆனந்தக் கூத்தன், அறு சமயம் பணி வகை செய்து, படவு அது ஏறி, பாரொடு விண்ணும் பரவி ஏத்த, பிணி கெட, நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன், பெண்பால் உகந்து, மணி வலை கொண்டு, வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.
[3]
வேடு உரு ஆகி, மயேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத் தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்ய, ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந் நாள் ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.
[4]
வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக் கடல் ஆய், அடியார் பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந் நாள் உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில், பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே.
[5]
வேவ, திரிபுரம், செற்ற வில்லி, வேடுவன் ஆய், கடி நாய்கள் சூழ, ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான், இயங்கு காட்டில் ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்று கேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.
[6]
நாதம் உடையது ஒர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார், ஓதி, பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும், போது அலர் சோலை, பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றி, பேதம் கெடுத்து, அருள் செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே.
[7]
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன், மாது நல்லாள், உமை மங்கை, பங்கன், வண் பொழில் சூழ் தென் பெருந்துறைக் கோன், ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும் ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே.
[8]
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மயேந்திர நாதன், வந்து தேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்று காதல் பெருக, கருணை காட்டி, தன் கழல் காட்டி, கசிந்து உருக, கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.
[9]
அம் கணன், எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்த எங்கள் பிரான், இரும் பாசம் தீர இக பரம் ஆயது ஒர் இன்பம் எய்த, சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்று, மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்; சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே, ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே.
[1]
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து, இங்கு ஒரு பொழுதும் தரியேன், நாயேன்; இன்னது என்று அறியேன்; சங்கரா! கருணையினால் பெரியோன் ஒருவன், கண்டு கொள்' என்று, உன் பெய் கழல் அடி காட்டி, பிரியேன்' என்று என்று, அருளிய அருளும் பொய்யோ? எங்கள் பெருமானே!
[2]
என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி, முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா, முனிவர், முழு முதலே, இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே, நன்பே அருளாய் என் உயிர் நாதா! நின் அருள் நாணாமே.
[3]
பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே! முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ?' என்று எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.
[4]
காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர, பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே, தாணுவே, அழிந்தேன்: நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால் காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.
[5]
பால் திரு நீற்று எம் பரமனை; பரம் கருணையொடும் எதிர்ந்து தோற்றி, மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை; நீதி இலேன், போற்றி, என் அமுதே, என நினைந்து, ஏத்தி, புகழ்ந்து, அழைத்து, அலறி, என் உள்ளே ஆற்றுவன் ஆக; உடையவனே, எனை, ஆவ' என்று அருளாயே!
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால், ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்; போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.
[1]
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள் மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்; நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட, தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.
[2]
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்; யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக, கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு, போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை; உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்; அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே; புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
[5]
புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு, இகழ்மின் எல்லா அல்லலையும்; இனி, ஓர் இடையூறு அடையாமே, திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று, சிவன் தாள் வணங்கி, நாம் நிகழும் அடியார் முன் சென்று, நெஞ்சம் உருகி, நிற்போமே.
[6]
நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே, பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே; நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின்; பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே.
[7]
பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள், அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே, திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து, திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.
[8]
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்; போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம் ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்! போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.
[9]
புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர், மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்; தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்; மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்; ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்; வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.
[1]
தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப் போகீர்; ஒண் திறல் யோகிகளே, பேர் அணி உந்தீர்கள்; திண் திறல் சித்தர்களே, கடைக் கூழை செல்மின்கள்; அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே.
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி, பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ மருவாது இருந்தேன் மனத்து.
[1]
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ? பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான் தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?
[2]
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே, உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான்.
[3]
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான் பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்; பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்; வரும் துயரம் தீர்க்கும் மருந்து.
[4]
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்; பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.
[5]
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்; மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன், பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும் மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.
[6]
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி, ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய ஒருத்தன், பெருக்கும் ஒளி.
[7]
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான், யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்! மற்று அறியேன் செய்யும் வகை.
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன், மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.
[10]
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து, சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊர் ஆகக் கொண்டான், உவந்து.
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை.
[1]
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன் வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த, கருவும் கெடும், பிறவிக் காடு.
[2]
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்; நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி, அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம், மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து.
[3]
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும், தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர் சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர்.
[4]
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல, எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின் மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனை, காண்.
[5]
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என, பேணும் அடியார் பிறப்பு அகல, காணும் பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும் பிரியானை, வாய் ஆரப் பேசு.
[6]
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி, பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து.
கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.
[1]
ஒன்றினொடு ஒன்றும், ஒர் ஐந்தினொடு ஐந்தும், உயிர்ப்பதும் ஆகாதே? உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே? கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு அதும் ஆகாதே? காரணம் ஆகும் மன ஆதி குணங்கள் கருத்து உறும் ஆகாதே? நன்று, இது, தீது, என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே? நாமும் மேல் ஆம் அடியாருடனே செல, நண்ணுதும் ஆகாதே? என்றும் என் அன்பு நிறைந்த பராஅமுது எய்துவது ஆகாதே? ஏறு உடையான், எனை ஆளுடை நாயகன், என்னுள் புகுந்திடிலே!
[2]
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே? பாவனை ஆய கருத்தினில் வந்த பரா அமுது ஆகாதே? அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே? ஆதி முதல் பரம் ஆய பரம் சுடர் அண்ணுவது ஆகாதே? செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே? சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே? இந்திரஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே? என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே!
[3]
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து, உடன் இன்புறும் ஆகாதே? எல்லை இல் மாக் கருணைக் கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே? நல் மணி நாதம் முழங்கி, என் உள் உற, நண்ணுவது ஆகாதே? நாதன் அணித் திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே? மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே? மா மறையும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே? இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே? என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!
[4]
மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே? வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே? கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே? காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே? பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே? பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே? எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே? என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!
[5]
பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே? பூ மழை, மாதவர் கைகள் குவிந்து, பொழிந்திடும் ஆகாதே? மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே? வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே? தன் அடியார் அடி என் தலைமீது தழைப்பன ஆகாதே? தான் அடியோமுடனே உய வந்து, தலைப்படும் ஆகாதே? இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும் ஆகாதே? என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே!
[6]
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே? துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே? பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பரா பரம் ஆகாதே? பண்டு அறியாத பர அனுபவங்கள் பரந்து எழும் ஆகாதே? வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே? விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப் பொருள் ஆகாதே? எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே? இந்து சிகாமணி எங்களை ஆள, எழுந்தருளப் பெறிலே!
[7]
சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே? சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே? அங்கு இது நன்று, இது நன்று, எனும் மாயை அடங்கிடும் ஆகாதே? ஆசை எலாம், அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே? செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே? சீர் அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே? எங்கும் நிறைந்து, அமுது ஊறு, பரம்சுடர் எய்துவது ஆகாதே? ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே!
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்; பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்; கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.
[1]
என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்; உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்: பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது, என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.
[2]
சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற, கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?
[3]
கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழி கொண்டாய்; படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே? கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே, நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே?
[4]
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே; தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே? நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?
[5]
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே? ஆ! ஆ!' என்னாவிடில், என்னை அஞ்சேல்' என்பார் ஆரோ தான்? சாவார் எல்லாம் என் அளவோ? தக்க ஆறு அன்று' என்னாரோ? தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!
[6]
நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து, பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்! அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே! தெரிய அரிய பரஞ்சோதீ! செய்வது ஒன்றும் அறியேனே! திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம், சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[1]
நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை, சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம், குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[2]
பொய் எல்லாம் மெய் என்று, புணர் முலையார் போகத்தே மையல் உறக் கடவேனை, மாளாமே, காத்தருளி, தையல் இடம் கொண்ட பிரான், தன் கழலே சேரும்வண்ணம், ஐயன், எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[3]
மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு விழக் கடவேனை, எண்ணம் இலா அன்பு அருளி, எனை ஆண்டிட்டு, என்னையும் தன் சுண்ண வெண் நீறு அணிவித்து, தூ நெறியே சேரும்வண்ணம், அண்ணல் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[4]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு, நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்; உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை வருக' என்று, அஞ்சேல்' என்று, அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[5]
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று, வினை பெருக்கி, கொந்து குழல் கோல் வளையார் குவி முலைமேல் விழுவேனை, பந்தம் அறுத்து, எனை ஆண்டு, பரிசு அற, என் துரிசும் அறுத்து, அந்தம் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[6]
தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை, பையவே கொடு போந்து, பாசம் எனும் தாழ் உருவி, உய்யும் நெறி காட்டுவித்திட்டு, ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[7]
சாதல், பிறப்பு, என்னும் தடம் சுழியில் தடுமாறி, காதலின் மிக்கு, அணி இழையார் கலவியிலே விழுவேனை, மாது ஒரு கூறு உடைய பிரான், தன் கழலே சேரும்வண்ணம், ஆதி, எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[8]
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை, மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான் நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
[9]
8.219 8 -ஆம் திருமுறை பாடல் # 9 மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே.
9.001 9 -ஆம் திருமுறை பாடல் # 7 திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.
11.006 11 -ஆம் திருமுறை பாடல் # 1 சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.