Scripts in Hindi, Telugu, Kannada, Malayalam, English etc. are in experimental stage. Please send your feedback


திருவாசகம்

 

திருவாசகம்... 1

சமய குரவர் துதி... 4

புறச்சந்தான குரவர் துதி... 5

திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை....... 5

திருஞானசம்பந்தர்- இரண்டாம் திருமுறை........ 5

திருஞானசம்பந்த தேவாரம் மூன்றாம் திருமுறை....... 6

திருநாவுக்கரசு தேவாரம் நான்காம் திருமுறை....... 7

திருநாவுக்கரசு தேவாரம் ஐந்தாம் திருமுறை....... 8

திருநாவுக்கரசு தேவாரம் ஆறாம் திருமுறை....... 8

சுந்தரமூர்த்தி தேவாரம் ஏழாம் திருமுறை....... 8

எட்டாம் திருமுறை மாணிக்க வாசகர் திருவாசகம்... 9

1.   சிவபுராணம்... 9

2.   கீர்த்தித் திருஅகவல்... 13

3.   திருஅண்டப் பகுதி... 20

4.   போற்றித் திருஅகவல்... 27

5.   திருச் சதகம்... 37

I மெய்யுணர்தல்.... 37

ii. அறிவுறுத்தல்.... 39

iii. சுட்டறுத்தல்.... 41

Iv ஆன்ம சுத்தி... 44

V கைம்மாறு கொடுத்தல்.... 47

Vi அநுபோக சுத்தி... 49

Vii. காருணியத்து இரங்கல்.... 51

Viii. ஆனந்தத்து அழுந்தல்.... 53

ix. ஆனந்த பரவசம்... 55

X. ஆனந்தாதீதம்... 57

6.   நீத்தல் விண்ணப்பம்... 60

7.   திருஎம்பாவை........ 70

8.   திருஅம்மானை........ 77

9.   திருப்பொன் சுண்ணம்... 82

10.   திருக்கோத்தும்பி... 88

11.   திருத்தெள்ளேணம்... 92

12.   திருச் சாழல்... 96

13.   திருப்பூவல்லி.... 99

14.   திருஉந்தியார்.. 103

15.   திருத்தோள் நோக்கம்... 106

16.   திருப்பொன் ஊசல்... 109

17.   அன்னைப் பத்து... 111

18.   குயில் பத்து... 113

19.   திருத்தசாங்கம்... 115

20.   திருப்பள்ளி எழுச்சி... 117

21.   கோயில் மூத்த திருப்பதிகம்... 120

22.   கோயில் திருப்பதிகம்... 122

23.   செத்திலாப் பத்து... 126

24.   அடைக்கலப் பத்து... 129

25.   ஆசைப் பத்து... 131

26.   அதிசயப் பத்து... 133

27.   புணர்ச்சிப் பத்து... 135

28.   வாழாப் பத்து... 138

29.   அருள் பத்து... 142

30.   திருக்கழுக்குன்றப் பதிகம்... 145

31.   கண்ட பத்து... 147

32.   பிரார்த்தனைப் பத்து... 149

33.   குழைத்த பத்து... 151

34.   உயிருண்ணிப் பத்து... 153

35.   அச்சப் பத்து... 155

36.   திருப்பாண்டிப் பதிகம்... 157

37.   பிடித்த பத்து... 159

38.   திருஏசறவு... 162

39.   திருப்புலம்பல்... 164

40.   குலாப் பத்து... 165

41.   அற்புதப் பத்து... 167

42.   சென்னிப் பத்து... 170

43.   திருவார்த்தை....... 172

44.   எண்ணப் பதிகம்... 175

45.   யாத்திரைப் பத்து... 176

46.   திருப்படை எழுச்சி... 179

47.   திருவெண்பா..... 179

48.   பண்டு ஆய நான்மறை....... 181

49.   திருப்படை ஆட்சி... 183

50.   ஆனந்த மாலை........ 186

51.   அச்சோப் பதிகம்... 187

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா- ஒளி வளர் விளக்கே       189

ஒன்பதாம் திருமுறை சேந்தனார் திருப்பல்லாண்டு... 189

பத்தாம் திருமுறை - திருமூலர்.. 189

சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்... 190

 

சமய குரவர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி

ஆழிமிசை கன்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி

வாழிதிரு நாவலூர் வன்றொண்டன் பதம் போற்றி

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

 

புறச்சந்தான குரவர் துதி

ஈராண்டிற் சிவஞானம் பெற்றுயர்ந்த மெய்கண்டார் இணைத்தாள் போற்றி

நாராண்ட பல்லடியார்க் கருள்புரிந்த அருணந்தி நற்றாள் போற்றி

நீராண்ட கடந்தைநகர் மறைஞான சம்பந்தர் நிழற்றாள் போற்றி

சீராண்ட தில்லைநகர் உமாபதியார் செம்பதுமத் திருத்தாள் போற்றி

 

திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை

தோடுடைய செவியன்| விடையேறியோர்| தூவெண்மதிசூடிக்

காடுடைய|சுட லைப்பொடிபூசி|யென் னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய|மல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

 

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

திருஞானசம்பந்தர்- இரண்டாம் திருமுறை

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

 

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து

முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்

பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.

 

திருஞானசம்பந்த தேவாரம் மூன்றாம் திருமுறை

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.

 

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

 

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

 

திருநாவுக்கரசு தேவாரம் நான்காம் திருமுறை

கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

 

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

 

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 

 

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ

எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா

முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற

அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.

 

திருநாவுக்கரசு தேவாரம் ஐந்தாம் திருமுறை

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.

 

திருநாவுக்கரசு தேவாரம் ஆறாம் திருமுறை

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி

கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி

அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி

அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி

 

சுந்தரமூர்த்தி தேவாரம் ஏழாம் திருமுறை

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா

எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே

 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

 

எட்டாம் திருமுறை மாணிக்க வாசகர் திருவாசகம்

 

1.  சிவபுராணம்

 

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! 1

 

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! 2

 

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 3

 

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,

முந்தை வினை முழுதும் ஓய, ப்பன் யான்:

கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; 4

 

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!

எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,

பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்; 5

 

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,

பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,

கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!

மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; 6

 

உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற

மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்

"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே! 7

 

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!

பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,

மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! 8

 

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,

போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;

நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!

மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!

கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்

சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! 9

 

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த

மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,

அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,

புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்

கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,

நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,

நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! 10

 

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!

தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!

பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!

ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம்

சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!

ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!

ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!

போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!

காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!

ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற

தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்

தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்

ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! 11

 

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப

ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று

போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,

கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!

தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,

சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 12

 

2.  கீர்த்தித் திருஅகவல்

 

தில்லை மூதூர் ஆடிய திருவடி

பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,

எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,

மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,

துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,

என்னுடை இருளை ஏறத் துரந்தும்,

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்

குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,

 

மன்னும் மா மலை மயேந்திரம் அதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;

 

கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,

நல்லாளோடு நயப்புறவு எய்தியும்;

 

பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,

எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;

 

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;

 

கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;

மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;

 

மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து

உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;

 

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,

அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;

 

வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,

ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி,

 

குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை,

சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;

 

வேலம்புத்தூர் விட்டேறு அருளி,

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;

 

தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்

வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்;

 

மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி

சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்;

 

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்;

 

ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி

பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,

ஈண்டு கனகம் இசையப் பெறாஅது,

ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப,

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;

 

அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,

இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;

 

மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,

குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;

 

ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;

 

உத்தரகோசமங்கையுள் இருந்து,

வித்தக வேடம் காட்டிய இயல்பும்;

 

பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

தூ வண மேனி காட்டிய தொன்மையும்;

 

வாதவூரினில் வந்து, இனிது அருளி,

பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;

 

திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;

 

பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;

 

தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,

நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;

 

விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,

குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;

 

பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு

அட்ட மா சித்தி அருளிய அதுவும்;

 

வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,

காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;

 

மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;

 

ஓரியூரில் உகந்து, இனிது அருளி,

பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;

 

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;

 

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்

கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;

 

தேன் அமர் சோலைத் திருவாரூரில்

ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;

 

இடைமருது அதனில் ஈண்ட இருந்து,

படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;

 

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;

 

திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,

மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;

 

சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,

பாவகம் பல பல காட்டிய பரிசும்;

 

கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;

 

ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;

 

ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;

 

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;

 

திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;

 

கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;

 

கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;

 

புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;

 

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;

 

அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,

சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,

இந்திர ஞாலம் போல வந்தருளி,

எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,

தானே ஆகிய தயாபரன், எம் இறை,

சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,

அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்

சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;

 

மந்திர மா மலை மயேந்திர வெற்பன்,

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,

எம்தமை ஆண்ட பரிசுஅது பகரில்

ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,

நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;

 

ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்

ஆனந்தம்மே, ஆறா அருளியும்;

 

மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன்

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;

 

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன்

கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;

 

மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,

தூய மேனி, சுடர்விடு சோதி

காதலன் ஆகி, கழுநீர் மாலை

ஏல்வு உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;

 

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்

பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்;

 

மீண்டு வாரா வழி அருள் புரிபவன்

பாண்டி நாடே பழம் பதி ஆகவும்,

 

பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்

உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,

 

ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய

தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,

 

இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி

அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,

 

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;

 

நாயினேனை நலம் மலி தில்லையுள்,

கோலம் ஆர்தரு பொதுவினில், வருக' என,

ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;

அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்

ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;

 

எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,

மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,

பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,

கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,

நாத! நாத!' என்று அழுது அரற்றி,

பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;

பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று

இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;

 

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்

கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு,

அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை,

இறைவன், ஈண்டிய அடியவரோடும்,

பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன்

ஒலிதரு கைலை உயர் கிழவோனே.

 

3.  திருஅண்டப் பகுதி

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,

அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;

இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,

சிறிய ஆகப் பெரியோன். தெரியின்

 

வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,

தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய

மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,

சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து

எறியது வளியின்

கொட்கப் பெயர்க்கும் குழகன்:

 

முழுவதும்

படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை

காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை

கரப்போன்; கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள்; திருத்தகும்

அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்

வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி

கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்

அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு

மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்

தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்

வானில் கலப்பு வைத்தோன்; மேதகு

காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட

மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,

எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,

அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று

 

முன்னோன் காண்க! முழுதோன் காண்க!

தன் நேர் இல்லோன் தானே காண்க!

ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!

கானப் புலி உரி அரையோன் காண்க!

நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும்,

ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!

இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!

அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!

பரமன் காண்க! பழையோன் காண்க!

பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!

அற்புதன் காண்க! அநேகன் காண்க!

சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!

பத்தி வலையில் படுவோன் காண்க!

ஒருவன் என்னும் ஒருவன் காண்க!

விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!

அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!

இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க!

அரியதில் அரிய அரியோன் காண்க!

மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!

நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!

மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!

அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!

பந்தமும், வீடும், படைப்போன் காண்க!

நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!

கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!

யாவரும் பெற உறும் ஈசன் காண்க!

தேவரும் அறியாச் சிவனே காண்க!

பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!

கண்ணால் யானும் கண்டேன் காண்க!

அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!

கருணையின் பெருமை கண்டேன் காண்க!

புவனியில் சேவடி தீண்டினன் காண்க!

சிவன் என யானும் தேறினன் காண்க!

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!

குவளைக் கண்ணி கூறன் காண்க!

அவளும், தானும், உடனே காண்க!

 

பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே

கரு மா முகிலின் தோன்றி,

திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,

திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,

ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,

வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,

நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,

எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,

முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,

பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,

எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,

செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்

கேதக் குட்டம் கையற ஓங்கி,

இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,

நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்

தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,

அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;

ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்

பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,

சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்

இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து

உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்

சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்

வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்

மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்

மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,

அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,

தொண்ட உழவர் ஆரத் தந்த

அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!

 

கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!

அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!

அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!

நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!

சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க!

எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!

கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!

பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!

ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!

 

நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!

பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!

நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை

நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,

நிற்பன நிறீஇ,சொல் பதம் கடந்த தொல்லோன்;

உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;

கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;

விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;

பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்

ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;

இன்று எனக்கு எளிவந்து, அருளி,

அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;

இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!

அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!

ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!

ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:

 

மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,

மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து

உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;

மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;

இத் தந்திரத்தில் காண்டும்' என்று இருந்தோர்க்கு,

அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;

முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,

ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,

வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,

ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை

அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;

ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;

பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,

ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;

ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்

தாள் தளை இடுமின்!

சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!

பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;

 

தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை

என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,

அறை கூவி, ஆட்கொண்டருளி,

மறையோர் கோலம் காட்டி அருளலும்;

உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,

அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,

தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,

பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,

நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,

கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்

ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு

கோல் தேன் கொண்டு செய்தனன்;

ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்

வீழ்வித்தாங்கு, அன்று,

அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;

தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:

 

சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?

தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது

தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு

அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;

விழுங்கியும் ஒல்லகில்லேன்:

செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,

உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,

வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,

தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை

குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே

குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய

அற்புதமான அமுத தாரைகள்,

எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது

உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு

அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய

கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை

என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்

கருணை வான்றேன் கலக்க

அருளொது பரவமு தாக்கினன்

பிரமன்மால் அரியாப் பெற்ரி யோனே.

 

4.  போற்றித் திருஅகவல்

 

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ

ஈரடி யாலே மூவுல களந்து

நாற்றிசை முனிவரும் ஐமுலன் மலரப்

போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)

ஆடிமுதி யரியும் ஆதர வதனிற்

கதுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)

ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)

ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,

வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,

 

யானை முதலா எறும்பு ஈறு ஆய,

ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;

மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;

ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;

இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;

மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;

தக்க தச மதி தாயொடு தான் படும்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;

ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை

ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;

காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி

வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:

கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்

ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,

கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,

எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,

ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்

மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்;

 

தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,

முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்

ஆறு கோடி மாயா சத்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி,

நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்;

சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்

விரதமே பரம் ஆக, வேதியரும்,

சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;

சமய வாதிகள் தம் தம் மதங்களே

அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,

உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்

கலா பேதத்த கடு விடம் எய்தி,

அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,

 

தப்பாமே, தாம் பிடித்தது சலியா,

தழல் அது கண்ட மெழுகு அது போல,

தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,

ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,

கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்

படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,

பசு மரத்து ஆணி அறைந்தால் போல,

கசிவது பெருகி, கடல் என மறுகி,

அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,

சகம் பேய்' என்று தம்மைச் சிரிப்ப,

நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை

பூண் அதுவாக, கோணுதல் இன்றி,

சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்

கதியது பரம அதிசயம் ஆக,

கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,

அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,

குருபரன் ஆகி, அருளிய பெருமையை,

சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,

பிறிவினை அறியா நிழல் அது போல,

முன் பின் ஆகி, முனியாது, அத் திசை

என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,

அன்பு எனும் ஆறு கரை அது புரள,

நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி,

உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,

கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,

கண் களி கூர, நுண் துளி அரும்ப,

சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்

தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!

 

மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட,

கைதர வல்ல கடவுள், போற்றி!

 

ஆடக மதுரை அரசே, போற்றி!

கூடல் இலங்கு குருமணி, போற்றி!

தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!

இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!

 

மூவா நான்மறை முதல்வா, போற்றி!

சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!

 

மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!

கல் நார் உரித்த கனியே, போற்றி!

 

காவாய், கனகக் குன்றே, போற்றி!

ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!

 

படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!

இடரைக் களையும் எந்தாய், போற்றி!

 

ஈச, போற்றி! இறைவ, போற்றி!

தேசப் பளிங்கின் திரளே, போற்றி!

 

அரைசே, போற்றி! அமுதே, போற்றி!

விரை சேர் சரண விகிர்தா, போற்றி!

 

வேதி, போற்றி! விமலா, போற்றி!

ஆதி, போற்றி! அறிவே, போற்றி!

 

கதியே, போற்றி! கனியே, போற்றி!

நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!

 

உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!

கடையேன் அடிமை கண்டாய், போற்றி!

 

ஐயா, போற்றி! அணுவே, போற்றி!

சைவா, போற்றி! தலைவா, போற்றி!

 

குறியே, போற்றி! குணமே, போற்றி!

நெறியே, போற்றி! நினைவே, போற்றி!

 

வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!

ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!

 

மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை

ஆழாமே அருள் அரசே, போற்றி!

 

தோழா, போற்றி! துணைவா, போற்றி!

வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி!

 

முத்தா போற்றி! முதல்வா, போற்றி!

அத்தா, போற்றி! அரனே, போற்றி!

 

உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!

விரி கடல் உலகின் விளைவே, போற்றி!

 

அருமையில் எளிய அழகே, போற்றி!

கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!

 

மன்னிய திருஅருள் மலையே, போற்றி!

என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்

சென்னியில் வைத்த சேவக, போற்றி!

 

தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!

வழுவு இலா ஆனந்த வாரி, போற்றி!

 

அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!

முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!

 

மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!

வானகத்து அமரர் தாயே, போற்றி!

 

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!

அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!

 

கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!

நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!

 

இடைமருது உறையும் எந்தாய், போற்றி!

சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!

சீர் ஆர் திருவையாறா, போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!

கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!

ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!

பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!

சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!

மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!

குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!

கோகழி மேவிய கோவே, போற்றி!

ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!

பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!

கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!

 

அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!

இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,

அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!

தென் நாடு உடைய சிவனே, போற்றி!

எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

 

ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!

மானக் கயிலை மலையாய், போற்றி!

 

அருளிட வேண்டும் அம்மான், போற்றி!

இருள் கெட அருளும் இறைவா, போற்றி!

 

தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!

 

களம் கொளக் கருத அருளாய், போற்றி!

 

அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!

நஞ்சே அமுதா நயத்தாய், போற்றி!

 

அத்தா, போற்றி! ஐயா, போற்றி!

நித்தா, போற்றி! நிமலா, போற்றி!

பத்தா, போற்றி! பவனே, போற்றி!

 

பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!

அரியாய், போற்றி! அமலா, போற்றி!

 

மறையோர் கோல நெறியே, போற்றி!

முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி!

 

உறவே, போற்றி! உயிரே, போற்றி!

சிறவே, போற்றி! சிவமே, போற்றி!

 

மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!

பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி!

 

அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி!

இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி!

 

கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!

குவைப்பதி மலைந்த கோவே, போற்றி!

மலை நாடு உடைய மன்னே, போற்றி!

கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!

திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!

பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!

 

அருவமும், உருவமும், ஆனாய், போற்றி!

மருவிய கருணை மலையே, போற்றி!

 

துரியமும் இறந்த சுடரே, போற்றி!

தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி

 

தோளா முத்தச் சுடரே, போற்றி!

ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!

ஆரா அமுதே, அருளே, போற்றி!

பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!

தாளி அறுகின் தாராய், போற்றி!

நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!

சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!

சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!

மந்திர மா மலை மேயாய், போற்றி!

எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!

புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!

அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!

கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!

இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!

படி உறப் பயின்ற பாவக, போற்றி!

அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!

நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,

பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!

ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!

செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!

கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!

தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!

பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்

குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!

புரம் பல எரித்த புராண, போற்றி!

பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!

போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!

போற்றி! போற்றி! புராண காரண!

போற்றி! போற்றி! சய, சய, போற்றி!

 

5.  திருச் சதகம்

I மெய்யுணர்தல்

 

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்

கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்

பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும்

கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

 

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,

எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

 

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,

மத்த மனத்தொடு, மால் இவன்' என்ன, மன நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்

தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?

 

சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி,

ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே,

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல்

தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!

 

தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்;

அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம்

சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்

பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே!

 

பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,

இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்

கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்

நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.

 

முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள்,

செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான்

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய்,

உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே.

 

உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்,

இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின்,

உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக்

கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!

 

பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான்,

சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்;

அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே

புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.

 

புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!

தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை

மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே!

நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.

 

ii. அறிவுறுத்தல்

 

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே

வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்;

ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என்

ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!

 

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்?

வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்;

தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்

மானே! உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே.

 

வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன்

இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற;

பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல்,

வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?

 

ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன்;

பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்; புத்தேளிர்

கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன்,

சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே.

 

வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி,

ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,

கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு

வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

 

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்

தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழவேண்டி;

சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன்,

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.

 

பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்;

குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்;

விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன்

அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?

 

அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம்

பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ்

விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்;

தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!

 

வேனல் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய

பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே!

ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய்

வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே.

 

வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு

ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே,

சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்;

வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.

 

iii. சுட்டறுத்தல்

 

வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!

விண்ணோர் பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,

பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,

பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,

உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!

வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;

கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.

 

வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான்

வினைக்கேடன்' என்பாய் போல,

இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை

ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை

அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!

அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;

முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு?

முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!

 

ஆய நான்மறையவனும் நீயே ஆதல்

அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய

நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்,

நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய்

அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர்

பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே!

எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே?

 

பேசின், தாம் ஈசனே, எந்தாய், எந்தை

பெருமானே!' என்று என்றே பேசிப் பேசி;

பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி;

போற்றி எம்பெருமானே!' என்று; பின்றா

நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை

ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை,

மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ!

என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?

 

வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று;

அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு

எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்

எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன்

வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி,

மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை,

திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;

எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?

 

சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன்

கண் இணை நின் திருப்பாதப் போதுக்குஆக்கி,

வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன்

மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர

வந்து, எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை

மால் அமுதப் பெரும் கடலே!மலையே! உன்னைத்

தந்தனை செம் தாமரைக் காடு அனைய மேனித்

தனிச் சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே.

 

தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்

தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்

கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,

இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி,

அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை,

முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்

கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

 

கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்;

கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்

நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே

நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே

காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும்

கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை

மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே!

 

விச்சை தான் இது ஒப்பது உண்டோ? கேட்கின்

மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி

அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி,

அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்புகூர;

அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம், ஆகி,

ஆர் அழல் ஆய், அந்தம் ஆய், அப்பால் நின்ற

செச்சை மா மலர் புரையும் மேனி, எங்கள்

சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே!

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்;

செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி;

மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;

யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்;

யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்;

மேவினோம் அவன் அடியார் அடியாரோடு;

மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

 

Iv ஆன்ம சுத்தி

 

ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை; என்பு உருகிப

பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாத மலர்

சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இலை; துணை இலி பிண நெஞ்சே!

தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.

 

அறிவு இலாத எனை, புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மெய்ந்

நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை, பந்தனை அறுப்பானை,

பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும், மாறு ஆடுதி; பிண நெஞ்சே!

கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.

 

மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே!

தேறுகின்றிலம் இனி உனை; சிக்கெனச் சிவன் அவன் திரள் தோள்மேல்

நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம்

கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு இது; கேட்கவும் கில்லேனே.

 

கிற்ற வா, மனமே! கெடுவாய்; உடையான் அடி நாயேனை

விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம்

முற்று இலா இளம் தளிர் பிரிந்து இருந்து நீ உண்டன எல்லாம் முன்

அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே.

 

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்

களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும்

உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்த்தும் இலை நெஞ்சே

பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே.

 

புகுவது ஆவதும்; போதரவு இல்லதும்; பொன் நகர் புகப் போதற்கு

உகுவது ஆவதும்; எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு

நெகுவது ஆவதும்; நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி,

மிகுவது ஆவதும்; இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே?

 

வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத்

தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே,

முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்;

இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே.

 

ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத

தேனை, ஆன் நெயை, கரும்பின் இன் தேறலை, சிவனை, என் சிவலோகக்

கோனை, மான் அன நோக்கி தன் கூறனை, குறுகிலேன்; நெடும் காலம்,

ஊனை, யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.

 

ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து,

நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி,

தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்;

தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே?

 

வேனில் வேள் கணை கிழித்திட, மதி சுடும்; அது தனை நினையாதே,

மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி,

தேன் நிலாவிய திருஅருள் புரிந்த, என் சிவன் நகர் புகப் போகேன்;

ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே.

 

V கைம்மாறு கொடுத்தல்

 

இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக்

கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே;

வருக' என்று பணித்தனை; வான் உளோர்க்கு

ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே.

 

உண்டு ஓர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம்

பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை;

தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்;

கண்டும் கண்டிலேன்: என்ன கண் மாயமே!

 

மேலை வானவரும் அறியாதது ஓர்

கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே,

ஞாலமே, விசும்பே, இவை வந்து போம்

காலமே! உனை என்று கொல் காண்பதே?

 

காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர்

வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என,

பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப்

பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.

 

போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று,

ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்;

ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்

கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே.

 

கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி

கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்;

நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும்,

எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே?

 

எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும்

தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்;

முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்

சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே.

 

செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு,

புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள்

எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்:

கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!

 

கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு

இட்ட அன்பரொடு, யாவரும் காணவே,

பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை

எட்டினோடு இரண்டும் அறியேனையே.

 

அறிவனே! அமுதே! அடி நாயினேன்

அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டதும்?

அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்?

அறிவனோ, அல்லனோ? அருள், ஈசனே!

 

Vi அநுபோக சுத்தி

 

ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி

நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன

நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே:

தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.

 

செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா

மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும்,

பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!

 

போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி,

வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற

சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட

ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!

 

உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,

பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்;

மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான்,

அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?

 

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட

தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக்

கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட,

ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!

 

உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல்

உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின்

கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,

முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.

 

முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப்

பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய்

துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர்

பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.

 

தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம்

ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன்,

நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத்

தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.

 

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன

புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?

என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!

பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?

 

புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று

நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்.

நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும்

தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!

 

Vii. காருணியத்து இரங்கல்

 

தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா, போற்றி! வான

விருத்தனே, போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்பு இல்

ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான், போற்றி! தில்லை

நிருத்தனே, போற்றி! எங்கள் நின்மலா, போற்றி! போற்றி!

 

போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்;

போற்றி! ஓம் நமச்சிவாய! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை;

போற்றி! ஓம் நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்;

போற்றி! ஓம் நமச்சிவாய! சய! சய! போற்றி! போற்றி!

 

போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்

போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி!

போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ,

காற்று, இயமானன், வானம், இரு சுடர், கடவுளானே!

 

கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி!

விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி!

உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி!

சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!

 

சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப்

பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண்,

மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி!

இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.

 

இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி! போற்றி!

பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி!

பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி!

ஒழித்திடு இவ் வாழ்வு; போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே!

 

எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி!

கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி!

செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி!

உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!

 

ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர்

குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி!

வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி!

தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.

 

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி!

பேர்ந்தும், என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி!

வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி!

ஆர்ந்த நின் பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி!

 

போற்றி! இப் புவனம், நீர், தீ, காலொடு, வானம் ஆனாய்;

போற்றி! எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய்;

போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறு இன்மை ஆனாய்;

போற்றி! ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே.

 

Viii. ஆனந்தத்து அழுந்தல்

 

புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு, பூண நோக்கினாய்;

புணர்ப்பது அன்று இது என்ற போது, நின்னொடு என்னொடு, என் இது ஆம்?

புணர்ப்பது ஆக, அன்று இது ஆக, அன்பு நின் கழல்கணே

புணர்ப்பது ஆக, அம் கணாள, புங்கம் ஆன போகமே!

 

போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்;

ஏக! நின் கழல் இணை அலாது இலேன், என் எம்பிரான்;

ஆகம் விண்டு, கம்பம் வந்து, குஞ்சி அஞ்சலிக்கணே

ஆக, என் கை; கண்கள் தாரை ஆறு அது ஆக; ஐயனே!

 

ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன்;

பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன்; என் எம்பிரான்,

மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்கணே

மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.

 

வேண்டும், நின் கழல்கண் அன்பு; பொய்மை தீர்த்து, மெய்ம்மையே

ஆண்டுகொண்டு, நாயினேனை, ஆவ' என்று அருளு, நீ;

பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி! போற்றி!' என்றும், என்றும்

மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன! நின் வணங்கவே.

 

வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு

உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்;

வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு,

இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே?

 

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால்

தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே;

அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா;

எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?

 

எய்தல் ஆவது என்று, நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு

உய்தல் ஆவது, உன்கண் அன்றி, மற்று ஓர் உண்மை இன்மையின்,

பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு

இஃது அலாது, நின்கண் ஒன்றும்வண்ணம் இல்லை; ஈசனே!

 

ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்,

பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன். என் எம்பிரான்!

நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா! ஒர் நின் அலால்,

தேசனே! ஓர் தேவர் உண்மை சிந்தியாது, சிந்தையே.

 

சிந்தை, செய்கை, கேள்வி, வாக்கு, சீர் இல் ஐம் புலன்களால்,

முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்,

வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்;

எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று, இருப்பனே.

 

இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள்

கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும்,

நெருப்பும் உண்டு; யானும் உண்டிருந்தது உண்டு; அது; ஆயினும்,

விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே!

 

ix. ஆனந்த பரவசம்

 

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய்;

இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம்

பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.

 

பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே

பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று,

ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாதால்;

ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே.

 

அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ?

அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;

செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா!

கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.

 

காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும்

பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி!

ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்;

ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே?

 

மான் நேர் நோக்கி, உமையாள் பங்கா, மறை ஈறு அறியா மறையோனே,

தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும்

கோனே, சிறிது என் கொடுமை பறைந்தேன்; சிவ மா நகர் குறுகப்

போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே.

 

புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு

பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்.

அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்;

சிறவே செய்து வழுவாது, சிவனே! நின் தாள் சேர்ந்தாரே.

 

தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு;

போரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்;

ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு

ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே.

 

அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த

மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு

தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,

பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?

 

பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன்

அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால்,

திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி,

தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!

 

யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்;

ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே?

தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்

மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.

 

X. ஆனந்தாதீதம்

 

மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;

ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.

 

மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக்

கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்;

மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்;

பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு, நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே?