sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
விநாயகர் அநுபூதி

1. நாநலம் பெற
பூவார் புனிதா! புவனத்தலைமைத்
தேவா! கரியின் சிரமே உளவா!
மூவாத் தமிழால் முறையே உனைஎன்
நாவால் புகழும் நலமே அருள்வாய்.

2. சொல் வன்மை பெற
வில்லாண் மையரும் விரிமா தமிழில்
வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்
நல்லாண் மையது நனியே மிளிரும்
சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே!

3. கீழ்மைப் பண்புகள் அழிய
காமா திகளாம் கயமைப் பிணிகள்
போமா(று) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள்
கோமா! கருணைக் குகனார் தமியா!
பூமா! பொலமார் புலவா! வருவாய்!

4. முழு முதலை உணர
அந்தே வர்களும் அயன் மால் அரனும்
சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்
'கத்தா கரிமா முகத்தான்' எனவே
வித்தா ரமொடு விளம்பும் இறையே!

5. குருவாய் வந்து அருளுவான்
காவா எனைஐங் கரனே! மதுரப்
பாவா ணர்புகழ் பரமென் குருவே!
நீவா விரைவாய் நிமலன் புதல்வா!
தாவா கருணைத் தளிர்சே வடியே!

6. பேரின்பம் பெற
ஒருகொம் புடையான்; உயர்மோ தகமே;
விரும்பும் பெருமான்; விடையோன் குமரன்;
சுரும்பார் தொடையன்; சுகமா குமெலாம்
அருள்வான்; அருள்வான்; அடியார் அவர்க்கே!

7. விதியினால் வரும் வேதனை நீங்க
பேழ்வாய்ப் பெரியோன் பெரும்பூங் கழலைச்
சூழ்வார், பணிவார், துதிப்பார் அவர்க்கே
ஊழ்வே தனைதீர்த்(து) உளமே மகிழ
வாழ்வே தரும்வல் லபைநா தரே!

8. பேய் பூதங்களால் வரும் துன்பங்கள் அகல
பேய்பூ தமொடு பில்லிசூனியமும்
பாய்வேங் கையதும் பரையின் அருமைச்
சேய்வா ரணனார் திருப்பேர் புகலப்
போய்மாய்ந் திடுமெ புனிதம் வருமே!

9. நல்ல புலமை பெற
பல்காப் பியங்கள் பகரும் திறமும்
ஒல்காப் புகழும், உயர்செல் வமதும்
நல்காய் நலமாய்; நளின மலர்த்தாள்
செல்வா! திகழ்சித் திவிநா யகனே!

Back to Top

10. சிறியவனும் அருள் பெற
பூந்தார் சுழல் வில் புருவம், தளிர்போல்
ஆந்தே கம்மிளிர் அணியார் இருவர்
சார்ந்தே விளங்கும் தனிமா முதலே!
தேர்ந்தே தொழுதேன் சிறியேற்(கு) அருளே!

11. புலன்களை அடக்க
வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்
கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிர
எஞ்சித் தமதில் இனிதே உனது
கஞ்சக் கழல்வை கணநா யகனே!

12. வறுமை நீங்கிச் செல்வம் பெருக
பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்
உல்லா சமிளிர் ஒருகை முகனே!

13. இப்பிறவிப் பயன் பெற்று வீடு பேறு பெற
மகத்தாய் அணுவாய் மதியாய்க் கதிராய்
செகத்தாய் அறிவாய்த் திகழ்சாட் சியதாய்
அகத்தும் புறத்தும் அகலாப் பொருளாய்
இகத்தும் பரத்தும் இருக்கும் பரமே!

14. நிறைந்த அருளைப் பெற
கருணைக் கடலைங் கரனே! கபிலர்க்(கு)
அருளே கொடுத்தாய்; அபயம் அளித்தாய்;
தருவே அனையாய்! தமியன் தனைஆள்
குருவே பொறுமை குணநா யகனே!

15. அருட்பாடல்கள் இயற்ற
கற்பார் இதயக் கமலத்(து) உறையும்
அற்பார் ஒளியே! அழகுஆனை முகா!
பொற்பாய் உனது பொலந்தாள் மலர்க்கே
நற்பா கொடுத்தேன் நனிஏற்(று) அருளே!

16. செய்த பிழைகள் எல்லாம் தீர
ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்
சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்
சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கை
ஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.

17. எல்லாப் பிறவிகளிலும் இறை எண்ணம் பெற
எந்தப் பிறப்பை எடுத்தா லும் உனைச்
சொந்தத் தமிழால் துதிசெய் திடவே
கொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்!
சிந்தைக்(கு) உகந்தாய்! சிறப்பாய் அருளே!

18. பழைய பாவங்கள் தீர
சிந்தா மணிதான் திகழ்மார் புடையாய்!
முந்தை வினையை முழுதும் தொலைத்(து) ஆள்
எந்தாய்! எளியேன் எனை நீ எழிலாய்
வந்து ஆள்! உயர் ஓ வடிவப் பொருளே!

19. வலிமை பெற
பகையார் அவர்மு புரமே பொடியா
நகைசெய் தபிரான் நலமாம் கனியை
வகையாய் அருள வலம்வந் தவனே!
தகையாய்! திடம்நீ தருவாய் மணியே!

Back to Top

20. எல்லாச் செல்வங்களும் பெற
சீரோங் கிடும்:நல் திறமும் பெருகும்:
ஏரோங் கிடுமே: இனிதாம் திடமே
பேரோங் கிடும்:நல் பெரும்வே ழமுகன்
தாரோங் கடியைத் தொழுவார் தமக்கே!

21. குழந்தைப் பேறும் செல்வமும் பெற
மகப்பே(று) அருள்வான்: மகிழ்வாய் நிதியை
அகத்தே தருவான்: அணியன்: கரிமா
முகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்
செகத்தீர் தொழுமின்! தொழுமின்! தினமே!

22. நவக்கிரகங்களும் நல்லருள் புரிய
பெருமைப் பரிதி பிறை இத் தரைசேய்
அருமால் குருவே அசுரர் குரவன்
கருமை அரவூகள் இவை நலமாம்
ஒருகை முகன்பேர் உரைப்பார் அவர்க்கே!

23. மன அமைதி பெற
ஓடித் திரிவாய் உலகுஏ ழும்மிக
வாடித் திரிவாய் மனமே! தகுமோ
கூடிக் குலவா ஒருகோ டனைநீ
பாடிப் பணிவாய் பணிவாய் நலமே!

24. பயமின்றி வாழ
ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்
பூகாப் பவனைப் பொறுமைக் குணனை
மாகா ளியவள் மகனை மனனே!
நீகா எனவே நிதமும் பணியே!

25. நலங்கள் பல வந்து சேர
தேடி பணிவார் சிலபேர்: சிறப்பாய்
ஆடிப் பணிவார் சிலபேர்: அணியாய்ப்
பாடிப் பணிவார் சிலபேர்: அவரை
நாடித் தருவான் நலம் ஐமுகனே!

26. பகை நீங்க
துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்
பட்டே இரியப் படையை விடுவாய்!
சிட்டர் புகழும் திறமே! வளரும்
மட்டில் மதமார் மழலைக் களிறே!

27. இதமான வாழ்வூ பெற
விண்நீ: உடுநீ: மிளிர்வா யுவும்நீ:
மண்நீ: அனல்நீ: புனல்நீ: மதிநீ:
கண்நீ: மணிநீ: கவினார் ஒளிநீ:
எண்நீ: எனைஆள் இதம்செய் பவனே!

28. நல்ல வழியில் செல்ல
தீய நெறிநாத் திகத்தில் திளைத்தே
ஆய நெறியை அறியா திருந்தேன்
தூய நெறியின் தொடர்காட் டினைநீ
ஆயும் நெறியும் அறிவித் தனையே!

29. பிறவித் துன்பம் நீங்க
தொல்லைப் பிறவித் துயர்மா கடலுள்
அல்லல் வழியில் அழுந்தல் முறையோ?
செல்வா! பிரமச் செழுமா மணியே!
நல்லாய் கரைஏற் றிடும் ஐங்கரனே!

Back to Top

30. அறியாமை அழிய
மாயை எனும்கார்த் திரையைத் தெரிந்துஎன்
பேயை விரட்டும் பெருமான் ஒருவன்:
தாயை நிகர்த்த தனிமா முதல்வன்:
காயைக் கனிஆக் குவன்கண் ணியனே!

31. நன்மைகள் பெற
அயில்கை உளநம் அறூமா முகற்கே
மயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்
செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்
ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே.

32. அர்ச்சித்து அருளைப் பெற
கரிமா முகனின் கருணை அறியார்
எரிவாய் நரகில் இடரே படுவார்:
விரிமா தவரும் விரும்பும் பெரியோன்
அரிதா அருச்சித்(து) அவனைப் புகழே.

33. எண்வகைச் சித்திகளைப் பெற
இருநான்(கு) அவதானம் எண்சித்திகளும்
பெருமான் உமையின் பெரும்பிள் ளையவன்
தருவான்! தருவான்! தரவே விரைவாய்
வருவான்! வருவான்! வழுத்தாய் மனனே!

34. பிரணவப் பொருளை உணர
கருமால் வினையைக் களைந்தே அருளும்
திருவைந் தெழுத்தும் திகழா றெழுத்தும்
இருநான் கெழுத்தும் எமதுஐங் கரனார்
ஒருபேர் எழுத்தே: உணர்வாய் மனனே!

35. இறை எண்ணம் பெற
அளவைக் கடந்தான்: அகிலம் கடந்தான்:
உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்:
வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்
உளமே அறிந்துஇன் புறவே வருவாய்!

36. படித்தோர் துன்பம் நீங்க
கத்தும் தரங்கக் கடல்சூழ் புவியில்
தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயும்
வித்தர் களின் தீ வினையை விலக்கும்
அத்தித் தலையன் அருட்பார் வையதே!

37. நல்ல கவி பாட
ஆரா அமுதம் என ஆ சுகவி
சீராப் புகலும் திறமே அருள்வாய்!
தீராக் கலைகள் திகழ்வா ரிதியே!
வாராய்! வளமே வளர்வா ரணனே!

38. விநாயகனைக் கண்டு மகிழ
வேதா கமமே மிகவும் புகழும்
பாதாம் புயனே! பணிசெய் அடியேற்(கு)
ஆதா ர!நின(து) அருட்காட் சிதர
வாதா எழில் 'ஓ' வடிவானவனே!

39. விநாயகனின் அருளைப் பெற
உம்பர் புகழும் உறுதிப் பொருளே!
தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:
நம்பும் எனைநீ நழுவ விடாமல்
அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே!

40. குறை தீர
கவிஞன் புகழும் கவின் ஆர்தமிழ் உன்
செவிஏ றியும்நீ திருகல் சரியோ?
புவிதான் புகழும் புழைக்கைய! கரம்
குவிவேன்: மகிழ்வேன்: குறைதீர்த்தருளே!

Back to Top

41. அருள் மழையில் நனைய
மங்கை வலபை மணவா ளன் அருள்
பொங்கும் புலன் போல் பொழிந்தே புவனம்
எங்கும் நிறைந்தே இருக்கின் றதுகண்!
துங்கக் குணத்தீர்! புசியின் தொழுதே!

42. ஆணவம் அகல
மூல மலவா தனைதீர் முதல்வா!
சீல செழும்செம் சடையன் சிவனார்
பால! உயர்தற் பரனே! அருள்தா!
கோலம் மிளிரும் குணமார் பொருளே!

43. பக்குவம் பெற
சித்தி தரும்சத் திநிபா தமதே
எத்தி நமதில் எனைவந்(து) உறுமோ?
அத்தி முகவா!அருமைத் தலைவா!
சத்தி தனையா! தமியற்கு உரையே!

44. துயரம் நீங்க
முதல்வா படவே முடியா(து) இனிதோ
இதமே அருளா(து) இருத்தல் என்ன? பொற்
பதமே உடையாய்! பணிந்தேன்! பரையின்
புதல்வா அருளாய்! புரைதீர்ப் பவனே!

45. பேரருள் பெற
சீலன் துதிக்கைச் சிரனை அனவே
ஞாலத் தினிலே நலம் ஈவர் எவர்?
கோலச் சிகிவா கனனாம் குகனும்
சாலப் புகழும் தனிமன் அவனே!

46. கவலைகள் ஒழிய
திண்தோள் சதுரும் திகழ் ஐங்கரமும்
வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்
பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க்
கண்டேன்: களித்தேன்: கவலை இலனே!

47. ஞானம் பெற
மோன நிலையில் முழுசித் திபெறும்
ஞானம் தருவாய்! நலமார் பெரியோய்!
தீனன் எனைஆள் திருமன் கருணைத்
தேனம் எனவே திகழ்கின் றவனே!

48. பிறவி அச்சம் நீங்க
அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர்
மெச்சும் படியாய் மிளிர் ஐங்கர! நின்
பச்சைத் தளிராம் பதமே பலமாய்
இச்சை யுடனே பிடித்தேன் இதமே!

49. சகல சித்திகளும் பெற
பக்தி நெறியில் பலமாய் உறைவார்
அத்தி முகனின் அடியைப் பணிவார்;
முத்தி பெறுவார்; முதன்மை உறுவார்;
சித்தி இடைவார் திடமே! திடமே!

50. புகழைப் பெறுவதற்கு
தாதா சரணம்; சரணம் தளிர்த்தாள்
நீதா சரணம் சரணம்; நிகர் இல்
வேதா தரணே சரணம்; மிளர் ஐம்
பூதா சரணம்! புகழ்நாற் புயனே!

51. உலகம் வாழ
ஊழி முதல்வன் உயர்வே ழமுகன்
வாழி! திருசத் திகளும் அணியாம்
வாழி! கவினார் வாச மலர்த்தாள்
வாழி! அடியார் வளம்வா ழியவே!
Back to Top

This page was last modified on Mon, 11 Dec 2023 05:54:15 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/vinayagar_anoopoothi.php