சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=COYFQcwgvkk
7.050   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சித்தம்! நீ நினை! என்னொடு
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MyUtjA-_VqI
Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.011   மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்புனவாயில் ; (திருத்தலம் அருள்தரு கருணையீசுவரியம்மை உடனுறை அருள்மிகு புனவாயிலீசுவரர் திருவடிகள் போற்றி )
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.

[1]
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய்,
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே.

[2]
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்
படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே!

[3]
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே
பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,
பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற
பரமேட்டியே.

[4]
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,
புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,
ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,
மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.

[5]
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய்,
கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்
போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,
சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே.

[6]
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு இடைத்
திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய்,
பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில்
இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.

[7]
மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி ஒல்கிட,
வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய,
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த, புனவாயிலே.

[8]
திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல்
கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்-
நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கிய
பொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே.

[9]
போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்-
சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!
போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே.

[10]
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.050   சித்தம்! நீ நினை! என்னொடு  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருப்புனவாயில் ; (திருத்தலம் அருள்தரு பரங்கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழம்பதிநாயகர் திருவடிகள் போற்றி )
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.

[1]
கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது
மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர்
பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே.

[2]
தொக்கு ஆய மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நக்கான், நமை ஆள் உடையான், நவிலும்(ம்) இடம்
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்ப்
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே.

[3]
வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல்
கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப்
புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே.

[4]
நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

[5]
மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப்
புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.

[6]
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்!
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப்
பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.

[7]
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை
கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே,
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

[8]
எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்!
மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற;
கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப்
புற்று ஏறி, கூ கூ என அழைக்கும் புனவாயிலே.

[9]
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க்
குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list