சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், பண் - காந்தாரபஞ்சமம் (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=COYFQcwgvkk |
7.050
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சித்தம்! நீ நினை! என்னொடு பண் - பழம்பஞ்சுரம் (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=MyUtjA-_VqI Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.011  
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருப்புனவாயில் ; (திருத்தலம் அருள்தரு கருணையீசுவரியம்மை உடனுறை அருள்மிகு புனவாயிலீசுவரர் திருவடிகள் போற்றி )
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன், பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய், அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம் புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே. | [1] |
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய், வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப் புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே. | [2] |
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம் புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில் தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப் படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே! | [3] |
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவே அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில், பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே. | [4] |
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும், புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில், ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும், மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே. | [5] |
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய், கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர் போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில், சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே. | [6] |
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு இடைத் திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய், பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில் இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே. | [7] |
மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி ஒல்கிட, வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னிய இனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய, புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த, புனவாயிலே. | [8] |
திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல் கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்- நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கிய பொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே. | [9] |
போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்- சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்! போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே. | [10] |
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை, கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்- நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால் அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.050  
சித்தம்! நீ நினை! என்னொடு
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருப்புனவாயில் ; (திருத்தலம் அருள்தரு பரங்கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழம்பதிநாயகர் திருவடிகள் போற்றி )
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்! மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி, பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே. | [1] |
கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர் பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே. | [2] |
தொக்கு ஆய மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! நக்கான், நமை ஆள் உடையான், நவிலும்(ம்) இடம் அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்ப் புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே. | [3] |
வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல் கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப் புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே. | [4] |
நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம் வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப் புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே. | [5] |
மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப் புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே. | [6] |
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்! பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப் பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே. | [7] |
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே, புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே. | [8] |
எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்! மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற; கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப் புற்று ஏறி, கூ கூ என அழைக்கும் புனவாயிலே. | [9] |
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க் குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே. | [10] |