கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே! நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல் கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?
| [ 1]
|
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும், தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும், பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை, ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?
| [ 2]
|
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்; துளக்கு இல் நல் மலர் தொடுத்தால்-தூய விண் ஏறல் ஆகும்; விளக்கு இட்டார் பேறு, சொல்லின், மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்; அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும் ஆறே!
| [ 3]
|
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி, அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன் மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால், வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!
| [ 4]
|
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார் முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.
| [ 5]
|
Go to top |
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்; அண்டனே! அமரர்கோவே! அறிவனே! அஞ்சல் என்னாய்- தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே!
| [ 6]
|
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்; ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!
| [ 7]
|
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர வைத்த கால், அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்; மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி தன் மேல் வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே.
| [ 8]
|