சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg
6.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருஆக்கூர் - திருத்தாண்டகம் அருள்தரு கட்கநேத்திராம்பிகை உடனுறை அருள்மிகு சுயம்புநாதவீசுவரர் திருவடிகள் போற்றி
முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 1]
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 2]
மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 3]
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 4]
ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 5]
Go to top
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 6]
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 7]
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 8]
கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர் போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 9]
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஆக்கூர்
2.042
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு
Tune - சீகாமரம்
(திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
6.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முடித் தாமரை அணிந்த மூர்த்தி
Tune - திருத்தாண்டகம்
(திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400