உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி ஒன்றுநூ றாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ அங்ஙனே யழகிதோ அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் டிங்கள் இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 1]
|
நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும் பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன வில்லை மற்றெனக் குறவென் மறிதிரை வடவாற் றிடுபுனல் மதகில்வாழ் முதலை எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 2]
|
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிண ரனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந் துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங் கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 3]
|
வாழிஅம் போதத் தருகுபாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசல ராதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழு மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 4]
|
எவருமா மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவருமா லவனும் அறிவரும் பெருமை அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற் றரசின தீட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 5]
|
Go to top |
அருளுமா றருளி ஆளுமா றாள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ தழகோ தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 6]
|
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப் பிலையுதிர் வென்றால் நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும் நெஞ்சிடிந் துருகுவ தென்னோ சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 7]
|
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை யென்றுநான் மறக்கேன் மின்னெடும் புருவத் திளமயி லனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 8]
|
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார்; அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதி ரனையர் வா ழியரோ பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற் புனல்துளும் பவிர்சடை மொழுப்பர் எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசாரா சேச்சரத் திவர்க்கே.
| [ 9]
|
தனியர்எத் தனைஓ ராயிர வருமாந் தன்மையர் என்வயத் தினராங் கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆ ரமிர்தர் புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க் கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [ 10]
|
Go to top |
சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவரை அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொன் மாலைஈ ரைந்தின் பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும் பொன்னெடுங் குன்றுடை யோரே.
| [ 11]
|