சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.086
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரையினில் வந்த பாவம், உணர் பண் - பியந்தைக்காந்தாரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=axSzv-rL_iM |
3.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NL_FxOzMKtg |
3.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PNJ3u9OedBI |
5.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வீறு தான் உடை வெற்பன் பண் - திருக்குறுந்தொகை (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
6.074
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் பண் - திருத்தாண்டகம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=xKwqTlNy4cs |
11.031
நம்பியாண்டார் நம்பி
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை பண் - (திருநாரையூர் ) |
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
11.031  
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
பண் - (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான். | [1] |
முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார் அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான் உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே. | [2] |
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய் பின்னவலம் செய்வதென்னோ பேசு. | [3] |
பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென் றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட் கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத் தேசத் தவர்தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே. | [4] |
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின் ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும் பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர் மன்நாரை யூரான் மகன். | [5] |
மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும் சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு முகத்தது கையந்தக் கையது மூக்கந்த மூக்கதனின் அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே. | [6] |
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை வருந்தவெண்ணு கின்ற மலம். | [7] |
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றேபுன்னை வாழ்த்துவனே. | [8] |
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத் தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத் தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும் நாரையூர் நம்பர்மக னாம். | [9] |
நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத் தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே காரண னேயெம் கணபதி யேநற் கரிவதனா ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே. | [10] |
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய் கொங்கெழுதார் ஐங்கரத்த கோ. | [11] |
கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன் காவில் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண் ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே. | [12] |
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி எடுத்த மதமுகத்த ஏறு. | [13] |
ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழும் நாரைப் பதியுள் விநாயகனே. | [14] |
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார் மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு மாசார மோசொல்லு வான். | [15] |
வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ் தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும் கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின் மானிற் பிறந்த களிறென் றுரைப்பரிவ் வையகத்தே. | [16] |
வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து பொய்கத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர் மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான் ஆங்கனிநஞ் சிந்தையமர் வான். | [17] |
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர் தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின் றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே. | [18] |
அவம்தியா துள்ளமே அல்லற நல்ல தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம் கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர் நம்பன் சிறுவன்சீர் நாம். | [19] |
நாந்தன மாமனம் ஏத்துகண் டாயென்றும் நாண்மலரால் தாந்தனமாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே சேர்ந்தன னேயைந்து செங்கைய னேநின் திரள்மருப்பை ஏந்தின னேயென்னை ஆண்ட னேயெனக் கென்னையனே. | [20] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.086  
உரையினில் வந்த பாவம், உணர்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல் தீங்கு குற்றம், உலகில் வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி, நித்தம் நினைமின் வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர் கங்குல், நங்கை வெருவ, திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே! | [1] |
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் வான் அடைகின்ற வெள்ளைமதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன், கான் இடை ஆடி, பூதப்படையான், இயங்கு விடையான், இலங்கு முடிமேல் தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல், நண்ணு திரு நாரையூர் கைதொழவே. | [2] |
ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், துயர் உற்ற தீங்கு விரவி, பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு உற்ற வண்ணம், அகலும் போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ் வான் உளோர்கள் புணரும் தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே. | [3] |
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற, உற்ற உலகின் தாய் உறு தன்மை ஆய, தலைவன் தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி, கோல விடம் உண்ட கண்டன், முடிமேல் தேய் பிறை வைத்து உகந்த சிவன், மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே. | [4] |
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும்; தவம் ஆய தன்மை வரும் வான் மிசையவர்; ஆதி ஆய திருமார்பு இலங்கு விரிநூலர்; விண்ணும் நிலனும் இசையவர், ஆசி சொல்ல; இமையோர்கள் ஏத்தி; அமையாத காதலொடு சேர் திசையவர் போற்ற, நின்ற சிவன்; மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே. | [5] |
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும்; உண்மை உலகில் குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும்; நெஞ்சில் நிறைவு ஆற்றும்; நேசம் வளரும் மறை வளர் நாவன், மாவின் உரி போர்த்த மெய்யன், அரவு ஆர்த்த அண்ணல், கழலே திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே. | [6] |
தனம் வரும்; நன்மை ஆகும்; தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று, நினைவு ஒன்று சிந்தை பெருகும் முனம் ஒரு காலம், மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன் தெரிந்த, அவுணர் சினம் ஒரு கால் அழித்த, சிவன் மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே. | [7] |
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும்; ஆதல் உற, நீர் மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு இலாத கடலின் அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய, தடக்கை முடிகள், திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே. | [8] |
வேறு உயர் வாழ்வு தன்மை; வினை; துக்கம், மிக்க பகை தீர்க்கும்; மேய உடலில் தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க, நின்ற கரவைக் கரந்து, திகழும் சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட, எரி ஆய்ச் சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே. | [9] |
மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும்; உள்ளம் வெளி ஆக்கும்; முன்னி உணரும், படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை! உடையினை விட்டு உளோரும், உடல் போர்த்து உளோரும், உரை மாயும் வண்ணம் அழிய, செடி பட வைத்து, உகந்த சிவன் மேய செல்வத் திரு நாரையூர் கைதொழவே. | [10] |
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார், திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு நாரையூர் கைதொழுவான், பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை மாலைபத்தும் மொழிவார், திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர், செம்மையினரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.102  
காம்பினை வென்ற மென்தோளி பாகம்
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய, பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்) உரி-தோல்மேல் பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே. | [1] |
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்; பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம், ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார் மதில் மூன்றும் ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே. | [2] |
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும் மைமிடற்றன் ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம் தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில் மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே. | [3] |
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய், அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண், நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு நாரையூர் எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே. | [4] |
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு இமையோர்கள் தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர் திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே. | [5] |
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்- தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன், மலைமகளைச் சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை- யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே. | [6] |
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார் வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து, நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர் உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே. | [7] |
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர் தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில, ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில், சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே. | [8] |
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான், ஒளிர்புன்சடைமேல் ஓர் வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு யாழ்முரலத் தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா, அடைவோமே. | [9] |
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில் உள் மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே, தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர் தன்னில் பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே! | [10] |
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல், பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி, மண் மதியாது போய், வான் புகுவர், வானோர் எதிர்கொளவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.107  
கடல் இடை வெங்கடு நஞ்சம்
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி, உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன், அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல் நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே. | [1] |
விண்ணின் மின் நேர் மதி, துத்தி நாகம், விரி பூமலர்க்கொன்றை, பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான்; எரி ஆடி நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்! நிறைவு ஆமே. | [2] |
தோடு ஒரு காது, ஒரு காது சேர்ந்த குழையான், இழை தோன்றும் பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான், மறை ஓதி, நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானைப் பாடுமின், நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வு ஆமே. | [3] |
வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை ஏந்தி, பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்; அருள் ஆர்ந்த அண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை நண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு அறுமே. | [4] |
வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி ஆகும் ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது இன்றி, நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர் எந்தை, கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே. | [5] |
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம் குலாய மலர் சூடி, அக்கு அரவோடு அரை ஆர்த்து, உகந்த அழகன்; குழகு ஆக, நக்கு அமரும் திருமேனியாளன்; திரு நாரையூர் மேவிப் புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும், புகல்தானே. | [6] |
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி, ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி, நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில் வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு ஆமே. | [7] |
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார் பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும் தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே. | [8] |
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர் நிறத்தானும், ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர் பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும், தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த, திரு நாரையூர் தானே. | [9] |
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார், துவர் ஆடை உற்ற (அ)ரையோர்கள், உரைக்கும் சொல்லை உணராது, எழுமின்கள் குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான், குழகன், தொழில் ஆரப்- பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான், திரு நாரையூர் சேரவே! | [10] |
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன், சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல், பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.055  
வீறு தான் உடை வெற்பன்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்- கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும், நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறு சூடலும், அம்ம அழகிதே! | [1] |
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும், வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்,- நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை அள்ளி உண்டலும், அம்ம அழகிதே! | [2] |
வேடு தங்கிய வேடமும், வெண்தலை- ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்,- நாது தங்கிய நாரையூரான் நடம்- ஆடு பைங்கழல், அம்ம அழகிதே! | [3] |
கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும், மிக்க வெண் தலை மாலை, விரிசடை நக்கன் ஆகிலும், நாரையூர் நம்பனுக்கு அக்கின் ஆரமும், அம்ம அழகிதே! | [4] |
வடி கொள் வெண்மழு மான் அமர் கைகளும், பொடி கொள் செம்பவளம் புரை மேனியும், நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் அடிகள் தம் வடிவு, அம்ம அழகிதே! | [5] |
சூலம் மல்கிய கையும், சுடரொடு, பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்,- ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு- ஆல நீழலும், அம்ம அழகிதே! | [6] |
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும், எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும், நண்ணினார் துயர் தீர்த்தலும், - நாரையூர் அண்ணலார் செய்கை - அம்ம அழகிதே! | [7] |
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை மின் புரிந்த சடைமேல் விளங்கவே, நன் பகல் பலி தேரினும், நாரையூர் அன்பனுக்கு அது அம்ம அழகிதே! | [8] |
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே, இரவில் நின்று எரி ஆடலும்,-நீடுவான் நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு- அரவும் பூணுதல், அம்ம அழகிதே! | [9] |
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும் நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல் அடுத்த தன்மையும், அம்ம அழகிதே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.074  
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை, அல்லானை, பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை, வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [1] |
பஞ்சுண்ட மெல் அடியாள் பங்கன் தன்னை; பாரொடு, நீர், சுடர், படர் காற்று, ஆயினானை; மஞ்சுண்ட வான் ஆகி, வானம் தன்னில் மதி ஆகி, மதி சடை மேல் வைத்தான் தன்னை; நெஞ்சுண்டு என் நினைவு ஆகி நின்றான் தன்னை; நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க, ஓங்கும் நஞ்சு உண்டு, தேவர்களுக்கு அமுது ஈந்தானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [2] |
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை, தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை, திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை, ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை, அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை, நாவினில் நல் உரை ஆனானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [3] |
செம்பொன்னை, நன் பவளம் திகழும் முத்தை, செழுமணியை, தொழுமவர் தம் சித்தத்தானை, வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை, மதில் கச்சி மன்னுகின்ற கம்பனை, எம் கயிலாய மலையான் தன்னை, கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [4] |
புரை உடைய கரி உரிவைப் போர்வையானை, புரிசடை மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை, விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை, வெண்நீறு செம்மேனி விரவினானை, வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை, வரு பிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை, நரை விடை நல் கொடி உடைய நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [5] |
பிறவாதும் இறவாதும் பெருகினானை, பேய் பாட நடம் ஆடும் பித்தன் தன்னை, மறவாத மனத்து அகத்து மன்னினானை, மலையானை, கடலானை, வனத்து உளானை, உறவானை, பகையானை, உயிர் ஆனானை, உள்ளானை, புறத்தானை, ஓசையானை, நறவு ஆரும் பூங்கொன்றை சூடினானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [6] |
தக்கனது வேள்வி கெடச் சாடினானை, தலை கலனாப் பலி ஏற்ற தலைவன் தன்னை, கொக்கரை சச்சரி வீணைப் பாணியானை, கோள் நாகம் பூண் ஆகக் கொண்டான் தன்னை, அக்கினொடும் என்பு அணிந்த அழகன் தன்னை, அறுமுகனோடு ஆனை முகற்கு அப்பன் தன்னை, நக்கனை, வக்கரையானை, நள்ளாற்றானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [7] |
அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை, அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல் ஆகா எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை, எண் ஆகிப் பண் ஆர் எழுத்து ஆனானை, திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானை, சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை, நரி விரவு காட்டு அகத்தில் ஆடலானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [8] |
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை; ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை; பால் ஆகி, தேன் ஆகி, பழமும் ஆகி, பைங்கரும்பு ஆய், அங்கு அருந்தும் சுவை ஆனானை, மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி, வேள்வியினின் பயன் ஆய விமலன் தன்னை; நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [9] |
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை, வெளி செய்த வழிபாடு மேவினானை, மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை, தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. | [10] |