கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி, உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன், அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல் நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே.
| [ 1]
|
விண்ணின் மின் நேர் மதி, துத்தி நாகம், விரி பூமலர்க்கொன்றை, பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான்; எரி ஆடி நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்! நிறைவு ஆமே.
| [ 2]
|
தோடு ஒரு காது, ஒரு காது சேர்ந்த குழையான், இழை தோன்றும் பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான், மறை ஓதி, நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானைப் பாடுமின், நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வு ஆமே.
| [ 3]
|
வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை ஏந்தி, பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்; அருள் ஆர்ந்த அண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை நண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு அறுமே.
| [ 4]
|
வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி ஆகும் ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது இன்றி, நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர் எந்தை, கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.
| [ 5]
|
Go to top |
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம் குலாய மலர் சூடி, அக்கு அரவோடு அரை ஆர்த்து, உகந்த அழகன்; குழகு ஆக, நக்கு அமரும் திருமேனியாளன்; திரு நாரையூர் மேவிப் புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும், புகல்தானே.
| [ 6]
|
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி, ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி, நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில் வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு ஆமே.
| [ 7]
|
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார் பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும் தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே.
| [ 8]
|
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர் நிறத்தானும், ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர் பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும், தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த, திரு நாரையூர் தானே.
| [ 9]
|
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார், துவர் ஆடை உற்ற (அ)ரையோர்கள், உரைக்கும் சொல்லை உணராது, எழுமின்கள் குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான், குழகன், தொழில் ஆரப்- பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான், திரு நாரையூர் சேரவே!
| [ 10]
|
Go to top |
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன், சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல், பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.
| [ 11]
|