சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,
பண் - இந்தளம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dAneAxCHkd8
5.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
பண் - திருக்குறுந்தொகை   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Z2cFsRKbsJw
6.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்
பண் - திருத்தாண்டகம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=exDBQf7Zoj4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.014   சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவெண்ணியூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி )
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.

[2]
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை,
நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை, ஏத்துவர் ஏதம் இலாதாரே.

[3]
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க்
காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை,
ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே

[4]
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத்
தாரானை, தையல் ஓர்பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.

[5]
முத்தினை, முழுவயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய
வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அத்தனை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[6]
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப்
பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித் தோல் மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
நீந்தானை, நினைய வல்லார் வினை நில்லாவே.

[7]
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்
இறுத்தானை, எழில் அமர் வெண்ணி எம்மான்! எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.

[8]
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[9]
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய
மிண்டர்கள் மிண்டுஅவை கேட்டு வெகுளன்மின்!
விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.

[10]
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.017   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவெண்ணியூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி )
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[1]
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;
எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்)
அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.

[2]
காற்றினை; கனலை; கதிர் மா மணி
நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும்,
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை,
வீற்றினை;-நெருநல் கண்ட வெண்ணியே.

[3]
நல்லனை, திகழ் நால்மறைஓதியை,
சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர்
கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[4]
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை,
அடரும் சென்னியில் வைத்த அமுதனை,
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை,
இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.

[5]
பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[6]
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல்
நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[7]
சடையனை; சரி கோவண ஆடை கொண்டு
உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு; பாய்தரும்
விடையனை;-நெருநல் கண்ட வெண்ணியே.

[8]
பொருப்பனை, புனலாளொடு புன்சடை
அருப்பனை, இளந்திங்கள் அம் கண்ணியான்
பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்
விருப்பனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[9]
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்;
காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே.

[10]
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்,
சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத்
தலையினால்-தொழுவார் வினை தாவுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.059   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவெண்ணியூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி )
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும், தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்,
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்,
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[1]
நெருப்பு அனைய மேனிமேல் வெண் நீற்றாரும், நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்,
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாலரும், பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்,
மருப்பு அனைய வெண் மதியக் கண்ணியாரும், வளை குளமும் மறைக்காடும் மன்னினாரும்,
விருப்பு உடைய அடியவர் தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[2]
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும், கரி காட்டில் எரி ஆடும் கடவுளாரும்,
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும், பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்,
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திருப் புன்கூர் மேவிய செல்வனாரும்,
மெய் எலாம் வெண்நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[3]
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும், தக்கன் தன் பெருவேள்வி தகர்த்திட்டாரும்,
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர் ஊரின் உழிதர்வாரும்,
மடை ஏறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்,
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[4]
மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்;
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்; பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்;
கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை   தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்;
விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[5]
வீடுதனை மெய் அடியார்க்கு அருள் செய்வாரும், வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும்,
கூடலர் தம் மூ எயிலும் எரிசெய்தாரும், குரை கழலால் கூற்றுவனைக் குமை செய்தாரும்,
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும், ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்,
வேடுவனாய் மேல் விசயற்கு அருள் செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[6]
மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடி, மடவாள் அவளோடு, மான் ஒன்று ஏந்தி,
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி, நாளும் சில்பலிக்கு என்று ஊர் ஊரின் திரிதர்வாரும்;
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்   தன் காலம் அறுப்பார் தாமும்;
விட்டு இலங்கு வெண்குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[7]
செஞ்சடைக்கு ஓர் வெண்திங்கள் சூடினாரும், திரு ஆலவாய் உறையும் செல்வனாரும்,
அஞ்சனக் கண் அரிவை ஒருபாகத்தாரும், ஆறு அங்கம் நால் வேதம் ஆய் நின்றாரும்,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்,
வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[8]
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும், கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்,
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும்,   உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்,
விளங்(கு)கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[9]
பொன் இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடிப்   புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்,
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும், குளிர் ஆர்ந்த செஞ்சடை எம் குழகனாரும்,
தென் இலங்கை மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள் செய்தாரும்,
மின் இலங்கு நுண் இடையாள் பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list